சருகுகள் கூட இல்லாது போன நிலப்பரப்பில்
பட்டு போன மரம் போல
அதன் காய்ந்த பட்டை போல
அவன் கிடக்கிறான்.
கேள்விகுறி போல கிடக்கிறது
அவன் உடல்.
முதுமையும் காயங்களும் உடலெங்கும்.
ஆரவாரமான கூட்டம் கடந்து போகும்
அதே சாலையில் தான்
அவனும் கிடக்கிறான்.
கூட்டத்தின் ஒலி
அவனை தொடும் போதெல்லாம்
புரண்டு படுக்கிறான்
தன் கிழிசல்களோடு.
கறுப்பு வெள்ளை புகைப்படமாய் எடுத்தால்
மனதை கலைத்து போடும் சித்திரம்.
அவனை என் கவிதையாய் எழுத
வார்த்தைகளை தேடி கொண்டிருக்கிறேன்.
அவனுடைய பார்வை எத்தனை கூர்மையானது என்பதை
இன்னும் நான் அறியவில்லை.
Leave a Reply to madurai saravanan Cancel reply