ஆதியில் ஒன்றுமே இல்லை

நாங்கள் சில நூறு பேர் இருந்தோம்.
ஏழெட்டு மின்னல் கீற்றுகள்
ஒரே சமயத்தில் வானத்தில் தோன்றுவதை பார்த்தோம்.
அடர் கருப்பினூடாக அந்த மின்னல் கிழிசல்கள்
அவரது வருகைக்கு முன்னுரை எழுதின.

குழந்தை அழும் சத்தம்.
அதை அதட்டும் ஒலி.
அழுகை கட்டுபடாமல் பெரும் சத்தமாகி
தொற்று போல பலருக்கும் பரவுகிறது.
ஒரு பெண் தேம்பி தேம்பி அழுகிறாள்.
முதியவர் சரிந்து தரையில் விழுகிறார்.
ஒரு கூட்டுப் பாடல் போல அழுகை ஒலி
பெரும் வடிவெடித்து வெடிக்கிறது.

ஒரு பாம்பு நெளிவது போல
எங்களுக்கு அடியில் பூமி நெளிகிறது.
ஒரு பெண் பயந்து அலறுகிறாள்.
காற்று எங்களது முகத்தில் மழைத்தூறலை வீசி அடிக்கிறது.
கண்ணிமைக்கும் நேரத்தில் அது நிகழ்ந்தது.