Category: கவிதைகள்

  • இந்த ஊரின் காவல் தெய்வமே!

    இன்னல் நேர்ந்தால் நோய் தீர்ப்பவளே!

    அந்தக் தவறைச் செய்தது நானே!

    அகத்திலே குற்ற உணர்வு மிகுந்திருந்தேன்!

    குளிர்ந்த ஏரிநீரில் மூச்சடக்கி மூழ்கி

    உன் பார்வையில் இருந்து தப்பஎண்ணினேன்!

    பாய்ந்த ஒரு வெண்ணொளி நீரைக்

    கிழித்து ஏரியைப் பற்றி எரித்தது!


  • தெரு ஒன்று
        கட்டிடங்களின் காலடியில்.
    விறுவிறுவென நடந்தபடி
        இருக்கிறார்கள் மனிதர்கள்
    எதையோ யோசித்தபடி
        எங்கோ வெறித்தபடி.
    
    தன்னைமறந்து கூட்டத்தினைப் 
        பார்க்கும் நாய்கள்.
    விண்ணில் அலட்சியபார்வை
        பார்த்துநகரும் காகங்கள்.
    மண்துகள்கள் பறக்கின்றன
        தார் ரோட்டில்.
    
    அனல் காற்றோடு
        பெருகுகிறது வெக்கை.
    வேர்வை மிகுந்தோடுகிறது
        ஒவ்வொருவர் மீதும்.
    வெண் மஞ்சளாய்
        மங்குகிறது காட்சி.
    
    

  • பாதி எழுதி
    வைத்து விட்டு போகும்
    கவிதையின் மிச்ச வரிகள்
    நான் திரும்பி வருகையில்
    நிரம்பி இருக்கும்.


  • ஒரு கோப்பை தேநீர்,
    துளிர்த்து தொடங்கும் காமம்,
    வானத்தில் பரவி கிடக்கும் மரக்கிளைகள்,
    என்றோ வாய்க்கிற மாடி தருணம்,
    பொதுவில் பார்க்கிற அந்நியர்கள் என
    எல்லாம் அமிழ்ந்து போகிறது
    மனதினுள் எப்போதும்
    பெய்து கொண்டிருக்கும் மழையில்.


  • உங்கள் கண்காணிப்பில்
    நல்ல மனிதனாக வாழ்வதை விட
    சுதந்திரமாக
    கெட்ட மனிதனாக மாறி விட்டு போகிறேன்!
    அட போங்க அப்பால!


  • கவிதை என்பது
    கவிதை புத்தகங்களில் மட்டும்;
    ஓவியம் என்பது
    கலைக்கூடங்களில் மட்டும்
    இருக்குமென நீங்கள் நினைத்தால்
    உங்களுக்கு
    என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
    பின் குறிப்பு: இது கவிதையல்ல.


  • நடுங்கும் மெலிந்த கால்களில்
    எப்போதும்
    கொலுசுவின் பல்வரிசையில்
    பொய் முத்துகள் சில
    காணாமல் போயிருக்கும்.

    தேய்ந்த செருப்பினுள்
    ஒளிந்திருக்கும்
    கருத்த பாதத்தில்
    நகங்கள்
    ரத்த சோகையில்
    வெளிறி போயிருக்கும்.

    வண்ண நிறத்தில்
    செருப்பு அணிந்திருக்கும்
    யுவதியின் காலில்
    நெயில் பாலீஸ்
    பாதி மறைந்து மீதி பளிச்சிடும்.

    செருப்பு அணியாதவனின்
    கால் நகங்கள்
    அடிப்பட்டு
    உள்நகம் முளைத்து
    பெருத்து போயிருக்கும்.

    எப்போதும்
    இருபத்தி ஐந்து ரூபாய்
    பேட்டா செருப்பு
    மறைக்கும்
    பாத வெடிப்புகளை.

    கதைகள் சொல்கின்றன
    கால்கள்.
    சிதறிய முத்துகள் போல
    வழியெங்கும் கால்களின் தடங்கள்.


  • எங்கள் வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்தால்
    சாலைக்கு அப்பால்
    சுவரில் பிரகாசிக்கும்
    ஊரில் உள்ள ஒற்றை தியேட்டரின்
    சினிமா போஸ்டர்.

    முதலில் வண்ணங்கள் ஜொலிக்கும்.
    சில மணி நேரங்களில்
    வரிகளும் கசங்கல்களும்
    மனப்பாடமாகும்.

    வண்ணம் மனதில் தோய்ந்து தோய்ந்து
    அடுத்த போஸ்டர் எப்போது எப்போது என
    மனம் அலைபாய தொடங்கும்.
    யுகங்களாய் காத்திருத்தல் தொடரும்.
    என்னென்ன வண்ணங்கள்
    என்னென்ன முகங்கள்
    என கற்பனைகள் விரியும்.

    ஒரு நாள் பளிச்சென அடுத்த போஸ்டர்
    பிரகாசிக்க தொடங்கும்.


  • ஓடி கொண்டிருக்கிறேன்
    தூரத்தில்
    மரங்களால் ஆன குகைக்குள்
    தார் சாலையில்
    பயணிக்கும்
    பேருந்தினை நோக்கி.

    என் கணவர் விழித்து கொள்ளலாம்.
    குழந்தை அழது அவர் விழித்து கொள்ளக்கூடும்.
    பக்கத்து இருக்கையில் இருப்பவர்கள்
    நான் இல்லாததை அவருக்குச் சொல்லக்கூடும்.
    இதோ என்னை நோக்கி
    திரும்பும் என நினைத்தபடி
    கரும்புகையை நோக்கி
    ஓடுகிறேன்.

    பதின்பருவத்திற்குப் பிறகு
    இப்படி ஓடியதாய்
    எனக்கு நினைவே இல்லை.

    நின்றால்
    அப்படியே ஒடிந்து விடுவேன்
    என்பதாய்
    அத்தனை சக்தியையும்
    விரயமாக்கி
    ஓடி கொண்டிருக்கிறேன்.

    என்னையும்
    புகையினையும்
    மறந்து
    சிறிதாகி கொண்டே
    இதோ மறைந்து விட
    போகிறது
    அந்த வாகனம்.


  • முட்கள் முளைப்பது

    முள்செடிக்கும் வலிக்கும் என்பது

    என் உடலில் முட்கள் முளைத்த போது தான்

    புரிந்தது.

    முட்செடியாய் இருப்பது

    அதற்கு விருப்பமில்லை என்பதும்.