Tag: tamil poem

  • ஆயிரம் முட்களாய் குளிர்.
    சுருண்டு கிடக்கும் கிழவியிடமிருந்து
    பிளாட்பார்ம் எங்கும் பரவுகிறது நடுக்கம்.
    அவளது தனிமையை அவ்வபோது தின்று போகின்றன
    சாலை பெருவாகனங்கள்.
    கருவிழிக்குள் எறும்புகள் பாதை அமைக்கும் வரை காத்திருக்கிறது இருள்.

    பிறகு ஒரு இரவு
    குளிரையும் இருளையும் மாண்டவளுக்காக அங்கே படையல் போட்டு
    உட்கார்ந்திருக்கிறாள் மற்றொரு பிளாட்பார்ம் கிழவி.


  • பாம்புகள்!
    தடித்தவை! இளைத்தவை! பெருந்தலை!
    நீண்டவை! குறுகியவை!
    சில படமெடுக்கும்! சில சுருங்கி கிடக்கும்!
    ஒன்றன் மேல் ஒன்றாய் நெளிந்து கொண்டு இருக்கும்
    ஆயிரக்கணக்கான சர்ப்பங்கள்
    சிலந்தி வலைப்பின்னலாய்
    பச்சைவெளியை கறுப்பாக்கி கொண்டிருக்கின்றன.

    உச்சியில் ஆணவமாய் தாண்டவமாடும்
    ஐந்து தலையானின் சீறல்
    மிச்சமிருக்கும் தாவரங்களையும் வாடச் செய்கின்றன.

    வானத்தை சூழ்கின்றன செந்நிற மேகங்கள்.
    நிலமென்றும் மலையென்றும் பாராது
    நடுநடுங்க செய்கிறது
    மெல்லியதாய் படமெடுத்து பின் விஸ்வரூபமெடுக்கும்
    நிலநடுக்கம்.

    விட்டு விட்டு பெய்த மழையால்
    உருவாகிறது ஒரு பெருவெள்ளம்.

    ஐந்து தலையானில் தொடங்கி
    ஓரே சர்ப்பமாய் பின்னி நிற்கின்றன
    மற்ற ஆயிரக்கணக்கான பாம்புகள்.

    ஒரு மின்னல் வெட்டி முறிந்து போனது.


  • எவ்வளவோ முறை தவிர்க்க முயன்றாலும்
    இன்று மீண்டும்
    அந்த விழிகளை பார்த்து விட்டேன்.

    சுயத்தை மறந்து
    தரையோடு தரையாய்
    கரைந்தாற் போல பரிதவிப்பு.

    தனது அடுத்த நொடி
    இன்னொருவன் கைகளால் எழுதபட போகிறதென பயம்.

    சுருண்டு பொசுங்கி புள்ளியாய்,
    கடைசி எழுத்திற்குள்
    ஒளிந்திருக்கும் இயலாமை.

    கண்களால் மன்றாடுவதை தவிர
    உடலிலும் உயிரிலும்
    வேறு செயலில்லை.

    கூர்மையானதொரு ஆயுதம்
    என்னுள் ஆழமாய் எங்கோ எதையோ அறுக்கிறது.


  • நாங்கள் சில நூறு பேர் இருந்தோம்.
    ஏழெட்டு மின்னல் கீற்றுகள்
    ஒரே சமயத்தில் வானத்தில் தோன்றுவதை பார்த்தோம்.
    அடர் கருப்பினூடாக அந்த மின்னல் கிழிசல்கள்
    அவரது வருகைக்கு முன்னுரை எழுதின.

    குழந்தை அழும் சத்தம்.
    அதை அதட்டும் ஒலி.
    அழுகை கட்டுபடாமல் பெரும் சத்தமாகி
    தொற்று போல பலருக்கும் பரவுகிறது.
    ஒரு பெண் தேம்பி தேம்பி அழுகிறாள்.
    முதியவர் சரிந்து தரையில் விழுகிறார்.
    ஒரு கூட்டுப் பாடல் போல அழுகை ஒலி
    பெரும் வடிவெடித்து வெடிக்கிறது.

    ஒரு பாம்பு நெளிவது போல
    எங்களுக்கு அடியில் பூமி நெளிகிறது.
    ஒரு பெண் பயந்து அலறுகிறாள்.
    காற்று எங்களது முகத்தில் மழைத்தூறலை வீசி அடிக்கிறது.
    கண்ணிமைக்கும் நேரத்தில் அது நிகழ்ந்தது.


  • பக்கத்தில் படுத்திருக்கும் பெண்
    யாரென தெரியவில்லை.
    இருளை அகற்ற சுவிட்ச்
    எங்கிருக்கிறது என புரியவில்லை.
    இது என் வீடுமில்லை.
    இங்கு இதற்கு முன் வந்ததாய்
    ஞாபகமும் இல்லை. 

    என் துணிகளை தேடி
    தரையில் கைகளால் துளாவிய போது
    மீண்டும் வந்தது
    மண்டைக்குள் அந்த நெளியும் புழு.

    கண்கள் இருட்டின.
    காதிலிருந்து இரத்தம் வழிந்தது.
    அந்த புழு பெருத்து கொண்டு இருக்கிறது.
    உடலெங்கும் வலி வியாபித்தது.
    விஷ முற்கள் கடகடவென
    உடலெங்கும் முளைக்க தொடங்குகின்றன.

    முதுகு தண்டினில்
    மற்றொரு புழு இப்போது நகர தொடங்குகிறது.
    தரையில் படுத்து துடிக்கிறேன்.
    எழுந்து நின்றால் சற்று வலி குறையும் என
    எழுந்து நிற்கிறேன்.

    எதையும் அறியாமல் நிர்வாணமாய்
    தூங்கி கொண்டிருக்கும் அந்த பெண் யார் என
    இப்போதும் புலப்படவில்லை.

    காற்று தான் வலியை கொண்டு வருகிறதா?
    ஜன்னலில் எட்டி பார்த்தேன்.
    நான் நிற்பது கட்டாயம்
    பத்து அல்லது பதினைந்தாவது மாடியாவது இருக்கும்.
    இது கட்டாயம் என்னுடைய நகரமல்ல.…மேலும் வாசிக்க


  • எதிர்படும் ஒவ்வொருவரின் கண்களிலும்
    ஒளிந்திருக்கிறது
    கார்முகிலென சோகம்.

    புன்னகையால் அவர்கள் தங்களது துயரத்தை
    மறைக்க முயல்கிறார்கள்.
    எனினும் அது எப்போதும் சாத்தியபடுவதில்லை.

    வெளிவரும் அரிய கணங்களில்
    ஒருவரது சோகம்
    மற்றவரையும் தொற்றி கொள்கிறது.
    அதனோடு குண்டூசிகளாய் குத்துகின்றன
    ஏன் ஒளித்து வைக்கிறீர்கள் என்கிற
    துன்பம்.


  • கோலி குண்டுகளாய் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள்
    உருண்டோடும் பரந்த நகரத்து சாலை.
    எப்போதும் போல  இப்போதும் டிராபிக் ஜாம்.

    இந்த முறை காரணம் ஒரு கிழவி.
    பொறுமையில்லாமல் ஹாரண் ஓலி அலறுகிறது.
    சாலையை கடக்க வந்த கிழவி சாலையிலே அமர்ந்து விட்டாள்.
    பல பேர் கத்தி கொண்டிருக்கிறார்கள்.

    பைத்தியமா அவள்?

    சாலையில் என்னவோ செய்து கொண்டிருக்கிறாள்.
    அவளருகே அறுந்து போன மஞ்சள் பை.
    சாலையில் பையிலிருந்து கொட்டிய அரிசி.
    வசையொலி கூடியபடி இருக்கிறது.
    அரிசியை அள்ளி மீண்டும் பையினுள் திணித்து விடும்
    முனைப்பில் இருக்கிறாள் கிழவி.


  • மழை தூறல் என்னை பதைபதைப்பிற்கு உள்ளாக்குகிறது.
    சட்டை பையில் இருக்கும் காகித தாளினை
    கைகளால் காப்பாற்றுவதற்கு யத்தனிக்கிறேன்.

    என்னை பயமுறுத்துவதற்காகவே
    மழை சடசடவென பெய்வதும் பிறகு நிதானிப்பதுமாய்
    விகாரமாய் சிரிக்கிறது.

    தைல மரக்காட்டில் தன்னந்தனியாய்
    பயத்தோடு நடக்கும் போது
    பின்னால் யாரோ தொடர்வது போல
    ஒரு நிழல் என் மனக்கண்ணில் என்னை தொடர்கிறது.

    இருட்டுவதற்கு முன் இந்த காகித தாள்
    அந்த நகரத்தில் கை மாற வேண்டும்.
    இல்லையெனில் – அதை நினைத்தே பார்க்க முடியாது.
    அந்த எண்ணமே என் உடலை நடுநடுங்க வைக்கிறது.

    திசையினை அனுமானித்து
    நகரத்தின் பக்கமாய்
    எனது நடையினை வேகபடுத்துகிறேன்.
    கைகள் அன்னிச்சையாக சட்டைபையினை தடவுகின்றன.

    மழைநீர் அந்த காகிதத்தில்
    மையினை கரைத்து
    எழுத்துகளை அழித்து இருக்குமோ?

    அந்த எண்ணம் மனதில் கலக்கத்தை உண்டாக்கும்
    அதே நேரம்
    அருகாமையில் தாங்கவியலா துர்வாசனை.
    புதர்களுக்கு பக்கத்தில் ஒரு நாய் செத்து கிடக்கிறது.
    ஒரு மணி நேரத்திற்கு முன் நான் பார்த்த அதே காட்சி.…மேலும் வாசிக்க


  • பெருவெள்ளமாய் மழை பொழுதுகள்
    நம்மை ஆட்கொண்டிருக்கும் நாட்கள் இவை.

    எனது மூக்கிலிருந்து
    மீண்டும் இரத்தம் சொட்ட தொடங்கி விட்டது.
    கை நகங்களின் நிறம்
    மாறி கொண்டிருப்பதை பார்க்கிறேன்.
    பனி போர்த்திய கார் கண்ணாடி போல
    எனது பார்வை திறன் மங்கி கொண்டிருக்கிறது.

    சிறு செயல்கள் கூட
    மிக மெல்ல மிக மெதுவாக நடப்பதாக பிரமை.
    பெரும்பாலான சமயம் கண்களை திறந்தபடி
    நான் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.
    கனவுகளிலும் இப்போது அது வந்து கொண்டிருக்கிறது.
    ஒவ்வொரு முறையும்
    மனம் மீண்டும் யதார்த்திற்கு திரும்பும் போது
    அதை பார்த்து கொள்கிறேன்.
    கறுப்பு பளபளப்பு மட்டும் தெரிகிறது.
    அசைவுகளே இல்லை வழக்கம் போல.

    எப்போதும் தீண்டும் என தெரியாது
    ஆனால் அவ்வபோது என்னை தீண்டி கொண்டே இருக்கிறது.

    மரணத்தை போல அசைவுற்று இருக்கும் அதனை
    பார்த்து கொண்டே இருக்கிறேன்.


  • வறுத்தாலும் சரி,
    கரித்து கொட்டினாலும் சரி,
    நக கண்களை பிடுங்கினாலும் சரி,
    உண்மை கசப்பானது தான்.

    நாம் வேறு மாதிரி தான் நினைத்து இருந்தோம்.
    நம்முடைய கடைசி ஆசை அதுவாக தான் இருந்தது.
    நம்முடைய துன்பங்களை சுமக்கும் போதெல்லாம்
    அது தான் நம்முடைய உந்து சக்தியாக இருந்தது.

    ஆனால் உண்மை அதுவல்ல.
    யதாரத்தம் வேறு மாதிரியாக தான் இருக்கிறது.
    அவர்களுக்கு நம்மை பற்றி உண்மையிலே எந்த அக்கறையும் கிடையாது.

    நம்முடைய துன்பங்கள் ஹீரோக்களின் அவஸ்தை அல்ல.
    நம்முடைய அலறல் வீரத்தின் வெளிபாடும் அல்ல.
    நாம் கடைசியாய் வீழும் போது நமக்கான அழக்குரல் உண்மையில் நமது கற்பனை தான்.
    உன்னிப்பாய் கவனித்தால்
    அது சர்க்கஸ் முடியும் போது தோன்றும் கரகோஷம் என புரிந்து கொள்ளலாம்.

    அடித்தாலும் சரி
    நடித்தாலும் சரி
    உண்மை கசப்பானது தான்.
    மரணம் இனிப்பானது என எவன் சொன்னான்.
    இறப்பிற்கு பிறகு நம்மை கொண்டாடுவார்கள் என எவன் சொன்னான்.

    அவர்களுக்கு நம்மை பற்றி உண்மையிலே எந்த அக்கறையும் கிடையாது.