Tag: tamil poetry

  • நான் அழ வேண்டிய தருணங்களில்
    அழுவதில்லை.
    சாவு வீடுகளில் கூட.
    என்றோ எதோ ஓர் அர்த்தமற்ற சினிமா காட்சிக்காக
    சட்டென அழுகை வருகிறது.
     
    அழாத போது குற்றவுணர்வும்
    அழுது முடிக்கும் போது சலிப்பும்
    சிலுவையைச் சுமக்க வைக்கின்றன
    எப்போதும்.

  • என் தெரு
    விரியும் சுருங்கும்
    என் மனநிலைக்கு ஏற்ப.

    வீட்டு கடிகாரம்
    முள் வேகத்தை
    குறைக்கும் கூட்டும்
    என் முகத்தைப் பார்த்து.

    என்னுள்
    காலமும் தூரமும்.


  • ஓர் அசைப்படம்
    அந்தப் பெரிய கட்டிடத்தின்
    சுவரில்
    சாலையில் செல்லும் வாகனங்களின் ஒளியால்.

    நானே இருவராய்
    அதை கவனித்தபடி.

    எனக்குள்/எங்களுக்குள்
    தர்க்கம்.
    சிலசமயம் வசை.
    பலசமயம் வெற்று வார்த்தைகள்.

    கவனம் குவித்து
    புறம் மறந்து
    வாழ்கிறோம்/வாழ்கிறேன்.


  • ஒரு மழைத்துளி
    காற்றின் அலைகளை மீறி
    கம்பியாய் தடமிழுத்து
    குழியில் திரண்டு நின்ற நீரில்
    விழுந்து
    மேற்பரப்பில் அதிர்வலைகளை உருவாக்கி
    கீழ்நோக்கி பாய்ந்து
    சற்று கலைந்து
    கலந்தது.

    நன்றி
    ஓவியம்: சிகப்பு முத்தம்
    ஓவியர்: ஐமெரிக் நோவா


  • மதுக்கடைகள் நிரம்பிய அந்தச் சாலைக்கு
    நீங்கள் என்றாவது போயிருந்தால்
    அவனைப் பார்த்திருப்பீர்கள்.
    புழுதி பறக்கும் சாலையோரம்
    தன் பை முழுக்க சாவிகளோடு
    ஒன்றுக்கொன்று பேசும் உலோக சப்தத்தோடு
    தன் வாழ்வைச் சுமையென சுமந்து
    நடந்து கொண்டிருப்பான்.

    அரிதாக அவன் உட்கார்ந்து இருக்கும் போது
    எதேனும் சாவியை உருவாக்கி கொண்டிருப்பான்.
    அல்லது துடைத்து கொண்டிருப்பான்.
    அல்லது அப்படியாக பாவனை செய்து கொண்டிருப்பான்.

    அவனிடம் யாரும் சாவி வாங்கியதில்லை.
    தொலைந்து போன சாவிக்கு மாற்று ஒன்றை
    உருவாக்க கேட்டதில்லை.
    என்றாலும் சாவிகளுடன் தான்
    அவன் வாழ்க்கை.

    மழை பொழியும் நாள் ஒன்றில்
    மரத்திற்குக் கீழே
    அவன் குந்தி அமர்ந்திருக்கும் காட்சியினைக் கண்டால்
    அவன் யாருக்கோ காத்திருக்கிறான் என தோன்றும்.
    சாவிகளை ஒப்படைக்க
    காலம் காலமாக அவன் காத்திருக்கிறான் என
    நினைப்பீர்கள்.

    மழை நின்ற பிறகு
    அவன் தன்னை உதறி கொண்டு கிளம்புவான்.
    அவன் வெறும் பிம்பம் தானா?
    நம் பிரதிபலிப்பா?
    மனம் கட்டமைத்த கற்பனை உருவமா?…மேலும் வாசிக்க


  • ஆடு தாண்டி விடும் ஓடை.
    சன்னமாய் ஓடுகிறது.
    நீரைக் கையில் ஏந்தி பார்க்கிறேன்.
    ஒளியினைத் தின்றபடி பிரகாசிக்கிறது.

    பருகினால் மதுவின் சுவை.
    கால் வைத்து இறங்கினால்
    நீருக்கடியில்
    மலை உயர ஆழம்.

    மூச்சிறைத்து பிழைத்து வந்தால்
    மேலெல்லாம் மதுவின் வாசம்.


  • வலியே
    வலியை மறக்க வைக்குமளவு
    அடிபட்டு
    உள்ளெல்லாம் சிதைந்து
    நாளெல்லாம்
    மரணத்தை வேண்டி நிற்கும்
    சமயத்தில் கூட
    நம்பிக்கை
    எங்கோ
    சிறு துகளாக
    இருந்தபடியே தான் இருக்கிறது.


  • காற்றில் சலசலக்கும் மரம்
    சலசலப்பை உண்டாக்குகிறது
    என்னுள்.
    இலைகளின் மீட்டலை
    உணர்கிறேன்
    நரம்புகளில்.
    காம்புகள் வளைவது
    சப்திக்கிறது
    என் எலும்புகள் ஊடாக.
    எறும்புகளின் காலடிகளை
    முதுகில் சுமக்கிறேன்.
    சருகுகளை
    ஆனந்தமாய்
    உதிர்க்கிறேன்.
    கவிழ்ந்த பூக்களின்
    மகரந்தங்களோடு
    காற்றில்
    பரவுகிறது எனது விந்தணுக்களும்.
    இது வெறுமையை உணர்ந்த கணம்;
    கடவுளைக் கண்ட கணம்;
    என் ஆதியை மீள்தொட்ட கணம்.
    பிரபஞ்சம் நானே!


  • இரவு விளக்கு
    சுவரெல்லாம் ஊர்ந்து
    புது புது ஓவியங்களைத்
    தீட்டி காட்டுகிறது.
    உருவாகும் ஓவியங்கள் உருக்குலையும் முன்னே
    என் நினைவலையில்
    இருந்து
    எதோ ஒரு சரடினை
    இழுத்து
    அறையெங்கும் தவழ விட்டு செல்கிறது.

    புகை மண்டிய பிறகு
    கணவனின் குறட்டை மட்டுமே
    எனது படுக்கையறையை நிரப்பி இருக்கிறது.


  • நீங்கள் மேற்கொண்ட எதோ ஒரு தொலைதூர பிரயாணத்தில்
    சந்தேக வியாதி உங்களைத் தொற்றி கொண்டது.
    உடலை உருக்கி விட்டதென சொல்கிறார்கள் எல்லாரும்.
    நடை தள்ளாடுகிறது.
    மயங்கி விழுகிறீர்கள் ஒருநாள்.

    மருத்துவமனையில் டாக்டர்கள் எல்லாரும் வேலையாக இருக்கிறார்கள்.
    உடலெங்கும் விஷம் பரவி விட்டதென சொல்லி செல்கிறாள்
    ஒரு நர்ஸ்.
    பிழைக்க முடியுமென நம்புகிறீர்கள்.
    எளிய காரியத்தைக் கடினமாக்கும் மருத்துவமனை மீது கோபம்.
    உங்களை முக்கியமற்றவனாய் பார்க்கும் மருத்துவர்கள் மீது
    அதிருப்தி.
    சாவிற்கான முன்னேற்பாடுகளைக் கவனிக்க தொடங்குகிறார்கள்
    உங்கள் சொந்தங்கள்.
    பிழைத்து காட்டினால் தான்
    இவர்களுக்குப் புரியும்.
    உங்களது தலைமுடியாய் நீவி நீவி பார்க்கிறீர்கள்
    ஒவ்வொன்றாய்.
    எங்கே அது ஒளிந்து இருக்கிறது?
    கண்ணாடி ரசம் வழியும் வரை
    தேடல் தொடர்கிறது.

    நீண்ட நேரத்திற்குப் பிறகு
    ஓர் இளம் டாக்டர் உங்களை நோக்கி வருகிறான்.
    மேலோட்டமாக சோதித்து
    உதடுகளைப் பிதுக்கி
    தலையை ஆட்டி விட்டு விலகுகிறான்.

    பிழைத்து காட்டினால் தான் இவர்களுக்குப் புரியும்.
    இந்த நோய் உங்களைக் கொன்று விடுமென நீங்கள் நம்பவே இல்லை.…மேலும் வாசிக்க