Tag: tamil poem

  • பனை மரங்கள் ஆடி ஓய்ந்த
    சூறாவளி நாளுக்கு அடுத்த தினம்.

    இப்போது தான் எல்லையருகே வந்து இருக்கிறேன்.
    சூறாவளியை போர்வையாய் போர்த்தி
    எல்லை தாண்டலாம் என்கிற கனவு
    இனி பலிக்காது.

    துப்பாக்கி ஏந்தி ஒரு காக்கி கூட்டம்
    எறும்பு வரிசையாய் தூரத்தில் தெரிகிறது.

    ஆத்மாக்களை பிழிந்து உருவாக்கிய
    முறுக்கு கம்பிகள்
    இரத்த வாடையுடன் நீளமான கோடு கிழித்து
    காத்து இருக்கின்றன.
    வேலியினூடாக
    மின்சார தெரிப்பு மின்னலாய் நெருப்பினை
    துப்பி துப்பி தயாராகி விட்டன.

    நான் ஓட வேண்டும்.
    அவகாசமில்லை.

    மழை தெளித்த வீட்டின் முகப்பில்
    தவளைகளின் பெருங்குரல்களுக்கு பின்னே
    தன் அழுகையை ஓளித்து வைத்து
    காத்து இருப்பாள் என் மனைவி
    இறந்து போன மகளின் படத்தோடு.


  • வெடி மருந்து ஆறாய் ஓடுகிறது.
    தீக்குச்சிகள் அதில் நனைந்து அணைந்து போகின்றன.
    கரையோரம் பெருங்கூட்டம்.
    அழிவு பெருங்கணத்தை காண வியர்வை வாசத்தை பொருட்படுத்தாது காத்திருக்கிறார்கள்.
    சிலர் கூட்டநெரிசலால் கால் தவறி வெடிமருந்தில் விழுந்து புதைந்து போகிறார்கள்.
    யாரேனும் விழும் போதெல்லாம் ஒரு சாட்டையை விசிறினாற் போல சத்தம்.
    அந்த சத்தம் ஓலிக்கும் போதெல்லாம் தொடங்கும் பெரும் ஆரவாரமும் கேலி சிரிப்பு சத்தமும்.
    முரட்டு யானைகள் போன்ற பெண்கள் கூட்டமொன்றில் அரைபட்டு கரைபக்கம் வந்து கொண்டிருக்கிறேன்.
    இன்றாவது கடைசி நாளாக இருக்க வேண்டும்.


  • இருள் கிழிந்து ஒரு நட்சத்திரம் விழுந்தாற் போல

    விழுந்த விண்கல்லை கண்டு

    அவள் கண் மூடி தனது வேண்டுதலை கடவுளுக்கு சொன்னாள்.

    கண் திறந்த போது இருளில் அது மூழ்கி போயிருந்தது.


  • அன்று ஜன்னல்கள் அடைக்கபட்டிருந்தன.
    இருளை அறையிலிருந்து வெளியே விடாதபடி
    துக்க வெப்பத்தில் மிதந்து கொண்டிருந்தாள் அவள்.

    கடந்த கால காட்சிகளை தள்ள தள்ள
    அவை திரும்ப மேல் எழும்பி பரிகாசம் செய்தன.

    சுற்றி இறைந்து கிடந்த காதல் கடிதங்களில் இருந்து
    உயிரற்ற வார்த்தைகள் உதிர்ந்து கொண்டே இருந்தன
    கண்ணீரை போல.

    ‘இது ஏற்கெனவே ஒத்திகை பார்த்து
    காத்திருந்த தருணம் தான்,’ என உறைத்த போது
    விம்மியெழுந்த அவளது அழுகை
    மலைகளை தாண்டி அவனுக்கு எட்டியது.


  • என் கவிதையின் கதாநாயகி
    இன்று என் கனவில் வந்தாள். 
    என்னை கொல்லும் உக்கிரத்தோடு வந்தவள்
    என்னை கேள்வி கேட்டு நேரத்தை வீண்டிக்க விரும்பவில்லை.
    அழுவதற்கும் அவள் தயாராக இல்லை.
    நான் அணிவித்திருந்த வெள்ளை உடையை துறந்து
    கறுப்பு ஜீன்ஸ் பேண்டில் இருந்தவளை
    முதலில் அடையாளமே தெரியவில்லை.

    என்னை கொல்வதற்கு ஆயுதங்களை கொண்டு வரவில்லை.
    கண்களாலே கொல்ல முடியுமென நினைத்தாள் போலும்.

    எனது குற்றவுணர்வை சொன்னேன்.
    மன்னிப்பை கோரினேன்.
    கருணை காட்ட அவள் தயாராக இல்லை.
    என் வலது கையின் கட்டை விரலை மட்டும்
    கடித்து எடுத்து கொண்டு
    இரத்தம் வழியும் உதட்டில் புன்னகையோடு
    மீண்டும் மறைந்து போனாள்.


  • துப்பாக்கி தோட்டாக்கள் வெடித்து எங்களிடையே நுழைவது
    மெல்லிய கம்பிகள் ஈட்டிகளாய் எறியபடுவது போல தோற்றம்.
    செவி தன் திறனை இழந்து விட்டது.
    கம்பிகள் கால்களை நோக்கி தான் வருகின்றன.
    ஒளியை கிளப்பி போவதும்
    தரையில் பட்டு சிதறுவதும்
    எல்லாரும் கால்களை தூக்கி தப்பிக்க நினைப்பதும்
    யாருடைய இரத்தமோ யார் யாரோ மீதெல்லாம் பரவி கிடப்பதும்…!
    யார் யார் சாக போகிறார்கள்?
    நானில்லை.
    நானில்லை.
    காற்றடித்து ஒதுங்கும் உதிர்ந்த இலைகள் போல
    நான் சாதுரியமாக ஒதுங்கி கொண்டிருக்கிறேன்.
    கண்கள் இருளும் போது தான்
    ஏன் எனக்கு எப்போதும் இப்படி நடக்கிறது என வருந்துகிறேன்.
    ஆனால் வலியே இல்லை.
    இறந்து விட்டேனா?


  • பாதி சொம்பு அரிசி எடுக்க
    அடுக்கி வைத்த மூட்டைகளில்
    மேல் மூட்டையை பிரிக்கவும்
    கொட்டி விழுந்து தரையில் பரவிய அரிசி போல்
    ஒரு நினைவு கோர்த்து இழுத்து வருகிறது பலவற்றை.


  • மேகங்கள் கர்ஜித்து மழை ஊற்ற தயாரானது போல
    புயல் கிளம்பியது போல
    போலீஸ்காரர்கள் ஓடி வரவும்
    சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள் அவசரமாய் ஓட எத்தனிக்க
    பிளாட்பார்ம் வியாபாரிகள் பையை சுருட்டி தப்பிக்க முயன்றார்கள்.

    போர்களமாய் சாலை பரபரப்பானது.
    ஒற்றை செருப்புகள் நிறைந்திருக்க,
    லத்தி உடலில் விழும் சத்தமும்,
    வலியில் சிலர் கத்துவதும்,
    பீதியுற்ற பார்வைகளும் அங்கு நிறைந்திருக்கின்றன.

    சைக்கிள் ரிக்ஷாவில் இருந்து அவன் எழுந்திருக்க முயலும் போது
    அது கவிழ்ந்தது.
    கால் சுளுக்கி கொண்டது.
    அவன் எழுந்திருக்க முயலும் போதே ஒல்லியாய் இருந்த ஒரு போலீஸ்காரன்
    உயர்த்தபட்ட லத்தியுடன் ஓடி வந்தான்.
    சர்வமும் ஒடுங்கி கைகளை தலைக்கு மேலே வைத்து அவன் சுருண்டான்.

    பணிதலை கண்ட லத்தி சந்தோஷமாய் கீழே இறங்கும் போது
    மிருகத்தனமான அலறலுடன் குறுக்கே வந்தாள் அந்த ரிக்ஷாக்காரனின் மனைவி.

    கலைந்த தலைமுடி,
    விரித்த கைகள்,
    திறந்த மார்புகள்,
    மிருகத்தனமான அலறல்,
    பார்வையில் தாங்க முடியா வீரியம்.

    விழுந்து கிடந்த கணவனுக்கு
    கேடயமாக தன் உடலை பரப்பி
    இனம் புரியா மிருக அலறலுடன் நிற்கும் அந்த மனைவியை கண்டு
    லத்தி திகைத்தது,
    பயந்தது,
    குழம்பியது,
    வெட்கமுற்றது,
    பின்வாங்கியது.


  • முதலாளி தன் மனைவிக்கு
    வாங்கி கொடுத்த முத்துச்சரத்தில்
    உதிர வாசம்!

    உதிரம் திருடப்பட்டவர்கள்
    மாலை நேரம் வீடு திரும்புகையில்,
    கதவை திறக்கும் போது படியும்
    உடற்களைப்புடனான மன சலிப்பு!

    அஞ்சால் அலுப்பு மருந்தினை
    உட் கொண்டு
    களைப்பையும் சலிப்பையும்
    டாஸ்மாக்கில் ஊற்றி
    வாழ்வின் அபத்தத்தை பாடுவோம், வா!

    நம் மனைவிமார்களின் கண்ணீரை
    அவர்களது கண்ணீராலே குளிப்பாட்டுவோம்.
    அவர்களிடமாவது நாம் முதலாளிகளாய் இருப்போம்!


  • பைக்கின் உறுமல் ஒலியை காற்றில் மிதக்க விட்டு
    அவன் என்னிடமிருந்து விடை பெற்று சென்று
    சில கணங்கள் தாம் கடந்திருக்கும்.

    கத்தியை கூர் தீட்டுவது போல ஒரு சத்தம்.
    அவன் சென்ற திசையில்
    யாரோ பைக்கிலிருந்து தூக்கியெறியபடுவதை பார்த்தேன்.
    அதற்கு பிறகு நான் திரும்பவே இல்லை.
    எதிர் திசையில் நடந்து கொண்டே இருந்தேன்.

    முதிர் மாலை நேரத்து இருள்.
    யார் என தெளிவில்லை.
    அவனாக இருக்குமோ?

    துப்பட்டாவை இழுத்து போர்த்தி
    வீட்டை நோக்கி நடந்தேன்.
    ஏற்கெனவே தாமதமாகி விட்டது.
    தந்தை திட்டுவார்.

    விபத்தின் தாக்கம் ஓர் அலை போல என்னை கடந்து சென்றது.
    சிலர் அந்த பக்கம் ஓடினார்கள்.
    சிலர் வெறித்தபடி பார்த்து கொண்டிருந்தார்கள்.

    அவனாக இருக்காது.
    வேறு யாரோ.
    யாரோ ஒரு குடிகாரன்.

    அவனாக இருந்தால் அவனுக்கு இப்போது உதவி தேவைபடும் அல்லவா?
    அவனுக்கு விபத்து நேர்ந்ததை நான் பார்த்தேன் என யாருக்குமே தெரியாது.
    அவனுக்கே தெரியாது.

    இயந்திரங்களின் பிடியில் சிக்கிய பிரதான வீதிக்கு வந்த போது
    அந்த விபத்து நடந்ததற்கான அறிகுறியே இல்லை.…மேலும் வாசிக்க