• மதுக்கடைகள் நிரம்பிய அந்தச் சாலைக்கு
    நீங்கள் என்றாவது போயிருந்தால்
    அவனைப் பார்த்திருப்பீர்கள்.
    புழுதி பறக்கும் சாலையோரம்
    தன் பை முழுக்க சாவிகளோடு
    ஒன்றுக்கொன்று பேசும் உலோக சப்தத்தோடு
    தன் வாழ்வைச் சுமையென சுமந்து
    நடந்து கொண்டிருப்பான்.

    அரிதாக அவன் உட்கார்ந்து இருக்கும் போது
    எதேனும் சாவியை உருவாக்கி கொண்டிருப்பான்.
    அல்லது துடைத்து கொண்டிருப்பான்.
    அல்லது அப்படியாக பாவனை செய்து கொண்டிருப்பான்.

    அவனிடம் யாரும் சாவி வாங்கியதில்லை.
    தொலைந்து போன சாவிக்கு மாற்று ஒன்றை
    உருவாக்க கேட்டதில்லை.
    என்றாலும் சாவிகளுடன் தான்
    அவன் வாழ்க்கை.

    மழை பொழியும் நாள் ஒன்றில்
    மரத்திற்குக் கீழே
    அவன் குந்தி அமர்ந்திருக்கும் காட்சியினைக் கண்டால்
    அவன் யாருக்கோ காத்திருக்கிறான் என தோன்றும்.
    சாவிகளை ஒப்படைக்க
    காலம் காலமாக அவன் காத்திருக்கிறான் என
    நினைப்பீர்கள்.

    மழை நின்ற பிறகு
    அவன் தன்னை உதறி கொண்டு கிளம்புவான்.
    அவன் வெறும் பிம்பம் தானா?
    நம் பிரதிபலிப்பா?
    மனம் கட்டமைத்த கற்பனை உருவமா?
    தரையெல்லாம் உங்கள் சிந்தனைகள் ஓட
    அவற்றை மிதித்தபடி
    உலோக சம்பாஷணைச் சத்தத்தோடு கடந்து போவான்
    பை முழுக்க சாவிகளோடு.

    நன்றி:

    ஓவியம் – Persistence of Memory – Salvador Dali


  • ஆடு தாண்டி விடும் ஓடை.
    சன்னமாய் ஓடுகிறது.
    நீரைக் கையில் ஏந்தி பார்க்கிறேன்.
    ஒளியினைத் தின்றபடி பிரகாசிக்கிறது.

    பருகினால் மதுவின் சுவை.
    கால் வைத்து இறங்கினால்
    நீருக்கடியில்
    மலை உயர ஆழம்.

    மூச்சிறைத்து பிழைத்து வந்தால்
    மேலெல்லாம் மதுவின் வாசம்.


  • நான் மத அடிப்படைவாதி அல்ல. காருண்யத்தைப் போதிப்பவனும் இல்லை. இந்தியா ஜனநாயக பாதையில் மேலும் மேம்பட வேண்டும் என நினைப்பவன். எதிரிகளை அடித்து கொல்வதும், குற்றவாளிகளின் முதுகை உரிப்பதும், கழு ஏற்றுவதுமாய் இருந்த சமூகம் இன்று நீதிமன்றம், அரசமைப்பு சட்டம் என மாறி வந்து இருக்கிறது. அடுத்து நாம் பயணிக்க வேண்டிய திசை எது? மக்களின் நல்லாட்சி என்பது சிவில் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், மனித உரிமைகளை முன்னிறுத்துகிற ஆட்சியாகவும் இருக்க வேண்டும். உலகமெங்கும் பெரும்பாலான மனித உரிமை ஆர்வலர்கள் மரண தண்டனை ஒழிக்கபட வேண்டுமென குரல் எழுப்புபவர்களாகவே இருக்கிறார்கள்.

    அஜ்மல் கசாப் கொடூரமான கொலைகளைச் செய்த தீவிரவாதி. ஒரு நாட்டின் மீது பயங்கரவாதத்தையும் அதன் விளைவாய் மக்களிடையே பெரும் பீதியையும் உருவாக்கிய அணியில் முக்கிய நபர். ஒன்பது பயங்கரவாதிகளுடன் சேர்ந்து மும்பையில் 166 பேரை கொன்ற சம்பவத்திற்குக் காரணமான நபர். கசாப் செய்த குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்திலே இப்போது தண்டனை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பில், “இது அரிதினும் அரிதான குற்றம், மரண தண்டனை சரியானதே,” என சொல்லியிருக்கிறார்கள். 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் கொடூரமாக உறவை இழந்தவர்களில் பலர் கசாப்பை உடனடியாக தூக்கில் போட வேண்டும் என கருத்து சொல்லியிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.கவும் இந்தத் தூக்கு தண்டனையை ஆதரிக்கிறார்கள். வழக்கமாக மரண தண்டனையை எதிர்த்து பேசுபவர்கள் கூட இந்த வழக்கில் குற்றத்தின் அதீத கொடூர தன்மையைப் பார்த்து மௌனம் சாதிக்கிறார்கள். குற்றம் சாட்டபட்டவர் கொடூரமானவராக இருப்பதினால் தூக்கு தண்டனையை ஆதரிக்க வேண்டுமென்று எதுவுமில்லை. மாறாக குற்றத்தின் தன்மை மிக கொடூரமாக இருக்கிற காரணத்தினாலே மரண தண்டனையை எதிர்க்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. கொடூரமான பயங்கரவாதி, குழந்தைகளைப் பலாத்காரபடுத்தி கொன்றவன் இப்படிபட்டவர்களுக்கும் கூட மரண தண்டனை தரக்கூடாது என சொல்வதில் தான் தொடங்குகிறது மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம். எத்தனை கொடூரமான குற்றவாளியாக இருந்தாலும் மரண தண்டனை என்பது கிடையாது என்பதே மனித உரிமைகளை முன்னெடுக்கும் சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியும்.

    மென்மையான அணுகுமுறை குற்றங்களை ஊக்குவிக்குமா?

    இந்தியா மென்மையாக குற்றங்களை கையாள்கிறது, அதனாலே பல குற்றங்கள் முக்கியமாக பயங்கரவாத செயல்கள் பெருகுகின்றன என பலகாலமாய் சொல்கிற கூட்டம் இங்குண்டு. இந்தக் கருத்து இப்போது அதிகார மட்டத்தில் தாக்கத்தினை ஏற்படுத்துகிற அளவு வலுத்து இருக்கிறது. அதனாலே பற்பல விஷயங்களில் இனி இந்தக் குற்றத்திற்கு அதிக தண்டனை தரப்படும் என்பது ஒரு தீர்வாக முன் வைக்கப்படுகிறது. ஆனால் இத்தகைய தீர்வு பாமர மக்களை ஏமாற்றுவதற்கும் அப்போதைக்கு ஒரு தீர்வு உண்டானதாக பிம்பத்தை உருவாக்குவதற்குமே பயன்படும். என்னைப் பொறுத்த வரை தண்டனையின் அளவினைக் காட்டிலும் தவறிழைத்தால் கட்டாயமாக மாட்டி கொள்வோம் என்கிற பயத்தை உருவாக்குகிற அளவிற்கு வலுவான கண்காணிப்பு முறையே குற்றங்களைக் குறைக்கும். இல்லாவிட்டால் பத்தில் ஒருவர் தான் மாட்டுவார். அவரும் சில சமயம் பலி ஆடாக இருப்பார். பாலியல் பலாத்கார குற்றங்களுக்குத் தூக்கு தண்டனை என்கிற கருத்தாக்கம் சமீப காலமாக வலுத்து வருகிறது. மற்றொரு புறம் இந்தியா எங்கும் இன்றும் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கபட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பது, அந்த வழக்குகளில் குற்றவாளிகளின் குற்றம் நிரூபிக்கபடுவது என்பது மிக குறைவாகவே இருக்கிறது என சொல்கிறது ஓர் அதிர்ச்சி புள்ளி விவரம். இங்கே தூக்கு தண்டனை முக்கியமா? நமது அமைப்புகளை மேம்படுத்துவது முக்கியமா? அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அமைப்புகளை வலுப்படுத்துவது என்பது பெரிய வேலை. தண்டனைகளைக் கடுமையாக மாற்றுவதென்பது எளிய வேலை.

    கசாப்பிற்குக் கருணை காட்டினால் அது உணர்வுரீதியான பிரச்சனையாக மாற்றப்படும் என கவர்னரும் ஜனாதிபதியும் பயப்படக்கூடும். கருணை காட்டலாம் என்கிற மாதிரியான அணுகுமுறை மக்களிடையே தங்களுடைய பிம்பத்தைக் குறைத்து விடுமென அரசியல் கட்சிகள் பயப்படலாம். இந்தச் சூழலில் ‘இத்தனை கொடூரமான குற்றவாளிக்கும் மரண தண்டனை விதிக்கப்பட கூடாது,’ என அறிவு சூழலில் இயங்குபவர்கள் குரல் எழுப்ப வேண்டும். அதுவே தொலைநோக்கில் மரண தண்டனையை இந்திய தண்டனை சட்டத்தில் இருந்தே அதிகாரப்பூர்வமாக நீக்குவதற்கான முதல் படியாக அமையும்.


  • மலை உச்சியில் பெருங்கூட்டம்.
    எல்லாரும் முண்டியடிக்கிறார்கள்
    பள்ளத்தாக்கில்
    அனல்கங்குகளைச் சுமந்து ஓடும்
    ஆற்றினைக் காண.

    பெருத்த முலைகளையும்
    முட்டும் தொப்பைகளையும்
    தள்ளியபடி
    முரட்டு யானைகள் போன்ற பெண்கள் கூட்டமொன்றில்
    அரைபட்டு முன்னேறி கொண்டு இருக்கிறேன் நான்.

    கூட்ட நெரிசல்,
    வியர்வை வாசம்,
    காலை யார் யாரோ மிதிக்கிறார்கள்.
    இரை விழுங்கிய பாம்பினைப் போல
    பிதுங்கி நெளிந்து
    கூட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

    யாரோ ஒருவர் மலை மேலிருந்து
    ஆற்றில் விழுகிறார்.
    பிறகு மற்றொருவர்.
    அடுத்தடுத்து யாராவது விழுந்து கொண்டே இருக்கிறார்கள்.

    யாரேனும் விழும் போதெல்லாம்
    சாட்டையை விசிறினாற் போல சத்தம்.
    தொப் என அது முடிவடைவதற்குள்
    அலை அலையாய் மக்களிடையே பரவுகிறது
    ஆரவாரமும் கேலி பெரும் சிரிப்பும்.

    கூட்டத்தில் எனக்கு முன்னால்
    ஒரு குண்டான பெண்
    மற்றவர்களால்
    உயர்த்தப்பட்டு
    தலைகளுக்கு மேலாக உருட்டி செல்லப்பட்டாள்.
    மீண்டும் எழுந்தது பெரும் ஆரவாரம்.

    என் முலையில்
    ஓர் அன்னியனின் கையினை உணர்ந்தேன்.
    தொடர்ந்து முளைத்தன
    பல கைகள்.
    காட்டாற்றில் சிக்கியவளைப் போல
    கூட்டத்தில் கைமாறியபடி இருந்தேன்.

    யாரோ கடித்தார்கள்.
    விரல்களாலே பலாத்காரம் செய்ய முயன்றார்கள்.
    ஒருத்தி பலங்கொண்ட மட்டும்
    என்னை வயிற்றில் குத்தினாள்.

    வலியின் தெறிப்பு படர்ந்த கணத்தில்
    என்னை எறிந்தார்கள்.
    காற்றில் மிதந்தேன்.
    தூரத்தில் ஒலித்தது ஆரவார சத்தம்.
    அந்தரத்தில் புரண்டு
    தீயின் செந்நாக்குகளை நோக்கி கையை நீட்டினேன்.

    குறிப்பு: நான்கு வருடங்களுக்கு முன் பதித்த ஒரு கவிதையினைத் திருத்தி மீண்டும் பதித்து இருக்கிறேன்.


  • தடதடவென ரயில் அதிர்ந்து ஓட
    பாலத்தின் கீழே சாலையில்
    வாகனங்கள்
    அதிர்வலையில் மிதந்து செல்லும்.

    ரயிலோ இல்லையோ
    பாலத்தின் எதோ ஓரிடத்தில் இருந்து
    ரத்தத் துளிகள் விழுந்தபடியே இருந்தன
    சாலையில்
    வருவோர் போவோர் வெகு சிலர் மீது.

    அதை உணராமலோ
    மழைதுளியென எண்ணியோ
    போய் விடுவார்கள் பலர்.

    ரத்தத்தைக் கண்டு திகைத்தவர்கள்
    வேறு பாதைக்கு
    மாறி விட்டார்கள்.

    எங்கிருந்து ரத்தம் சொட்டுகிறது என
    அறிய முற்பட்டவர்கள்
    பலியானார்கள்
    ரயிலின்
    தடதடக்கும் சக்கரங்களுக்கு.


  • நேற்று பதிக்கப்பட்ட இந்த பதிவு ஓர் எதிர்பாரா தொழில்நுட்ப சிக்கலினால் அழிந்து போயிற்று. ஆகவே இதை மீண்டும் பதித்து இருக்கிறேன். RSS (ஓடை சந்தா) மற்றும் மின்னஞ்சல் மூலம் இப்பதிவினைப் படிப்பவர்களுக்கு இது இரண்டாம் முறையாக வந்து சேரும். பொருட்படுத்த வேண்டாமென கேட்டு கொள்கிறேன்.

    குடியரசு தலைவர் தேர்தலும் இப்ப நம்ம ஊரு இடை தேர்தல் மாதிரி ஆகிடுச்சு. பொது தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்துல எந்த அரசியல் கட்சி வோட்டு பலத்தோட இருக்குன்னு காட்டுகிற சடங்கா இடை தேர்தலும் அது மாதிரியே குடியரசு தலைவர் தேர்தலும் மாறிடுச்சு. இந்த அபத்தம் இன்னிக்கு இருக்கிற பல பெரிய அபத்தங்களோட ஒரு வெளிப்பாடு.

    குடியரசு தலைவர் அப்படிங்கிறதே ஒரு அலங்கார பதவி தான். ஆனா எழுத்தளவுல இந்தப் பதவிக்குக் கொடுக்கப்படற முக்கியத்துவம் கண்ணைக் கட்டும். ஜனநாயகத்தின் மூன்று தூண்களாக சொல்லப்படுகிற மக்கள் பிரதிநிதிகள் மன்றம், செயலாக்கம், நீதி பரிபாலனம் ஆகிய மூன்றிற்கும் ஜனாதிபதி தான் தலைவர். அதோட தரைப்படை, கடற்படை, விமான படை என முப்படைகளின் தலையும் அவரே. அவரே இந்திய நாட்டின் முதல் குடிமகன். உலகத்திலே மிக பெரிய மாளிகையை அவர் குடியிருப்பதற்காக வழங்குகிறார்கள். ஆடம்பரமான கார், பிரத்யேக விமானங்கள், எந்த நாட்டிற்குப் போனாலும் கிடைக்கும் ராஜ மரியாதை என குடியரசு தலைவருக்குக் கிடைக்கும் உபசரணைகள் அளவில்லாதது. அவருடைய தனி செலவுகளுக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்படுகிறது.

    எழுத்தளவில் அரசமைப்புச் சட்டம், குடியரசு தலைவர் தன்னுடைய அதிகாரத்தை நேரடியாக செலுத்தலாம் என்று சொல்கிறது. ஆனால் உண்மையில் குடியரசு தலைவருக்கான அதிகாரங்கள் அனைத்தும் கேபினெட் அமைச்சரவையிடம் இருக்கிறது. இன்னும் சொல்ல போனால் அந்தக் கேபினெட் அமைச்சரவையைத் தன் பிடியில் வைத்து இருக்கும் விரல் விட்டு எண்ண கூடிய ஒரு சிலரிடம் தான் இந்த நாட்டை ஆள்கிற அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து இருக்கிறது.

    வெளிப்படை தன்மை வேண்டும்
    அதிகாரம் வேறு இடத்தில் இருக்க ஒரு பொம்மை எதற்கு அரியணையில் இருக்க வேண்டும்? திரை மறைவில் இயங்குகிற அதிகார மையங்கள் வெளிச்சத்திற்கு வருவதும் அவர்களுடைய ஒவ்வொரு செயலும் கண்காணிக்கப்படுவதும் அவசியமாகிறது. நாட்டின் தலைவிதியை நிர்ணியிக்கிற சக்தியைக் கொண்டவர்கள் தாங்கள் எடுக்கிற ஒவ்வொரு முடிவிற்கும் காரண காரியங்களை மக்களிடம் நேரடியாக விளக்க வேண்டும். வெளிப்படை தன்மையே ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கும்.

    இன்று தகவல் அறியும் சட்டம் மட்டுமே வெளிப்படை தன்மையை உருவாக்கி விடாது. ஜனநாயக செயல்முறை இன்னும் பல கட்டங்களில் வெளிப்படையாக ஒவ்வொரு சாதாரண குடிமகனுக்கு காட்சியளிக்க வேண்டும். அதிகார உச்சத்தில் இருப்பவர்களிடம் தொடங்கி உள்ளாட்சி அமைப்பு கவுன்சிலர் வரை தங்களுடைய அலுவல்களை வெளிப்படையாக செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. இச்சூழலில் அலங்கார அரியணை இந்த வெளிப்படை தன்மையை மறைக்க தான் பயன்படும். அதை அகற்றினால் தான் அரசு மக்களுக்கு பதில் கூற கடமைப்பட்ட ஊழியனாய் மாறும்.

    அதிகார பரவலாக்கத்தின் தேவை
    ஒரு நாட்டிற்கு ஒரு தலைவன் என்கிற கருத்தாக்கம் உதிர தொடங்கி விட்டது. நாட்டின் பல முகங்களைப் பிரதிபலிக்கிறவர்கள் ஒன்று கூடி சாதக பாதகங்களை ஆராயந்து நாட்டை ஆள வேண்டிய தேவை இருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்களைக் கண்காணிக்க வேண்டிய வலுவான அமைப்பும் அதிகார உச்சத்தில் இருப்பவர்கள் தவறுகள் செய்தால் உடனே தண்டிக்கப்படுவார்கள் என்கிற உறுதிமொழியும் வேண்டும். (நான் அன்னா ஹாசரே ஆதரவாளன் அல்ல!)

    அதிகார பரவலாக்கமே ஜனநாயக நடைமுறையை அதிகார துஷ்பிரயோகத்தில் இருந்து காப்பாற்றும். அதிகாரங்களுக்கெல்லாம் ஒட்டுமொத்த அடையாளமான குடியரசு தலைவர் பதவி அது அலங்காரமாய் இருந்தால் கூட தேவையா?

    குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், ஆளுனர்கள் வேண்டாம்
    ஜனநாயகம் என்கிற கருத்தாக்கம் மேலும் மேலும் மேம்பட்டபடியே இருக்க வேண்டும். தவறுகளைக் கண்டு திருத்தி, விவாதித்து எப்போதுமே கூர் தீட்டபட்டு கொண்டிருக்கிற ஜனநாயகமே ஆரோக்கியமானது. சடங்குகள் என்பதும் அலங்காரங்கள் என்பதும் இனி தேவை இல்லை. ஆயில் ஊற்றி என்ஜின் சரி செய்து சின்ன பிசிறு இல்லாமல் ஜனநாயகத்தை இயக்க வேண்டிய காலகட்டத்தில் குடியரசு தலைவர் பதவியும் அதைப் போன்ற மற்ற வெற்று அலங்கார பதவிகளும் இனி இந்த நாட்டிற்கு வேண்டாம் என முடிவெடுக்கலாம்.


  • வலியே
    வலியை மறக்க வைக்குமளவு
    அடிபட்டு
    உள்ளெல்லாம் சிதைந்து
    நாளெல்லாம்
    மரணத்தை வேண்டி நிற்கும்
    சமயத்தில் கூட
    நம்பிக்கை
    எங்கோ
    சிறு துகளாக
    இருந்தபடியே தான் இருக்கிறது.


  • காற்றில் சலசலக்கும் மரம்
    சலசலப்பை உண்டாக்குகிறது
    என்னுள்.
    இலைகளின் மீட்டலை
    உணர்கிறேன்
    நரம்புகளில்.
    காம்புகள் வளைவது
    சப்திக்கிறது
    என் எலும்புகள் ஊடாக.
    எறும்புகளின் காலடிகளை
    முதுகில் சுமக்கிறேன்.
    சருகுகளை
    ஆனந்தமாய்
    உதிர்க்கிறேன்.
    கவிழ்ந்த பூக்களின்
    மகரந்தங்களோடு
    காற்றில்
    பரவுகிறது எனது விந்தணுக்களும்.
    இது வெறுமையை உணர்ந்த கணம்;
    கடவுளைக் கண்ட கணம்;
    என் ஆதியை மீள்தொட்ட கணம்.
    பிரபஞ்சம் நானே!


  • இரவு விளக்கு
    சுவரெல்லாம் ஊர்ந்து
    புது புது ஓவியங்களைத்
    தீட்டி காட்டுகிறது.
    உருவாகும் ஓவியங்கள் உருக்குலையும் முன்னே
    என் நினைவலையில்
    இருந்து
    எதோ ஒரு சரடினை
    இழுத்து
    அறையெங்கும் தவழ விட்டு செல்கிறது.

    புகை மண்டிய பிறகு
    கணவனின் குறட்டை மட்டுமே
    எனது படுக்கையறையை நிரப்பி இருக்கிறது.


  • நீங்கள் மேற்கொண்ட எதோ ஒரு தொலைதூர பிரயாணத்தில்
    சந்தேக வியாதி உங்களைத் தொற்றி கொண்டது.
    உடலை உருக்கி விட்டதென சொல்கிறார்கள் எல்லாரும்.
    நடை தள்ளாடுகிறது.
    மயங்கி விழுகிறீர்கள் ஒருநாள்.

    மருத்துவமனையில் டாக்டர்கள் எல்லாரும் வேலையாக இருக்கிறார்கள்.
    உடலெங்கும் விஷம் பரவி விட்டதென சொல்லி செல்கிறாள்
    ஒரு நர்ஸ்.
    பிழைக்க முடியுமென நம்புகிறீர்கள்.
    எளிய காரியத்தைக் கடினமாக்கும் மருத்துவமனை மீது கோபம்.
    உங்களை முக்கியமற்றவனாய் பார்க்கும் மருத்துவர்கள் மீது
    அதிருப்தி.
    சாவிற்கான முன்னேற்பாடுகளைக் கவனிக்க தொடங்குகிறார்கள்
    உங்கள் சொந்தங்கள்.
    பிழைத்து காட்டினால் தான்
    இவர்களுக்குப் புரியும்.
    உங்களது தலைமுடியாய் நீவி நீவி பார்க்கிறீர்கள்
    ஒவ்வொன்றாய்.
    எங்கே அது ஒளிந்து இருக்கிறது?
    கண்ணாடி ரசம் வழியும் வரை
    தேடல் தொடர்கிறது.

    நீண்ட நேரத்திற்குப் பிறகு
    ஓர் இளம் டாக்டர் உங்களை நோக்கி வருகிறான்.
    மேலோட்டமாக சோதித்து
    உதடுகளைப் பிதுக்கி
    தலையை ஆட்டி விட்டு விலகுகிறான்.

    பிழைத்து காட்டினால் தான் இவர்களுக்குப் புரியும்.
    இந்த நோய் உங்களைக் கொன்று விடுமென நீங்கள் நம்பவே இல்லை.
    மனதைக் குவித்து தேடுகிறீர்கள்.
    கண்ணாடி ரசமெல்லாம் வழிந்தோடி விட்டது.

    நன்றி:
    ஓவியம்: Doubt by David Fox.