Tag: முதுமை

  • ராஜேஷ்வரியம்மாளை யாரோ கொன்றுவிட்டார்கள். இரவு நேரம் ஆளில்லாத சமயம் அவரைக் கழுத்து நெரித்துக் கொன்று, வீட்டிலிருந்து நகைகளையும் பணத்தையும் திருடிச் சென்றிருப்பார்கள் என்று போலீஸ் சந்தேகப்படுகிறது. குடித்தனங்கள் இருக்கிற வீட்டில் புதிதாய் ஓர் ஆள் உள்ளே நுழைந்திருக்க வாய்ப்பில்லை என்றும், இது யாரோ தெரிந்தவர்கள் செய்த வேலை என்கிற ஒரு கோணத்திலும் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது.

    ராஜேஷ்வரியம்மாளுக்கு அறுபத்தி ஐந்து வயதிற்கு மேலிருக்கும். எப்போதும் டல்லான ஒற்றை கலர் பழைய சேலை தான் அணிந்திருப்பார். நெற்றியில் பட்டையாய் விபூதி இருக்கும். கணவர் இறந்ததில் இருந்து குங்குமம் கிடையாது. பல்செட் அணிந்திருப்பதால் வயது பெரிதாய் தெரியாது. தெருவில் அவரை எல்லாரும் முசுடு கிழவி என்று தான் அழைப்பார்கள். ஆனால் அதை அவருக்கு முன்னால் அந்த பேரைச் சொல்ல யாருக்கும் தைரியம் கிடையாது. எல்லாரிடமும் வள் வள் என விழுவது தான் அவரது ஸ்டைல்.

    சென்னையின் ஒரு பிரதான இடத்தில் நெருக்கடியான கட்டிடங்கள் மிகுந்த ஒரு வீதியில் அவருக்கு சொந்தமான ஒரு பெரிய கட்டிடம் இருந்தது.… …மேலும் வாசிக்க


  • தலையில் பலத்த காயம்!
    இறக்க போகிறாள் என முதல் பார்வையிலே புரிகிறது!
    நடைப்பாதையில் அமர்ந்து இருக்கிறாள் அந்த மூதாட்டி!
    இரண்டு ஆட்டோ டிரைவர்கள் அவளை பிடித்தபடி இருக்கிறார்கள்!
    சில கல்லூரி மாணவர்கள் சுற்றி நிற்கிறார்கள்!
    மற்றவர்கள் எல்லாம் எட்டி பார்த்து விட்டு சாலையில் விரைந்து மறைகிறார்கள்!
    அவளுக்கு உதவ ஆட்கள் இருக்கிறார்கள்; இன்றைய பொழுதை வீணாக்காதே என்கிறது என் மனம்.
    போவதா வேண்டாமா என கால்கள் தடுமாறுகின்றன.
    வெள்ளை சட்டைகள் போர்த்திய சாலையையும்
    சிகப்பு உதிரம் பரவும் நடைப்பாதையையும்
    மாறி மாறி பார்க்கிறேன் நான்.
    இதை கவிதையாக எழுதலாம் என்னும் போது புன்னகை ததும்புகிறது என்னுள்.
    அதற்கு பிறகு கிழவி என்னவானாள் என்பது எனக்கு தெரியாது.


  • சருகுகள் கூட இல்லாது போன நிலப்பரப்பில்
    பட்டு போன மரம் போல
    அதன் காய்ந்த பட்டை போல
    அவன் கிடக்கிறான்.

    கேள்விகுறி போல கிடக்கிறது
    அவன் உடல்.
    முதுமையும் காயங்களும் உடலெங்கும்.

    ஆரவாரமான கூட்டம் கடந்து போகும்
    அதே சாலையில் தான்
    அவனும் கிடக்கிறான்.

    கூட்டத்தின் ஒலி
    அவனை தொடும் போதெல்லாம்
    புரண்டு படுக்கிறான்
    தன் கிழிசல்களோடு.

    கறுப்பு வெள்ளை புகைப்படமாய் எடுத்தால்
    மனதை கலைத்து போடும் சித்திரம்.

    அவனை என் கவிதையாய் எழுத
    வார்த்தைகளை தேடி கொண்டிருக்கிறேன்.
    அவனுடைய பார்வை எத்தனை கூர்மையானது என்பதை
    இன்னும் நான் அறியவில்லை.


  • நகரத்தின் இறுக்கம் சில சமயம் யதேச்சையாக பார்க்க கிடைக்கும் சில காட்சிகளில் வெளிபடுகிறது. ஓர் ஐம்பது வயது முதியவர் டிராபிக் சிக்னலில் தனது ஸ்கூட்டருடன் விழுந்து விட்டார். சமாளித்து எழுந்து அதை உதைத்து ஸ்டார்ட் செய்ய முயல்கிறார். ஸ்கூட்டர் மீண்டும் சரிகிறது. சிக்னலில் பச்சை விளக்கு எரிகிறது. முதல் ஆளாய் நிற்கும் இந்த முதியவரை நோக்கி ஒரே சமயத்தில் ஒலிக்கின்றன பல வகையான ஹாரன் ஒலிகள்.

    தனது பேரனை பள்ளிக்கு கூட்டி செல்லும் மூதாட்டி வழி தெரியாமல் சாலையில் பரிதவித்து நிற்பது போன்ற காட்சிகள் நமது கண்பார்வையின் எல்லையோரம் நடந்து மறைந்து விடுகிறது.

    இது வேறொரு மூதாட்டியின் கதை. ஹெலன் அந்த மூதாட்டியின் பெயர். காலை ஏழுரை மணிக்கு வடபழனி பஸ் நிறுத்தம் பக்கம் கூடும் ஒரு சிறு கூட்டத்தில் அவரைக் காண முடியும். வீடு வீடாக போய் சோப்பு பவுடர் போன்றவற்றை விற்க வேண்டும். இந்த கூட்டத்தில் ஹெலன் தான் மிகவும் வயதான பெண்.… …மேலும் வாசிக்க