• புழுதி படிந்த சாலைகளின் ஓரத்தில்

    கிழிந்து போன டயர்கள்.

    சிதைந்த கட்டிடங்களின் தூசிக்கு கீழே

    உயிர்ப்புடன் இருக்கின்றன

    இறந்தவர்களின் ரகசியங்கள்.


    வேறு மனிதர்களே இல்லை.

    நாய்கள் மட்டும் சோம்பி கிடக்கின்றன.

    காதலியின் மண்டையோட்டை சுமந்தபடி

    சுற்றி கொண்டிருக்கிறேன் நான்.

    புழுக்கள் நெளிகின்றன

    என் விரல்களுக்கு இடையே.


    பிறக்கிறது புன்னகை.

    அழிவே ஆனந்தம்.

    புன்னகை மிதந்தபடி வருடி செல்கிறது

    அழிவின் சாட்சியங்களை.


  • மஞ்சள் வெயில் போர்த்திய வனத்தில்

    இரு பாதைகளுக்கு முன் நான் நின்றிருந்தேன்.

    எந்த பாதையை தேர்ந்தெடுப்பது?

    மனித கால்கள் படாத இலைசருகுகள் மிகுந்த பாதை

    நான் அப்போது தேர்ந்தெடுத்தது.

    தேர்ந்தெடுக்காத பாதையை பற்றிய

    சிந்தனைகளுடன் தான் பயணம் கழிந்தது.

    பாதைகள் இன்று எனக்கு பயனற்று போன சூழ்நிலையில்

    இப்போது

    பாதைகள் எல்லாம்

    சேருமிடம் ஒன்று தான் என

    தெரிந்தும் என்ன பயன்?

    (ராபர்ட் ஃபிராஸ்ட் எழுதிய The Road Not Taken கவிதையின் தாக்கத்தோடு எழுதபட்டது.)


  • வெக்கையடிக்கும் அறையின் ஒரு மூலை.

    அதில் பாதி திறந்து கிடக்கிறது ஒரு ஜன்னல்.

    பச்சை தென்னை கிளைகளும், கரும் காகங்களும்

    அதனுள்ளே நுழைந்து அவன் மனதை திசை திருப்ப தான் பார்க்கின்றன.

    அவன் பார்வையில் ஜன்னல் மூடப்பட்டு பல மாதங்களாகின்றன.


  • பறப்பதாய் கனவு கண்டது எப்போது?

    ஒரு குழந்தை புன்னகைத்ததை நினைவுபடுத்தி பார்த்தது எப்போது?

    கவிதை கிறுக்கி பார்த்தது,

    வாய்விட்டு சந்தோஷமாய் கத்தியது,

    முதல் முத்தத்தின் சுவையை நினைவுபடுத்தி பார்த்தது,

    எப்போது?

    கடைசியாய் எப்போது?


  • வெறுமையின் சூடு பரவி கொண்டிருக்கிறது.

    கண்களுக்கு எட்டிய தூரம் பாலைவனம்.

    தூசு காற்று அலை அலையாய் படையெடுக்கிறது.

    சூரியன் கூட வெப்பம் தாங்காமல் மஞ்சளாக மாறி விட்டான்.

    மணல்வெளி மணலாலே முழுங்கபடலாம்.

    மனம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறது தாகம்.

    நைந்து போன உடைகள் இன்னும் கிழிந்து தொங்குகின்றன.

    எலும்புகள் கெஞ்சுகின்றன.

    திருவல்லிகேணி சாந்தாராம் மேன்சன்.

    ரூம் எண் 18யை யாரோ தட்டுகிறார்கள்.

    ஒரு கணம் பாலை எண்ணங்களிலிருந்து விடுதலை.


  • மிகவும் சாதாரண உரையாடல் தாம்.

    பரஸ்பர நலம் விசாரிப்பு.

    பார்க்கலாமென சம்பிரதாய விடை பெறுதல்.

    பல மணி நேரம் கழித்து

    திருமண மண்டபத்தை காலி செய்து

    நாற்காலிகளை அடுக்கி கொண்டிருக்கிறார்கள்.

    மண்டபமெங்கும் நிறைந்திருக்கின்றன

    அவள் கண்களால் உரையாடியவற்றின்

    விளக்கவுரைகள்.


  • மண்ணை கூட உலர்த்தி விடும் எங்களூர் வெயிலில்

    நூறாண்டுகளுக்கு மேலாக எங்கள் வீட்டுக்கு எதிரில்

    கோயில் தூணில் வாளை சுமந்தபடி நிற்கிறது ஒரு வீரனின் சிற்பம்.

    முப்பாட்டனுக்கு அது தெய்வம்.

    பாட்டனுக்கு அது துரதிர்ஷடம்.

    அப்பாவுக்கு அது கல்.

    எனக்கு காதல் சின்னம்.

    ஒவ்வொருவரும் தங்களுக்கான பிரதியை எடுத்து கொள்ள

    சிற்பியின் பிரதி அவனோடே மாண்டு போனதோ?


  • வானத்தில் வெளிச்சத்தை ஊற்றியது மின்னல்.

    உனது ஜன்னல் கண்ணாடியில் மின்னி மறைந்தது உன் நிழல் உருவம்.

    எனக்கு மேலிருந்த தடுப்பு, பெருமழைக்கு இனியும் தாங்காது.

    உடலெங்கும் ஈரம்.

    அடுத்த மின்னலுக்கு காத்திருக்கிறேன்.

    நம் இருவருக்குமிடையே

    மழை கட்டி கொண்டிருக்கிறது சுவரை.


  • இளஞ்சூட்டு தென்றலில்

    மென்மையாய் வருடியபடி செல்லும் இறகாய்

    உன் காமம்.

    விறைக்க செய்யும் குளிரில்

    புயற்காற்றில் படபடத்து

    முகத்தில் அறையும் இலைச்சருகாய்

    எனது.


  • உன்னையும் என்னையும் பிரிப்பதாய்

    நான் நினைத்த சுவர்கள் தாம்

    இன்று நம்மிருவருக்கும் பொது.