அறிமுகம்

“வலைப்பூ கவிதைகளில் சாய்ராமின் படைப்புகள் அவற்றின் தீவிர தேடலால் கவனிக்கத்தக்கவை ஆகின்றன, குறிப்பாக மனித இருப்பின் நெருக்கடி பற்றிய கவிதைகள்.”

– எழுத்தாளர் அபிலாஷ் தாமரை இதழில் எனது வலைப்பதிவை பற்றி எழுதியது. விரிவான கட்டுரை அவரது வலைப்பதிவில் வாசிக்கலாம்.

என்னைப் பற்றி

என் பெயர் சாய்ராம். தந்தைப் பெயர் சிவகுமார். இரண்டையும் கலந்து சாய்ராம் சிவகுமார் என்கிற பெயரில் கவிதை/வலைப்பதிவு எழுதி வருகிறேன். சொந்த ஊர் தர்மபுரி. தற்போது வாழ்வது சென்னையில். சென்னைக் கிருத்துவ கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியமும் பிறகு இதழியியல் பட்டய படிப்பும் பயின்றேன். பல காலமாய் தொலைக்காட்சி ஊடகங்களில் படைப்பாக்க துறையில் பணிபுரிந்து வருகிறேன். மூளையைச் சாப்பிட முயல்கிறது என்கிற என் கவிதைத் தொகுப்பு பிரசுரமாகியிருக்கிறது. மேலும் என்னைப் பற்றி அறிய விரும்பினால் என் முகநூல் பக்கத்தினைப் பார்க்கவும்.

இந்த வலைப்பதிவு பற்றி

https://www.sairams.com/  என்கிற இந்த வலைப்பதிவு 2008-ம் ஆண்டில் இருந்து இயங்குகிறது. தொடக்க காலத்தில் கவிதைகளோடு கதைகள், கட்டுரைகள் என பரபரப்பாக இயங்கினாலும் பிறகு வேகம் குறைந்து விட்டது. எனினும் புதிதாய் வருபவர்களுக்குத் தீனி போடுமளவு உள்ளடக்கம் இருக்கிறது என்றே நம்புகிறேன்.

இந்த வலைப்பதிவில் என்ன வாசிக்கலாம்?

இந்த வலைப்பதிவின் அனைத்து இடுகைகளையும் கண்டறிய உள்ளடக்கம் பார்க்கவும். வலைப்பதிவை தொடர்ந்து வாசிக்க ஓடை/மின்னஞ்சல் சந்தாவில் பதிவு செய்து கொள்ளுங்கள். 

வலைப்பதிவு தொடங்கியது எப்படி?

இணைய தொடக்க காலகட்டத்தில் யாகூ தான் மிகவும் பிரபலம். அதில் மின்னஞ்சல், செய்திகள், சேட், குரூப்ஸ், டைரக்டரி என பல அம்சங்கள் இருந்தன. அதில் ஜியோசிட்டிஸ் மிகவும் பிரபலம். உங்களுக்கென்று ஓர் இணையத்தளத்தை யாகூ சர்வரில் உருவாக்கி கொள்ளலாம். (வலைப்பதிவு அப்போது பிரபலம் கிடையாது.) நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றாற் போல நகரங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். அந்தந்த நகரங்களில் குடியேறி கொள்ளலாம். எனக்காக நான் ஒரு வீட்டை கட்டினேன். கட்டுமான பணியோடு நின்று போயிற்று அது. பிறகு கூகுள் பிளாக்கர் பிரபலமடைந்த சமயம் ஆங்கிலத்திலும் தமிழிலும் வலைப்பதிவுகள் தொடங்கி முதல் பதிவோடு அவை நின்று போயிற்று.

ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு நிகழ்ச்சி ஒன்றினை இயக்கி கொண்டிருந்தேன். அப்போது என்னோடுப் பணிபுரிந்த பாலபாரதி தமிழ் பிளாக்கர்ஸ் பற்றி ஒரு தொகுப்பைச் செய்யலாமே என யோசனைச் சொன்னார். பிறகு அந்தத் தொகுப்பு ஒளிபரப்பானது. அதே சமயம் நானும் தமிழ்மணத்தைப் பார்த்து உடனே எனக்கென்று ஒரு வலைப்பதிவை தொடங்கும் ஆசை கொண்டேன். ஏற்கெனவே தொடங்கியவை அனைத்தும் முடங்கி போனதால், கவிதைகள் எழுதுவதையாவது தொடர்ந்து செய்வோம் என்று கவிதைகளுக்கு மட்டும் வலைப்பதிவு என்கிற எண்ணத்தில் 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ம் தேதி blogger-இல் செவ்வாய்க்கிழமை கவிதைகள் (http://poetry-tuesday.blogspot.com) என்கிற பெயரில் வலைப்பதிவு தொடங்கினேன்.

செவ்வாய்க்கிழமையன்று கவிதை பதிக்க வேண்டும் என்கிற பழக்கத்தை எனக்குள் ஏற்படுத்தி கொள்ளவே செவ்வாய்க்கிழமை கவிதைகள் என்று அப்போது வலைப்பதிவிற்கு பெயர் வைத்திருந்தேன். (இலக்கியவாதிகள் மன்னிப்பார்களாக.)  இரண்டரை வருடங்கள் பிளாக்கரில் குப்பை கொட்டியதற்கு பிறகு sairams.com என்கிற இந்த முகவரிக்கு 2010-ம் ஆண்டு மே 12-ம் தேதியன்று நண்பர் ரவியின் உதவியோடு குடியேறினேன்.

பரிசு

நன்றி

  • இந்த வலைப்பதிவினைத் தொடங்க உதவிய நண்பர்கள் பாலபாரதி மற்றும் ரவி
  • ரவியின் milkhost நிறுவனம் மூலமாக இந்தத் தளம் இயங்குகிறது.
  • வலைப்பதிவு caption ‘இருத்தலின் தாங்கவியலாத எளிமை’: Milan Kundera-வின் The unbearable lightness of being நாவல் தலைப்பின் பாதிப்பால் உருவானது.
  • வலைப்பதிவினை தொடர்ந்து வாசித்து எனது நட்பு வட்டத்தில் இணைந்து விட்ட நண்பர்கள்.

என்னைத் தொடர்பு கொள்ள