• மேகங்கள் திடீரென ஒரு நாள்
    வேகமாய் நகர தொடங்கி இருப்பதை கவனித்தேன்.

    ஆற்றுத்தண்ணீர் போல
    அந்த தண்ணீரில் கொப்பளிக்கும் நுரைகள் போல
    போர் விமானங்கள் போல
    சோகங்கள் போல
    ஓவியத்தின் மீது ஊற்றபட்ட தண்ணீர் போல
    மேகங்களின் அபரித வேகத்தை கண்டு
    எனக்கு பயமாக இருந்தது.

    தினமும் காலையில் கண் விழித்தவுடன்
    இன்றாவது மேகங்களின் போராட்டம்
    முடிவிற்கு வந்து விட்டதா என்கிற
    ஆர்வத்துடன் வீட்டிற்கு வெளியே வந்து
    பார்க்க தொடங்கினேன்.

    ஆனால்
    முடிவே இல்லாத நீண்ட கனவாக
    அது மாறி கொண்டிருந்தது.

    அப்போது தான் அது நடந்தது…


  • நமது உலக மக்கள் தொகை இந்த பதிப்பு எழுதபட்டு கொண்டிருக்கும் சமயம் 692 கோடியை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது. இதே சமயம் ஜக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் உலகத்தில் இப்போது 100 கோடி பேர் பட்டினியால் வாடுவதாக சொல்லபட்டு இருக்கிறது. அதாவது ஏழு பேரில் ஒருவர் பட்டினியால் வாடுவதாக பொதுபடையாக கொள்ளலாம்.

    இந்தியாவின் நிலை இன்னும் மோசம்
    உலக ஜனதொகையில் ஆறில் ஒரு பங்கு இந்தியர்கள். ஆனால் பட்டினியால் வாடும் ஜனத்தில் 50% பேர் இந்தியர்கள். உணவு பற்றாகுறையும் மிக குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களும் நிறைந்த நாடு தான் இந்தியா. நோய்கள் மிக எளிதாக நம் நாட்டை குறி வைப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. இங்கு பத்தில் ஒன்பது கர்ப்பமுற்ற பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கபட்டு இருக்கிறார்கள். தாயின் இரத்த சோகை பிறக்கும் குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

    இந்தியா

    • 15 கோடி குழந்தைகள் பட்டினியால் பாதிக்கபட்டிருக்கிறார்கள்.
    • இந்தியாவில் ஏற்படும் 50% குழந்தைகளின் மரணம் சத்துணவு பற்றாக்குறையால் ஏற்படுகிறது.
    • ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 70 சதவீதத்தினர் இரத்த சோகையால் பாதிக்கபட்டு இருக்கிறார்கள்.
    • 80% இந்திய குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் சத்து கிடைக்கவில்லை.

    உலகம் முழுவதும் இன்று பட்டினியால் பாதிக்கபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதற்கு முக்கிய காரணம் தற்போது ஏற்பட்டுள்ள உலக பொருளாதார சரிவு. ஆனால் இந்தியாவில் உள்ள மோசமான நிலைக்கு காரணம் வறுமை, படிப்பறிவு இன்மை, காடுகளை அழித்தல், இயற்கை சீற்றங்கள் மற்றும் சமப்படுத்தபடாத உணவு வழங்கல் முறை. நம்முடைய அரசின் இயலாமையும் அரசு இயந்திரத்தில் உள்ள ஊழல் முறைகேடுகளுமே பட்டினி எண்ணிக்கையை உயர்த்தியபடி இருக்கிறது.

    அரசாங்கம் பொய் சொல்கிறது
    ஐக்கிய நாடுகள் சபையும் அதன் கிளை உலக உணவு நிறுவனமும் மற்றும் ஏராளமான சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இன்று இந்தியாவில் நிலவும் பட்டினி நிலையை ஆபத்தானது என வர்ணிக்கிறார்கள். ஆனால் இந்திய அரசாங்கமோ வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக அறிவிக்கிறது. இது மக்களை ஏமாற்றுவது மட்டுமல்ல, உண்மையான பிரச்சனையை அணுகாமல் ஓதுக்குவதுமான தவறாகும்.

    நாட்டு மக்களிடையே சுபிட்சம் நிலவுவதாக காட்டுவதற்காக இப்போதுள்ள காங்கிரஸ் அரசாங்கம் மட்டுமல்ல, இது வரை இந்திய ஜனநாயகத்தினை ஆண்ட அத்தனை கட்சிகளும் இந்தியாவின் உண்மையான நிலையை மூடி மறைத்தே வைத்திருந்தார்கள். மத்திய வர்க்கத்தினரின் பொருளாதார எழுச்சியை நாட்டின் எழுச்சியாக காட்ட முயற்சித்தார்கள். இதன் மூலம் இந்தியா தனது ஏழை குடிமக்களை சமமான மக்களாக நடத்தவில்லை என்பதும் இங்குள்ள அரசிற்கு அவர்கள் ஒரு பொருட்டே இல்லை என்பதும் தான் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

    குறிப்பு: அனைத்து தகவல்களும் ஜ.நா வெளியிட்ட அறிக்கைகளில் இருந்து எடுக்கபட்டவை.


  •  

    கொடூரமான போர் ஓய்ந்து விட்டாற் போல் தோன்றினாலும், இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு இன்னும் சித்ரவதை காலம் முடியவில்லை. விடுதலைப்புலி வீரர்கள் யாரும் தங்கள் பிடியில் இருந்து தப்பி விடக்கூடாது என்பதற்காக இலங்கை அரசு கிட்டதட்ட மூன்று லட்சம் தமிழ் மக்களை கம்பி வேலிகளுக்கு இடையே முகாம்களில் அடைத்து வைத்து இருக்கிறது.

    வவுனியா, மன்னார், திரிகோணாமலை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் நாற்பது முகாம்கள் அமைக்கபட்டுள்ளன. இங்குள்ள மக்கள் இந்த முகாம்களில் இருந்து வெளியே செல்ல முடியாது. இவர்கள் ஏற்கெனவே போர் காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானவர்கள். தற்போது முகாம் பகுதிகளில் உள்ள சுகாதார சீர்கேட்டின் காரணமாக பல்வேறு தொற்று நோய்களும் இவர்களை தாக்க தொடங்கியிருக்கின்றன.

    அடிப்படை வசதிகள் அற்ற இந்த முகாம்கள் அரசின் மனித உரிமை மீறல் என சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் குரல் கொடுத்தபடி இருக்கின்றன. இந்த முகாம்களில் உள்ள நிலையை கண்டறிய யாருக்கும் அனுமதி இல்லை. வெகு சில சர்வதேச உதவிக்குழுக்கள் நுழையும் போது கூட கடுமையான விதிமுறைகள் அவர்களுக்கு விதிக்கபட்டன. செல்போன்கள், கேமிராக்கள், வண்டிகள் எதுவும் எடுத்து வரக்கூடாது என சொல்லபட்டது.

    வவுனியா முகாமில் பட்டினி காரணமாய் முப்பதற்கு மேற்பட்டோர் இறந்ததாய் சொல்லபடுகிறது. முகாம்களில் உள்ள பலர் தங்களது குடும்பத்தை பிரிந்து நாற்பது முகாம்களிலும் சிறைபட்டு இருக்கிறார்கள். பலருக்கு தங்களது குடும்பத்தினர் எங்கே இருக்கிறார்கள் என்கிற விவரம் கூட தெரியாது. குடும்பத்தினர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது கூட தெரியாமல் கடுமையான மன உளைச்சலுடன் தொற்று நோயிற்கு பயந்து மக்கள் வாழும் இந்த முகாம்களை நவீன ஹிட்லர் நாஜி முகாம்கள் என்று அழைப்பதில் என்ன தவறு இருக்க போகிறது.

    இந்த முகாம்களில் உள்ள மக்களின் எதிர்காலம் என்ன? இந்த மக்களோடு கலந்து இருக்கும் விடுதலைப்புலிகளை இனம் கண்டு கைது செய்த பிறகு இங்குள்ள மக்கள் அவர்களது நிலபரப்பிற்கு அனுப்பி வைக்கபடுவார்கள் என சொல்கிறது இலங்கை அரசு. அப்படியானால் முகாம்களில் கொடூரமான சித்ரவதைகளுக்கும் கொலைகளுக்கும் பஞ்சமிருக்காது. ஏறகெனவே முகாம்களில் பலர் இலங்கை படையினரால் அழைத்து செல்லபட்டு பிறகு நிரந்தரமாக காணாமல் போய் கொண்டிருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகின்றன. இச்சூழலில் இந்த முகாம்களில் உள்ள மக்களை விடுதலை செய்ய பல வருடங்களாகும் என அஞ்சுகிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

    விடுதலைபுலிகளை கைது செய்வதற்காக எடுக்கபட்ட நடவடிக்கை என அரசு காரணம் சொன்னாலும் பல மனித உரிமை அமைப்புகள் இது தமிழ் மக்களுக்கு எதிரான இனவிரோத பழி வாங்கல் நடவடிக்கை என குற்றம் சாட்டுகிறார்கள்.

    சில நாட்களுக்கு முன், கொழும்பு நகரில் உள்ள ஓர் அமைப்பு இந்த முகாம்கள் சட்டத்திற்கு விரோதமானது என இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. The Center for Policy Alternatives என்கிற அந்த அமைப்பு இந்த வழக்கில் இலங்கை அதிபர் மகிந்த ராஜ பக்ஷே உட்பட பல உயர் அதிகாரிகள் விசாரிக்கபட வேண்டுமென கோரியிருக்கிறது. ஓர் இனத்திற்கு எதிராக ஓர் இனம் எடுக்கும் விரோத/ஒழிப்பு நடவடிக்கையே இந்த முகாம்கள் என தனது மனுவில் அந்த அமைப்பு குறிப்பிட்டு இருக்கிறது. வழக்கு எப்படி கையாளப்படும் என்பதை இனி பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    ஏற்கெனவே போர் குற்றங்களுக்காக ஜக்கிய நாடுகள் சபை விசாரணை நடைபெறாமல் போய்விட்டது. இந்தியா உட்பட பல நாடுகள் தங்களது மனசாட்சிகளை பூட்டி வைத்து விட்டு இந்த விசாரணை நடைபெறக்கூடாது என வாக்களித்தனர். இலங்கை அதிபர் ராஜ பக்ஷே போர் குற்றங்களை கண்டறிவதற்காக அமைத்து இருந்த ஒரு கண் துடைப்பு கமிட்டியும் எந்த விசாரணையும் நடத்தாமல் மூடப்பட்டு விட்டது.

    நடப்பு காலகட்டம் தமிழ் வரலாற்றில் இரத்த கறை தொய்ந்த பக்கங்களில் எழுதபட்டு கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அரசு பயங்கரவாதம் மற்றொரு பக்கம் அதை விட கொடூரமான மற்றவர்களின் மௌனம்.

    இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா என்பதல்ல உலக தமிழர்களின் இன்றைய கவலை. மிச்சமிருப்பவர்களாவது உயிருடன் தப்புவார்களா என்பதே அவர்களது அச்சம்.


  • 100 கிலோமீட்டர் வேகத்தில் மரணம்.
    கீழிருந்து உயர்ந்து செல்லும் மேம்பாலம் உச்சியில் முடிவடைய
    அதற்கு கீழே தனது அகலமான சேலையை விரித்து
    காத்திருக்கிறது கடல்.

    இது தற்கொலை மேம்பாலம்.
    யார் வேண்டுமானாலும் பைக்கை ஓட்டியபடி சென்று
    தற்கொலை செய்து கொள்ளலாம்.

    இந்த ஊருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர்
    காண விரும்பும் இடம் இது தான்.
    சுற்றுலா பயணிகளுக்காகவே மேம்பாலத்தின் வடக்கே
    ஒரு திறந்த மண்டபம் அமைந்திருக்கிறது.

    அந்த மண்டபத்தினுள் இருந்து பார்த்தால்
    மேம்பாலத்தில் எப்போதுமே
    ஒன்றிரண்டு பைக்குகள் ஏறி கொண்டிருப்பதையும்
    அவர்களை விழுங்க அலைகளை கரகோஷமிட்டபடி
    கடல் துள்ளுவதையும் காணலாம்.

    கோடைக்காலம் இங்கு உகந்த காலம்.
    அச்சமயம் பத்து பனிரெண்டு பைக்குகள் கூட
    ஒரே சமயத்தில் மேம்பாலத்தில் ஏறி கொண்டிருக்கும்.
    சமயங்களில் டிராபிக் ஜாம் ஆவதும் உண்டு.

    மேம்பாலத்தின் கீழே நின்றிருக்கும்
    காவலாளியை கண்டு கொள்ளாதீர்கள்.
    அவனது வேலை வேடிக்கை பார்ப்பது மட்டுமே.
    அதுவும் அவன் கடலுக்கு எதிர் திசையில் தான்
    எப்போதும் பார்த்தபடி இருப்பான்.


  • ஒரு தொகுதியில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 100 என்று வைத்து கொள்வோம். அதில் தேர்தலன்று வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 65 என்று வைத்து கொள்ளுங்கள். இதில் 24 வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருப்பவர் ஜெயித்தவராக அறிவிக்கபடுகிறார். அவரே அந்த நூறு பேர் மற்றும் அந்த தொகுதியில் 18 வயதிற்கு கீழ் உள்ள ஐம்பது பேர்களின் பிரதிநிதியாக மாறி போகிறார். உண்மையில் அந்த 24 வாக்குகள் பெற்ற நபர் பிரதிநிதி ஆவது நியாயம் தானா?

    தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிக்கு எதிராக வாக்களித்த 41 பேரின் குரல் முடக்கபட்டதாய் அர்த்தம் ஆகாதா?

    இப்படி குதர்க்கம் பேசுகிறாயே, நீ இதற்கு மாற்று யோசனை சொல் பார்க்கலாம் என நீங்கள் சொல்லலாம். சரி பணிந்து போகிறேன். 24 வோட்டுகள் வாங்கிய அந்த நபர் பிரதிநிதியாக இருக்க தகுதியானவர் என்றே ஒப்புக்கொள்வோம்.

    • 24இல் 2 கள்ள வோட்டு
    • 60 சதவீதத்திற்கு மேல் படிப்பறிவு இல்லா சமூகம் நமது. அதிலே கல்லூரிக்கு போய் படிப்பு முடித்த பல கனவான்கள், சீமாட்டிகள் தினசரிகளையோ புத்தகங்களையோ புரட்டுவதே கிடையாது என்கிற அளவு ஞான சூன்யங்கள். இவர்கள் போடும் வோட்டு எந்தளவிற்கு விழிப்புணர்வுடன் செய்யபட்டவை என்று ஒரு கேள்வி.
    • பல வோட்டுகளை விற்குமளவு பலம் படைத்த ஆள் ஒருவர் ஒரு வார்டுக்கு இருக்கும் அளவிற்கு குழு மனப்பான்மை மலிந்து கிடக்கிறது.
    • சாதி ஆதிக்கமிகுந்த சமூகம் இது.

    காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். மீண்டும் கேட்கிறேன். நம்ம தேர்தல் முறை சரியானது தானா?

    ம்கூம், வோட்டுகளை விற்று பணமாக்கி கொள்ளுங்கள். பிரதிநிதிகளிடம் நீங்கள் எதிர்பார்க்க கூடிய ஒரே விஷயம் இனி அது ஒன்று தான்.


  • ‘கதையல்ல நிஜம்’ என்று சில வருடங்களுக்கு முன் பிரபலமாக இருந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. அதில் நான் பணிபுரிந்த போது சந்தித்த மனிதர்களை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இன்னும் அதன் தாக்கத்தில் இருந்து நான் மீளவில்லை.

    அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு பல கடிதங்கள் அந்த நிகழ்ச்சிக்கு வரும். அப்படி வரும் கடிதங்களைத் தொகுத்து கோப்புகளாக பராமரித்து வந்தார்கள். ஒரு நாள் யதேச்சையாக ஒரு பழைய கோப்பினைப் புரட்டி கொண்டிருந்த போது ஒரு கடிதத்தினைப் பார்த்தேன். தெளிவான கையெழுத்தில் முழு நீள வெள்ளைத்தாளில் எட்டு பக்கங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது அந்தக் கடிதம்.

    “என் பெயர் கிருஷ்ணன்,” என தொடங்கியது கடிதம். கடிதத்தின் சுருக்கத்தைக் கீழே தந்து இருக்கிறேன்.

    கிருஷ்ணனுக்கு இப்போது முப்பத்தி இரண்டு வயது. ஏழு வருடங்களுக்கு முன்பு அவர் மும்பையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவருக்குச் சொல்லப்பட்டது கணக்கு வேலை. ஆனால் அவரை வேறு வேலைகள் செய்ய அந்த நிறுவனத்தில் நிர்பந்தம் செய்து வந்தார்கள். மொழி புரியா ஊரில் கிருஷ்ணனுக்கு எல்லா விஷயமும் பெரும் மனச் சோர்வாக இருந்தது. இச்சமயத்தில் அவருக்குள் எதோ மர்மமான மாற்றங்கள் நிகழ்ந்தன. முதலில் தாங்க முடியாத வலி உடல் எங்கும் பரவியது. பிறகு எதோ கதிர்கள் தன் உடலுக்குள் ஊடுருவது போல் இருந்தது. தனது கம்பெனிக்காரர்கள் தான் எதோ மந்திரம் செய்து இந்தக் கதிர்களை ஏவி விட்டு இருக்கிறார்கள் என நினைத்தார் கிருஷ்ணன்.

    கிருஷ்ணனின் தாங்க முடியாத வலிக்கு ஒரு விடிவு கிடைத்தது. நிரஞ்சன் என்றொரு நபர் கிருஷ்ணனின் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவரும் தமிழர். அதோடு உயர் அதிகாரி. தனக்குக் கீழ் இருக்கும் பணியாளர்களிடம் ஆதரவாய் பேசுபவர். இது போல ஒரு நாள் நிரஞ்சன் கிருஷ்ணனைக் கூப்பிட்டு ஆறுதலாய் பேசி இருக்கிறார்.

    அடுத்த நாள் காலை கிருஷ்ணன் விழித்த போது அவருக்குள் கேட்டது நிரஞ்சனின் குரல். ஆம்! நிரஞ்சன் பக்கத்தில் இல்லாமலே அவரது குரல் மட்டும் கிருஷ்ணனின் தலையில் கேட்க தொடங்கியது. என்ன ஆச்சரியம், இவ்வளவு நாட்கள் பாடாய் படுத்திய உடல் வலி சுத்தமாய் மறைந்து விட்டது. தனக்கு நல்லது செய்வதற்காக தன் உடலுக்குள்ளே வந்திருக்கிறார் நிரஞ்சன் என நினைத்தார் கிருஷ்ணன்.

    கிருஷ்ணனிடம் பரிவாய் பேசியபடி இருந்தது நிரஞ்சனின் குரல். கிருஷ்ணனுக்கு முதல் நாள் சந்தோஷம். இரண்டாம் நாள் அந்தக் குரலோடு சகஜமாய் தன் வாழ்க்கையைப் பற்றி தன்னுடைய கவலைகள் பற்றி என்று எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள தொடங்கினார். ஒரு வாரம் ஆன பிறகும் அவருக்குள் நிரஞ்சனின் குரல் இன்னும் கேட்டு கொண்டிருந்தது.

    “என் பிரச்சனைகள் எல்லாம் உங்கள் தயவால் தீர்ந்து விட்டது. உங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள். இப்போது நீங்கள் என்னிடம் இருந்து பிரியலாம்,” என்று கிருஷ்ணன் தன் மனதிற்குள் சதா பேசியபடி இருந்த நிரஞ்சனின் குரலிடம் சொன்னார். அவ்வளவு தான், நிரஞ்சன் கெட்ட வார்த்தைகளால் அவரை அபிஷேகிக்க ஆரம்பித்து விட்டார். அதோடு கிருஷ்ணன் பகிர்ந்து கொண்ட அந்தரங்க விஷயங்களை எல்லாம் வெளியில் சொல்வேன் என்பது போன்ற மிரட்டல்.

    கிருஷ்ணனுக்கு அதிர்ச்சி. அன்று தொடங்கி இன்று ஏழு வருடங்களாகிறது. இன்று வரை தினமும் தனக்குள் நிரஞ்சனின் குரல் கேட்டபடி இருக்கிறது என அந்தக் கடிதம் முடிந்தது. எதாவது தட்டி கேட்டால் அந்த குரல் பயங்கரமாய் திட்டுகிறது. இதன் காரணமாய் தன்னால் சராசரி மனிதர்கள் போல வாழ முடியவில்லை. எப்படியாவது நிஜ நிரஞ்சனிடம் பேசி அவரை தனக்குள் இருந்து வெளியே போக வழி செய்து தர வேண்டுமென ஒரு வேண்டுகோளும் இருந்தது.

    கடிதத்தினை வாசித்து முடித்த போது இது ஒரு மன வியாதி என தோன்றியது. ஒரு வங்காள படத்தில் கூட கதாநாயகனுக்கு சதா காதில் மணி சத்தம் கேட்டபடி இருக்கும் என்று பார்த்ததாய் நினைவு. ஆனால் கடிதம் எழுதப்பட்டிருந்த முறையும் பயன்படுத்தப்பட்டிருந்த மொழியும் இது மன வியாதி உள்ளவரால் எழுதப்பட்ட கடிதம் போலவே தோன்றவில்லை.

    கடிதத்தில் இருந்த விலாசத்திற்கு அடுத்த நாள் பைக்கில் பயணமானேன். அது கோடைக்காலத்து வெப்பம் மிகுந்த நாள். சென்னையின் புற நகர் பகுதி. சொற்ப வீடுகள் இருந்த ரெஸிடென்சியல் காலனி. வீடு இருக்கும் தெருவை நெருங்கும் போது அங்கு மிகுந்து கிடந்தது ஓர் அமானுஷ்ய அமைதி. மஞ்சள் மஞ்சளாய் பழைய காலத்து கட்டிடங்கள். வீடுகள் இருந்தன தவிர வழி கேட்க கூட ஆட்கள் யாரையும் தெருவில் பார்க்க முடியவில்லை. நாய்களைப் பார்க்க முடியவில்லை. ஆனால் அது குலைக்கும் சத்தம் மட்டும் கேட்டபடி இருந்தது.

    கடைசியில் கண்ணில் பட்டார் ஓர் இஸ்திரி கடை ஆள். இறுக்கமான முகத்தோடு பதில் சொல்லி விட்டு திரும்பவும் வந்த வழியே போய் விட்டார். கடைசியில் அந்த வீட்டிற்கு போய் சேர்ந்தேன்.

    ஒரு பிராமண குடும்பம். வயதான தாய் தந்தை மட்டும் இருந்தார்கள். நான் யார் என்றும் எதற்காக வந்து இருக்கிறேன் என்றும் சொன்ன போது அவர்களுக்கு அதிர்ச்சி. கிருஷ்ணன் வெளியே போய் இருக்கிறார் என்று சொன்னார்கள்.

    “அவனை டாக்டரிடம் வாடா போலாம்னு சொன்னா கத்தி கலாட்டா செஞ்சிடுறான். அவனை என்ன செய்யறதுன்னே தெரியல,” என்றார் கிருஷ்ணனின் தந்தை.

    “போன மாசம் அவள் விகடன்ல இத பத்தி ஒரு கட்டுரை போட்டிருந்தாங்க. இந்த மாதிரி காதுல சத்தம் கேட்கிறது ஒரு மனோ வியாதி. அது பேரு Hallucination-ன்னு போட்டிருந்தா. இவன் நல்லா தான் இருக்கான். ஆனா இப்படி ஒரு வியாதி இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு,” என்று சொன்னார் தாய்.

    “சரி இவன் சொல்ற மாதிரியே அந்த நிரஞ்சன் உண்மையிலே எதாவது மாய மந்திரம் செஞ்சிருப்பாரான்னு அவரையே போய் பார்த்தேன். அவங்க கம்பெனி எம்.டி கூட நிரஞ்சனைக் கூப்பிட்டு பேசினாங்க. ஒண்ணும் மாத்த முடியல்லை. கிருஷ்ணனை டாக்டர்கிட்ட கூப்பிட்டா வர மாட்டேன்கிறான். சரி யாராவது மந்திரம் தெரிஞ்சவாள்கிட்ட போலாம்னா அதுக்கும் ஒப்புக்க மாட்டேங்கறான். என்ன செய்யறதுன்னே புரியலை,” என்றார் தந்தை.

    எனது அலுவலக தொலைபேசி எண்ணை அவர்களிடம் கொடுத்து விட்டு வந்தேன். அன்று மாலையே என்னிடம் தொலைபேசினார் கிருஷ்ணன். நாளை காலை அலுவலகத்திற்கு வாங்க என்றேன்.

    “இல்ல முடியாது. வெயில் அதிகமா இருக்கும். சாயந்திரமா வர்றேன்,” என்றார் கட் அண்ட் ரைட் குரலில்.

    அதே போல மாலையில் வந்தார். கொஞ்சம் சிகப்பாய் அவர் வயதிற்கு மற்றவர்கள் எப்படி இருப்பார்களோ அப்படித் தான் இருந்தார். மன வியாதி என்று எல்லாம் அவரைப் பார்த்த பிறகு எனக்குத் தோன்றவில்லை.

    கடிதத்தில் இருந்த விஷயத்தைத் தெளிவான குரலில் மீண்டும் சொன்னார்.

    “நீங்க நிரஞ்சனை அதுக்கு அப்புறம் பார்த்து இருக்கீங்களா,” என்று கேட்டேன்.

    “ஒவ்வொரு வருஷமும் நான் சென்னைக்கு லீவிற்கு வரும் போது நிரஞ்சன் சாரைப் போய் பார்ப்பேன். அவர் அலுவலகத்திற்குப் போய் பார்ப்பேன். அவர் வீட்டிற்கும் போய் பார்ப்பேன். உன் உடம்புக்குள்ள நான் இல்லன்னு பொய் சொல்றார்.”

    “நிரஞ்சன் பாம்பேயில இல்லையா?” என்றேன்.

    “இல்ல, அவரும் சென்னையில தான் இருக்கார்,” என்றார் கிருஷணன்.

    அடுத்த நாள் நிரஞ்சனின் அலுவலகத்திற்குச் சென்றேன். நிரஞ்சனுக்கு நாற்பது வயதிற்கும். பார்த்தவுடனே பிடித்து விடுகிற மாதிரியான கேரக்டர். நான் எதற்காக வந்து இருக்கிறேன் என்று சொன்னவுடன் அவரால் நம்பவே முடியவில்லை.

    “அவன் ஒரு பைத்தியம் சார்,” என்றார் அடக்க முடியாத உணர்வோடு. பிறகு தெளிவாகி என்னைக் கேண்டினுக்கு அழைத்து சென்றார்.

    நான் அவரிடம் எனக்கு இது மன வியாதி சார்ந்த பிரச்சனை என்று தெரியும் என்று சொன்னேன். இதை டீவியில போட போறீங்களா என்று கேட்டார். அதற்கு வாய்ப்பு குறைவு தான் என்று சொன்னேன்.

    நிரஞ்சன் மற்றொரு வித்தியாசமான கதாபாத்திரம். அவரது மனைவிக்கு depression மனப்பிரச்சனை இருந்தது.

    “ஓட்டலுக்கு எல்லாரும் போவோம். திடீரென சிரிக்க ஆரம்பிச்சா சிரிச்சுக்கிட்டே இருப்பா. ஓட்டல்ல இருந்து அவளை வெளியே கூட்டிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும். அதே மாதிரி அழ ஆரம்பிச்சா விடாம அழுதுக்கிட்டே இருப்பா. தொடர்ந்து டாக்டர்கிட்ட காண்பிச்சு இப்ப சரியாயிட்டா. உங்க நிகழ்ச்சிக்கு கூட வந்து எப்படி இதுல இருந்து மீண்டோம்னு பேச ஆசைபட்டா. இந்த மாதிரி மன வியாதி உள்ளவங்க கூட வாழ்ந்து வந்ததால அவன் மேல எனக்கு அனுதாபம் கூட உண்டு. ஆனா திடீரென ஆபிஸிற்கு வந்து உங்க கால்ல வேணா விழறேன் சார், என்னை விட்டு போயிடுங்கன்னு அழுவுறான். எவ்வளவு வீடு மாத்தினாலும் கரெக்டா அட்ரஸ் கண்டுபிடிச்சு வர்றான். என்னால அவனுக்குப் பிரச்சனை இல்லை. அவனால தான் எனக்குப் பிரச்சனை. அவங்க அப்பா வேற மந்திரம் செய்யறவங்க கிட்ட போக போறதா சொன்னார். இவனைக் காப்பாத்த போய் எனக்குச் செய்வினை வைச்சுடுவாங்களோன்னு பயமா இருக்கு,” என்று சொன்னார் நிரஞ்சன்.

    இதற்கு மேல் இந்த விஷயத்தில் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. கிருஷ்ணன் அவ்வப்போது அலுவலகத்திற்கு வருவார்.

    “இது மன வியாதின்னு சொல்றாங்களே,” என்று அவரிடம் கேட்டேன்.

    “நான் எவ்வளவு தெளிவா இருக்கேன் சார். என்னை பார்த்து இப்படிச் சொல்றீங்களே,” என்று சலித்து கொண்டார் கிருஷ்ணன்.

    “எனக்குப் பேய் பிசாசு மேல எல்லாம் நம்பிக்கை இல்லை சார்,” என்று தொடர்ந்து அவரே சொன்னார்.

    “அப்ப இது எப்படி சாத்தியம்?” என்று கேட்டேன்.

    “ஏழாவது அறிவு இருக்குன்னு இப்ப கண்டுபிடிச்சு இருக்காங்க. அது மாதிரி நிரஞ்சன்கிட்ட எதோ பவர் இருக்கு. சயிண்டிஸ்ட் எல்லாம் சேர்ந்து ஆராய்ச்சி செஞ்சு தான் கண்டுபிடிக்கணும்,” என்று சொன்னார் கிருஷ்ணன்.

    “எனக்கு இந்த வாய்ஸ் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது. யாராவதுகிட்ட பேசும் போது உள்ளுக்குள்ள இந்த வாய்ஸ் எதாவது தப்பா தப்பா பேசுது. திடீரென்னு யாராவது நீ என்ன தனியா பேசிட்டு இருக்கேன்னு என்னை பாத்து சிரிக்கிறாங்க. எனக்கும் வயசாயிடுச்சு. கல்யாணம் செஞ்சுட்டு வாழ்க்கையில செட்டிலாகணும்ன்னு ஆசையிருக்காதா. ஏற்கெனவே வேலை செஞ்ச இடங்கள்ல இதனாலே பிரச்சனையாகி வருஷத்துக்கு ஒரு முறை வேலை மாத்திட்டு இருக்கேன். உனக்கு வேற யாரும் உதவி செய்ய தயாரா இல்ல. நீங்க தான் நிரஞ்சன்கிட்ட பேசணும். ப்ளீஸ் சார், நீங்க தான் என்னைக் காப்பாத்தணும்.”

    நன்றி:

    முதல் படம் – j-No
    இரண்டாவது படம் – youarea0
    மூன்றாவது படம் – mod as hell

    மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


  • டைம் இதழில் சமீபத்தில் ஒரு கட்டுரை வெளி வந்து இருந்தது. பொதுவாக வெளிநாட்டு இதழ்கள் மற்ற நாட்டு பிரச்சனைகளை சரியாக அணுகுவதில்லை என்பது தான் பல சமயம் நடப்பது. ஆனால் இந்த கட்டுரையை படித்தவுடன் என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. அந்த கட்டுரையின் சுருக்கத்தை கீழே தந்து இருக்கிறேன்.

    ஓபாமா வாய் மொழி வீரர் மட்டும் தானா?

    ஓபாமா தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் சொன்ன ஒரு முக்கிய விஷயம், தான் ஆட்சிக்கு வந்தால் வெறும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் சீதோஷ்ண மாற்றம், வறுமை, சுகாதார பிரச்சனைகள், இனவொழிப்பு செயற்பாடுகள் ஆகியவற்றிலும் கவனம் கொள்வேன் என்பதே. ஜிம்பாம்பேயில் இருந்து ராபர்ட் முகாபே பதவி விலக வேண்டும், டார்பூர் இனவொழிப்பு செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தபட வேண்டும் என அச்சமயம் ஓபாமா உரக்க சத்தமிட்டார். “உலகத்தில் எங்காவது ஒரு மூலையில் இனவொழிப்பு வேலைகள் நடந்தால், இனத்தின் பெயரால் மக்கள் மிருகத்தனமாய் வேட்டையாடப்படும் போது நாம் அமைதி காத்தால் அது நம்மை மதிப்பு இழந்தவர்களாய் மாற்றி விடும்,” என்று ஓபாமா தன் தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னார். ஆனால் இப்போது அசுர தனமாய் இலங்கையில் நடந்தேறும் இனவொழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஒபாமா அரசு சிறு சிறு அறிக்கைகள் தவிர வேறு எதுவும் செய்து விடவில்லை.

    ஓபாமா என்ன செய்து இருக்க முடியும்?

    ஓபாமா என்ன செய்து இருக்க முடியும் என்கிற பட்டியலையும் டைம் இதழ் வெளியிட்டு இருக்கிறது.

    • ஐக்கிய நாடுகள் சபையின் செக்யூரிட்டி கவுன்சில் மூலமாக அமெரிக்கா இலங்கையை போர் நிறுத்தத்திற்கு நிர்பந்தித்து இருக்கலாம். போர் பகுதியில் அவதிபடும் மக்களுக்கு உதவிகள் செய்ய மற்றவர்களுக்கு அனுமதி கிடைக்க வழி செய்து இருக்கலாம்.
    • அல்லது இந்தியாவை அமெரிக்க அரசு நிர்பந்தித்து இந்தியா மூலமாக இலங்கை ராணுவத்தின் தாக்குதல்களை நிறுத்தியிருக்கலாம்.
    • மேற்சொன்ன இரண்டும் செய்ய இயலாமல் போனால் கூட ஓபாமா அரசு இலங்கை மீது பொருளாதார தடை கொண்டு வந்து இருக்கலாம். போன வருடம் இரண்டு பில்லியன் டாலர் அளவிற்கு இரு நாடுகளிடையே வர்த்தகம் நடந்து இருக்கிறது என பார்க்கும் போது இந்த வழிமுறை வெற்றியடையும் என்று தோன்றுகிறது.
    • எதற்கும் இலங்கை ஒத்துழைக்க மறுத்தால் காங்கோ நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் நேரடி கண்காணிப்பில் போர் நடக்கும் இடத்திலே பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தபட்டது போல வன்னி பகுதியிலும் உண்டாக்கலாம்.

    அப்புறம் ‘விமர்சன மூர்த்திகளுக்காக’ டைம் இதழின் இந்த கட்டுரையிலே இருக்கும் இன்னொரு பத்தியையும் சொல்லி விடுகிறேன். ஓபாமா மேற்சொன்னவற்றை எல்லாம் செய்தால் அவர் இலங்கை அரசிற்கு எதிராகவும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறார் என்று ஆகிவிடாதா? என கேள்வி எழும். அப்படி ஆகாது என்பதே டைம் இதழின் பதில். காரணம், விடுதலைப்புலிகள் அமைப்பினை அமெரிக்க அரசு ஏற்கெனவே தடை செய்து விட்டது. அமெரிக்காவில் விடுதலைபுலிகளின் பொருளாதார நரம்புகள் முடக்கபட்டு விட்டது. விடுதலைபுலிகளை தண்டித்தாகி விட்டது. ஆனால் இப்போது இலங்கை அரசின் அராஜக இனவொழிப்பு போரினை நிறுத்த வேண்டும். ராஜபக்ஷே அரசினை தண்டிக்க வேண்டிய நேரம்.

    ஆக ஓபாமா மக்களின் மீது நியாயமான அக்கறை கொண்டவராக இருந்தால், தன் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதை உணர்ந்து பேசியவராக இருந்திருந்தால், இலங்கை பிரச்சனையில் அவரது எதிர்வினை வேறு விதமாக இருந்து இருக்கும்.

    ம்கூம்! நம்மூர் அரசியல்வாதிகளே ஏமாற்றி விட்ட நிலையில் ஓபாமா ஏமாற்றியதில் என்ன ஆச்சரியம்.

    கொசுறு:

    By the standard unanimously adopted by the United Nations General Assembly in 2005, the targeting of Tamil civilians—and the unwillingness of either side to protect them — justifies foreign intervention. The Responsibility to Protect convention obligates U.N. member-states to step in if “national authorities manifestly fail to protect their populations from genocide, war crimes, ethnic cleansing and crimes against humanity.” That’s an apt description of what’s happening in Sri Lanka – Time Magazine

    டைம் இதழில் வெளி வந்த கட்டுரை: Sri Lanka Puts Obama to the Test — And He’s Failing

    நன்றி

    ஓபாமா புகைப்படம்Steve Rhodes

    வன்னி காட்சி – http://stop-the-vanni-genocide.blogspot.com/

     


  • இரட்டை பிறவி என எவரும் உங்களிருவரையும் நினைத்திட முடியும்.
    ஆனால் நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் முதன்முறையாக சந்தித்தே
    ஐந்து நிமிடங்கள் தாம் கடந்திருக்கும் என எவரும் யூகித்துவிட முடியாது.

    அங்கங்களையும் ஒற்றுமைகளையும் அலசும் உங்கள் கண்களில்
    ஆச்சரிய ரேகைகள் வற்றியவுடன்
    எழுவது கோபமும் எரிச்சலுமாக இருக்கிறது.

    அமைதியை தவிர வேறு வார்த்தைகளில்லை உங்கள் இருவருக்கும் மத்தியில்.

    இவ்வளவு காலம் இது கனவு அல்லவா?
    பலிக்க கூடாதென ஒவ்வொரு காலையிலும் நினைத்த கனவல்லவா பலித்து விட்டது.

    இப்போது இருவரில் யார் பலியாக போகிறீர்கள்?
    கனவா? கனவு கண்டவனா?


  • விடுதலைப்புலிகளின் தற்போதைய வீழ்ச்சிக்கு பல காரணங்களை பல நிபுணர்கள் விவாதிக்கக்கூடும். ஆனால் நான் சொல்லும் காரணம் சற்று வேறு வகைப்பட்டது. கண்ணுக்கு எளிதில் புலப்படாதது. ஆழ்ந்து பார்க்கின் பின்புலத்தில் இருந்தவாறு காட்சிகளை இயக்கும் வல்லமை படைத்தது.

    தேசியத்தின் எழுச்சி

    பனிப்போர் நடந்த காலத்தில் அமெரிக்க அரசும் சோவியத் யூனியனும் உலகத்தை இரு நிலைகளாக வைத்திருக்க முயன்றன. இந்த காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் மற்றொரு நாடு அரசியல் செய்ய முயன்றது. இதன் காரணமாக உள்நாட்டு கலகங்களுக்கு வெளியுலக அங்கீகாரமும் ஆதரவும் இருந்தன.

    ஆப்கானிஸ்தானில் தாலிபானின் முன்னோடிகளை வளர்த்தது அமெரிக்கா தாம். சோவியத் யூனியனுக்கு எதிராக தாலிபானின் முன்னோடிகள் உருவானார்கள். இன்று சீனா இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் கலகக்காரர்களை வளர்த்து விடுவதும், பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் கலகக்காரர்களை ஆதரிப்பதும் இதன் நீட்சிகளே. இந்த போக்கு இன்னும் தொடர்கிறது என்றாலும் இன்று அதனை வெளிபடையாக செய்ய இயலாத நிலை தோன்றியிருக்கிறது. காரணம் பனிப்போர் ஓய்ந்த பிறகு ஒரு நாட்டு அரசாங்கத்தின் அதிகாரம் பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது. ஓர் அரசின் செயற்பாடுகளை வேறு நாடு கேள்வி கேட்டால் அது அந்த நாட்டு இறையாண்மைக்குள் தலையீடுவதாக குற்றம் சாட்டபடுகிறது.

    தேசியம் வலுப்பட்ட பிறகு தேசியத்தை கேள்வி கேட்பது மிக பெரிய குற்றமாக பாவிக்கபடுகிறது. பிரிவினைவாதிகள் மிக கொடூரமான தீவிரவாதிகளாக சித்திரிக்கபடுகிறார்கள்.

    பனிப்போரும் அதற்கு முந்தைய காலமும் கலகக்காரர்களை போராளிகளாக நாயகர்களாக கொண்டாடியது. சே குவாரா, மகாத்மா காந்தி ஆகியோர் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்கள் தான். இன்று அவர்கள் இருந்திருந்தால் அவர்களையும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி இருப்பார்கள்.

    எந்த அதிகாரமும், யாரும் தன்னை கேள்வி கேட்க கூடாது என சொல்லும் அதிகாரமும் ஓடாத தண்ணீர் போல தான். நாற்றமெடுத்து போகும். கம்யூனிசத்தை தொடர்ந்து விவாதித்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என சொன்னார் மார்க்ஸ். ஏன் எனில் ஓர் அதிகாரம் விவாதத்திற்கு உரியதாய் இல்லாமல், யாரும் கேள்வி கேட்க இயலாத வேதமாக பாவிக்கபட்டால் அதன் விளைவு சர்வதிகாரமே.

    தேசியம் இன்று பலம் பொருந்திய அதிகாரம். கலகக்காரர்கள் பயங்கரவாதிகளாய் சித்திரிக்கபடுகிறார்கள்.

    தேசியம் இத்தகைய சர்வதிகார சக்தியை பெறுவதற்கு முன்பு கலகக்காரர்களாய் இருந்தவர்கள் இன்று தேசியம் வளர்ந்த பிறகு ஒன்று அழிக்கபட்டு விட்டார்கள். அல்லது தேசியத்தை சார்ந்து மிதவாத தளத்திற்கு நகர்ந்து விட்டார்கள்.

    விடுதலைப்புலிகள் இலங்கை நாட்டின் மூன்றில் ஒரு பகுதி நிலத்தையும் மூன்றில் இரண்டு பகுதி கடலையும் தன் அதிகாரத்திற்கு கீழ் ஒரு காலத்தில் வைத்து இருந்தவர்கள். அவர்களது படை வலிமை உலகளவில் சிறந்தது என பாராட்டபட்டது. ஆனால் பாலஸ்தீனத்தில் கலகக்காரர்களுக்கு கிடைத்த நண்பர்கள் போல் விடுதலைபுலிகளுக்கு நண்பர்கள் அமையாமல் போனார்கள். அல்லது அவர்கள் அந்த நட்பு வளையத்தை பெருக்கி கொள்ள இயலாமல் இருந்து விட்டார்கள். இன்னும் மோசம் ராஜீவ் காந்தி படுகொலை போன்ற சம்பவங்களால் தங்களது சர்வதேச நட்பு வளையத்தை சேதபடுத்தி கொண்டார்கள்.

    யாசர் அராபத் பாலஸ்தீனத்தின் அதிபராக பொறுப்பேற்று கொண்ட காலத்திற்கு முன்னரே விடுதலைபுலிகள் ஒரு வேளை தங்களது ஆளுமைக்குட்பட்ட பகுதியில் தேர்தல் நடத்தி (அல்லது ஒரு தேசியத்தின் சாயலில் இயங்கி இருந்தால்) பல நாட்டு தூதுவர்களையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இருந்தால் இன்றைய நிலை வேறு மாதிரி இருந்து இருக்கலாம்.

    எந்த உள்நாட்டு கலகக்காரர்களும் வன்முறையை கையாளாமல் இருந்தது இல்லை. ஏன் பகத் சிங் கூட வன்முறையாளர் தாம். ஆனால் இன்றைய நிலையில் போர் திறனும் படைபலமும் மட்டும் கலகக்காரர்களை காப்பாற்றி விடாது. தேசியத்தின் வளர்ச்சிக்கு முன் அரசு இயந்திரத்தின் கேள்வி கேட்க முடியாத அதிகாரத்தின் முன் உலக தேசிய அரசாங்கங்களின் ஒன்றை ஒன்று தழுவி கொள்ளும் புரிதல் உணர்வுக்கு முன் இன்று கலகக்காரர்களின் பலம் ஒன்றுமில்லாததாக மாறி விட்டது.

    9/11 சம்பவத்திற்கு பிறகு ‘தீவிரவாதி,’ ‘பயங்கரவாதி’ ஆகிய வார்த்தைகள் புதிய அர்த்தத்தில் பயன்படுத்தபடுகின்றன. ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என சொற்றொடரில் உள் அர்த்தங்கள் ஆயிரமாயிரம் இருக்கின்றன. ராஜபக்க்ஷே தனது போரை ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என சொல்லுவதன் அர்த்தம் என்ன? இந்திய அரசாங்கம் ‘இலங்கை பயங்கரவாதிகள்’ என விடுதலைப்புலிகளை சொல்வதற்கான அர்த்தம் என்ன? குழந்தைகளை கட்டாயபடுத்தி தங்கள் படைகளில் சேர்க்கிறார்கள் என பிரச்சாரத்தை ஓயாமல் சொல்வதன் அர்த்தம் என்ன?

    உலகம் முழுவதும் தேசியத்தின் எழுச்சிக்கு நிகராய் தன்னை வளர்த்து கொள்ளாமல் தொடர்ந்து கலகக்காரர்களாய் இருந்ததே விடுதலைப்புலிகளின் இன்றைய வீழ்ச்சிக்கு காரணம்.

    ஓவியம்: Salvador Dali 


  • மனிதர்களும்,
    மிருங்களும்,
    பறவைகளும்,
    மனித தலையும் விலங்குகளின் உடலை கொண்டவர்களும்,
    பறவைகளின் இறக்கை கொண்டு பறக்கும் கொடிய மிருகங்களும்,
    மாயஜால மந்திரவாதிகளும்,
    சூன்யக்காரிகளும்,
    வீரத்திற்கு புகழ் பெற்ற தளபதிகளும்,
    தந்திரத்திற்கு பேர் வாங்கிய தலைவர்களும்
    போரிடுவதற்காக கூடும் இந்த போர்க்களம்
    இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இரத்த கறையோடு விளங்க போகிறது.
    நீயும் நானும் பிறப்பதற்கான முதல் வித்து
    தோன்ற போவதும் இங்கு தான்.
    நம் இனத்தின் கடைசி சாபம் உருவாகும் இடமும் இது தான்.