• அவர்களில் பெரும்பாலனோருக்கு
    என்னுடைய மகன் வயது தான் இருக்கும்.
    அரும்பு மீசை,
    பள்ளிக்கூடத்து சிரிப்பு,
    கண்களுக்குள் ஒளிந்திருக்கும் குறும்புத்தனம்,
    தூக்கமில்லாத கண்கள் மற்றும்
    இனம் புரியா கோபம்.
    அவர்களுக்குள் ஒரு சிறுவன் ஒளிந்திருக்கிறான்.

    அன்றொரு நாள் கனவில்
    இவர்களை நானே பிரசவித்ததாய் உணர்ந்தேன்.
    எதிரி கொடி பறக்கும் ஆர்மி கேப்பில்
    அவ்வபோது எழும் ஆரவாரத்தில்
    என்றோ இறந்து போன எனது மகனின் குரலும் சேர்ந்தே
    எனக்கு கேட்கிறது.
    எனது ஜன்னலில் இருந்து தெருவில் கடந்து போகும்
    ஒவ்வொரு சிறுவனின் முகத்தையும்
    உற்று நோக்கியபடி கழிகின்றன எனது பகற்பொழுதுகள்.
    அந்த பேய் நிற பழுப்பு யூனிபார்மினை கழற்றி எறிந்தபிறகு
    அவர்களது வலிமையான தோள்களில் சாய்ந்து கொள்ள துடிக்கும்
    எனது மனம்.

    நாய் குட்டியை வருடுவது போல
    அந்த துப்பாக்கி எமனை வருடியபடி இருப்பார்கள்.
    மீசையை முறுக்குவது போல
    அவ்வபோது அதை தோளில் சுமப்பதும்
    பிறகு கழட்டுவதுமாக இருப்பார்கள்.
    அந்த பூட்ஸ் காலில் ஒட்டியிருக்கும் மணல்
    எங்கிருந்தெல்லாம் வந்திருக்கும் என யோசித்திருப்பேன்.
    …மேலும் வாசிக்க


  • வன்முறை என்பது மனிதனோடு உடன் பிறந்ததாய் இருக்கிறது, பயத்தை போலவே.

    துணிச்சல் மிகுந்தவனிடம் ஒளிந்து இருக்கிறது அபரிதமான பயம். பயந்தவனாய் வாழ்பவனிடமும் பதுங்கி இருக்கிறது அளவிற்கு அதிகமான வன்மம்.

    காட்டில் வாழும் மிருகங்களில் எது வாழ தகுதியுடையவையோ அவை வாழ்கின்றன. மற்றவை காணாமல் போகின்றன. அந்த மிருகங்களில் ஒருவன் மனிதன். அவனுடைய இரத்தத்தில் அந்த வனத்தின் நெடி இன்னும் இருக்கிறது.

    மிருகங்கள் வாழும் காட்டிற்கும் மனிதர்கள் வாழும் நகரங்களுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால் அடிப்படை நியதி இன்னும் அதே தான். தன்னில் வலியது பிழைக்கும். ஒரு சிறு திருத்தம். இங்கே வலிமை என்பது உடல் வலிமை மட்டுமல்ல.

    காந்தி ஹிட்லருக்கு எதிராக அகிம்சை போராட்டம் நடத்தி இருந்தால் ஜெயித்து இருப்பாரா? காந்திக்கு முன்பு அகிம்சை போராட்டங்களே கிடையாதா? ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட முடியுமா? அப்படி காட்டியவர்கள் தான் எத்தனை பேர்?

    உடலெங்கும் இரணங்களும், ஈக்கள் மொய்க்கும் புண்களும், சீழ் வழியும் உடலை தொட்டு சேவை செய்தவர் அன்னை தெரசா.… …மேலும் வாசிக்க


  • மென்மஞ்சள் வெயிலில் உன் நினைவுகளை
    வண்ணம் தீட்டும் மேகங்களிடம் பதுக்கி வைத்தாலும்
    கோபத்தை அந்நியன் யாராவது ஓருவனிடம் கொடுத்தும்
    வாங்கியும்
    படுக்கையில் அதை அழுத்தி தூங்க பழகி இருக்கிறேன்.

    வேண்டாம்.

    காதலின் துயரம்
    என் வாழ்வை போர்த்தி இருக்கிறது.
    அது என் வாழ்க்கை.
    அது இல்லாமல் என் வாழ்வில்லை.

    காதலின் துயரம் கோபம்.
    ஒவ்வொர் இரவும்
    கோபம் மட்டுமே.


  • சாலையை கடந்து வீட்டிற்குள் நுழைந்து
    கதவை அடைத்து உள்ளறைக்குள் ஜன்னலை சாத்தி
    கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்ளும் என்னை
    பல கண்களாய்
    அவன் கவனித்தபடி இருக்கிறான்.

    கண்களை மூடி
    கற்பனையில்
    வீட்டிற்கு வெளியில் ஓடி
    அந்த இரகசிய செய்தியை அறிவிக்கிறேன் நான்.

    தூரத்தில் ஆரவாரம் கேட்டது.


  • இருளின் ஊடாக குருதி மழையில்
    நனைந்து கிடக்கிறோம்
    நாங்கள் இருவரும்.
    அவள் இதழோரம் கொஞ்சம் மிச்சமிருக்கிறது
    அவளால் கொல்லபட்டவனின் இரத்தம்.
    செந்நீரின் சுவைக்காக ஏங்கி கிடக்கிறேன்
    நான்.

    நிலவை இழந்த வானத்தில்
    அவ்வபோது மின்னி மறைகிறது
    ஒற்றை வெள்ளை கோடு.
    கோட்டானின் கதைத்தலும்
    வௌவால்களின் இறைச்சலும் தூரத்தில்.

    பிணங்களின் கனவுகள்
    மேகங்களாய் மேலெழுந்து
    பாழடைந்த மாளிகையின் சுவர்களில் அப்பி
    சிதைவுகளில் கொஞ்சம் தப்பி போகிறது.

    ஜன்னல், கதவுகளில் மரச்சட்டங்கள்
    சடசடவென உடைகின்றன.
    இறக்கைகளை அடித்தபடி
    யாரோ பறந்து போகிறார்கள்
    கீழ்வானத்தை நோக்கி.

    அவள் கண்களில் காதல் பொங்க
    என்னை பார்க்கிறாள்.

    பின்னிரவு பனியில் உறைய தொடங்குகிறோம்.

    பிறகு
    ஞாயிறு எங்களை மனிதர்களாக மாற்றியது.


  • சருகுகள் கூட இல்லாது போன நிலப்பரப்பில்
    பட்டு போன மரம் போல
    அதன் காய்ந்த பட்டை போல
    அவன் கிடக்கிறான்.

    கேள்விகுறி போல கிடக்கிறது
    அவன் உடல்.
    முதுமையும் காயங்களும் உடலெங்கும்.

    ஆரவாரமான கூட்டம் கடந்து போகும்
    அதே சாலையில் தான்
    அவனும் கிடக்கிறான்.

    கூட்டத்தின் ஒலி
    அவனை தொடும் போதெல்லாம்
    புரண்டு படுக்கிறான்
    தன் கிழிசல்களோடு.

    கறுப்பு வெள்ளை புகைப்படமாய் எடுத்தால்
    மனதை கலைத்து போடும் சித்திரம்.

    அவனை என் கவிதையாய் எழுத
    வார்த்தைகளை தேடி கொண்டிருக்கிறேன்.
    அவனுடைய பார்வை எத்தனை கூர்மையானது என்பதை
    இன்னும் நான் அறியவில்லை.


  • நான்கைந்து நாட்களாக ஒரே உடை.
    கலைந்த தலைமுடி.
    தாடி.
    இமைக்காதது போல அலைபாயும் கண்கள்.
    சிந்தனையைப் போர்த்திக் கொண்ட உடல்.
    குப்பையில் எறிவதற்கு முன்
    கவனமாய் காகிதங்களை
    மடித்து மடித்து வைக்கிறான்
    தினந்தோறும்.

    சாப்பாடு பார்சலாய் வந்த தினசரிகள்,
    பழைய பில்கள்,
    என்றோ உதிர்ந்து போன பத்திரிக்கைத் தாள்கள்,
    மற்றும்
    அவனுடைய கிறுக்கல் பக்கங்கள்.

    காகிதங்களில் இருந்து உதிர்கின்றன
    ஒவ்வொரு எழுத்தாய்.


  • எங்கள் தெருவிற்குள் நுழைவதற்கு அந்த மதுக்கடையை தாண்டி தான் வந்தாக வேண்டும். இரவு எட்டு மணிக்கு மேலே மதுக்கடையை சுற்றி கும்பலாய் ஆட்கள் குழுமி இருப்பார்கள். தெரு விளக்கு வேறு பல சமயங்களில் எரியாது. அந்த அக்கா ஜீன்ஸ் பேண்டும் கையில்லாத சட்டையும் போட்டு கொண்டு நாலைந்து தடவை மார்க்கெட்டிற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருப்பாள். அவள் அந்தக் கடையை தாண்டி தெருவிறகுள் நுழையும் போதும் வெளியேறும் போது சட்டென பேச்சரவம் குறைந்து அனைவரது கண்களும் அவள் மேல் தான் இருக்கும். தெருவிற்குள்ளோ அனைத்து பெண்மணிகளுக்கும் அவள் தான் பேசு பொருள்.

    அவள் பேரு ரேகா. கோபத்தை எப்போதும் முகத்தில் சுமந்து இருக்கவில்லை என்றால் மிக அழகானவளாய் இருந்திருப்பாள். ரொம்ப திமிரானவள் என்று எல்லாரும் அவளை சொல்வார்கள். அதற்காகவே அவள் இன்னும் திமிருடன் திரிய தொடங்கினாள். என்றும் அவள் வெட்கப்பட்டோ பயப்பட்டோ பார்த்ததே இல்லை. பார்வையில் படும் யாரையும் கண்டுகொள்ளவே மாட்டாள். ஆளற்ற சாலையில் செல்பவள் போல பதட்டமில்லாமல் நடந்து போவாள்.… …மேலும் வாசிக்க


  • வானத்தை போர்த்தி இருக்கிறது இருள்.
    நகரத்தின் மீது கவிந்திருக்கிறது விளக்கு வெளிச்சம்.
    பிரதான சாலை, குறுக்கு சந்து எங்கும் வாகனங்கள்.
    முழுச் சுற்று போகாத சக்கரங்கள்.

    ஒருவரது தலையில் இருந்து ஊற்றுகிறது வியர்வை.
    இன்னொரு காரில் புலம்பியபடி இருக்கிறாள் ஓர் இளம்பெண்.
    பைக்கில் கண்களை மூடியபடி காத்திருக்கிறான் ஒரு வழுக்கை இளைஞன்.

    காத்திருத்தலின் வேதனையோடு கதறுகின்றன அவ்வபோது ஹாரன் சத்தம்.
    நடைபாதையில் தனது பேரனோடு விளையாடிக் கொண்டிருக்கிறாள் ஒரு கிழவி.
    வாகனங்களுக்கு இடையே பாதையை உருவாக்கி கொண்டு சாலையை கடக்கிறாள் ஒருத்தி.

    வானத்தை பார்த்தேன்.
    ஒளிக்கற்றையை இழுத்தபடி கீழ் இறங்குகிறது ஓர் எரிகல்.


  • நேற்று காலை பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. நேற்றைய மாலை நாளிதழ்களும் இன்றைய காலை நாளிதழ்களும் தேர்வு முடிவுகளையும் அதில் முதலிடம் வகித்தவர்களையும் பற்றி பக்கம் பக்கமாக எழுதி பிரசுரித்து இருக்கிறார்கள். புத்திசாலி பள்ளிக்கூடங்கள் தங்களது சந்தை மதிப்பை உயர்த்தி கொள்ள இந்த சந்தர்ப்பத்தை தான் எதிர்பார்க்கின்றன. மாவட்ட அளவில் தங்களது மாணவர் ஒருவர் எதாவது ஒரு பாடத்தில் முதலிடம் பெறுவதை நேரடி விளம்பரமாகவோ அல்லது ஒரு செய்தியாகவோ பத்திரிக்கைகளில் பிரசுரிக்க அவை ஆர்வமாய் ஓடி வருகின்றன. இன்று ஒரு பள்ளியின் முதல்வர் முதலிடம் பெற்ற ஒரு மாணவன் மற்றும் மாணவி இருவரையும் தன் இருபக்கமும் நிறுத்தி கை கோர்த்து கைகளை உயர்த்தி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து இருந்தார். குத்துச் சண்டை நடுவர், போட்டியின் இறுதியில் வெற்றியாளரை கையை உயர்த்தி அறிவிப்பாரே அப்படி இருந்தது அந்த போஸ்.

    எனக்கு தெரிந்து மகனின் தேர்விற்காக இரண்டு மாதம் மூன்று மாதம் தனது அலுவலகத்தில் விடுப்பு எடுத்த தாய்மார்கள் எல்லாம் உண்டு.… …மேலும் வாசிக்க