Category: கவிதைகள்

  • பெரிய தூங்குமூஞ்சி மரம்.
    கவனித்து பார்த்தால் தான் தெரியும்
    மரத்தில் திருடன் ஒருவன்
    கட்டப்பட்டு இருப்பது.

    மரத்தின் நிறமாய்
    மாறி விட்டன
    கயிறும்
    திருடனும்.

    பெருத்த மிருகம்
    தின்று
    சோர்ந்து
    தூங்குவது போல்
    உறங்குகிறது
    மரம்.

    கண்கள் மூடியிருக்கிறான்
    திருடன்.

    வலியில்லை,
    உணர்வில்லை,
    உணர்ச்சியுமில்லை,
    மரத்தோடு மரமாய்.

    தரையில் இருந்து
    மரத்திற்குச் செல்லும்
    எறும்புகள்
    அவன் மேல்
    ஊர்ந்து கடக்கின்றன.

    மேகங்கள் வேகமாய் நகர்கின்றன.
    சூரியனின் கண்கள்
    அவனை உற்று பார்த்தபடி.

    அணில் ஒன்று
    அவன் கால் மேல் ஏறி
    கற்களைத் தாவி
    எங்கோ ஓடிற்று.

    பரிதாபத்தோடு
    ஒரு வயதான மூதாட்டி
    அவன் மேல் ஊற்றிய நீர்
    மரத்தினை உலுக்கிற்று.

    மரம் விழித்தது.
    கிளைகள் விம்மி சரிந்தன.
    பறவைகள்
    பயந்து
    மரத்திலிருந்து
    இறக்கைகள் படபடக்க
    காற்றில் குதித்தன.
    பதற்றத்தோடு
    நெஞ்சு பிசையும் பயத்தோடு
    மரம்
    ஊளையிட்டது
    அமைதியாக.


  • பாதி ஐயம்.
    பாதி பரிதவிப்பு.
    அவனைக் கடைசியில்
    ஒரு ரயில் நிலையத்தில் சந்தித்தேன்.

    வெள்ளைச் சட்டையில்
    மெல்லிய சிகப்பு கோடுகள்.
    கறுப்பு என்று சொல்லி விடலாம்
    அவன் அணிந்திருந்த கருநீல பேண்ட்டை.

    கொஞ்சமும் கசங்காத உடை.
    சிதறாத முடி.
    பளிச்சென்ற முகம்.
    எதோ உயர் அதிகாரி தோற்றம்.

    வேறொரு நாளாக இருந்தால்
    கிண்டலும் எரிச்சலும்
    இருந்திருக்க கூடும்.
    இன்று
    பதற்றம் மட்டுமே.

    எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல்
    செயற்கையாக புன்னகைத்து
    தேவையில்லாமல்
    செல்போனைத் துளாவி கொண்டிருக்கிறேன்.

    என்றும் போல
    இன்றும் கூட்டமாய் இருக்கிறது
    ரயில் நிலையம்.

    நகரத்திற்குள்ளாக
    இரண்டடுக்கு மாடி உயர
    பாலத்தில்
    சுற்றி சுற்றி வரும்
    ரயில்கள்.

    எத்தனையோ முகங்கள்.
    எத்தனையோ உணர்ச்சிகள்.
    அத்தனையும் வாரி போட்டு கொண்டிருக்கிறது
    ரயில்.

    “வா பயணித்தபடி பேசுவோம்.”

    அவன் ஏறிய பின்னர்
    தயங்கி தயங்கி
    இறுதியில்
    ரயில் பெட்டியின் கதவு மூடப்படும் முன்பு
    குதித்து ஏறினேன்.

    நகரம் கூட அழகாய் இருந்தது
    ஜன்னல்களில்.
    மக்கள் ஒரே விதமான நாற்றத்துடன்
    ஜன்னலில் இருந்து குதித்து
    தற்கொலைச் செய்து கொள்ள போகிறவர்கள் போன்ற
    முகத்துடன் காத்திருந்தார்கள்
    அவரவர் இறங்க வேண்டிய நிலையத்திற்காக.…மேலும் வாசிக்க


  • பாரம் தரும் வலி.
    கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு தரும் சோகம்.
    பல நூறு பார்வைகள் தாக்குவதால் வரும் தடுமாற்றம்.
    இது என்னுடைய சிலுவையல்ல என்று சொல்லியபடி
    சுமக்கிறேன்
    என்னுடைய சிலுவையை.


  • இலைகளின் சலசலப்பு போல
    சில பேச்சரவம்.
    மற்றப்படி
    நிரம்பி நின்றிருக்கும் நீர்நிலைப் போல
    பேரமைதி.

    எங்கோ உருப்பெற்று வழிந்தோடி
    கரைந்து போகிறது
    எதோவொரு வாகனத்தின் ஒலி.

    ஜன்னலுக்கு வெளியே
    நிரம்பி கொண்டிருக்கிறது
    மஞ்சள் வெயில்.

    விட்டெறிந்த கல்லாய்
    எல்லாவற்றையும் கலைத்து அழுகிறது
    பள்ளிக்கூட மணி.

    காலடிச்சப்தங்களுக்காக
    துழாவுகிறது
    செவிப் புலன்.

    உருக தொடங்கி
    வளைகிறது பெஞ்ச்.


  •     – 01 –

    பெல்ட் உயரும் போது
    அது
    நரியின் வால்.
    தயாராகும் போது
    அது
    பயந்து உறைந்து
    அடுத்த நகர்தலில் தீண்டுவதற்குத் தயாராகும்
    பாம்பு.

    காற்றிலே ஓர் இசை.
    என்னை தொடும் போது
    அது ஓர் ஒலி.
    பிறகு நரம்புகள் விழித்தெழும் வலி.
    உடலெங்கும் கதவுகள் திறக்கும்.
    ஒரு கணம்
    கண்கள் இருண்டு
    பிறகு விழிக்கும் போது
    நெருப்பு ஜுவாலை ஒன்று
    உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
    பரவி சென்றிருக்கும்.
    சிந்தனைகள் இல்லாது
    உடலும் மனமும்
    ஒருங்கே
    வலியில் திளைக்கும்.

        – 02 –

    ஒரே ஓர் பெல்ட் அடி
    என்னை
    அடி பணிய வைத்து விடும்.
    ஆனாலும்
    எனக்கு
    நான்கைந்து கொடுத்தால் ஒழிய
    உன்னால் நிறுத்த முடியாது.

    இங்கே
    அடி வாங்கும் நான் முக்கியமல்ல
    உனக்கு.
    உன் செய்கையே முக்கியம்.

    சுருண்டுப் பிறகு அதிவேகமாய் அது
    காற்றைக் கிழித்து கொண்டு
    விஸ்வரூபம் எடுக்கும் சமயம்
    உன் முகத்தில்
    ஒரு பைக்கை ஓட்டும் திருப்தி.…மேலும் வாசிக்க


  • சற்று முன்பு பெய்த மழையின்
    பளபளப்பில்
    ஓர் இரயில் நிலையம்.

    ஈரத் தரை விரிந்து கிடந்த
    பிளாட்பார்மில்
    சோகமுடன் அமர்ந்திருக்கிறாள்
    அந்தப் பெண்.

    அழுகிறாள்.
    காரணம் தெரியவில்லை.
    வெள்ளை நிறமே பெருகி உருகுவது போல்.
    துயரத்தின் கருவறைக்குள் குழுந்தையாய்.
    ஈரம் சொட்டும் இலைகளாகிறாள்.

    கூட்டம் அதிகமில்லை.
    குழந்தையுடன் நடந்து போகும் பெண்ணொருத்திக்கு
    இவளைக் கண்டு முகம் கோணுகிறது.
    கண்ணீர் திரண்டு நிற்கிறது.

    அழுகிற பெண்ணின் அழகில்
    எல்லாம் மறந்து
    அவளையே வெறித்தபடி நிற்கிறாள்
    ஒரு மூதாட்டி.

    அழுபவளின் உடல் குலுங்குகிறது.
    கைகளைக் கண்ணில் பொத்தி
    தன்னைச் சுருட்டி கொள்கிறாள்.

    சுருண்டு கிடந்தவளுக்குப் பின்னாலிருந்த
    இரயில்வே வேலி உருகுகிறது.
    சோகம் தாளாமல் மீண்டும் தூறல் தொடங்குகிறது.

    நிலமெல்லாம் தூறலின் தடதடப்பு.
    தவளைகள் எங்கிருந்தோ தொடக்க வாத்தியமிசைக்கின்றன.
    அலையாய் பரவி வந்த காற்றொன்று
    மரத்திலெல்லாம் சப்தமெழுப்பி
    இலையிலிருந்து ஈரத்தை தரையில் கொட்டி
    படபடத்து இசைக்கிறது.

    அந்தப் பெண்ணைக்
    கண்ட கண்கள் அனைத்தும்
    இருண்டு கிடக்கின்றன.

    சோகமாய் ஊளையிட்டு
    ஓடி வருகிறது
    இரயில் ஒன்று.


  • உலகில் இது வரை
    இப்படியொரு கவிஞன்
    இருந்ததுமில்லை;
    இருக்கப்போவதுமில்லை
    என மொழி வாழும் காலம் வரை
    தன் பெயர் நிலைக்க வேண்டுமென
    விரும்பினான்.

    திருமணம் மறுத்தான்.
    வயிறு பிழைப்பிற்காக
    சில மணி நேர வேலைத் தவிர
    மற்ற நேரங்களில்
    கவிதைகளிலே உழன்றான்.
    இரவில் பேயானான்.
    பகலில் ஏடானான்.

    கண்களில் கவிதை.
    கைகளில் எப்போதும்
    ஒரு சொட்டு வார்த்தைச்
    சொட்டி கொண்டே இருந்தது.

    எனினும்
    பாராட்டில்லை,
    போற்றி புகழ்வார் யாருமில்லை.
    புரவலருமில்லை.

    எழுதினால் மட்டும் போதாது
    விளம்பரப்படுத்த ஆட்கள் வேண்டும் என
    பல நண்பர்களைப் பிடித்தான்.
    முகநூலில் தேடி தேடி நட்பு சேர்த்தான்.
    இலக்கிய விழாக்களுக்கு முதல் ஆளாய் அஜராகி
    இறுதி ஆளாய் டாஸ்மாக் கடை வரை நின்று
    கவிதைப் புராணம் வாசித்தான்.

    ‘உனக்கு எழுத தெரியவில்லை’ என
    ஒரு முறுக்கு மீசை சொல்லி விட்ட
    இரண்டாம் நாள்
    தனது கவிதைகளையெல்லாம் ஓரம் கட்டி விட்டு
    இலக்கிய கோட்பாடு நூற்களைத் தேடி தேடி
    வாசித்தான்.…மேலும் வாசிக்க


  • இந்தக் கணம் இன்பமாய் இருக்கிறது.
    வழியும் சிகரெட் புகை
    உடலில் எங்கோ கீதமிசைக்கிறது.
    இசையின் மயக்கத்தில் நடனமாடுகின்றன
    நரம்புகள்.
    சூடாய் இறங்கும் தேனீர் பானம்
    உடலிற்குள்
    இளம் மழையின் அரவணைப்பு.

    ஒரு கணம்
    ஒரே ஒரு கணம் மட்டும்
    தேனில் வழுக்கி விழுந்தவனாய்
    மிகப் பெரிய குத்து முகத்தில் இறங்கிய கணத்தில்
    ஸ்தம்பித்தவனாய்
    நீருக்கடியில் மூச்சிற்குப் போராடி தோற்றவனாய்
    உடலுறவில் உச்சத்தில் நிலைத்தவனாய்
    ஆழ் தூக்கத்திற்குள் போகும் தருணத்தில் இருப்பவனாய்
    எங்கோ விழுந்து வலியில் பெரும் ஓலத்துடன் கதறுபவனாய்
    வெறுமையில் நிலைத்தவனாய்
    இருக்கிறேன்.

    ஆனால் மறுகணம்
    ரோட்டில் ஓடும் வாகனங்கள்,
    பேச்சு அரவம்,
    வலு பெறும் வெயில்,
    குப்பைகளின் நாற்றம்,
    கையில் இருக்கும் தேனீர் கோப்பையின் சூடு
    என்னுள்.

    அதற்கு அடுத்து
    நினைவு அடுக்குகளில் இருந்து
    எது எதோ நினைவுகள்
    கலைத்து போட்ட சீட்டுக் கட்டுகளாய்.

    எதற்கோ பயப்படுகிறேன்.
    பழையதை நினைத்து முகம் சுளிக்கிறேன்.
    குவிந்து கிடப்பவைகளில் நிலையில்லாமல் பார்வையை நகர்த்தி
    எதோ ஒரு செங்கலில்
    அது தரும் நினைவு அலைகளில் மூழ்கி
    எதோ ஓர் உணர்வெழுச்சியில்
    பிறிதொரு நினைவிற்குத் தாவி
    பின் அதனோடுச் சம்பந்தப்பட்ட ஒரு பழைய நிகழ்வை
    ஓட்டி பார்த்து கொண்டிருக்கிறேன்.…மேலும் வாசிக்க


  • தினமும் நடக்கும் விஷயம் தான்.
    தன் அறையிலிருந்து வெளியே வந்தவுடன்
    அவளை அந்த மிருகம் பின்தொடரும்.
    அரூபமானது! வக்கிரமானது! நிழல் போல!
    சூடான மூச்சுக்காற்றினைப் பின்கழுத்தில் உணர்வாள்.
    பின்புறத்தில் அதன் பார்வையின் சூடு எரிச்சலூற்றும்!
    பழமொன்று கெட்டு போனதைப் போன்ற
    அதன் வாடை எங்கும் நிரம்பி இருக்கும்!
    நெருக்கடியான ஜனக் கூட்டத்தில் காதில்
    எதாவது முணுமுணுத்து கொண்டே இருக்கும்.
    ஆட்களற்ற தார் சாலையில் அவள் நடக்கும் போது
    உயர்ந்து எழும்பி இருக்கும் கட்டிடங்களின்
    ஜன்னல்கள் அதன் கண்களாய் மாறியிருக்கும்.
    காலங்கள் கடந்தாலும் அது அன்னியமாகவே இருக்கிறது.
    அவளுடைய பதட்டம் குறையவே இல்லை.


  • ஒரு மீட்டலில் இசைத்து விடுகிற வீணை தான்
    எனினும் ஏழு மலைத் தாண்டி ஏழு கடல் தாண்டி
    அலைந்து திரிந்தாலும் அதன் பசி அடங்குவதில்லை.

    அதன் நிறம் சூரிய கிரகணத்தைப் போன்றது.
    மூழ்கி போனவனின் வாசனை அதற்கு.
    குரலோ இரவில் பதற்றம் ஏற்படுத்தும்
    கொடூர வனவிலங்குடைய கர்ஜனை.
    தொட்டால் பனிக்கட்டி; தொடாவிட்டால்  வெயில்.

    சுமையா?
    இயந்திரமா?
    வெறும் மாயை தானோ?
    நான் தானா?
    இன்னொரு ‘நானா?’
    ஆதி ரகசிய செய்தியா?
    கடவுளோ?
    சைத்தானோ?