• தெரு ஒன்று
        கட்டிடங்களின் காலடியில்.
    விறுவிறுவென நடந்தபடி
        இருக்கிறார்கள் மனிதர்கள்
    எதையோ யோசித்தபடி
        எங்கோ வெறித்தபடி.
    
    தன்னைமறந்து கூட்டத்தினைப் 
        பார்க்கும் நாய்கள்.
    விண்ணில் அலட்சியபார்வை
        பார்த்துநகரும் காகங்கள்.
    மண்துகள்கள் பறக்கின்றன
        தார் ரோட்டில்.
    
    அனல் காற்றோடு
        பெருகுகிறது வெக்கை.
    வேர்வை மிகுந்தோடுகிறது
        ஒவ்வொருவர் மீதும்.
    வெண் மஞ்சளாய்
        மங்குகிறது காட்சி.
    
    

  • என் வலைப்பதிவில் வெளியான மனிதர்கள் பதிவுகளைத் தொகுத்து தற்போது ரவிசங்கர் ‘மனிதர்கள்’ என்கிற பெயரில் இபுத்தகமாக வெளியிட்டு இருக்கிறார். நீங்கள் விரும்பிய பணத்தை கொடுத்தோ அல்லது இலவசமாகவோ இப்புத்தகத்தை தரவிறக்கி கொள்ளலாம்.

    நான் அறிந்த உண்மை மனிதர்களை/சம்பவங்களை புனைவோடு கலந்து எழுதியது இந்த மனிதர்கள் தொடர் பதிவுகள். இங்கே ஒவ்வொரு பதிவாய் வெளியான போது நிறைய பேரை சென்றடைந்தது. தற்போது இபுத்தகமாய் அது மேலும் பல பேரை சென்றடையும் என்பதில் மகிழ்ச்சி.

    noolini
    நூல் இனி – தமிழ் மின்னூல்கள் சந்தை

    என்னுடைய எழுத்தினை மேலும் பல பேர் வாசிப்பார்கள் என்பதைத் தாண்டி இந்த இபுத்தக ரிலீஸ் ‘நூல் இனி’ மின்னூல் சந்தையின் இரண்டாவது இபுத்தக வெளியீடு என்பது மற்றொரு பெருமை. பதிப்பாளர்கள் தயவில்லாமல், பத்திரிக்கை ஆசிரியர்கள் தயவில்லாமல் நம்முடைய எழுத்து மற்றவர்களை சென்றடையாது என்கிற நிலை எப்படி இணையத்தின் மூலமாகவும் முக்கியமாகவும் வலைப்பதிவுகள் மூலமாகவும் மாறியதோ அதற்கடுத்த முன்னேற்றம் நாமும் பெரும் நிறுவனங்களில் தயவில்லாமல் இபுத்தகங்களை வெளியிடலாம் என்பது தான். இதற்கான ஒரு முயற்சி ‘நூல் இனி.’ இது ஒரு தமிழ் மின்னூல்கள் சந்தை. வலைப்பதிவில் எழுதுபவர்கள், அச்சில் புத்தகங்கள் வெளியிட்டவர்கள், தங்களது படைப்புகளை இபுத்தகங்களாய் வெளியட விருப்பமுள்ளவர்கள் இந்த இபுத்தக சந்தையைப் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த முயற்சியினை மேற்கொண்ட ரவிசங்கர் இணைய உலகில் நிறைய பேருக்கு தெரிந்தவர். மின்னூல்கள் சந்தைக்காக தினமும் பல மணி நேரங்கள் ஒதுக்கி உழைத்து வருகிறார். என்னுடைய இபுத்தகத்தை தன்னுடைய சந்தையில் வெளியிட்டது மட்டுமல்ல, இதற்கான பதிப்பாளரும் அவரும். மிக்க நன்றி ரவிசங்கர்.

    ravi
    ரவிசங்கர்
    • நீங்கள் மின்னூல்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
    • தமிழில் மின்னூல்களுக்கு எதிர்காலம் இருக்கிறதா?
    • தமிழ் மின்னூல்களை இணையத்தில் பணம் கட்டி வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதா?

    உங்களது கருத்துகளை கீழே எழுதுங்கள்.


  • பாதி எழுதி
    வைத்து விட்டு போகும்
    கவிதையின் மிச்ச வரிகள்
    நான் திரும்பி வருகையில்
    நிரம்பி இருக்கும்.


  • ஒரு கோப்பை தேநீர்,
    துளிர்த்து தொடங்கும் காமம்,
    வானத்தில் பரவி கிடக்கும் மரக்கிளைகள்,
    என்றோ வாய்க்கிற மாடி தருணம்,
    பொதுவில் பார்க்கிற அந்நியர்கள் என
    எல்லாம் அமிழ்ந்து போகிறது
    மனதினுள் எப்போதும்
    பெய்து கொண்டிருக்கும் மழையில்.


  • 1. எனக்குக் கவிதை எழுத தெரியும் என நம்புகிறேன்.
    2. எனக்குக் கவிதை எழுத வராது. அதனால் கவிதை எழுதுவதற்குப் பழகுகிறேன்.
    3. கவிதை ஒரு போதை.
    4. கவிதை எழுதினால் புகழ் பெறலாம் என நம்புகிறேன்.
    5. நான் ஒரு சோம்பேறி. பக்கம் பக்கமாய் கதைகள் எழுதுவதை விட சில வரிகளில் கவிதை எழுதுவது சுலபம் என நினைக்கிறேன்.
    6. நான் ஒரு விஷயத்தில் ஈடுபட்டால் அதிலே அதீத ஆர்வத்துடன் ஈடுபட தொடங்கி விடுவேன். கவிதைக்கான கரு மனதில் உருவானால் அதை எழுதும் வரை அதை உருட்டி உருட்டி உழைத்து கொண்டே இருப்பேன். அந்த உழைப்பு, அதீத ஆர்வம், obsession எனக்குப் பிடித்திருக்கிறது.
    7. கவிதை புத்தகம் போடலாம். வீட்டில் நிறைய இடம் காலியாக தான் இருக்கிறது.
    8. கவிஞர்கள் நண்பர்கள் ஆவார்கள்.
    9. “நீ எதுக்குத் தான் லாயக்கி?” என்று கேட்டவர்களுக்கு நான் சொல்லும் பதில்
    10. கவிதை ஒரு தொழில். ஒரு craft. எனக்கும் ஒரு craft தெரியும் என நிரூபிக்கலாம்.


  • உங்கள் கண்காணிப்பில்
    நல்ல மனிதனாக வாழ்வதை விட
    சுதந்திரமாக
    கெட்ட மனிதனாக மாறி விட்டு போகிறேன்!
    அட போங்க அப்பால!


  • கவிதை என்பது
    கவிதை புத்தகங்களில் மட்டும்;
    ஓவியம் என்பது
    கலைக்கூடங்களில் மட்டும்
    இருக்குமென நீங்கள் நினைத்தால்
    உங்களுக்கு
    என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
    பின் குறிப்பு: இது கவிதையல்ல.


  • வலைச்சரம் என்கிற வலைப்பதிவினை நீங்கள் அறிந்திருக்கலாம். வார வாரம் ஒரு வலைப்பதிவர் அதில் ஆசிரியர் பொறுப்பேற்று தனக்கு பிடித்த அல்லது தான் பரிந்துரைக்க நினைத்த வலைப்பதிவுகளை தொடர்ச்சியாக அந்த வாரம் முழுவதும் பதிவிட்டு அறிமுகப்படுத்துவார். அதில் இந்த வாரம் நான் ஆசிரியர் பொறுப்பேற்று பதிவுகள் எழுதி வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்த போகிறேன். நேரம் இருக்கிறவர்கள் வலைச்சரத்தில் எனது பதிவுகளைப் படித்து கருத்து சொல்லுங்கள். நன்றி.


  • யூனிவர்சிட்டியின் பிரம்மாண்டமான கட்டிடத்தை வெறித்தவாறு அந்த மரத்தடி பெஞ்சில் அமர்ந்திருந்தேன். படித்து முடித்தாயிற்று. இப்போதும் இங்கு தான் சுற்றி கொண்டிருக்கிறேன். மெள்ள மெள்ள இந்த இடத்திலிருந்து அதோ அந்தச் சுவரினைத் தாண்டியிருக்கும் நெரிசல் மிகுந்த நகரத்தில் ஐக்கியமாகி விடுவேன் என்பது மட்டும் உறுதி. வெளியே நகரத்தின் நெரிசலுக்கும் வெயிலுக்கும் உள்ளே தவழ்ந்து கிடக்கிற அமைதிக்கும் பச்சைபரப்பிற்கும் எத்தனை வித்தியாசம். ஒரு சுவர் தான் இரண்டையும் பிரிக்கின்றன.

    நான் அமர்ந்திருந்த மரத்தடியோர பெஞ்சிற்குப் பின்புறம் இருந்தது யூனிவர்சிட்டி கேண்டீன். சில மாணவர்களைத் தவிர அங்கு வேறு யாருமில்லை. எனக்கு வர வேண்டிய டீ வந்தது. கண்ணாடி டம்பளரைப் பிடித்து அதன் சூட்டினை கைகளுக்குள் உணர்ந்தவாறு அமர்ந்திருந்தேன். தூரத்தில் காவியா என்னை நோக்கி வருவதைப் பார்த்தேன். கடந்த ஒரு மணி நேரத்தில் எந்தப் பெண்ணைத் தூரத்தில் பார்த்தாலும் அது காவியா தானா என்று பார்த்து பார்த்து அலுத்து போன காரணத்தினால் இதுவும் வேறு பெண்ணா என்று சந்தேகம் தோன்றியது. இல்லை இது அவளே தான். நீல ஜீன்ஸும் பச்சை நிற டாப்ஸும் போட்டு நடந்து வந்து கொண்டிருந்தாள். வழக்கமான உற்சாகம் அவளிடம் இல்லை. சோகம் அவள் மேல் அப்பியிருப்பதை உணர்ந்தேன். அவள் நெருங்க நெருங்க அவளுடைய அழகிய முகத்தில் கூட இருள் படர்ந்திருப்பதை உணர முடிந்தது. எதுவும் பேசாமல் என் முகத்தைப் பார்க்காமல் சட்டென பக்கத்தில் உட்கார்ந்தாள். அவள் மீது எப்போதும் ஒரு வித வாசனை உண்டு. அது இப்போது தான் தயாரான மலர்கொத்துவின் வாசனை போன்றது. அவளுடைய ஹேண்ட் பேக், கர்ச்சீப், புத்தகம் எல்லாவற்றிலும் இந்த வாசனை உண்டு. அந்த வாசனை இப்போது என் மேல் படர்ந்தது. உற்சாகமாய் உணர்ந்தேன். அதே சமயம் அவள் மேலிருந்த சோகம் அந்த உற்சாகத்திற்குத் தடை போட்டது.

    அவளும் நானும் இதே மரத்தடி பெஞ்சில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசியிருக்கிறோம். என்ன பேசினோம் என யோசித்து பார்த்தால் பெரிதாய் எதுவும் இல்லை. ஆனால் மணிக்கணக்கில் பேச்சு எப்படி நீண்டது என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது.

    பின்பக்கமாய் திரும்பி கேண்டீனைப் பார்த்து கை காட்டினேன். இன்னொரு டீ வேண்டும் என அவர்களுக்குத் தெரியும். அவள் எதுவும் பேசாமல் தலைகுனிந்திருந்தாள். சில மாதங்களுக்கு முன்பு வரை இப்படியெல்லாம் அவளைப் பார்த்ததே இல்லை.

    “இரண்டு பேரும் சண்டை போட்டீங்களா?” என்றேன்.

    “ம்கூம், அதுக்கு வேற வேலை இல்லை,” என்றாள் ஹேண்ட் பேக்கில் இருந்து கர்ச்சீப்பை எடுத்தவாறு. இங்கு ‘அது’ என அவள் சொல்வது அவளுடைய காதலனை. அவனும் எங்கள் கிளாஸ்மேட் தான். இறுதியாண்டு இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். அவன் எப்படி இவளைத் தேர்ந்தெடுத்தான், இவள் எப்படி அவனை ஏற்று கொண்டாள் இதெல்லாம் இன்று வரை எனக்குப் புரியாத மர்மம் தான். சரி, தெரிந்த இரு நண்பர்கள் திருமணம் செய்து கொள்வது நல்லது தான் என நினைத்து கொண்டேன். இவள் அமைதியானவள். அவனோ உணர்ச்சி பிரவாகம். நான் நினைத்த மாதிரி இருவரும் காதலித்து சிரித்து இருந்த கணங்களை விட சண்டையிட்டு கொண்ட தருணங்கள் தான் அதிகம். அல்லது நான் பார்த்த வரை அப்படியா தெரியாது. இருவரும் தனிமையில் ஒருவேளை சந்தோஷமாய் சிரித்து பேசி தான் இருப்பார்களா, தெரியவில்லை. அல்லது எனக்கு முன்னால் தான் அவன் இப்படி வேண்டுமென்றே சண்டையிடுகிறானா என்பதும் புரியவில்லை. அவனுக்கு நான் இவளுடைய நண்பனாக இருப்பது இப்போது சில மாதங்களாய் பிடிக்கவில்லை என்பது மட்டும் எனக்குத் தெரியும். போடா முட்டாள், உனக்குக் காதலியாவதற்கு முன்பு இருந்தே அவள் எனக்கு நல்ல தோழி. இதை அவனிடம் ஓபனாய் சொல்லியும் விட்டேன். இது ஒரு சிறு பிரச்சனை, சரியாகி விடும் என நானும் இவளும் காத்திருந்து காத்திருந்து இப்போது இது எங்களது நட்பைப் பாழாக்கும் அளவு வளர்ந்து விட்டது.

    அவளுக்கு டீ வந்தது. எப்போதும் இந்தப் பெஞ்சின் மேல் டீ கிளாஸை இரண்டு கைகளிலும் ஒரு முயல் குட்டியை அணைப்பது போல பிடித்தபடி இரண்டு கால்களையும் மடித்து தன் மாரோடு கட்டி கொண்டு அமர்ந்து தான் டீ குடிப்பாள். ஒரு கிளாஸைக் குடித்து முடிக்க அரை மணி நேரம் ஆகும். இப்போதும் அவளையறியாமலே அதே மாதிரி உட்கார்ந்து கொண்டு தான் டீ கிளாஸில் இருந்து முதல் சிப் குடித்தாள். அவளுடைய சிந்தனைகள் எல்லாம் வேறு எங்கோ இருந்தது. அடர்மழைக்குப் பயந்து ஒரு மூலையில் ஒண்டி உட்கார்ந்து இருக்கும் குழந்தை போல தெரிந்தாள்.

    “என்னடி ரொம்ப யோசனையா இருக்க?”

    “ம்கூம், ஒண்ணுமில்ல,” என்று சொல்லிவிட்டு தன் சிந்தனைகளை ஒதுக்கி விட்டு தலைமுடியைக் கோதிவிட்டு என் பக்கம் திரும்பி லேசாக புன்சிரித்தாள். அவளுடைய சிந்தனை உலகில் இருந்து இங்கு நிஜ உலகிற்கு ஜன்னலைத் திறந்து நிற்கிறாள் போல. அவளுடைய கையில் எப்போதும் இருக்கும் வண்ண வண்ண சரங்கள் இப்போது இல்லை. அதற்குப் பதில் கறுப்பு நிறத்தில் ஒரு புது வாட்ச் இருந்தது. வட்டமாய் ஒரு கழுகின் கண் போல இருந்தது. அதை ஏனோ எனக்குப் பிடிக்கவே இல்லை.

    “புதுசா?” என்றேன் வாட்ச்சைத் தொட்டு காட்டி.

    “நல்லா இருக்கா?”

    “ம்.”

    “ஆபிஸிற்கு போறதுக்கு இந்த மாதிரி வாட்ச் தான் சரியா இருக்கும்,” என்று மௌனித்தவள் பிறகு, “உன் வேலை எப்படி போகுது?” என்று கேட்டாள்.

    “ஆ வேலை,” என்று இழுத்தேன். “டார்க்கெட், டார்க்கெட் இதைத் தான் பேசுறானுங்க. பாத் ரூம் போறதுக்குக் கூட பெர்மிஷன் வாங்கிட்டு தான் போகணும். வெளியே போயிட்டு வந்தா செலவழிச்ச பணத்தையெல்லாம் நம்ம பாக்கெட்டுல இருந்து தான் செலவழிக்கணும். அதுக்குக் கணக்கு எழுதி அது பாஸாகி வர்றதுக்கு மாசக் கணக்குல ஆகும் போல இருக்கு.”

    “வேலை கஷ்டமா இருக்கா?” அவள் இப்போது முழுமையாய் தன் சிந்தனைகளில் இருந்து விடுபட்டு வந்து விட்டாள். பரிவோடு என்னைப் பார்த்தாள். “ஒல்லியாயிட்ட நீ,” என்று என் தோள்பட்டையைத் தொட்டாள்.

    “உன் வேலை எப்படி இருக்கு?” என்றேன்.

    “வேலை நல்லா தான் இருக்கு,” என்று தன் இரு கால்களை இன்னும் அணைத்து கொண்டு பெஞ்சில் வசதியாய் அமர்ந்து கொண்டாள். டீ கிளாஸை உற்று பார்த்து விட்டு, “ஆட்கள் தான் சரியில்லை. சிகரெட் நாத்தம் ஆபிஸ் முழுக்க. பொண்ணுங்களை பேசும் போது கூட மேனர்ஸ் இல்லாம அவங்க உடம்பெல்லாம் சொறிஞ்சுட்டே பேசுவானுங்க,” என்றாள்.

    “இவன் எப்படி இருக்கான்?” என்றேன். இது பேசக்கூடாது என நினைத்த டாபிக் ஆனாலும் பேசி விட்டேன். என்னைப் பார்த்து வாய் விரிய புன்னகைத்தாள். அவள் மிகவும் அழகாகும் தருணம் இது தான்.

    “நல்லா இருக்கான்,” என்று சுருக்கமாய் பதில் சொல்லி மீண்டும் டீ கிளாஸை முகத்தருகே கொண்டு போய் வேறு சிந்தனைகளுக்குள் மூழ்கி விட்டாள்.

    எங்கள் மூவருக்கும் இந்தச் சில மாதங்கள் கஷ்டமான காலம் தான். கல்லூரி முடிந்து வேலைக்குப் போகும் காலக்கட்டம். அவனுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. அவன் சரியாக முயற்சிக்கவில்லை என்பது என் எண்ணம். அதைவிட கொடுமையானது அவனுக்கு எங்கள் இருவரது நட்பு மீது தோன்றியிருக்கும் கோபம். சந்தேகம் என்று சொல்ல மாட்டேன். கோபம் தான் சரியான வார்த்தையாக இருக்கும். அதுவும் போன வாரம் நடந்த சம்பவத்திற்குப் பிறகு சந்தேகம் என்கிற வார்த்தையை அவன் தான் உதிர்த்தான். தன்னுடைய கோபத்தை வெளிகாட்ட எங்கள் இருவரையும் சந்தேகப்படுவது போல நடிக்கிறான் என்று தான் தோன்றுகிறது. எங்கள் இருவரையும் சந்தேகப்படவே முடியாது. நட்பினைத் தவிர வேறு எதுவும் இல்லை எங்கள் இருவருக்கும் இடையில். இதை எங்கள் இருவருக்கும் அடுத்து மிக சரியாக உணர்ந்தவன் அவனாக தான் இருப்பான். ஆனால் எப்படி இப்படியெல்லாம் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் தன் வாழ்க்கையில் பெரும் குழப்பத்தில் இருக்கிறான். கல்லூரி காலத்திலே வாழ்ந்திருந்தால் அவனுக்கு இந்தப் பிரச்சனைகள் வந்திருக்காது. பயப்படுகிறான். இதை அவனிடம் சொன்னால் சண்டைக்கு வருவான். ஆனால் அவனுடைய அத்தனை குழப்பங்களும் அவனைக் காயப்படுத்தியதை விட இவளைத் தான் அதிகம் காயப்படுத்துகிறது. குரூரமாக அவனே இவளே இன்னும் அதிகமாக காயப்படுத்தி கொண்டு இருக்கிறான். எனக்கு அவன் மீதிருந்த நட்பு, பரிவு எல்லாம் காணாமல் போய் விட்டது. இவளுடைய காதலன் என்கிற அளவில் தான் இப்போது அவன் மீது மரியாதை. அவன் செல்போனிற்கு கால் செய்வதோ நான் அவன் செல்போனிற்கு கால் செய்வதோ சுத்தமாய் நின்று விட்டது. இருவரும் இப்படி அமர்ந்து பேசியெல்லாம் பல மாதங்களாகி விட்டது. நாங்கள் இருவரும் சந்தித்து கொண்டால் இவளைச் சந்திப்பதற்காக தான் இருக்கும்.

    எங்கள் மூவருக்கும் இடையில் ஓர் இரும்பி சங்கிலி போல பிரச்சனை வளர்ந்து இருந்தாலும் நாங்கள் அதைப் பற்றி வெளிபடையாக பேசி கொள்வதே இல்லை. போன வாரம் இதே யூனிவர்சிட்டியில் தான் அவன் இவளோடும் என்னோடும் சண்டை போட்டு கொண்டு வேக வேகமாக நடந்து வெளியே போய் விட்டான்.

    “உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். அதுவும் உங்க இரண்டு பேரைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்,” என்று அவளைப் பார்த்து கத்தி விட்டு தான் போனான். இவள் அதற்குப் பிறகு மூக்கை சிந்தியபடி அழுது கொண்டிருந்தாள். அவன் அங்கிருந்து நகர்ந்து போகாமல் இருந்திருந்தால் இவளுடைய அழுகைக்காக அவனுடைய குரூரத்திற்காக நான் அவன் முகத்தில் ஓங்கி குத்தியிருப்பேன். இவள் அழுவதைப் பார்த்து இவள் மீதும் கோபம் வந்தது. பிறகுப் பாவமாகவும் இருந்தது. இவளுக்கு ஆறுதல் சொல்லவும் சங்கடமாய் இருந்தது. இவள் வேறு யாரோ ஒருவனுடைய காதலி என்று நான் உணர தொடங்கியது அப்போது தான். தனிமை மனமெங்கும் வியாபித்து ஒரு வாரமாய் அதைச் சுமந்தபடி திரிகிறேன். இவர்கள் இருவரும் சந்தோஷமாய் இருக்க வேண்டுமானால் நான் பிரிந்து போக தயார். ஆனால் எனக்கு நன்றாக தெரியும் அவனுடைய பிரச்சனை நான் இல்லை. நான் இல்லையென்றால் தன்னை தானே வருத்தி கொள்ள அதன் மூலம் அவளைத் துன்புறுத்த அவனுக்கு வேறு எதாவது விஷயம் கிடைத்து தான் இருக்கும்.

    “அன்னிக்கு இங்க சண்டை போட்டு போனதற்கு அப்புறம் நாங்க இரண்டு பேரும் ஒரு வாரமா போன்ல கூட பேசிக்கலை. நேத்து என் ஹாஸ்டலுக்கு வந்தான். முதல்ல நல்லா தான் பேசினான். நான் கூட சண்டை போட்டதையெல்லாம் மறந்துட்டான் போலன்னு நினைச்சேன்,” என்றாள்.

    “கடைசியா கிளம்புறதுக்கு முன்னாடி திரும்பவும் போன வாரம் மாதிரி சண்டை போட்டானா?”

    “ம்கூம் இல்ல. அப்படிச் சண்டை போட்டிருந்தா கூட பரவாயில்லை. ஆனா அவன் மெஷின் மாதிரி பேசுறான். நல்லா இருக்கீயா, சாப்பிட்டியா, தூங்கினீயா இப்படி மெஷின் மாதிரி பேசுறான்.”

    “இதுக்கெல்லாம் நான் காரணமில்ல.”

    “ம் ஆமா நீ காரணம் இல்ல.”

    “அவன் தான் காரணம். அவன் லைப்பை சீரியஸா எடுத்துக்கணும்.”

    “ம் ஆமா.”

    ‘உனக்கு என் மேல வருத்தமா?’ என்று கேட்க நினைத்தேன். ஆனால் எதுவும் கேட்காமல் மௌனமாய் இருந்தேன். இவள் நல்ல தோழி தான். ஆனால் இவளை இழக்க தான் வேண்டியிருக்கும் என்பதை முதன்முதலாய் உணர்ந்தேன். வேதனையாக இருந்தது. என் முகத்தில் அது தெரிந்திருக்க வேண்டும். அவள் என்னை இடித்தாள். என்னை சகஜமாக்க முயல்கிறாள் என புரிந்தது.

    “இத விடுடா. அடுத்த வாரம் நான் ஊருக்குப் போறேன்.”

    “அப்படியா,” என்றேன் நானும் பேச்சை மாற்றுவதற்காக பொய்யான உற்சாகத்தோடு.

    “தங்கச்சிக்குத் துணி வாங்கணும். இந்த வீக் எண்ட் நீ என் கூட ஷாப்பிங் வர்ற.”

    “இந்த வீக் எண்ட்டா…” என்று இழுத்தேன். அவள் என் தலையில் தட்டி, “முடியாதுன்னு சொல்லிடாத, எனக்கு தனியா ஷாப்பிங் போறதே பிடிக்காதுன்னு உனக்கு தெரியும் இல்ல,” என்றாள்.

    “ம்கூம், பார்க்கலாம்,” என்றேன்.

    அவள் டீ கிளாஸை கீழே வைத்து விட்டு என் தலைமுடியை சிலுப்பி விட்டாள்.

    “பிளீஸ்டா வாடா,” என்றாள்.

    “ஓகே ஓகே,” என்று சிரித்தேன். சட்டென மனதில் இருந்த இறுக்கம் குறைந்தது. சந்தோஷமாய் கேண்டீன் பக்கம் திரும்பி இன்னொரு டீ சொன்னேன்.

    *******************

    நன்றி:
    ஓவியம்: Beech Trees – T. C. Steele, 1895


  • தூக்கம் வராத இரவுகள் வேதனையானவை. கல்லூரி நாட்களில் படுத்தவுடனே தூங்கியதெல்லாம் எதோ கனவு மாதிரி இப்ப தோன்றுகிறது. தூக்கம் வந்து விடாதா என்று கண்களை மூடி படுத்திருப்பேன். இர்ர்ம் என்று ஃபேன் சுற்றி கொண்டிருக்கும் சத்தம் பெரிதாகி கொண்டே இருக்கும். அதுவே ஓர் இசைக்கருவி போல ஒரே லயத்துடன் அதன் இசை வளரும். அப்படி வளரும் இசை எதோ ஒரு கணத்தில் என்னுடைய சிந்தனைகளில் மூழ்கி அமிழ்ந்து போகும். சிந்தனைகளில் மூழ்கி போன என்னை எதோ ஒரு சத்தம் திடுக்கிட வைக்கும். தெருவில் நாய்கள் குரைக்கும் சத்தம், யாராவது குடிக்காரன் தள்ளாடி தள்ளாடி நடந்து போகும் ஓசை இப்படியாக பல நிமிடங்கள் கழிந்த பின்னர் இன்னும் தூங்கவில்லையே என்பதே பெரும் அசதியாக இருக்கும். எழுந்து போய் தண்ணீர் குடிப்பேன். ஜன்னலைத் திறந்து பார்ப்பேன்.

    இரண்டாவது மாடியில் இருந்து பார்ப்பதற்கு இந்தச் சின்ன சந்து எதோ குழந்தை விளையாடி கலைத்து போட்ட பொம்மை மாதிரி குலைந்து மஞ்சள் நிறத்தில் தெரியும். பகல் நேரங்களில் ஆள் அரவத்துடன் இயங்கும் இந்தச் சந்து கூட இரவில் அசந்து தூங்கி விட்டதோ என்று நினைப்பேன். சின்ன சந்தில் எத்தனை குடித்தனங்கள். சென்னைக்கு வந்து குடியேறியவர்களுக்கு இது ஒரு சாபம் தான். நாளைக்குக் காலை அம்மா வரும் போது இந்தச் சந்தினைக் கண்டு மிரண்டு போனாலும் போவாள். ஊரில் ஒரு வீட்டிற்கும் இன்னொரு வீட்டிற்கும் இருக்கும் இடைவெளியளவு இந்தச் சந்து. இங்கே ஒட்டி கொண்டிருக்கின்றன எத்தனையோ குடும்பங்கள்.

    மீண்டும் படுக்க போகுமுன் குழந்தை தூங்குவதையே உற்று பார்த்து கொண்டிருப்பேன். சத்தமாக அழ வேண்டும் என்பது போல ஒரு வேதனை திரண்டு எழும். அதற்குச் சக்தி இல்லாமல் மௌனமாய் குழந்தையைப் பார்த்தபடி நின்றிருப்பேன். மீண்டும் படுத்தால் தூக்கம் வரவே வராது. தொலைந்து போன தூக்கம் என்னை அரை மனுசியாக்கி விட்டது. தேகம் மெலிந்து கண்களைச் சுற்றி கருவளையம் போட்டு எப்போதும் எதோ சிந்தனையில் மூழ்கியவாறு இருக்கும் அரை உயிர் ஜடமானேன்.

    தூக்கம் வராத இரவுகளில் பெரும்பாலும் கொசு பேட் எடுத்து கொசுகளை அடித்து கொண்டிருப்பேன். டப் டப் என்று கொசுகள் மாட்டும் சத்தம் கேட்டபடி இருக்கும். எவ்வளவு அடித்தாலும் எங்கிருந்து தான் இத்தனை கொசுகள் வருகின்றனவோ. மூலை முடுக்கில் எல்லாம் கொசு பேட்டினை வீசி அந்தப் பொத்தானை அழுத்தியபடி கொசுகளைத் தேடி கொண்டிருப்பேன். மன அழுத்தத்தினைத் தீர்ப்பதற்கு தான் இந்தக் கொசு பேட் கண்டுப்பிடிக்கப்பட்டதோ என்னவோ. இரவு நேரம் எதாவது வீட்டினைக் கடந்து போகும் போது உள்ளே யாராவது ஒரு பெண் கொசு பேட் வைத்து கொசுகளை அடித்து கொண்டிருந்தால் அவளும் என்னைப் போல மனதிற்குள் ஆயிரம் சித்ரவதைகளை அனுபவித்து கொண்டிருக்கிறாள் என தோன்றும். ஒருகட்டத்தில் படுத்தபடி கைகளை உயர்த்த வலுவில்லாமல் கொசு பேட்டினை தரையில் சற்றே உயர்த்தியபடி படுத்து கிடப்பேன். அப்படியும் இரண்டொரு கொசுகள் டப் டப் என வந்து மாட்டும்.

    இன்றிரவு தூக்கத்துடன் சண்டையிடுவது சற்று ஸ்பெசல். காரணம் பல காலத்திற்குப் பிறகு நாளை என் வீட்டிற்கு விருந்தாளிகள் வருகிறார்கள். என் அம்மா தான். கூட மாமாவும் வருகிறார். திருமணத்திற்கு முன்பு அவர்கள் இருவரையும் பார்த்தது. என்னை அவர்கள் தலைமுழுகியதும் நான் அவர்களை மறந்ததும் பழைய கதை. இப்போது தெருவோரமாய் சிதறி கிடக்கும் சருகுகள் போல என் நிலை. அவர்களும் வந்து மிதித்து விட்டு போகட்டும்.

    அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்து கொண்டிருந்தேன். திருச்சியில் இருந்து இப்போது விழுப்புரத்திற்கு வந்து இருப்பார்கள். திண்டிவனத்திற்கு வந்து இருப்பார்கள். இப்போது செங்கல்பட்டு. இப்போது தாம்பரம். இப்போது கோயம்பேடு பேருந்து நிலையம். இப்போது டவுன் பஸ்ஸில் ஏறி இருப்பார்கள். எங்கேயோ எப்படியோ தூக்கத்தில் மூழ்கினேன். கனவில் மாமாவும் அம்மாவும் வீட்டு கதவைத் தட்டினார்கள். நான் கதவைத் திறக்காமலே நின்றிருக்கிறேன். அம்மாவின் குரல் அதே தெளிவோடு இருக்கிறது. எனக்கு அழுகை முட்டுகிறது. ஆனால் அம்மாவிற்கு முன்னால் நான் அழ மாட்டேன். அவளது சாபம் பலித்து விட்டது. என்ன செய்வது? கதவைத் தட்டும் சத்தம் நின்று விட்டது. அவர்கள் திரும்பவும் தட்டுவார்கள் என்று காத்திருக்கிறேன். ஆனால் கதவு தட்டப்படவே இல்லை. சற்றே தவிப்புடன் நான் கதவைத் திறந்து பார்க்கும் போது அங்கே யாருமில்லை. கனவு கலைந்தவுடன் முதல் வேளையாக கதவைத் திறந்து பார்த்தேன். உண்மையில் யாருமில்லை. இன்னும் இருட்டியபடி தான் இருக்கிறது. காலை ஐந்து மணி. உண்மையில் அம்மா வந்து கதவைத் தட்டி பார்த்து விட்டு போய் விட்டாளா? எனது செல்போனை எடுத்து பார்த்தேன். நேற்று மாலை அம்மா கிளம்புவதற்கு முன் அழைத்ததற்குப் பிறகு வேறு எந்த அழைப்பும் இல்லை. பல வாரங்களாய் இந்தச் செல்போனிற்கு அழைப்புகளே கிடையாது. எங்கே போனார்கள் எல்லா மனிதர்களும். இந்த அவநம்பிக்கையைப் போக்குவதற்காக தான் வருகிறாளா அம்மா? இல்லை வயிறு எரிந்து சாபம் விட்டது பலித்து விட்டதா என்று சரி பார்த்து போக வருகிறாளா?

    துடைப்பத்தினை எடுத்து கொண்டு மீண்டும் தரையினைப் பெருக்க ஆரம்பித்தேன். நேற்றிலிருந்து பத்து முறையாவது வீட்டில் உள்ள இரண்டே இரண்டு அறைகளையும் மீண்டும் மீண்டும் பெருக்கியிருப்பேன். வீட்டில் வசதி இல்லை எனினும் சுத்தமாக வைத்திருக்கிறாள் மகள் என்றாவது அம்மா உணரட்டும் என்பது தான் எண்ணம். அடிக்கடி ஜன்னலைத் திறந்து சந்தினைப் பார்த்து கொண்டிருந்தேன். அவர்கள் இருவரும் சென்னையில் விலாசத்தை சரியாக கண்டுபிடித்து வந்து விடுவார்களா? வந்து விடுவார்கள். பீரி பெய்டு செல்போனில் பேலன்ஸ் இல்லாமலே பல மாதங்களை ஒட்டி கொண்டிருக்கிறேன். அதனால் அழைப்பு வந்தால் பேச முடியும். திரும்ப யாரையும் அழைக்க முடியாது. கீழே பிரதான சாலைக்கு போய் டீக்கடையில் ஒரு ரூபாய் காய்ன் போன் பண்ணலாம். அத்தனை பேர் நடுவில் போய் நின்று போன் பேச தயக்கமாகவும் இருந்தது. எனது செல்போனில் இருந்து அம்மாவின் எண்ணிற்கு கால் செய்ய முயன்றேன். அழைப்பு போகாது என்று தெரியும். சொல்லி வைத்தாற் போல் அந்தப் பெண் பல நாட்கள் போல இன்றும் அதே குரலில் பேலன்ஸ் இல்லை என்று சொன்னாள். இந்தப் பெண் யாராக இருப்பாள்? என்னைப் போல் திருமணமானவளாக இருப்பாளா? கட்டாயம் சின்ன பெண் போல தெரியவில்லை. இவளுக்கு வாய்த்த புருஷன் இவளை எப்படி வைத்திருப்பான்? கட்டாயம் என்னை போல துரதிர்ஷ்டம் அவளுக்கு வாய்த்திருக்காது? பாவம் வாய்த்திருக்க வேண்டாம் என நினைத்த அதே நேரத்தில் அவளுக்கும் அதே சிக்கல் வாய்க்க வேண்டுமென வக்கிரமாக யோசித்தேன். அவளும் என்னைப் போல குழந்தையைத் தூக்கி கொண்டு நிற்கிறாள் என்பதாய் ஒரு கற்பனை உருவத்தைப் படைத்து பார்த்தேன். பேலன்ஸ் இல்லை என அவள் மைக்கில் சொல்லும் போது அந்தக் குழந்தை அழுதால் என்ன செய்வாள்? ச்சை என்ன யோசனை இது?

    அம்மா வீட்டிற்குள் வரும் போது அழுவாளா? என்னைப் பார்த்து புன்சிரிப்பாளா? நான் காதலிக்கிறேன் என்று வீட்டில் முதன்முதலாக தெரிந்தபோது கடுகடுவென இருந்தாளே அது போலவே இன்னும் இருப்பாளா? என் உருவத்தினைப் பார்த்தாவது அவள் அழ தான் வேண்டும். பாதியாய் தேய்ந்து போனேன் என்று அழ தான் வேண்டும். குழந்தையைப் பார்த்தால் என்ன செய்வாள்? குழந்தையைத் தொடுவாளா? கொஞ்சுவாளா? சில வாரங்களுக்கு முன்பு முகமெல்லாம் அறை வாங்கி விரல் தடங்கள் பதிந்து போய் மூஞ்சி வீங்கி போய் இருந்தேனே அப்போது அவள் என்னைப் பார்த்திருக்க வேண்டும்? அது போல எனது முகத்தை நான் இப்போது மாற்றி கொள்ள முடியுமா? நானே என்னை அறைந்து கொள்ளட்டுமா? இன்னும் முதுகில் அவன் அடித்த தடம் இருக்கிறது. பல் ஒன்று பாதி உடைந்து விட்டது. இதையெல்லாம் அவள் பார்த்து அழ வேண்டும் என்றும் தோன்றுகிறது. இதையெல்லாம் அவள் பார்க்க கூடாது என்றும் ஒரு மனம் சொல்கிறது.

    அம்மா எப்படி மாறியிருப்பாள் என்றும் ஒரு சிந்தனை ஓடியது. என்னைப் போலவே நிறைய மாறியிருப்பாளா? அப்பா இறந்ததற்குப் பிறகு அவள் வெகு சீக்கிரமே வயதானவளாய் மாறி விட்டதாய் எனக்குத் தோன்றும். இன்னும் வயதானவளாய் தோற்றமளிப்பாளா? இன்னும் நெற்றியில் பொட்டு வைத்திருப்பாளா? உடல் மெலிந்து இருப்பாள் என்று தோன்றியது. அந்தச் சிந்தனை மீண்டும் முட்புதர் போல மனமெங்கும் குற்றவுணர்வினை உருவாக்கி சோகத்தினை உருவாக்கியது. அதிகாலையில் எதற்கு இந்த அழுகை இப்படி முட்டுகிறது. அம்மாவினைப் பார்த்தவுடன் அவள் அழுகிறாளோ இல்லையோ நான் அதற்கு முன்னே பெருங்குரலெடுத்து அழுவேன் போலிருக்கிறது. அவளை விட நான் அதிகமாய் வயதானவளாக மாறி விட்டது போல ஓர் உணர்வு. இல்லை எதிர்பார்ப்புகள் வேண்டாம். அவள் வருவது சமரசம் பேசுவதற்கு அல்ல. என்னை இந்த நரகத்தில் இருந்து மீட்பதற்கு இல்லை. அவளுக்கு ஏற்கெனவே இருக்கும் பெரும்பாரத்தோடு என்னையும் இழுத்து கொண்டு ஓட அவள் தயாராக இருக்க மாட்டாள். அவள் வார்த்தைகளால் என்னைத் திட்டுவது போலவும் மாமா என்னை அறைவது போலவும் யோசித்து அந்தச் சோகத்திலும் குரூரமாய் திருப்திப்பட்டு கொண்டேன்.

    the-dream01

    எனது கணவன் என்னை அடித்த நாட்கள் நினைவிற்கு வந்தன. ஒரு கட்டத்தில் அடி வாங்கி அடி வாங்கி உடம்பு மறத்து போய் விடுமென சொல்கிறார்களே, அதுவெல்லாம் பொய் தான். எப்போது அவன் அடித்தாலும் புதிதாய் ரண வலி தான். குடிபோதையில் அவனுடைய வேகம் அசாத்திய பலத்துடன் இருக்கும். எதிலாவது தலை முட்டி கொண்டு ஒரு கணம் உலகமே கிர்ரென சுற்றும். அவனை எதைக் கொண்டு தாக்கினாலும் அவனுக்கு அது எல்லாம் உறைக்கவே செய்யாது. அவனுடைய அடிகளை வாங்க வேண்டுமானால் நானும் அவனைப் போல குடித்தால் தான் உண்டு போல.

    இப்போது சில வாரங்களாய் அவனில்லாமல், இந்த அடிகள் இல்லாமல், வார்த்தைகளால் குரூரமான சித்ரவதை உண்டாகாமல் வாழ்க்கை திடீரென வெறிச்சென ஆகி விட்டது. அவன் திரும்ப வர வேண்டுமென கூட தோன்றுகிறது. அர்த்தங்கள் இல்லாது போன வாழ்க்கையில் குழந்தையுடன் தனியே எதோ ஆழ்கிணற்றில் எதற்கோ காத்திருப்பவள் போல் இருக்கிறேன். எதற்கு காத்திருக்கிறேன்? சில சமயம் மனம் தன் நிலை இழந்து எனக்குப் பித்து பிடித்து விட்டதா என்று கூட சந்தேகம் தோன்றும். கடைசியாய் நான் வேறொரு மனிதருடன் பேசி எவ்வளவு நாட்களாகின்றன என்று யோசித்து பார்ப்பேன். உண்மையில் இவையெல்லாம் கனவா? வாய்ப்பே இல்லை. என்ன ஆசைடி உனக்கு!

    கதவு தட்டபடும் சத்தம் கேட்டது. ஒரு கணம் இதுவும் கற்பனையா என்று திகைத்து ஸ்தம்பித்து நின்றேன். இல்லை, கதவு தட்டப்படும் சத்தம் தான். வேகமாய் எழுந்து போய் கதவு அருகே நின்றேன். கைகள் என்னையறியாமல் நடுங்கின. கதவைத் திறக்காமலே நின்றபடி இருந்தேன். அம்மாவின் குரல். என் பெயரைச் சொல்லி அழைக்கிறாள். என் உடலெங்கும் நடுக்கம். கண்களில் கண்ணீர். அம்மாவின் குரலும் கதவு தட்டப்படும் சத்தமும் தொடர்ந்தன. நான் பித்து பிடித்தாற் போல் நின்றிருந்தேன். சற்று நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தம் நின்று விட்டது. மறுபடியும் தட்டுவார்கள் என எதிர்பார்த்தேன். இல்லை, கதவு தட்டப்படும் சத்தமில்லை. போய் விட்டார்களா? பதட்டத்துடன் கதவைத் திறந்தேன். மாமாவும் அம்மாவும் பதட்டத்துடன் நின்றிருந்தார்கள். அம்மாவின் முகத்திலோ தோற்றத்திலோ பெரிய மாற்றம் ஒன்றுமில்லை. என்னை பார்த்தவள் ஒருகணம் திடுக்கிட்டு இது நான் தானா என்பது போல பார்த்தாள். நான் கண்ணீர் வடித்தபடி அவளையே பார்த்தேன்.

    அவளுக்குள் பெரும் வெடிப்பு நிகழ்ந்தாற் போல அவள் கரைந்தாள். அழுதபடி என்னை ஓடி வந்து அணைத்தாள். அந்த அணைப்பிற்காக தான் இத்தனை காலம் காத்திருந்தது போல நான் அதனுள் தஞ்சம் புகுந்தேன்.

    *****

    நன்றி
    ஓவியம்: பிகாசோவின் ‘கனவு’