• முதலில் அது யதேச்சையானது என நினைத்தேன்.
    நான் செல்லுமிடங்களில் எல்லாம் அவன் இருப்பதை பார்த்தேன்.

    நீல நிற ஜீன்ஸும் வெள்ளை நிற சட்டையும்
    வெண் கண்ணாடியுமாய்
    அவன் அழகானவனாய் இருந்தான்.

    முகத்தில் சிறிது தாடி.
    விரல்களுக்கிடையே சிகரெட்.
    புன்னகைக்கும் போது கனிவும்
    எப்போதும் யோசனையுமாய் இருந்தான்.

    தினமும் என் முதுகில்
    அவனது பார்வையை உணர்ந்தவாறே
    எனது நாட்களை கடத்த தொடங்கினேன்.

    என்றாவது ஒரு நாள் அவன் கைகளால்
    எனக்கு மரணம் சம்பவிக்கும் என கற்பனை செய்ய தொடங்கினேன்.
    அந்த தருணங்களை கற்பனை செய்து
    என்னை நானே தயார் செய்து கொண்டே இருந்தேன்.

    ஒவ்வொரு நாளும்
    அவன் கண்களில் கோபம் அதிகரித்தபடி இருந்தது.
    என்னை கொல்வதற்கு முன்
    கோபத்திற்கான காரணமாவது அவன் சொல்வானா?


  • பாழடைந்து கொண்டிருக்கும் கட்டிடங்கள்.
    சேதங்களுக்கு இடையே
    உடைந்த கால்களாலான கட்டிலில்
    படுத்திருக்கிறாள் சிறுமி ஒருத்தி.

    கையில் ரத்தக்கறையோடு
    தந்தை அவளையே பார்த்தவாறு அமர்ந்திருக்கிறான்.

    காகங்களின் கரைச்சலில்
    மறைந்து போயிருக்கின்றன
    தூரத்து ஒலி.
    சாம்பலை அள்ளி தெளிக்கிறது
    திடீர் காற்று.
    சாம்பலின் துகள்பட்டு
    நிறம் மாற யத்தனிக்கிறது
    பாட்டரி பெட்டியில் இருக்கும் குடிநீர்.

    குந்தி அமர்ந்திருப்பவன்
    கால்களை வலியோடு தடவி கொள்கிறான்.

    வேகமாய் நகர்ந்து கொண்டிருக்கும் மேகங்களோடு
    கலந்து கொண்டிருக்கும்
    சிறுமி புன்னகைக்கிறாள்.
    இரவு நெருங்கி கொண்டிருக்கிறது.

    நன்றி
    தலைப்பு: சிக்ஸ்த் சென்ஸ் திரைப்படம்


  • அவளிடம்
    அவன் அறுபது வினாடிகள் தான் பேச முடிந்தது.
    அவள் கை கொடுத்து பிறகு
    விடைபெற்று
    விலகி நடந்தாள் பதற்றத்தோடு.

    மணிக்கணக்கில் பயணித்த களைப்பும்
    தடதடவென அடித்து கொள்ளும் இதயமும்
    குழம்பி போன மனநிலையோடு அவன்.

    எதற்காக அவள் கண்களில் அந்த அதிர்ச்சி?
    முதல் சந்திப்பில் தன்னை வேறு தோற்றத்தில் எதிர்பார்த்திருப்பாளோ?
    அந்நியனிடம் தயங்கி நிற்பது போல அல்லவா நின்றாள்.

    அவன் கற்பனை செய்தது போலவே அவள் இல்லை.

    அவன் முன்னால் அவள் நடந்து போகிறாள்.
    பார்க்க கூடாது என நினைக்கிறான்.
    இவன் பார்க்கிறான் என அவளது நடை தள்ளாடியது.
    நீரினுள் படகு போல நடந்தாள்.
    ஒவ்வொரு அசைவிலும் சங்கடம்.
    அவளுடைய தாய் எந்நேரமும் இங்கே வந்து விடக்கூடும்.

    போனில் மனைவியாய் பேசுபவள்
    இன்று
    தூரத்தில் சென்று மறையும் வரை
    திரும்பியே பார்க்கவில்லை.


  • இளமையின் ஒளி சூழ பிரகாசிக்கிறாள் ராஜகுமாரி.
    கண்களில் பரிவும் அன்பும்.
    உதடுகளில் பூக்கிறது காமம்.

    இரவு வானத்தில் தோன்ற போகிறது
    அந்த அரிய ஒளிக்கீற்று.
    உலகின் கடைசி தருணங்களை
    கணத்திற்கு கணம்
    மெதுவாக நகர்த்திட துடித்திடுவது போலொரு முத்தம்.

    நீரின் சிலிர்ப்பை மறந்து
    ஆவலாய் காத்திருக்கின்றன
    ஒன்றை போலவே இருக்கும் அந்த ஏழு தவளைகளும்.
    கல்லாக மாறி போயிருக்கின்றன அந்த காத்திருத்தல்.

    எங்கோ கல் ஒன்று
    சரிந்தோடி பள்ளத்தில் இருக்கும் நீரில் விழுந்து
    அமைதியை குலைக்கிறது.
    வானம் இருளினை விழுங்கி தயாராகிறது.


  • தலையில் பலத்த காயம்!
    இறக்க போகிறாள் என முதல் பார்வையிலே புரிகிறது!
    நடைப்பாதையில் அமர்ந்து இருக்கிறாள் அந்த மூதாட்டி!
    இரண்டு ஆட்டோ டிரைவர்கள் அவளை பிடித்தபடி இருக்கிறார்கள்!
    சில கல்லூரி மாணவர்கள் சுற்றி நிற்கிறார்கள்!
    மற்றவர்கள் எல்லாம் எட்டி பார்த்து விட்டு சாலையில் விரைந்து மறைகிறார்கள்!
    அவளுக்கு உதவ ஆட்கள் இருக்கிறார்கள்; இன்றைய பொழுதை வீணாக்காதே என்கிறது என் மனம்.
    போவதா வேண்டாமா என கால்கள் தடுமாறுகின்றன.
    வெள்ளை சட்டைகள் போர்த்திய சாலையையும்
    சிகப்பு உதிரம் பரவும் நடைப்பாதையையும்
    மாறி மாறி பார்க்கிறேன் நான்.
    இதை கவிதையாக எழுதலாம் என்னும் போது புன்னகை ததும்புகிறது என்னுள்.
    அதற்கு பிறகு கிழவி என்னவானாள் என்பது எனக்கு தெரியாது.


  • ஒவ்வொரு முறையும்
    ஒரே மாதிரி தான் நிகழ்கிறது.

    அவனிடமிருந்து விலகி
    நான் முதலில் தேடுவது
    துண்டைத் தான்.
    எப்போதும்
    கைக்கெட்டும் தூரத்தில் எடுத்து வைக்க வேண்டும் என
    நினைத்தாலும்
    அது பிறகு மீண்டும் நிகழும் வரை
    நினைவிற்கு வருவதேயில்லை.

    காமம் வழிந்தோடிய பிறகான
    நிர்வாணம் மிகவும் அசௌகரியமானது.

    என் பின்னே அவனது பார்வையை உணர்ந்தபடி
    குளியலறைக்கு ஓடுவேன்.
    பிறகு இருவரும் அவசர அவசரமாய்
    துணிகளை தரையிலிருந்து தேடி எடுப்போம்.

    அறை வெக்கை மிகுந்ததாய் மாறியிருக்கும்.
    வெளியே சாலையில்
    வாகனங்களின் ஹாரன் சத்தம் அதிகரித்திருக்கும்.
    இவ்வளவு துணிகளா என ஆயாசத்தோடு
    உடைகளை இருவரும் அணிந்து கொண்டிருக்கும் தருணத்தில்
    படுக்கை உருகி
    என் கால் இடையே ஓடி
    கரைந்து போவதை வருத்தத்தோடு பார்த்து விட்டு
    மீண்டும் உடைகளை அவசரமாய் அணிந்து கொண்டிருப்பேன்.



  • அது பிரத்யேகமான வடிவமைப்பு அல்ல.
    சந்தையில் எளிதாய் கிடைத்து விடுவதும் இல்லை.
    ஆனாலும் அந்த சட்டையை ஓர் அன்னியன் அணிந்திருப்பது
    ஆச்சரியம் தான்.

    அவனிடமிருந்த வியர்வை வாசனை
    என்னுடைய கணவனது போலவே இல்லை.
    என்றாலும் அந்த உடலின் மெல்லசைவு கூட என்னை ஈர்க்கிறது.
    கூட்டத்தினூடாக அவனை நோக்கி நகர்கின்றன
    என்னுடைய அத்தனை உணர்வுகளும்.

    ஓர் உதட்டுச்சுழிப்பில் என்னை உதாசீனப்படுத்துகிறான்.
    அன்னியர்களாலான கடலலையில்
    ஒவ்வொரு முறை அலை உயரும் போதும்
    நான் கண்களால் இரங்குகிறேன்.

    அலை தாழும் போது அவன்
    ஒரு முத்தம் மட்டும் கொடுத்து விட்டு
    அந்த சுவையை அங்கேயே துடைத்து எறிந்து விட்டு
    பறந்து போன பிறகு
    மிச்சமிருக்கிறது
    அவன் அணிந்திருந்த எனது கணவனின் சட்டை.



  • கறுப்பு எறும்புகள்.
    முனைந்து கோலம் போடும் பெண்ணைப் போல
    சுவற்றில் வரிசை கட்டி கொண்டிருக்கின்றன.
    எறும்புகளைப் பார்ப்பதும்
    பிறகு
    அலுவலக வெள்ளைப் பலகையை பார்ப்பதுமாய் இருக்கிறேன்.
    இன்று எனது கணவரின் பிறந்த நாள்.
    இன்றாவது சீக்கிரம் போக வேண்டுமென நினைத்திருந்த போது தான்
    வழக்கம் போல ஒரு குழப்பம்.

    அவசரம்! எமர்ஜென்சி!

    அலுவலக வெள்ளைப் பலகையை
    எறும்புகள் மொய்த்திருப்பது போல இருக்கின்றன
    அதில் எழுதப்பட்டிருக்கும்
    என்னுடைய வேலைகள் மற்றும் கடமைகள்.

    கடவுள் இன்றும் லேட் தான்.
    வந்தவர் மதியத்திற்கு மேல்
    எங்கு போனார் என்று தெரியவில்லை.
    செல்போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருக்கிறது.
    மிக அவசரமாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

    கணவரிடம் என்ன பொய் சொல்வது என குழம்பியபடி அமர்ந்திருக்கிறேன்.
    இன்னும் நானூறு வருடங்கள் உழைத்தாலும் கூட
    இந்த மாத டார்க்கெட்டை
    என்னால் சாதிக்க முடியுமா என்று தெரியவில்லை.

    முதுகு வலி!

    நான் அமர்ந்திருக்கும் பத்தாவது மாடி அறையின்
    ஜன்னலுக்கு வெளியே
    ரோஜா செடிகள் போல
    ஒரு பிரம்மாண்ட மரத்தின் உச்சி தெரிகிறது.
    …மேலும் வாசிக்க


  • சாதி என்னும் சுவர்

    உத்தபுரத்தில் தலித் மக்கள் தாங்கள் வசிக்குமிடம் அருகே வரக்கூடாது என சாதி இந்துகள் சுவர் எழுப்பி அதன் மேலே மின்சாரம் பாயும் கம்பிகளையும் வைத்தது 21-ம் நூற்றாண்டின் உச்சகட்ட அவலம். (சுட்டி: ஆயிரக்கணக்கான உத்தபுரங்கள்) இந்த சுவரை இடித்த அரசாங்கம் கிராமத்தில் அமைதியை நிலைநாட்ட சாதி இந்துகளுக்கும் தலித் மக்களுக்கும் தனி தனி பள்ளிக்கூடம், தனி ரேஷன் கடை என புது தீண்டாமை பழக்கத்தினை உருவாக்கியது. காவல்துறையினரே தலித் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து (கலவரத்தினை அடக்க என சொல்கிறார்கள்) டீவி, சாமான்கள் எல்லாம் உடைத்தார்கள். கலவரத்திற்கு காரணமானவர்கள் என கைது செய்யபட்டவர்களில் அப்போது பிரசவம் முடிந்து மூன்று நாளே ஆன ஒரு பெண், எழுபது வயது முதிய பெண் உட்பட நூற்றுக்கணக்கானோர் இருந்தார்கள். (சுட்டி: உத்தபுரமும் காம்ரேடுகளும்)

    மற்றொரு உத்தபுரம்

    கிருஷ்ணகிரி அருகே அகரம் என்கிற கிராமத்தில் சாதி இந்துகள் தாங்கள் வசிக்கும் பகுதிக்குள் தலித் மக்கள் வரக்கூடாது என வேலி அமைத்த செய்தி சமீபத்தில் வெளியானது.… …மேலும் வாசிக்க


  • சிலி சுரங்க மீட்புலகத்தில் எந்த ஒரு சினிமாவிற்கும் இவ்வளவு கண்ணீர் மழை கிடைத்திருக்காது. ஆனால் அது சினிமா அல்ல. கண் எதிரே நடந்து கொண்டிருக்கும் சம்பவம். உலகமெங்கும் தொலைக்காட்சிகளில் அந்த நம்ப முடியாத நிகழ்வை நேரடி ஒளிபரப்பில் பார்த்து கொண்டிருந்தார்கள் நூறு கோடி மக்கள்.

    கடவுள் மீண்டும் ஒரு முறை அதிசயத்தை நிகழ்த்தி காட்டி விட்டார்,” என்றார் ஒரு கிருஸ்துவ போதகர்.

    “ஒரு சைக்கிள் சக்கரத்தின் வட்டம் போல தான் இருக்கிறது,” என்றார் ஒரு தொலைக்காட்சி செய்தியாளர். அவர் சொன்னது அங்கு நிலத்தில் இருந்த சிறு குழியை தான். அது குழி அல்ல. நிலத்திற்கு அடியில் செங்குத்தாய் பாதாளத்தை நோக்கி நீண்டிருக்கும் உதவித்தடம் அது. அந்த பாதாள குழியில் இருந்து ஒரு சிறு ராக்கெட் போன்ற கூண்டு ஒன்று கொஞ்சம் கொஞ்சமாய் நிலத்திலிருந்து மேல் எழுகிறது. காத்திருக்கும் மக்களிடம் இருந்து கைத்தட்டல் சத்தம்.

    “சிலி, சிலி,” என அவர்கள் பாடுகிறார்கள். லிப்ட் போல தோற்றமளிக்கும் அந்த கூண்டில் இருந்து ஒரு மனிதன் வெளிபடுகிறான்.… …மேலும் வாசிக்க