• என்னைச் சந்திக்கும் கண்களில்
    எல்லாம் தேடுகிறேன் எனது பிம்பத்தை.
    அக்கண்களின்
    ஓர் அலட்சிய சுழிப்போ
    துள்ளலோ
    அமைதியோ
    பதட்டமோ
    எனக்கான இடம் என்ன என்பதைச் சொல்கிறது.
    ஒரு வினாடி தான் எனினும்
    அக்கண்கள் சொன்ன வார்த்தைகளை
    உருட்டி கொண்டே இருக்கிறேன்
    அது என்னை விட பெரிதாகும் வரை.
    பெரிதான பின்பு
    அது ஆயிரம் புனைவுகளை
    தன்னுள் வைத்து இருக்கிறது.
    ஒவ்வொரு புனைவும்
    சுகம் துக்கம் பயம் காமம் சலிப்பு என
    எவ்வளவோ உணர்வுகளைப் பொழிகிறது.
    ஒவ்வொரு உணர்விலும்
    பித்தன் போல
    திளைக்கிறேன்
    என்னைக் கடந்து போகும் நிழல்களை உணராமல்.


  • நம் வீடோ
    அன்னிய இடமோ
    பழுதாகிப் போன தண்ணீர் குழாய்
    எப்போதும் பதட்டத்தை ஏற்படுத்துகிறது.
    நினைவிற்கு வருகின்றன
    சிறுசிறு சண்டைகளும்
    அப்படியான சண்டைகளால்
    என்றோ விட்டு போன உறவுகளும்.
    தண்ணீர் குழாயைத்
    திருகி திருகி சரி செய்ய பார்க்கிறேன்
    என் பலங்கொண்ட மட்டும்.


  • உனது கழுத்தினை அழுத்தி
    நீ மூச்சு திணறி
    இறந்து போவதைப் பார்க்க போகிறேன்.

    உன்னோடு எப்போதும் இருக்கும்
    அந்தச் சுகந்தம்
    நீ இறந்த பிறகு எவ்வளவு நிமிடங்கள் நீடிக்கும்?

    தேகத்தில் தேன் ஊற்றினாற் போல் இருக்கும்
    அந்த ஜொலிப்பு
    விளக்கு அணைவது போல் சட்டென அணையுமா?

    குத்திட்ட கண்களைப் பார்ப்பதில்
    இனி தயக்கமோ குற்றவுணர்வோ இருக்க போவதில்லை.
    உதடுகளைக் கவ்வினாலும்
    தடுக்க முடியாது உன்னால்.

    இத்தனை வெறுப்பிற்கும் பெருங்காரணம்
    ஒன்று நிச்சயம் இருக்க வேண்டும்.
    அப்படி ஒரு காரணத்தைத் தேடி கொண்டு இருக்கிறேன்.
    அது வரை உயிரோடு இருந்து விட்டு போ!


  • சாலை விளக்குகளும்
    எதிர் வரும் வாகனங்களின் விளக்குகளும்
    கலந்து இணைந்த பிறகும்
    தொடர்கிறது பயணம்.

    நிற்காமல் ஓடும் தார் சாலையும்
    ஹம் சத்தமும்
    வாகனத்தை இயக்குகின்றன.

    கண்கள் விழித்திருக்க
    கனவுகள் தார் மணத்தோடு
    புகையுருவில்
    நடனமாடுகின்றன.

    எதோ துக்கம் இருக்கிறது.
    அது பயணத்தின் முடிவில் காத்திருக்கிறது.
    அது என்ன என்பது இப்போது நினைவில் இல்லை.
    ஹம் சத்தத்தோடு
    வெறுமை தரும் சோகம் இப்போதைக்குப் போதுமானது.


  • தெய்வாணை அந்தப் பெண்ணின் பெயர். பிரசவ வலியோடு மலைக்கிராமத்தில் இருந்து தொட்டில் கட்டி கீழே கொண்டு வரப்பட்டு இரண்டு ஆண்களுக்கு இடையில் பைக்கில் அமர்ந்து பயணித்து மருத்துவமனைக்குச் சென்றடைந்த தெய்வாணையின் கதை கேட்பவர்களைப் பதற வைக்கும்.

    அவருக்கு இருபது வயதிருக்கும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கடம குட்டை என்கிற மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த மலைக் கிராமத்திற்குச் சாலை வசதி கிடையாது. கிட்ட தட்ட ஒன்றரை மணி நேரம் மலை மீது நடந்து தான் அங்குச் சென்றடைய முடியும். மின்சாரமும் கிடையாது. அரசு தண்ணீர் தொட்டி கட்டி தந்தார்கள். என்றாலும் மலைக் கிராமத்து பெண்களின் பகல் நேரத்தின் பெரும்பொழுது தண்ணீரைச் சுமந்து வருவதிலே கழிந்து விடுகிறது. அரிசி எல்லாம் பணக்கார சாப்பாடு அவர்களுக்கு. கூழும் களியும் தான் உணவு.

    கடம குட்டை போல முப்பதிற்கும் மேற்பட்ட கிராமங்கள் இப்படி அல்லல்படுகின்றன. நாகரீக உலகத்தின் சௌகரியங்கள் அனைத்தும் மறுக்கப் பட்டவர்கள் இவர்கள். யாராவது உடல்நிலை சரியில்லாமல் போனால் அவர்களைத் தொட்டிலில் கட்டி மற்றவர்கள் மலையில் இருந்து கீழே கொண்டு போய் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை. பலர் இப்படித் தொட்டில் கட்டி கொண்டு செல்லப்படும் போதே மலைப்பாதையிலே உயிர் இழந்திருக்கிறார்கள். கர்ப்பிணி பெண்களின் நிலையோ இன்னும் பரிதாபம். பாதி வழியில் பிரசவம் நடந்தது உண்டு. பெரும்பாலும் தொட்டில் கட்டி சுமந்து செல்வது ஆண்கள் தான். பெண்களுக்குப் பிரசவ வலி எடுத்தால் அவர்களால் என்ன செய்ய முடியும். பெண்களுக்கேயுரிய அசௌகரியங்களோடு துன்பத்தில் உழல வேண்டிய துர்பாக்கிய நிலை.

    மலைப்பாதையில் யானை, கரடி, மலைப்பாம்பு மற்ற விலங்குகளின் தொல்லையும் அதிகம். இரவு நேரத்தில் தீப்பந்தம் ஏந்தி தொட்டில் கட்டி நோயாளிகளைச் சுமந்து செல்லும் பயணம் ஆபத்தான ஒன்று. பல முறை யானைகளின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் கிராமத்தவர்கள்.

    தெய்வாணை கர்ப்பம் தரித்த நாளில் இருந்தே உடல்நலம் குன்றியே இருந்தார். சத்தான சாப்பாடு எதுவுமின்றி இருப்பதாலோ என்னவோ எப்போதும் சோர்வாகவே இருந்தார்.

    ஒரு நாள் மதியம் அவருக்குப் பிரசவ வலி எடுத்த போது ஆண்கள் யாரும் கிராமத்தில் இல்லை. தாங்க முடியாத வலி. ஆண்கள் காட்டில் பிழைப்பிற்காக சுற்றி திரிந்து திரும்பி வர மாலையாகி விடும். அது வரை வலியில் துடித்தபடி இருந்தார் தெய்வாணை. ஆண்கள் வந்த பிறகு அவர்களில் சிலர் அவரைத் தொட்டிலில் கட்டி சுமந்தபடி மலையில் இருந்து இறங்கினார்கள். மழை கொட்டி கொண்டிருந்தது. காற்று பலமாய் வீசி கொண்டிருந்தது. மிகுந்த வலியுடனான அந்தப் பயணம் அவருக்கு மிக நீண்டதாகவும் கொடூரமானதாகவும் இருந்தது. துணியெல்லாம் நனைந்து போயிற்று.

    அவர்கள் மலையை விட்டு இறங்கிய போது இரவு எட்டு மணி. அப்போது ஆட்டோவோ ஷேர் ஆட்டோவோ பஸ்ஸோ எதுவுமில்லை. மலை அடிவாரத்தில் இருந்த ஊர் தலைவரிடம் போய் பேசி இருக்கிறார்கள். அவர் தன்னுடைய பைக்கைக் கொண்டு வந்திருக்கிறார். அவர் பைக்கில் முன்னால் உட்கார்ந்து ஓட்ட, தெய்வாணை வலியில் துடித்தபடி அடுத்து அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்து அவரது கணவர். பெருமழையும் புயற்காற்றும் சூழ்ந்த இரவில் பைக்கில் அந்தப் பெண் பிரசவ வேதனையோடு பயணித்து கொண்டிருந்தார். ஒருவழியாய் அவர்கள் ஒரு மருத்துவமனைக்குப் போய் சேர்ந்தார்கள். அது பூட்டப்பட்டிருந்தது. பிறகு செவிலியர்களைக் கெஞ்சி கூட்டி வந்தார்கள்.

    தெய்வாணையின் நிலையைக் கண்ட செவிலியர்கள் பயந்து போனார்கள். இந்த நிலையில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் என்ன செய்வது என ஒதுங்கினார்கள். அவர்கள் காலில் விழாத குறையாக கெஞ்சி பணிந்து அவர்களைப் பிரசவம் பார்க்க வைத்தார்கள். பெண் குழந்தை பிறந்தது. அடுத்த நாளே படுக்கை வசதி குறைவாக இருப்பதால் மருத்துவமனையில் இருந்து தெய்வாணையைக் காலி செய்ய சொல்லி விட்டார்கள். சொந்தக்காரர்கள் அனைவரும் வந்து மீண்டும் மலைக்கிராமத்திற்கு அவரைக் கூட்டிச் சென்றார்கள்.

    முதல் நான்கு நாட்கள் ஒருமாதிரி போனது. அதற்குப் பிறகு தாயும் சேயும் மிகவும் உடல்நலம் குன்றினார்கள். குழந்தையின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. ஒரு நாள் கணவனும் மனைவியும் நடந்தே மலையில் இருந்து இறங்கி அங்கிருந்து மருத்துவமனைக்கு நடந்து போனார்கள். அங்கு குழந்தையை டவுன் மருத்துவமனை கொண்டு போக சொன்னார்கள். தர்மபுரி மருத்துவமனைக்குக் கூட்டி கொண்டு போன போது அவர்கள் அங்கிருந்து சேலம் மருத்துவமனைக்குப் போக சொன்னார்கள். இதற்குள் தெய்வாணையின் கணவர் மன இறுக்கத்தால் அழுதார்.

    “ஒரு பொம்பளையைக் கூட்டிட்டு நான் மட்டும் சேலத்திற்குத் தனியா எப்படி போவேன்? எனக்கு அவ்வளவு பெரிய ஊர்ல வழி எதுவும் தெரியாது,” என குழந்தை போல அழுதார்.

    “இனி என் குழந்தை செத்தாலும் பரவாயில்லை. அது நம்ம ஊர்ல சாகட்டும்,” என அவர் தெய்வாணையையும் குழந்தையையும் மீண்டும் ஊருக்கு அழைத்து போய் இருக்கிறார். மலை ஏறுவதற்கு முன் ஊர் தலைவர், மற்றவர்கள் அவர்களைப் பார்த்து ஏன் இப்படி வந்திட்டீங்க என திட்டியிருக்கிறார்கள். பிறகு வேறொரு உபாயமாக அவர்கள் குழந்தை மேல் முனி இருக்கலாம் என அங்கே முனி விரட்டுபவரிடம் காண்பித்து இருக்கிறார்கள். அவர்கள் மலைக் கிராமத்திற்கு திரும்புவதற்கு முன்பே குழந்தை இறந்து விட்டது.

    இது ஒரு பெண்ணின் கதை மட்டுமல்ல. அப்பகுதியில் உள்ள முப்பதிற்கும் மேற்மட்ட மலைக்கிராமங்களின் அவல நிலை.

    நன்றி: வில்லியம் பிளேக்கின் ஓவியம்

    இணைப்பு: தெய்வாணை பற்றியும் மலைக்கிராமங்களையும் பற்றியும் விஜய் டீவி நடந்தது என்ன நிகழ்ச்சியில் ஒளிபரப்பான தொகுப்பு.

    மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


  • சாதி உட்பிரிவுகளை முதலில் ஒழிக்க வேண்டும்

    சாதிகளுக்கு இடையே நிறைய ஏற்ற தாழ்வுகளும் வேறுபாடுகளும் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான சாதி உட்பிரிவுகளுக்கு இடையே ஏற்ற தாழ்வுகள் அதிகமில்லை. அதனால் முதலில் சாதி உட்பிரிவுகளை ஒழிப்பது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும் என ஒரு தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் இது சரியான அணுகுமுறை அல்ல. வட இந்தியாவிலோ அல்லது மத்திய இந்தியாவிலோ இருக்கும் பிராமணர்களை விட தென் இந்தியாவில் இருக்கும் பிராமணர்கள் சமூகத்தில் தாங்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதாக சொல்லி கொள்கிறார்கள். வட இந்தியாவில் இருக்கும் பிராமணர்கள் அல்லாத வைசியர்களும் கையாஸ்தாஸும் தான் தென்னிந்திய பிராமணர்களின் அந்தஸ்தில் இருப்பவர்கள் என்று சொல்ல முடியும். அது போலவே தென்னிந்தியாவில் இருக்கும் பிராமணர்கள் சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்கள். ஆனால் காஷ்மீரிலோ பெங்காலிலோ பிராமணர்கள் அசைவ உணவினைச் சாப்பிடுகிறார்கள். குஜராத்தியர்கள், மார்வாடிகள், பனியாக்கள், ஜெயின் மக்கள் இவர்கள் தான் சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள். சாதி உட்பிரிவுகளிலே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இதனால் இதனை ஒழித்து சாதி என்பது உட்பிரிவு அல்லாத ஒரே சமூகமாக மாற்றுவதென்பது இயலாத காரியம். அப்படியே உட்பிரிவுகளை ஒழித்து விட்டாலும் கூட, இது எப்படி சாதியை ஒழிக்கும் வழியாகும்? உட்பிரிவுகள் இல்லாத சாதிகள் இன்னும் தன்னளவில் வலிமையுடையதாக மாறி போகும்.

    சமபந்தி போஜனம்

    இதை தீர்வாக சொல்ல முடியாது. இது சாதியை ஒழிப்பதற்கான முழுமையான ஆயுதம் அல்ல. நிறைய சாதிகளுக்கு இடையே சமமாய் உட்கார்ந்து சாப்பிடுவது தவறாக பார்க்கப்படுவதில்லை. ஆனால் இந்த சமபந்தி போஜனங்கள் சாதி உணர்வினை குறைப்பது இல்லை.

    சாதிமறுப்பு திருமணங்கள்

    ஒரு சாதியினர் மற்றொரு சாதியினரை வேறொரு கிரகத்தில் வந்தவர்கள் போல பிரித்து பார்க்கும் மனநிலையை உடைக்கும் சக்தி அதிகபட்சமாக சாதிமறுப்பு திருமணங்களுக்கு உண்டு. உதிரம் கலந்து ஒருவருக்கொருவர் உறவுகளாகும் பட்சத்தில் சாதி உணர்வு குறையும் வாய்ப்பு இருக்கிறது.

    சாதிமறுப்பு திருமணங்கள் ஏன் அதிகமாய் கடைபிடிக்கப்படுவதில்லை

    ஆனால் உங்கள் சாதியை விட்டு இன்னொரு சாதியினரோடு திருமணம் செய்து கொள்ளுங்கள் என எவ்வளவு தான் பிரச்சாரம் செய்தாலும் அதை மக்கள் ஏற்று கொள்ள மறுக்கிறார்களே, ஏன்? சாதி செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் அல்ல. ஒரு தடுப்பினை எடுத்து விட்டால் சாதியினை ஒழித்து விடலாம் என நினைக்க கூடாது. சாதி என்பது ஓர் உணர்வு. அது ஒரு மனநிலை. இந்துக்கள் சாதியினை ஏன் பின்பற்றுகிறார்கள்? அது தவறானது, மனித உரிமை மீறல் என்பதால் அதை அவர்கள் பின்பற்றவில்லை. அவர்கள் தங்கள் மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். அதனாலே அவர்கள் சாதிமுறையை கடைபிடிப்பவர்களாக இருக்கிறார்கள். சாதி இன்னும் இருக்கிறது என்பதற்கு மக்களைக் குற்றம் சொல்ல கூடாது. மாறாக அவர்களது மதத்தினைத் தான் குற்றம் சொல்ல வேண்டும். சாஸ்திரங்கள் தான் சாதிகளுக்கான மதத்தினைப் போதிக்கிறது. மக்கள் சமபந்தி போஜனத்தில் கலந்து கொள்வதில்லை அல்லது சாதிமறுப்பு திருமணங்களுக்கு ஆதரவளிப்பதில்லை என சொல்வதில் அர்த்தமே இல்லை. இதற்கு சரியான தீர்வு சாஸ்திரங்களின் புனித தன்மை குறித்தான நம்பிக்கைகளை அடியோடு அழிப்பது தான். சாஸ்திரங்களிடமிருந்து மனிதர்களுக்கு விடுதலை வாங்கி தந்து விட்டால் அதன்பின் அவர்களிடம் சாதிமறுப்பு திருமணங்கள் பற்றியோ சமமாக உட்கார்ந்து சாப்பிடுவது பற்றியோ அறிவுறுத்த வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் தாங்களாகவே தங்களுக்குள் சமமாக உட்கார்ந்து சாப்பிடுவார்கள், தாங்களாகவே வெவ்வேறு சாதியினரோடு திருமண உறவு வைத்து கொள்வார்கள்.

    இந்து சாஸ்திரங்களை உடைக்காமல் சாதிகளை ஒழிக்கவே முடியாது

    ஒவ்வொரு இந்தும் சாதி ஒழிப்பு குறித்து காரண காரியங்களோடு சுயமாய் யோசிக்க வேண்டும் என்று சொன்னால் அதை அவர்கள் ஏற்று கொள்வார்களா?

    வேதா, ஸ்மிரிதி, சதாச்சார் ஆகிய மூன்றை மட்டுமே ஓர் இந்து பின்பற்ற வேண்டும் என்கிறார் மனு. இந்த மூன்றில் ஒன்றுக்கொன்று முரண்ப்பட்ட விஷயங்கள் இருந்தால் அதில் எதாவது ஒன்றைப் பின்பற்றலாம் ஆனால் அங்கே அறிவினைச் செலுத்தி சிந்தித்து எது சரி எது தவறு முடிவு எடுப்பது என்பது கடுமையான குற்றம் என வரையறுக்கிறது மனுதர்மம். யோசிப்பதையே தவறு என சொன்ன பிறகு அந்த மக்களை நாம் எப்படி யோசியுங்கள் என சொல்வது. வேதங்களையும் சாஸ்திரங்களையும் ஒழிப்பது மட்டுமே இதற்கு தீர்வாக இருக்கும்.

    மேற்கண்டவை டாக்டர் அம்பேத்கர் எழுதிய சாதியை ஒழிப்பது எப்படி என்கிற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. அம்பேத்கர் எழுதிய இந்தப் புத்தகத்தினைக் குறித்து காந்தி ஒரு கட்டுரை எழுதினார்.

    இந்து குடும்பத்தில் பிறந்த அம்பேத்கர், மற்ற சாதி இந்துக்கள் அவரை நடத்திய முறையைப் பார்த்தும் அவரது மக்களை நடத்திய முறையைப் பார்த்தும் இந்து மதத்தின் மீதே மிகுந்த கோபத்தில் இருக்கிறார். ஒரு அமைப்பு அதன் பிரதிநிதிகளின் நடத்தையை வைத்தே எடை போடப்படுகிறது. அம்பேத்கர் அப்படி தான் செய்திருக்கிறார். சாதி இந்துக்கள் சாதி முறைக்கு அடிப்படையாக சாஸ்திரங்களைச் சொல்கிறார்கள். அதனால் அவர் வேதங்களைத் தேடும் போது சாதி முறைக்கு ஆதரவாகவும் தீண்டாமைக்கு ஆதரவாகவும் நிறைய ஆதாரங்கள் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. ஆனால் வேதங்களில் இருந்து அம்பேத்கர் காட்டும் வரிகள் ஆதாரப்பூர்வமானவை என ஏற்றுக் கொள்ள முடியாது. ஸ்மிருதிகளில் இருப்பவை அனைத்தும் அச்சில் கொண்டு வர கூடியவையோ அல்லது அதன் மூலமாக புரிந்து கொள்ளக்கூடியவையோ அல்ல. இதை படித்த பண்டிதர்கள் புரிந்து கொள்ள முடியாது. முனிவர்களும் யோகிகளும் தங்களுடைய வாழ்க்கை மூலமாக அதை புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

    சாதிக்கும் மதத்திற்கும் தொடர்பு எதுவுமில்லை. சாதியின் ஆதிவேர்களைப் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் சாதி ஆன்மீக வளர்ச்சிக்கும் தேசிய வளர்ச்சிக்கும் பாதகமானது. வர்ணங்களும் ஆஸ்ரமாக்களும் சாதியோடு தொடர்புடையவை அல்ல. வர்ணத்தின் சட்டங்கள் நாம் நம்முடைய மூதாயர்களின் வழியில் தொழில் செய்ய வேண்டும் என சொல்கிறது. அது நம்முடைய உரிமைகளைப் பற்றி பேசுவதில்லை. ஆனால் நம் கடமைகளைச் சுட்டி காட்டுகிறது. மனித குலத்தின் நலத்திற்காக செயல்படுபவை வர்ணங்கள். எல்லாரும் அந்தஸ்தில் சமமானவர்களே என்று அது சொல்கிறது. கடவுளுக்கு முன்னால் பிராமணர்களும் தலித்தும் ஒன்று தான் என வரையறுக்கப்பட்டு இருக்கிறது. ஒரு காலத்தில் எல்லாரும் சமூகத்திலே சமமாய் தான் நடத்தப்பட்டார்கள். இன்றும் சில கிராமங்களில் ஓர் அரோக்கியமான உறவு இருப்பதை நாம் காண முடியும்.

    …குரானை ஒதுக்கினால் அவர் முஸ்லீம் அல்ல. பைபிளை ஒதுக்குபவர் கிருஸ்துவர் அல்ல. வர்ணங்களை வரையறுக்கிற சாஸ்திரங்களை ஒதுக்குபவர் இந்துவே அல்ல. சாஸ்திரங்கள் இன்றைக்கு நிலவுகிற சாதி முறையை ஆதரிக்கிறது என்பது நிரூபணமானால் நான் இந்து அல்ல என பிரகடனப்படுத்தி விடுவேன்.

    தன் கட்டுரை குறித்து காந்தி எழுதியதற்கு அம்பேத்கர் மீண்டும் பதில் தன் புத்தகத்திலே எழுதினார்.

    நான் சுட்டி காட்டியிருக்கும் வேதங்களில் உள்ள வரிகள் ஆதாரப்பூர்வமானவை அல்ல என்று மகாத்மா சொல்கிறார். இதில் நான் நிபுணன் அல்ல என்பதை ஒப்பு கொள்கிறேன். அதனால் தான் இந்து சாஸ்திரங்களிலும் சமஸ்கிருத மொழியிலும் நிபுணர் என்று பாராட்டப்பட்ட திலகரின் எழுத்துகளில் இருந்து இவற்றை எடுத்து சுட்டி காட்டினேன்.

    இரண்டாவதாக மகாத்மா, எழுத்தில் உள்ளவை எல்லாம் சாஸ்திரங்கள் அல்ல. முனிவர்களும் யோகிகளும் இதனை வேறு விதமாய் தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார். பொது மக்களைப் பொறுத்த வரை சரியாக புரிந்து கொள்ளப்பட்ட சாஸ்திரங்களுக்கும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட சாஸ்திரங்களுக்கும் இடையே அவர்களுக்கு ஒரு வித்தியாசமும் தெரியாது. அவர்களுக்குச் சாஸ்திரத்தில் என்ன இருக்கிறது என்பதே தெரியாது. அவர்களில் பெரும்பாலனோர் படிப்பறிவே இல்லாதவர்கள். சாஸ்திரங்கள் சாதி முறையினையும் தீண்டாமையையும் வலியுறுத்துகிறது என்று தான் அவர்களுக்குச் சொல்லப்பட்டு இருக்கிறது.

    முனிவர்களும் யோகிகளும் படித்த பண்டிதர்களை விட எத்தனை தான் உயர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, (நீங்கள் சொல்வது போல்) அவர்களில் வேதங்களைச் சரியாக புரிந்து கொண்டவர்கள் யாரும் சாதி முறையை தாக்கி பேசியதே இல்லை. மாறாக அவர்களும் சாதி முறையினை ஆதரித்து தான் இருந்திருக்கிறார்கள். தங்களுடைய சாதி அமைப்பிலே தான் வாழ்ந்து இருக்கிறார்கள்.

    இரண்டாவதாக முனிவர்கள் யோகிகளின் வாழ்க்கையைப் போல வாழ வேண்டும் என்று மக்கள் நினைப்பதே இல்லை. காரணம் யோகிகள் முனிவர்கள் சாதியை மீறினால் கூட தப்பில்லை. ஆனால் பொது மக்கள் அப்படி இருக்க முடியாது. அவர்கள் யோகிகளையும் முனிவர்களையும் வணங்கி துதி பாடுவார்கள் தவிர தங்கள் வாழ்க்கையில் அவர்களைப் போல செயல்பட நினைக்க மாட்டார்கள். மகாத்மாக்களோ முனிவர்களோ சாஸ்திரங்களை வேறு விதமாய் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இங்கு ஒரு பொருட்டே அல்ல. மக்கள் எப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் நமக்கு முக்கியம். அவர்கள் சாஸ்திரங்கள் தான் சாதி அமைப்பினை வலியுறுத்துகின்றன என்றே புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

    இந்து சமூகத்தில் எந்த அடிப்படை மாற்றமும் செய்யாமல் உயர்ந்த வகுப்பினராக சொல்லி கொள்பவர்கள் மனதளவில் உயர்ந்தவர்களாக நடந்து கொண்டால் இந்த சமூகம் சரியானதாக இருக்கும் என்கிறார் மகாத்மா. இதனை நான் முழுமையாக எதிர்க்கிறேன். சாதி இந்துக்களின் தனிப்பட்ட ஒழுக்கத்தினை உயர்த்த விழையும் யாரும் தங்களுடைய நேரத்தினை வீணாக்குகிறார்கள் என்று தான் சொல்வேன். சாதியை ஆதரிக்கிற நபர் உயர்ந்த ஒழுக்கமுடையவராக இருந்தாலும் சரி அவர் மற்றவர்களை அவர்களது சாதி அடிப்படையில் தானே அணுக போகிறார். விஷத்தை விற்பவன் தன்னுடைய தொழிலைத் தொடர்ந்து செய்து கொண்டே ஒழுக்கமுள்ளவனாக எப்படி மாற முடியும். அவனது கையில் இன்னும் விஷம் இருக்க தானே செய்கிறது.

    குறிப்பு: மேலே நீங்கள் படித்தவை அம்பேத்கரின் ‘The annihilation of caste’ புத்தகத்தில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் பிரித்து எடுக்கப்பட்ட சுருக்கப்பட்ட பத்திகள்.

    இன்று ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கரின் 121-வது பிறந்த நாள்.


  • இன்று மதியம் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த போது ஓர் இளைஞர் அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து அவசரம் அவசரமாக வெளியே வருவதைப் பார்த்தேன்.

    “பில்டிங்கே ஆடுது,” என்று அந்த இளைஞர் மொத்தமாய் தெருவைப் பார்த்து சொன்னபோது அவர் குடிபோதையில் இருக்கிறாரா என்று மனதில் தோன்றியது. ஆனால் அதே சமயம் பல கட்டிடங்களில் இருந்து பலர் வெளியே அவசர அவசரமாய் வருவதைப் பார்த்தவுடன் சின்ன அளவிலான நிலநடுக்கம் வந்திருக்கிறது என புரிந்து கொண்டேன். அடுத்த சில நிமிடங்களில் சென்னையே பரபரப்பானது.

    இந்தோனிசியாவில் 8.9 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டு இருக்கிறது என்றும் இந்திய கிழக்கு கடற்கரை முழுவதும் சின்ன அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது என்றும், சுனாமி வரக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்றும் செய்திகள் வெளிவந்தன.

    மெரீனா கடற்கரைக்கு போன போது அங்கு காவல்துறையினர் கடற்கரை மணலில் இருந்தவர்களையெல்லாம் அவசர அவசரமாய் வெளியேற்றி கொண்டிருந்தனர். அலுவலகத்தில் இருந்தும் பள்ளிகளிலும் இருந்தும் மக்கள்கூட்டம் வேக வேகமாய் வீட்டிற்குத் திரும்பி கொண்டிருந்தனர். பேருந்து நிறுத்தங்களில் பெருங்கூட்டம். சாலைகள் எல்லாம் நிரம்பி வழிய தொடங்கின. எல்லாரும் சொந்த பந்தங்களுக்கு போன் போட்டு பேச ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில் பெரும்பாலான செல்போன் இணைப்புகள் செயல்படவில்லை.

    மெரீனா கடற்கரையோரம் நிறைய பிரஸ் வண்டிகள் சுற்றி கொண்டு இருந்தன. ஆங்காங்கே மைக்கோடு நியூஸ் சேனல் ஆட்கள் சுற்றி கொண்டு இருந்தார்கள். இதைத் தாண்டி கடற்கரையை ஒட்டிய சாலையோரம் நடைப்பாதையில் நிறைய பேர் நின்று கொண்டு கடலை உற்று பார்த்தபடி நின்றிருந்தனர். ஏதேனும் ஓர் அலை கொஞ்சம் உயரமாக வருவது போல தெரிந்தாலும் சலசலப்பு கூடியது. காவல்துறையினர் மைக்கெல்லாம் பிடித்தப்படி கூட்டத்தை விரட்ட படாதபாடு பட்டனர்.

    “சீக்கிரம் போங்க,” என்று ஒரு மனைவி பயத்துடன் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்த கணவரிடம் பயத்துடன் சொல்லி கொண்டிருந்தார். கணவரோ கடற்கரையோரம் திரண்டிருந்த கூட்டத்தையும் கடலையும் வேடிக்கை பார்த்தவாறு மெதுவாக பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தார்.

    பட்டினம்பாக்கம் பக்கம் நிலைமை மோசமாக இருந்தது. 2004-ம் ஆண்டு சுனாமி நினைவுகள் இங்கிருக்கும் மக்களை விட்டு இன்னும் அகலவில்லை. கூட்டம் கூட்டமாய் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலையோரம் நடைப்பாதைகளில் வந்து உட்கார்ந்திருந்தார்கள். மெரீனாவில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கூட்டத்திற்கும் பட்டினம்பாக்கத்தில் இறுக்கமான முகங்களோடு இருந்த மக்களுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.

    பெசன்ட் நகரில் பெரிதாய் கூட்டமில்லை. கடற்கரையை ஒட்டிய சாலைகளைக் கூட மூடிவிட்டார்கள். நாற்பது ஐம்பது பேர் சாலைகளில் இருந்து விலகி தூரத்தில் தெரிந்த கடலை உற்று பார்த்தபடி நின்று இருந்தனர். பெரும்பாலானோர் அந்தக் கூட்டத்தைப் பார்த்து கிண்டலாய் சிரித்தபடி கடந்து போனார்கள். அப்படிப் போனவர்களில் பலர் சில நிமிடங்களில் அவர்களே திரும்பி வந்து கூட்டத்தோடு நின்று கொண்டார்கள்.

    இரண்டாவது முறை சென்னையில் சின்ன நிலநடுக்கம் வந்தது. சாலையிலும் தெருவிலும் கூட்டம் கூட்டமாய் குடும்பம் குடும்பமாய் நிறைய பேர் திரள தொடங்கினார்கள்.

    நிறைய சிரமப்பட்டவர்கள் காவல்துறையினர் தான். பெண் போலீசார் கடற்கரையில் ஆங்காங்கே இருந்தவர்களையெல்லாம் சல்லடை போட்டு கண்டுபிடித்து வெளியே விரட்டினார்கள். ஓர் ஆட்டோவில் ஒலிபெருக்கியைக் கட்டி கடற்கரை சாலையில் சுனாமி அறிவிப்பினைச் சொல்லியபடி இருந்தார்கள்.

    “ஐந்தரை மணிக்கு சுனாமி வர இருப்பதால் மக்கள் யாரும் கடற்கரை பக்கம் தயவு செய்து போக வேண்டாம்,” என்பதை அந்தக் காலத்து சினிமா தியேட்டர் விளம்பரம் பாணியில் சொல்லி கொண்டிருந்தது ஓலிபெருக்கி குரல்.

    ஒரு கணவனும் மனைவியும் பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்த தங்களது தள்ளுவண்டியைக் கடற்கரை மணலில் இருந்து கஷ்டப்பட்டு சாலைக்குத் தள்ளி கொண்டு வந்தார்கள். சாலைக்கு இந்தப் புறம் பெரும் கூட்டமும் அந்தப் புறம் ஆள் நடமாட்டமே இல்லாத சூழலில் அவர்கள் இருவர் மட்டும் பல நிமிடங்கள் இன்ச் பை இன்ச்சாக தள்ளு வண்டியை தள்ள கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக தங்களது வண்டியைச் சாலைக்கு கொண்டு வந்து இந்தப் பக்கம் வந்தவுடன் கொஞ்ச நேரம் தங்களை அசுவாசபடுத்தி கொண்டு பிறகு கூடியிருந்த கூட்டத்தில் தங்களுடைய வியாபாரத்தினை ஆரம்பித்தார்கள்.

    பி.கு: நல்ல வேளை சுனாமி வரவில்லை.

    ஒருபுறம் காலி கடற்கரை மறுபுறம் வேடிக்கை பார்க்க நிற்கும் கூட்டம். இடம்: பெசன்ட் நகர் கடற்கரை
    சுனாமி அபாய அறிவிப்பு வெளியான பின்பு கடற்கரையில் அதிகரிக்கும் கூட்டம். இடம்: பெசன்ட் நகர் கடற்கரை
    சுனாமி அறிவிப்பிற்குப் பின் காலியான பெசன்ட் நகர் கடற்கரை
    மெரீனா கடற்கரையில் சுனாமி அறிவிப்பிற்குப் பின் கடலைப் பார்க்கும்படி நிற்கும் கூட்டம்
    சுனாமி அறிவிப்பிற்குப் பின் மெரீனா கடற்கரை
    சுனாமி அறிவிப்பிற்குப் பிறகு கடற்கரைக்குப் போகும் பாதையை அடைத்து விட்டார்கள். இடம்: மெரீனா கடற்கரை.

  • தன்னுள் சோகத்தினை

    உருட்டி கொண்டே இருந்தான்.

    உருண்டு திரண்டு கடினமாகி

    பந்தாய் வடிவமெடுத்து நின்றது அது.

     

    ஆளற்ற மலைப்பிரதேசங்களில்

    அலைந்து

    சதை இறுகி

    எலும்புகள் துருத்தி

    கல்லும் மண்ணுமாய் மாறி போனான்.

     

    தன்னில் இருந்து விலகி பார்க்க முயன்றான்.

    சருகும் கல்லும் தூசியும் வானமும் நான் தான் என

    இயைந்து வாழ விழைந்தான்.

     

    பெருமழையையும் சூறாவளியையும் கொண்டு வந்தது

    அவனது சோகம்.

    விலக விலக அவனிடம் இருந்து கொண்டே இருந்தது அது.

    தன்னுள் நுழைந்து தேடும் போது

    தேடுபவனாய் மாறி போயிற்று.

     

    மழை ஓய்ந்த தினமொன்றில்

    ஓடையில் கால்கள் கிடக்க

    வானத்தில் பேசும் நட்சத்திரங்களை

    இமை கொட்டாமல் பார்த்தபடி

    அவனது உயிர் பிரியும் வரை

    வழி எதுவும் கிடைத்திருக்கவில்லை.


  • அந்த விபத்து நடந்து இப்போது ஒரு நாளிற்கு மேலாகி விட்டது. இன்னும் ஒரு உடலைக் கூட கண்டு பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள். 135 மனிதர்களைக் காணவில்லை. 124 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் பதினொரு பேர். இடம் உலகத்திலே உயரமான போர்க்களம், சியாச்சின் பனிப்பிரதேசம். இந்திய பாகிஸ்தான் எல்லையில் எப்போதும் பதட்டம் நிறைந்த சியாச்சின் மனித உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமே அல்ல. இரு நாடுகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் எப்போதும் இருபுறமும் அங்கு பணியில் அமர்த்தப்படுகிறார்கள். 6700 மீட்டர் உயரமுள்ள சியாச்சினில் உறைய வைக்கும் கடுமையான குளிர், உயரத்தில் இருப்பதினால் ஏற்படும் உடல் மற்றும் மனம் ரீதியான அலர்ஜி, அதைத் தொடர்ந்து உருவாகும் நோய்கள், வேகமான காற்று, தனிமை என இங்குப் பணியில் இருக்கும் இரு நாட்டு வீரர்களும் நிறையவே இன்னல்களுக்கு ஆளாக வேண்டியது இருக்கிறது. பனி பிரதேச தனிமை தற்கொலை எண்ணங்களை உருவாக்க வல்லது. இத்தனை இன்னல்களைத் தாண்டி பனிப்புயல் மற்றொரு ஆபத்து. இப்போது அந்தப் பனிப்புயல் காரணமாக தான் பாகிஸ்தான் பக்கம் மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டு இருக்கிறது. இது வரை இங்கு ராணுவ சண்டைகளில் இறந்த வீரர்களை விட பனி காரணமாக இறந்த வீரர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்கிறார்கள் இரு நாட்டு தரப்பிலும்.

    ஆளற்ற பனிப் பிரதேச தனிமை ஆபத்தானது

    ஒரு முறை டெல்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தேன். அது தொலைதூரத்தில் இருந்து வரும் ரயில். டெல்லிக்கு வரும்போதே உள்ளே நிறைய ராணுவ வீரர்கள் ஏற்கெனவே நிறைய பயணித்து விட்ட களைப்பில் தூங்கி கொண்டிருந்தார்கள். பயணத்தின் போது ஒரு தமிழ் ராணுவ வீரர் அறிமுகமானார். காஷ்மீரின் வடக்கு பகுதியில் மலைகளில் அவருக்கு வேலை.

    “இப்போ அங்க பனி அதிகமா விழற நேரம். நான் நாலு வருஷமா அங்க தான் போஸ்டிங்ல இருக்கேன். வருஷ வருஷம் பனி விழுறதுக்கு முன்னாடி எதாவது சொல்லி இரண்டு மாசம் லீவு போட்டுவேன். இந்த வருஷம் லீவு தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க. எங்க அவுட் போஸ்ட் இருக்கிற இடத்துல இருந்து பார்த்தா பாலைவனம் மாதிரி கண்ணுக்கெட்டுன தூரம் ஐஸா இருக்கும். ஒரு ஆள், ஆடு, மாடு, ஒரு மரம், செடி கொடி எதுவுமே கிடையாது. நீங்க நடுங்கிடுவீங்க. என்னோட இருந்த ஆள் இப்போ தான் புதுசா இந்த ஏரியாவிற்கு வந்தவரு. மலையாளி. இன்னும் கல்யாணமாகலை. ஆனா வாழ்க்கையில் எந்தச் சிக்கலும் இருக்கிறாப்ல என்கிட்ட வருத்தப்பட்ட ஆள் கிடையாது. அவருக்கு அவுட் போஸ்ட்ல எட்டு மணி நேர டூட்டி. நான் எட்டு மணி நேரம் கழிச்சு அவுட் போஸ்ட்டிற்கு போனேன். பனி கொஞ்சம் கொஞ்சமாய் பொழிய ஆரம்பிச்ச நேரமது. அங்க அவரு துப்பாக்கியால சுட்டு தற்கொலை செஞ்சிக்கிட்டு பிணமாக இருக்கிறதைத் தான் பார்த்தேன். ஆள் பனியைப் பார்த்து பிளாங்க் ஆகிட்டாரு போல.”

    மேலும் வாசிக்க: “இரு நாட்டு அரசுகளும் இங்கு ராணுவ வீரர்களைப் பணியில் அமர்த்த வேண்டிய அவசியமில்லை. நவீன தொழில்நுட்பம் கொண்டு கண்காணிக்கலாம்.”  – நேஷனல் ஜியோகிராபியில் ஒரு வேண்டுகோள்.


  • இந்த ரோடு தானா? இந்தக் குறுக்கு சந்தில் தான் அவளது அலுவலகம் இருக்கிறதா? நான் காரினைத் திருப்பலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருந்த போது, அவள் சாலையில் நடந்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவளைப் பார்த்ததும் உற்சாகமாகி வெளியே எட்டி பார்த்து கையசைத்தேன். அவள் முதலில் கவனிக்கவில்லை. பிறகு தலையை லேசாக ஆட்டி புன்னகைத்தாள். அந்தப் புன்னகை அப்படியே இருக்கிறது. இடையில் பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டதெனினும் அவளை நேற்று தான் பார்த்தது போல் இருக்கிறது.

    மாறாத அதிகாரமிடுக்குடன் அவளது அலுவலக வாயில் வரை நடந்து போய் கார் எங்கே நிறுத்த வேண்டும் என்று சைகை காட்டினாள். நான் காரினை நிறுத்தி விட்டு வெளியே வரும்வரை கண்களால் என்னை எடை போட்டு கொண்டிருந்தாள்.

    “என்ன எப்படி இருக்க?” என்றேன். அந்த ‘என்ன’ வழக்கமாய் ‘டி’யில் முடியும். பத்து வருடங்கள் கழித்து இப்போது அப்படி அழைக்க தயங்கி மென்று முழுங்கினேன்.

    கண்கள் உற்று பார்த்து இருக்க, புன்முறுவலுடன், “வாடா, உள்ள வாடா,” என்று சொல்லி விட்டு அலுவலகத்திற்குள் நுழைந்தாள். அது பெரிய அலுவலகம் தான். ஆனால் என்னமோ எலிவளை போல குறுக்கி வளைத்து பாதையையும் அறைகளையும் கட்டியிருப்பது போல எனக்குத் தோன்றியது. அதோடு வாசலில் காவல்காரர் முதல் உள்ளே ரிஷப்சன் பெண் வரை என்னைக் கவனமாய் பார்ப்பது போல பிரமை.

    நிலத்தடி தளத்தில் படிக்கட்டுகள் இறங்குமிடத்தில் இருந்தது அவளது கேபின். ஒரு நபர் மட்டுமே பொருந்தக்கூடிய கேபின். கண்ணாடி தடுப்புகளைத் தாண்டி வரிசையாய் தூரத்தில் தெரிந்த கேபின்கள் அவளுடையதை விட சிறியவைகளாக இருந்தன. அந்தப் பக்கம் இருக்கும் கேபின்களுக்கு எல்லாம் இவள் தான் மேலாளர் என சொல்லியிருக்கிறாள்.

    தன் கேபினுள் சுழலும் நாற்காலியில் அவள் அமர்ந்தாள். ஒரு சேரினைப் பக்கத்தில் இருந்து இழுத்து அவளது கேபின் வாசலில் பாதி உள்ளே பாதி வெளியே என உட்கார்ந்தேன். இவ்வளவு நேரம் இல்லாத ஒரு சங்கடம் காலடியில் குறுகுறுத்தது.

    ஒரு பென்சிலை எடுத்து விரல்களுக்கு இடையே வைத்தபடி அதன் நுனியை வாயில் வைத்து புருவங்களை உயர்த்தி குறும்பாய் முறைத்தாள்.

    “எப்படி இருக்கிற? வேலையெல்லாம் எப்படி போகுது? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?” என்றேன். கடகடவென இப்படி கேள்விகளை எழுப்பி விட்டால் உரையாடல் தானாக நகர தொடங்கி விடும் என்பது தான் ஐடியா. அவள் என்னைப் பற்றி நன்றாக அறிந்தவள் ஆயிற்றே. எனது பதற்றத்தைப் பார்த்து சிரித்தாள்.

    “எல்லாம் நல்லா போகுது. ஐயா எப்படி இருக்கீங்க? பெரிய பிஸினஸ்மேன் ஆகிட்டீங்கன்னு கேள்விபட்டேன்.”

    இருவரும் ஒரே நகரத்தில் தான் வாழ்கிறோம். ஆனாலும் கிட்டதட்ட பத்து வருடங்களாய் சந்தித்து கொள்ளவில்லை. எப்போதாவது நான் போனில் பேசுவேன். அவ்வளவு தான். இன்று காலை அவளாக போனில் பேசினாள். வழக்கமான விசாரிப்பிற்குப் பின் அலுவலகத்திற்கு அழைத்தாள். என்றும் அழைக்காதவள் கூப்பிட்டு விட்டாளே என்பதால் மற்ற வேலைகளை ஒதுக்கி விட்டு உடனே கிளம்பி வந்து விட்டேன். இப்போது அந்தப் பத்து வருட பிரிவிற்குப் பிறகான சந்திப்பு சங்கடப்படுத்துகிறது.

    அவள் எப்போதுமே நேராக பேசுபவள். சடசடவென வார்த்தைகள் வந்து விழும். கோபமும் அன்பும் அதே மாதிரி தான். எனது குடும்பத்தைப் பற்றி விசாரித்தாள். தொழில் பற்றி கேட்டாள். குழந்தைகளின் படத்தைச் செல்போனில் காட்டினேன். என் மனைவியைப் பற்றி அதிகம் கேட்கவில்லை. நானும் அதிகமாய் மனைவி பற்றி சொல்லவில்லை.

    “உன்னை மாதிரி கல்யாணம் பண்ணிக்காமலே இருந்திருக்கலாம்,” என்றேன்.

    “ஏன்?”

    “வீட்டு வேலையெல்லாம் செய்ய முடியல,” என்றேன் பொய் சலிப்புடன்.

    “அட போடா நான் வீட்டு வேலை செய்யறதில்லைன்னு யாரு சொன்னா?”

    “உங்க அம்மா தான் இருக்காங்களே.”

    “அம்மா முன்ன மாதிரி இல்ல. ஹார்ட் பிராப்ளம் இருக்கு. கிட்டத்தட்ட படுத்த படுக்கை தான். அப்பா இன்னொரு பக்கம் உடம்பு சரியில்லாம இருக்காரு. இவங்களைக் கவனிச்சுக்கவே நேரம் சரியா இருக்கு.”

    “அக்கா?”

    “அவ ஹஸ்பெண்ட்டோட பக்கத்து தெருவுல இருக்கா. அவளையும் ரொம்ப கஷ்டபடுத்த முடியாது. ரெண்டு குழந்தைகளையும் பார்த்துக்கவே நேரம் சரியா இருக்கு அவளுக்கு.”

    “அப்ப வீட்ல சமையல் எல்லாம் யார் செய்யறாங்க?”

    “எல்லாம் நான் தான். காலையில் அஞ்சு மணிக்கு எழுந்திருச்சு ரெண்டு வேளைக்கும் சேர்த்து சமைச்சு வைச்சுட்டு டிரெயின் பிடிச்சு வந்து இன்னொரு பஸ் பிடிச்சு ஒன்பது மணிக்கு ஆபிஸ் வந்துடுவேன்.”

    “சாயந்திரம்?”

    “இங்க இருந்து அஞ்சரை மணிக்கு கிளம்பி பஸ் டிரெயின் ஜர்னியெல்லாம் முடிச்சு வீட்டுக்கு போக ஏழு மணிக்கு மேலாகிடும். அப்புறம் சமையல் வேலை முடிச்சவுடனே ஆள் அடிச்சு போட்டாப்ல சோர்வுல தூங்க வேண்டியது தான்.”

    “வீக் எண்ட்?”

    “துணி துவைக்கிறதுல தொடங்கி ஹாஸ்பிட்டல் போறது வரைக்கும் சனி ஞாயிறு கிழமை பிஸியாகிடும். எக்ஸ்டிரா டைம் கிடைச்சா தூங்கினா போதும்னு இருக்கும். அதுக்கு மேலே டைம் இருந்தா அக்கா வீட்டுக்குப் போய் கொஞ்சம் நேரம் இருப்பேன்.”

    “பிரெண்ட்ஸ் யாரையும் பார்க்க மாட்டீயா?”

    “எங்கடா! வீடு, ஆபிஸ், இதுக்கே நேரம் போதலை.”

    “நீ ஏன் அவ்வளவு தூரத்துல வீட்ல இருந்து வர்ற. இங்க ஆபிஸ் பக்கத்துல வீடு பார்த்துக்க வேண்டியது தானே?”

    “இங்க எல்லாம் வாடகை எவ்வளவு தெரியுமா? நான் சம்பாதிக்கிறதையெல்லாம் வாடகைக்கே அழ வேண்டியதிருக்கும்.”

    “நல்லா தானே சம்பாதிக்கிறே?” என்றேன். என் குரலில் வேதனை படிந்தது.

    “நல்லா தான் சம்பாதிக்கிறேன். ஆனா சொந்த வீட்டை விட்டுட்டு இங்க வந்து தங்குற அளவு இன்னும் பணக்காரி ஆகிடலை.”

    அலுவலகத்தில் பணிபுரியும் மற்றொரு அள் அங்கு வந்தான். இருவரும் எதோ அலுவல் சம்பந்தமாக பேசினார்கள்.

    முதல் பார்வையில் அவள் பத்து வருடங்களாக மாறவே இல்லை என்பது போல இருந்தாலும் இப்போது கவனிக்கும் போது அவளது தலைமுடியில் ஆங்காங்கே நரை இருப்பது சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. எப்போதும் போலவே அந்த டைட்டான சூடிதார் தான் இன்னும் அணிகிறாள். அனாயசமாக கழுத்தில் எப்போதும் போலவே துப்பட்டா சுற்றி இருக்கிறது. இன்னும் அதே ஸ்டைல் கைப்பை தான் வைத்து இருக்கிறாளா என்று கண்களால் துழாவினேன். கம்ப்யூட்டர் மேஜையோரம் கிடந்த கைப்பை அதே ஸ்டைலிலானது தான். ஆனால் இப்போது சற்று விலையுயர்ந்த கைப்பையாக இருக்கிறது. ஆடைகளில் எதுவும் வித்தியாசமில்லை எனினும் எதோ அவளிடத்து மிஸ் ஆவது போல ஒரு உணர்வு. உடம்பு சற்றே சுருங்கி விட்டாற் போல பிரமை. அவள் தேகத்தில் மினுமினுப்பு குறைந்து விட்டது போல தோன்றியது.

    அலுவலக ஆள் விலகி போனதற்குப் பிறகு அவள் கம்ப்யூட்டரை ஆன் செய்து ஒரு மின்னஞ்சலைத் தட்டச்சு செய்ய தொடங்கினாள். ஒரு விரலை மட்டும் என்னிடத்தே நீட்டி காத்திருக்கும்படி சைகை காட்டினாள். நான் காத்திருந்தேன். மின்னஞ்சல் பணியை முடித்ததும் என் பக்கம் சுழல் நாற்காலி திரும்பியது.

    “கிழவியாயிட்ட நீ,” என்றேன். சொன்னவுடனே இப்படிச் சொல்லியிருக்க கூடாதென மனதிற்குள் என்னை நானே கடிந்து கொண்டேன்.

    “நீ மட்டும் குமரனாவே இருக்கீயா?”

    “ஆபிஸ்ல மத்தவங்ககிட்ட எப்படி பழகுவ?”

    “வழக்கம் போல தான். வள் வள் தான். யாரும் நம்மகிட்ட பேசவே பயப்படுவாங்க.”

    “இன்னும் வள் வள் தானா” என்று அவளைப் போலவே முகத்தைச் சுருக்கி காட்டினேன். அவள் சிரித்தப்படி காலால் செல்லமாய் என்னை இடித்தாள். படியில் ஏறி கொண்டிருந்தவர்கள் எங்களை ஆச்சரியமாய் பார்த்து கொண்டே போனார்கள். எப்போதும் சிடுசிடுவென இருக்கிறவ இன்னிக்கு யாரோ புது ஆள்கிட்ட சிரிச்சுட்டே பேசிட்டு இருக்காளே அப்படின்னு நினைக்கிறாங்களோ என்னமோ.

    “இன்னும் நீ கல்யாணம் செய்யாதது பத்தி வீட்ல எதுவும் சொல்றதில்லையா?”

    “யாரும் அதைப் பத்தி பேச கூடாதுன்னு ஸ்டிரிக்டா சொல்லிட்டேன்.”

    “குட்,” என்றேன். சிறிது நேர பேச்சிற்குப் பின் அவளிடமிருந்து விடைப் பெற்று கிளம்பினேன். என் அலுவலகம் திரும்பிய பிறகு, ‘எனக்காக நேரம் ஒதுக்கியதற்கு நன்றி,’ என்று எஸ்எம்எஸ் அனுப்பினேன்.

    ‘டேய் ரொம்ப பண்ணாத,’ என்று பதில் வந்தது. ஏனோ அவளை நினைக்கும் போது சோகமாக இருந்தது.

    “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ,” என்று மெசேஜ் அனுப்பினேன். அவளிடம் இருந்து பதில் வரவில்லை.

    Image: renjith krishnan / FreeDigitalPhotos.net

    மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.