Category: கவிதைகள்

  • மண்ணை கூட உலர்த்தி விடும் எங்களூர் வெயிலில்

    நூறாண்டுகளுக்கு மேலாக எங்கள் வீட்டுக்கு எதிரில்

    கோயில் தூணில் வாளை சுமந்தபடி நிற்கிறது ஒரு வீரனின் சிற்பம்.

    முப்பாட்டனுக்கு அது தெய்வம்.

    பாட்டனுக்கு அது துரதிர்ஷடம்.

    அப்பாவுக்கு அது கல்.

    எனக்கு காதல் சின்னம்.

    ஒவ்வொருவரும் தங்களுக்கான பிரதியை எடுத்து கொள்ள

    சிற்பியின் பிரதி அவனோடே மாண்டு போனதோ?


  • வானத்தில் வெளிச்சத்தை ஊற்றியது மின்னல்.

    உனது ஜன்னல் கண்ணாடியில் மின்னி மறைந்தது உன் நிழல் உருவம்.

    எனக்கு மேலிருந்த தடுப்பு, பெருமழைக்கு இனியும் தாங்காது.

    உடலெங்கும் ஈரம்.

    அடுத்த மின்னலுக்கு காத்திருக்கிறேன்.

    நம் இருவருக்குமிடையே

    மழை கட்டி கொண்டிருக்கிறது சுவரை.


  • இளஞ்சூட்டு தென்றலில்

    மென்மையாய் வருடியபடி செல்லும் இறகாய்

    உன் காமம்.

    விறைக்க செய்யும் குளிரில்

    புயற்காற்றில் படபடத்து

    முகத்தில் அறையும் இலைச்சருகாய்

    எனது.


  • உன்னையும் என்னையும் பிரிப்பதாய்

    நான் நினைத்த சுவர்கள் தாம்

    இன்று நம்மிருவருக்கும் பொது.


  • சுற்றும் கடிகாரத்தில்

    சுற்றி கொண்டிருக்கிறேன்

    இலக்கு புரியவில்லை.


  • மனம் வெறுத்த பின்னரும்

    வெறுக்காது அபத்தம்.