• ‘கதையல்ல நிஜம்’ என்று சில வருடங்களுக்கு முன் பிரபலமாக இருந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. அதில் நான் பணிபுரிந்த போது சந்தித்த மனிதர்களை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இன்னும் அதன் தாக்கத்தில் இருந்து நான் மீளவில்லை.

    அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு பல கடிதங்கள் அந்த நிகழ்ச்சிக்கு வரும். அப்படி வரும் கடிதங்களைத் தொகுத்து கோப்புகளாக பராமரித்து வந்தார்கள். ஒரு நாள் யதேச்சையாக ஒரு பழைய கோப்பினைப் புரட்டி கொண்டிருந்த போது ஒரு கடிதத்தினைப் பார்த்தேன். தெளிவான கையெழுத்தில் முழு நீள வெள்ளைத்தாளில் எட்டு பக்கங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது அந்தக் கடிதம்.

    “என் பெயர் கிருஷ்ணன்,” என தொடங்கியது கடிதம். கடிதத்தின் சுருக்கத்தைக் கீழே தந்து இருக்கிறேன்.

    கிருஷ்ணனுக்கு இப்போது முப்பத்தி இரண்டு வயது. ஏழு வருடங்களுக்கு முன்பு அவர் மும்பையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவருக்குச் சொல்லப்பட்டது கணக்கு வேலை. ஆனால் அவரை வேறு வேலைகள் செய்ய அந்த நிறுவனத்தில் நிர்பந்தம் செய்து வந்தார்கள்.… …மேலும் வாசிக்க


  • டைம் இதழில் சமீபத்தில் ஒரு கட்டுரை வெளி வந்து இருந்தது. பொதுவாக வெளிநாட்டு இதழ்கள் மற்ற நாட்டு பிரச்சனைகளை சரியாக அணுகுவதில்லை என்பது தான் பல சமயம் நடப்பது. ஆனால் இந்த கட்டுரையை படித்தவுடன் என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. அந்த கட்டுரையின் சுருக்கத்தை கீழே தந்து இருக்கிறேன்.

    ஓபாமா வாய் மொழி வீரர் மட்டும் தானா?

    ஓபாமா தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் சொன்ன ஒரு முக்கிய விஷயம், தான் ஆட்சிக்கு வந்தால் வெறும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் சீதோஷ்ண மாற்றம், வறுமை, சுகாதார பிரச்சனைகள், இனவொழிப்பு செயற்பாடுகள் ஆகியவற்றிலும் கவனம் கொள்வேன் என்பதே. ஜிம்பாம்பேயில் இருந்து ராபர்ட் முகாபே பதவி விலக வேண்டும், டார்பூர் இனவொழிப்பு செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தபட வேண்டும் என அச்சமயம் ஓபாமா உரக்க சத்தமிட்டார். “உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் இனவொழிப்பு வேலைகள் நடந்தால், இனத்தின் பெயரால் மக்கள் மிருகத்தனமாய் வேட்டையாடப்படும் போது நாம் அமைதி காத்தால் அது நம்மை மதிப்பு இழந்தவர்களாய் மாற்றி விடும்,” என்று ஓபாமா தன் தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னார்.… …மேலும் வாசிக்க


  • இரட்டை பிறவி என எவரும் உங்களிருவரையும் நினைத்திட முடியும்.
    ஆனால் நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் முதன்முறையாக சந்தித்தே
    ஐந்து நிமிடங்கள் தாம் கடந்திருக்கும் என எவரும் யூகித்துவிட முடியாது.

    அங்கங்களையும் ஒற்றுமைகளையும் அலசும் உங்கள் கண்களில்
    ஆச்சரிய ரேகைகள் வற்றியவுடன்
    எழுவது கோபமும் எரிச்சலுமாக இருக்கிறது.

    அமைதியை தவிர வேறு வார்த்தைகளில்லை உங்கள் இருவருக்கும் மத்தியில்.

    இவ்வளவு காலம் இது கனவு அல்லவா?
    பலிக்க கூடாதென ஒவ்வொரு காலையிலும் நினைத்த கனவல்லவா பலித்து விட்டது.

    இப்போது இருவரில் யார் பலியாக போகிறீர்கள்?
    கனவா? கனவு கண்டவனா?


  • விடுதலைப்புலிகளின் தற்போதைய வீழ்ச்சிக்கு பல காரணங்களை பல நிபுணர்கள் விவாதிக்கக்கூடும். ஆனால் நான் சொல்லும் காரணம் சற்று வேறு வகைப்பட்டது. கண்ணுக்கு எளிதில் புலப்படாதது. ஆழ்ந்து பார்க்கின் பின்புலத்தில் இருந்தவாறு காட்சிகளை இயக்கும் வல்லமை படைத்தது.

    தேசியத்தின் எழுச்சி

    பனிப்போர் நடந்த காலத்தில் அமெரிக்க அரசும் சோவியத் யூனியனும் உலகத்தை இரு நிலைகளாக வைத்திருக்க முயன்றன. இந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் மற்றொரு நாடு அரசியல் செய்ய முயன்றது. இதன் காரணமாக உள்நாட்டு கலகங்களுக்கு வெளியுலக அங்கீகாரமும் ஆதரவும் இருந்தன.

    ஆப்கானிஸ்தானில் தாலிபானின் முன்னோடிகளை வளர்த்தது அமெரிக்கா தாம். சோவியத் யூனியனுக்கு எதிராக தாலிபானின் முன்னோடிகள் உருவானார்கள். இன்று சீனா இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் கலகக்காரர்களை வளர்த்து விடுவதும், பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் கலகக்காரர்களை ஆதரிப்பதும் இதன் நீட்சிகளே. இந்த போக்கு இன்னும் தொடர்கிறது என்றாலும் இன்று அதனை வெளிபடையாக செய்ய இயலாத நிலை தோன்றியிருக்கிறது. காரணம் பனிப்போர் ஓய்ந்த பிறகு ஒரு நாட்டு அரசாங்கத்தின் அதிகாரம் பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது.… …மேலும் வாசிக்க


  • மனிதர்களும்,
    மிருங்களும்,
    பறவைகளும்,
    மனித தலையும் விலங்குகளின் உடலை கொண்டவர்களும்,
    பறவைகளின் இறக்கை கொண்டு பறக்கும் கொடிய மிருகங்களும்,
    மாயஜால மந்திரவாதிகளும்,
    சூன்யக்காரிகளும்,
    வீரத்திற்கு புகழ் பெற்ற தளபதிகளும்,
    தந்திரத்திற்கு பேர் வாங்கிய தலைவர்களும்
    போரிடுவதற்காக கூடும் இந்த போர்க்களம்
    இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இரத்த கறையோடு விளங்க போகிறது.
    நீயும் நானும் பிறப்பதற்கான முதல் வித்து
    தோன்ற போவதும் இங்கு தான்.
    நம் இனத்தின் கடைசி சாபம் உருவாகும் இடமும் இது தான்.


  • ஜனநாயகம் என்பது என்ன?

    இன்று நடைமுறையில் இருப்பது உண்மையான ஜனநாயகம் தானா? ஜனநாயகம் என்பது மக்களே தங்களை தாங்களே ஆண்டு கொள்ளும் முறை என்று சொல்லபடுகிறது. அதில் கண்ணுக்கு தெரியாத சின்ன திருத்தம் ஒன்று இருக்கிறது. மக்கள் தங்களுக்கான பிரதிநிதியை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக தங்களை ஆண்டு கொள்ளும் முறை என வரையறுக்கபடுகிறது. பிரதிநிதிகள் ஒழங்கானவர்கள் தானா என எப்படி அறிவது? அதற்கு தானே ஐந்து ஆண்டு காலக்கெடு, அவர்கள் ஒழங்காய் இல்லை எனில் அவர்களை தூக்கி எறிந்து விட்டு வேறு யாரையாவது தேர்ந்தெடுத்து கொள்ளலாமே என சொல்வார்கள்.

    வெகு சிலரிடம் மட்டும் அதிகாரம் இருப்பதால் என்ன பயன்?

    இன்றைய யதார்த்ததை மேற்சொன்னவற்றோடு ஒப்பிட்டு பாருங்கள். அரசியல் கட்சிகள் பெரும்பாலும் யாராவது ஒருவர் கட்டுபாட்டில் இயங்கும் சூழ்நிலைக்கு வந்து விட்டன. உட்கட்சி ஜனநாயகம் என்பது எல்லாம் கேலி கூத்தாகி விட்டன. அரசியலில் ஆர்வமுள்ள தகுதியான ஓர் இளைஞர் பணம் செல்வாக்கு எதுவுமின்றி இன்றைய பெருங்கட்சி எதிலாவது வேட்பாளராக தேர்ந்தெடுக்கபடுவது கிட்டதட்ட முடியாத காரியம்.… …மேலும் வாசிக்க


  • அவரது பெயர் அபிநயா. நாற்பது வயதாகிறது. தோற்றத்தில் இன்னும் முதுமை எட்டி பார்க்கவில்லை. கண்களில் மட்டும் எப்போதும் ஒரு லேசான சோர்வு. கணவனுடன் தனி குடித்தனம். இரண்டு குழந்தைகள். ஒரு பையன். ஒரு பெண். மூத்தவனுக்கு பதினைந்து வயதாகிறது.

    சராசரியான மத்தியவர்க்க பெண்மணி போன்ற வாழ்க்கை. கணவர் அரசு உத்தியோகத்தில் இருந்தார். ஸ்கூட்டர் பைக்காக மாறி ஆறு மாதங்களுக்கு முன்பு காராக மாறி இருந்தது. சொந்த வீடு கனவு நனவாகி விட்டது. மிக்ஸி, கிரைண்டர் என சாமான்களும், தங்க நகைகளும் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன்பு பெட் ரூமில் ஏஸி மாட்டினார்கள். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை குடும்பமாய் காரில் வெளியே எங்காவது போய் சுற்றி விட்டு வீடு திரும்புவார்கள். வருடத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு பயணம். வெளிநாட்டு சுற்றுலா செல்ல வேண்டும் என ஓர் எண்ணம் உண்டு. இன்னும் கைக்கூடவில்லை.

    சராசரியான மத்தியவர்க்க பெண்மணி போல தான் வாழ்ந்து வந்தார் அபிநயா.… …மேலும் வாசிக்க


  • வருகிற நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் ஈழப்பிரச்சனை தாக்கம் ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனால் பிரதான தாக்கம் ஏற்படுத்துமா என்பது தான் கேள்வி.

    இந்திரா காந்தி இறந்த போது எழுந்த அனுதாப அலை, ஒரு சமயம் ஜெயலலிதா அரசின் மீதான அதிருப்தியால் அவரது கட்சியை படுதோல்வியை சந்திக்க வைத்த பொது அதிருப்தி இது போன்று ஈழப்பிரச்சனையும் வருகிற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

    தமிழக மக்கள் ஈழப்பிரச்சனை பற்றிய உணர்வுடன் இருந்தாலும், இந்த பிரச்சனையில் அதிமுக, திமுக ஏன் தேமுதிக கூட ஒரே விதமான நிலைபாடுடன் தான் இயங்குகின்றன. அதாவது சந்தர்ப்பவாதம். அப்படியானால் மக்கள் வருகிற தேர்தலில் தங்கள் உணர்வுகளை எப்படி பதிவு செய்வார்கள்.

    என்னை பொறுத்த வரை ஈழப்பிரச்சனை எந்தளவு தாக்கத்தை தமிழக தேர்தலில் ஏற்படுத்தும் என்பதை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடையும் வெற்றி/தோல்வி/படுதோல்வி இவற்றை கொண்டே அளவிட முடியும்.

    ஈழப்பிரச்சனையில் தங்கள் நிலைபாடு இந்த தேர்தலில் தங்களுக்கு பலவீனமாக மாறும் என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்து இருக்கிறது.… …மேலும் வாசிக்க


  • செய்யும் காரியத்தில் மோகம். சாப்பிட்டால் சாப்பிட்டு கொண்டே இருத்தல். இல்லாவிட்டால் செய்யும் வேலையில் மோகம். உணவு உறக்கமின்றி வேலையிலே இருத்தல். சினிமாக்கள் பார்க்க தொடங்கி விட்டால் அப்படியே சினிமாக்களிலே லயித்திருத்தல். இப்படியாக ஒரு காரியத்திலே அதீத மோகத்தில் திளைத்திருப்பது பலருக்கு நடப்பது தான். இந்த அதீத மோகம் ஓர் எல்லையை தாண்டினால் மனநோயாகி விடுகிறது என்கிறார்கள். அதில் ஒரு வகை மனவியாதியின் பெயர் Obsessive Compulsive disorder. தமிழில் இதைக் கட்டுப்படுத்தவியலா பிளவுபட்ட மனநோய் என்கிறார்கள்.

    இன்னொரு எளிதான விளக்கம், கைகளைக் கழவினால் கழுவி கொண்டே இருப்பதான ஒரு மன வியாதியைப் பல பேர் கேட்டு இருக்கக்கூடும். பூட்டு போட்ட பிறகு பூட்டு சரியாக போடப்பட்டிருக்கிறதா என சரி பார்த்து கொண்டே இருப்பது. பூட்டிய பிறகு ஒரு முறையோ இரு முறையோ அல்லது மூன்று முறை இழுத்து பார்ப்பது கூட மன பிரச்சனை அல்ல. ஆனால் நடு இரவு தூக்கத்தில் இருந்து எழுந்து இரண்டு கிலோமீட்டர் நடந்து வந்து பூட்டை இழுத்து பார்த்தால் மனப் பிரச்சனை இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம்.… …மேலும் வாசிக்க


  • மண் புழுதி தழுவியிருக்கும் தார்சாலையின் ஓரம்
    ஒரு கடை முன்னால் தொங்குகிறது அந்த போஸ்டர்.
    போஸ்டரில் நெகிழ்ந்த ஆடையில் தாராளமாய் தன்னை காட்டும் நடிகை.
    காகிதம் தான்.
    விரிகின்றன என் கண்கள்.
    ஆனால் முதுகை சுடுகின்றன ஆயிரம் பார்வைகள்.

    நிஜத்தில் அல்லாத இந்த ஆயிரம் பார்வைகளையும்
    யாருமற்ற பாலைவனத்திலும்
    எனது முதுகில் உணர்ந்து திரியும் நான்.