• இந்த வலைப்பதிவினை தொடங்கி 12 மணி நேரத்தில் ஹேக்கிங் (hacking) நடந்தது. இப்போது முழுமையாய் துடைத்து எறிந்து விட்டு புதிய மென்பொருளில் மீண்டும் தொடங்கி இருக்கிறேன். எல்லாம் சரியாகி விட்டது.

    ஏறத்தாழ பதினொரு வருடங்களுக்கு முன் பிரவுசிங் சென்டர்கள் முதன்முதலாய் சென்னையில் முளைக்க தொடங்கிய நேரம். இணையத்தின் மீது ஒருவித பித்து போல பிரவுசிங் சென்டர்களுக்கு போய் கொண்டிருப்பேன். யாகூ தான் அப்போது பிரபலமான தளம். மின்னஞ்சல், குரூப், சாட் என பிரவுசிங் என்பது யாகூவில் தான் பெரும்பாலும் இருக்கும். யாகூவில் அப்போது geocities என்றொரு பகுதி இருந்தது. அதாவது இணையத்தில் இலவசமாய் உங்களுக்கென்று ஓரிடம். இப்போது blogspot போல என வைத்து கொள்ளுங்களேன். முதலில் நமது ஆர்வத்திற்கு ஏற்ற வகையில் நமக்கு இணையத்தில் இலவசமாய் இடம் கொடுப்பார்கள். அதாவது எனக்கு கலை மற்றும் இலக்கியத்தின் மீது ஆர்வம் என்றால் பாரீஸ் என்கிற இடத்தில் (yahoo.com/geocities/paris/0968 என்பது போல) இடம் கொடுப்பார்கள். (இதைப் பற்றி எழுத்தாளர் அம்பை கூட எதோ ஒரு கதையில் குறிப்பிட்டு இருப்பதாக ஞாபகம்.)… …மேலும் வாசிக்க


  • என்னுடைய புது வலைப்பதிவிற்கு உங்களை வரவேற்கிறேன். ஏறத்தாழ இரண்டரை வருடங்கள் பிளாக்கரில் செவ்வாய்க்கிழமை கவிதைகள் என்கிற பெயரில் ஒரு வலைப்பதிவு நடத்தி கொண்டிருந்தேன். என் வாழ்வில் மறக்க முடியாத நினைவு அது. இப்போது எனக்கென்று இணையத்தில் சொந்த வீடு கட்டி இங்கு குடி புகுந்திருக்கிறேன். என்னுடைய பழைய பிளாக்கர் பதிவுகள் அனைத்தும் இப்போது இங்கேயே வாசிக்க கிடைக்கும்.

    செவ்வாய்க்கிழமை கவிதைகள் வாசித்து வந்த நண்பர்கள் கவலைப்பட வேண்டாம். இது அப்படியே அந்த வலைப்பதிவு தான். முகவரி மட்டும் மாறியிருக்கிறது. முன்னர் மாதத்திற்கு மூன்று நான்கு பதிவுகள் போடுவேன். இப்போது வாரத்திற்கு மூன்று பதிவாவது போட வேண்டுமென திட்டம். பார்க்கலாம் எப்படி போகிறதென…

    நன்றி!


  • என்னை தாக்குவது அவனது ஒரே நோக்கமாக இருக்கிறது.
    நாளுக்கு நாள் அது அதிகரித்தபடியே இருக்கிறது.
    அவனது கண்கள் நெருப்பினை உமிழ்வதாக பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.
    உடல்தசைகள் அசுர முறுக்கில் இருப்பதாக பேச்சு.
    அவனது நடை நிதானமாக மாறுவது இன்னும் பயமுறுத்துகிறது.

    இரத்த வாடையுடன் சுற்றும் அவனிடம் இருந்து நான் எங்கு ஓடினாலும் தப்ப முடியாது.
    நான் கடக்கும் அனைத்து தெருக்களிலும் அவனது தடம் இருக்கிறது.
    கனவுகளிலும் மிருக கர்ஜனையுடன் துரத்துகிறான்.

    பயத்தையும் வலியையும் பல முறை கற்பனையில் உண்டு முடித்த பிறகு
    அது எப்போது நிகழும் என்று
    நானும் காத்திருக்கிறேன்
    ஒவ்வொரு நிழல் தோன்றும் போதும்.


  • சசிதரூர் கொச்சி அணியின் மூலமாக தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஆதாயம் தேடி கொண்டாரா? லலித் மோடி தன்னுடைய மருமகனுக்கு சாதகமாக தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தாரா? ஐபிஎல்லில் கலந்து கொள்ளும்  சில அணிகள் பொய்யாக நஷ்ட கணக்கு காட்டினார்களா? ஊடகங்களில் ஐபிஎல் பற்றி புது புது தகவல்கள் சூடாக வந்து விழுந்து கொண்டிருக்கின்றன.

    வர்த்தம் விளையாட்டு துறைக்குள் நுழைந்தவுடன் அதன் பின்னே அழையா விருந்தாளிகளாக நுழைந்து விட்டன ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும். வர்த்தகரீதியாக ஐபிஎல் மிக பெரிய பணத்தை சம்பாதித்து இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இப்போது அதற்கான முறையான வரி கட்டபடவில்லை என குற்றச்சாட்டு வைக்கபடுகிறது.

    இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு. அது இன்று நம் அரசாங்கம் லாபம் கொழிக்கும் தொழில்கள் வளர வேண்டும் என்றும் நிறைய புது பணக்காரர்கள் உருவாக வேண்டும் எனவும் முன் மொழிகிறது. காரணம் இப்படியாக தனிநபர்களின் வளர்ச்சியில் அரசிற்கு நிறைய வரிகள் கிடைக்கும், நாட்டில் பண நடமாட்டம் அதிகரிக்கும் என்பது தான்.… …மேலும் வாசிக்க


  • இருண்ட குகை.
    மலையே சர்ப்பமாய் எங்களை சுற்றி நிற்கிறது.

    கருமேகங்கள்.
    இதோ உருளைகள் மீண்டும் உட்செல்கின்றன.
    இது வரை இந்த சங்கிலி பிணைப்புகள் ஓய்ந்து பார்த்ததில்லை.

    வயிற்றில் அமிலம்.
    கண்களில் எரிநீர்.
    வெறும் உமிழ்நீர் தாகத்தை போக்குமா?
    செவித்திறன் இன்னும் இருக்கிறதா?
    நீண்ட அமைதியும் நீண்ட சத்தமும் ஏறத்தாழ ஓன்று தான்.

    இன்றைய பொழுதின் முதல் பெட்டி வெளி வர வேண்டும்.
    நேரம் கடந்து விட்டது.
    காத்திருத்தலின் வலியும் தவிப்பும் பயமும் வெறுமையும்
    நாங்கள் யார் என்பதை மறக்க செய்கிறது.

    நாங்களும் இயங்கி கொண்டிருக்கிறோம்
    அதனோடு.


  • இதற்கு முன் பதித்த தமிழ் வலைப்பதிவுலகம் என்கிற இடுகையின் தொடர்ச்சியாக இதனை வாசிக்கவும். 🙂

    தமிழ் வலைப்பதிவுலகம் என்கிற என் இடுகையை படித்து நிறைய பேர் என்னை இமெயிலிலும் போனிலும் நேரிலும் தொடர்பு கொண்டு நீங்கள் எப்படி வலைப்பதிவுகளின் தரத்தினை உயர்த்தி பேசுனீர்கள் என்று தங்கள் ஆச்சரியத்தினை தெரிவித்தார்கள். (இப்படியாக பொய் சொல்ல விரும்பவில்லை.) உண்மையில் அதற்கு கருத்து சொன்ன ஒரே ஆள் நமது ரவிசங்கர் தாம்.

     

    தமிழ் வலைப்பதிவுகளின் தரம் பற்றி இங்கு நான் பேச வரவில்லை. தரம் என்று ஒன்று உண்டு என்றும் அது உலகம் முழுக்க ஒரே அளவுகோளினை கொண்டது என்றும் நான் நம்புவதை விட்டு பல காலமாகிறது. ஆனால் நான் சொல்ல வருவது வலைப்பதிவுகள் ஏற்படுத்தும் புது வகையான வாசிப்பனுபவம் பற்றியது. இது எதன் காரணமாய் ஏற்படுகிறது என யோசித்தால் வலைப்பதிவுகளில் உள்ள ‘நான்‘ தான் இதன் காரணியாக இருக்கும் என நினைக்கிறேன்.… …மேலும் வாசிக்க


  • கூகுள் ரீடரில் தமிழ் வலைப்பதிவுகளை ஒட்டுமொத்தமாய் வாசிக்கும் அனுபவம் என்னுடைய நீண்ட கால வாசிப்பனுபவத்தை குடிக்காரன் மனநிலைக்குதள்ளி விட்டது என்று சொல்லலாம். பதினொரு வருடங்களுக்கு முன்பு ஆறாம்திணை இணைய இதழில் பணிபுரிந்த காலம் தொடங்கி இன்று வரை தமிழ் எழுத்துகள் இணையத்தில் வலம் வருவதை பார்த்து வந்திருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழில் வலைப்பதிவுகள் எண்ணிக்கையில் பல மடங்கு அதிகரித்து இருக்கின்றன என்று தோன்றுகிறது. சிலர் ஆரம்பித்த ஜோரில் தங்கள் வலைப்பதிவினை கை கழுவி போனாலும் நிறைய பேர் தங்களது வலைப்பதிவை சீரியஸான விஷயமாக எடுத்து கொண்டு அவ்வபோதாவது எழுத தான் செய்கிறார்கள்.

    எழுதுவது என்றால் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என்று இதை வகைப்படுத்தி விட முடிவதில்லை. குமுதம், ஆனந்த விகடன் மற்றும் அதன் பிரதி பத்திரிக்கைகள் எல்லாவற்றிலும் இருக்கும் சரக்கினை விட இன்றைய தமிழ்கூறு வலைப்பதிவுலகம் ஆபாரமான சரக்குகளை பதித்தபடி அதுவும் ரியல் டைமில் பதித்தபடி இருக்கிறது. என்ன வேண்டும் சொல்லுங்கள், சினிமா விமர்சனங்களா?… …மேலும் வாசிக்க


  • அவன் கைதான மறுநாள்.
    சூரியன்.
    நெற்றியில் வியர்வை.
    பாதையில் செருப்பற்ற கால்களை துன்புறுத்தும் முட்கள்.
    நாவினில் தாகம்.
    நிழல் கூட சுருங்கி கொண்டு விட்டது.
    சந்தையின் மணம் மட்டுமே மிச்சமிருக்கும் வெற்றுவெளியில் நடந்து கொண்டிருக்கிறேன்.
    தூரத்தில் ஒற்றை குடிசைக்கு வெளியே கொலையானவனின் சகாக்கள் சீட்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
    பாலை நிலத்தில் ஒற்றை ஆளாய் என்னை தூரத்திலே பார்த்திருக்கக்கூடும்.
    ஆட்டத்தை நிறுத்தி விட்டு சேர்ந்து நிற்கிறார்கள்.
    என்னால் மரணத்தை காற்றில் உணர முடிகிறது.
    எல்லா திசைகளிலும் அவர்களது பார்வை அலைபாய்கிறது.
    என் கையில் இருந்து ஊற்றிய உதிரத்தை வேட்டியில் துடைத்து விட்டு ஓடுகிறேன்
    கொடூரமாய் ஓலமிட்டபடி அவர்களை நோக்கி.


  • எங்களுக்கு கல்வி வேண்டாம்.
    எங்கள் எண்ணங்களை நீங்கள் கட்டுபடுத்த வேண்டாம்.
    பள்ளிக்கூடத்தில் வார்த்தைகளில் விஷம் ஊற்ற வேண்டாம்.
    குழந்தைகளை தனியாக விடுங்கள்.
    ஆசிரியர்களே குழந்தைகளை தனியாக விடுங்கள்.
    எல்லாமே சரியாக தான் இருக்கிறது.
    சுவரில் அது மற்றொரு செங்கல்லாக தான் இருக்கிறது.
    நீங்களும் அங்கே இன்னொரு செங்கல் தான்.

    – பிங்க் ஃபிளாயிட், ராக் இசை கலைஞர்

    கட்டாய கல்வி என்று ஒன்று கிடையாது. கல்வி எங்கள் அடிப்படை உரிமை என்கிற வாசகமே சரியாக இருக்கும். கல்வியுரிமை (right to education) ஏப்ரல் ஒன்றாம் தேதியன்று அமுலுக்கு வந்ததாக சொல்லி இருக்கிறார்கள். வழக்கம் போல பாராட்டு வாசகங்கள், சிற்சில விமர்சனங்கள். ஆனால் அதிகார பாதைக்கு இது ஒரு மைல் கல். தங்களுடைய பெருமையாக பறைசாற்றி கொள்ள ஒரு சாதனை.

    ஆறு வயதில் தொடங்கி 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கல்வி அளிக்கபட வேண்டும். தற்போது 22 கோடி குழந்தைகள் இந்த வயதில் இருக்கிறார்கள்.…மேலும் வாசிக்க


  • எப்படி துரத்தினாலும் அடுத்த நாள் காலை
    மீண்டும் கூரையில் தோன்றும் குரங்குகளை போல
    கறை படிந்து தான் போகிறது
    எனது சட்டையில்.

    நண்பன் இறந்து போன நாளில்
    அவனுடைய சடலத்தை தூக்க தயங்கிய கணத்தில்
    கறையின் நிறம் மாறி போனது.