Tag: tamil poetry

  • அவளிடம்
    அவன் அறுபது வினாடிகள் தான் பேச முடிந்தது.
    அவள் கை கொடுத்து பிறகு
    விடைபெற்று
    விலகி நடந்தாள் பதற்றத்தோடு.

    மணிக்கணக்கில் பயணித்த களைப்பும்
    தடதடவென அடித்து கொள்ளும் இதயமும்
    குழம்பி போன மனநிலையோடு அவன்.

    எதற்காக அவள் கண்களில் அந்த அதிர்ச்சி?
    முதல் சந்திப்பில் தன்னை வேறு தோற்றத்தில் எதிர்பார்த்திருப்பாளோ?
    அந்நியனிடம் தயங்கி நிற்பது போல அல்லவா நின்றாள்.

    அவன் கற்பனை செய்தது போலவே அவள் இல்லை.

    அவன் முன்னால் அவள் நடந்து போகிறாள்.
    பார்க்க கூடாது என நினைக்கிறான்.
    இவன் பார்க்கிறான் என அவளது நடை தள்ளாடியது.
    நீரினுள் படகு போல நடந்தாள்.
    ஒவ்வொரு அசைவிலும் சங்கடம்.
    அவளுடைய தாய் எந்நேரமும் இங்கே வந்து விடக்கூடும்.

    போனில் மனைவியாய் பேசுபவள்
    இன்று
    தூரத்தில் சென்று மறையும் வரை
    திரும்பியே பார்க்கவில்லை.


  • இளமையின் ஒளி சூழ பிரகாசிக்கிறாள் ராஜகுமாரி.
    கண்களில் பரிவும் அன்பும்.
    உதடுகளில் பூக்கிறது காமம்.

    இரவு வானத்தில் தோன்ற போகிறது
    அந்த அரிய ஒளிக்கீற்று.
    உலகின் கடைசி தருணங்களை
    கணத்திற்கு கணம்
    மெதுவாக நகர்த்திட துடித்திடுவது போலொரு முத்தம்.

    நீரின் சிலிர்ப்பை மறந்து
    ஆவலாய் காத்திருக்கின்றன
    ஒன்றை போலவே இருக்கும் அந்த ஏழு தவளைகளும்.
    கல்லாக மாறி போயிருக்கின்றன அந்த காத்திருத்தல்.

    எங்கோ கல் ஒன்று
    சரிந்தோடி பள்ளத்தில் இருக்கும் நீரில் விழுந்து
    அமைதியை குலைக்கிறது.
    வானம் இருளினை விழுங்கி தயாராகிறது.


  • தலையில் பலத்த காயம்!
    இறக்க போகிறாள் என முதல் பார்வையிலே புரிகிறது!
    நடைப்பாதையில் அமர்ந்து இருக்கிறாள் அந்த மூதாட்டி!
    இரண்டு ஆட்டோ டிரைவர்கள் அவளை பிடித்தபடி இருக்கிறார்கள்!
    சில கல்லூரி மாணவர்கள் சுற்றி நிற்கிறார்கள்!
    மற்றவர்கள் எல்லாம் எட்டி பார்த்து விட்டு சாலையில் விரைந்து மறைகிறார்கள்!
    அவளுக்கு உதவ ஆட்கள் இருக்கிறார்கள்; இன்றைய பொழுதை வீணாக்காதே என்கிறது என் மனம்.
    போவதா வேண்டாமா என கால்கள் தடுமாறுகின்றன.
    வெள்ளை சட்டைகள் போர்த்திய சாலையையும்
    சிகப்பு உதிரம் பரவும் நடைப்பாதையையும்
    மாறி மாறி பார்க்கிறேன் நான்.
    இதை கவிதையாக எழுதலாம் என்னும் போது புன்னகை ததும்புகிறது என்னுள்.
    அதற்கு பிறகு கிழவி என்னவானாள் என்பது எனக்கு தெரியாது.


  • ஒவ்வொரு முறையும்
    ஒரே மாதிரி தான் நிகழ்கிறது.

    அவனிடமிருந்து விலகி
    நான் முதலில் தேடுவது
    துண்டைத் தான்.
    எப்போதும்
    கைக்கெட்டும் தூரத்தில் எடுத்து வைக்க வேண்டும் என
    நினைத்தாலும்
    அது பிறகு மீண்டும் நிகழும் வரை
    நினைவிற்கு வருவதேயில்லை.

    காமம் வழிந்தோடிய பிறகான
    நிர்வாணம் மிகவும் அசௌகரியமானது.

    என் பின்னே அவனது பார்வையை உணர்ந்தபடி
    குளியலறைக்கு ஓடுவேன்.
    பிறகு இருவரும் அவசர அவசரமாய்
    துணிகளை தரையிலிருந்து தேடி எடுப்போம்.

    அறை வெக்கை மிகுந்ததாய் மாறியிருக்கும்.
    வெளியே சாலையில்
    வாகனங்களின் ஹாரன் சத்தம் அதிகரித்திருக்கும்.
    இவ்வளவு துணிகளா என ஆயாசத்தோடு
    உடைகளை இருவரும் அணிந்து கொண்டிருக்கும் தருணத்தில்
    படுக்கை உருகி
    என் கால் இடையே ஓடி
    கரைந்து போவதை வருத்தத்தோடு பார்த்து விட்டு
    மீண்டும் உடைகளை அவசரமாய் அணிந்து கொண்டிருப்பேன்.



  • அது பிரத்யேகமான வடிவமைப்பு அல்ல.
    சந்தையில் எளிதாய் கிடைத்து விடுவதும் இல்லை.
    ஆனாலும் அந்த சட்டையை ஓர் அன்னியன் அணிந்திருப்பது
    ஆச்சரியம் தான்.

    அவனிடமிருந்த வியர்வை வாசனை
    என்னுடைய கணவனது போலவே இல்லை.
    என்றாலும் அந்த உடலின் மெல்லசைவு கூட என்னை ஈர்க்கிறது.
    கூட்டத்தினூடாக அவனை நோக்கி நகர்கின்றன
    என்னுடைய அத்தனை உணர்வுகளும்.

    ஓர் உதட்டுச்சுழிப்பில் என்னை உதாசீனப்படுத்துகிறான்.
    அன்னியர்களாலான கடலலையில்
    ஒவ்வொரு முறை அலை உயரும் போதும்
    நான் கண்களால் இரங்குகிறேன்.

    அலை தாழும் போது அவன்
    ஒரு முத்தம் மட்டும் கொடுத்து விட்டு
    அந்த சுவையை அங்கேயே துடைத்து எறிந்து விட்டு
    பறந்து போன பிறகு
    மிச்சமிருக்கிறது
    அவன் அணிந்திருந்த எனது கணவனின் சட்டை.



  • கறுப்பு எறும்புகள்.
    முனைந்து கோலம் போடும் பெண்ணைப் போல
    சுவற்றில் வரிசை கட்டி கொண்டிருக்கின்றன.
    எறும்புகளைப் பார்ப்பதும்
    பிறகு
    அலுவலக வெள்ளைப் பலகையை பார்ப்பதுமாய் இருக்கிறேன்.
    இன்று எனது கணவரின் பிறந்த நாள்.
    இன்றாவது சீக்கிரம் போக வேண்டுமென நினைத்திருந்த போது தான்
    வழக்கம் போல ஒரு குழப்பம்.

    அவசரம்! எமர்ஜென்சி!

    அலுவலக வெள்ளைப் பலகையை
    எறும்புகள் மொய்த்திருப்பது போல இருக்கின்றன
    அதில் எழுதப்பட்டிருக்கும்
    என்னுடைய வேலைகள் மற்றும் கடமைகள்.

    கடவுள் இன்றும் லேட் தான்.
    வந்தவர் மதியத்திற்கு மேல்
    எங்கு போனார் என்று தெரியவில்லை.
    செல்போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருக்கிறது.
    மிக அவசரமாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

    கணவரிடம் என்ன பொய் சொல்வது என குழம்பியபடி அமர்ந்திருக்கிறேன்.
    இன்னும் நானூறு வருடங்கள் உழைத்தாலும் கூட
    இந்த மாத டார்க்கெட்டை
    என்னால் சாதிக்க முடியுமா என்று தெரியவில்லை.

    முதுகு வலி!

    நான் அமர்ந்திருக்கும் பத்தாவது மாடி அறையின்
    ஜன்னலுக்கு வெளியே
    ரோஜா செடிகள் போல
    ஒரு பிரம்மாண்ட மரத்தின் உச்சி தெரிகிறது.
    …மேலும் வாசிக்க


  • அவர்களில் பெரும்பாலனோருக்கு
    என்னுடைய மகன் வயது தான் இருக்கும்.
    அரும்பு மீசை,
    பள்ளிக்கூடத்து சிரிப்பு,
    கண்களுக்குள் ஒளிந்திருக்கும் குறும்புத்தனம்,
    தூக்கமில்லாத கண்கள் மற்றும்
    இனம் புரியா கோபம்.
    அவர்களுக்குள் ஒரு சிறுவன் ஒளிந்திருக்கிறான்.

    அன்றொரு நாள் கனவில்
    இவர்களை நானே பிரசவித்ததாய் உணர்ந்தேன்.
    எதிரி கொடி பறக்கும் ஆர்மி கேப்பில்
    அவ்வபோது எழும் ஆரவாரத்தில்
    என்றோ இறந்து போன எனது மகனின் குரலும் சேர்ந்தே
    எனக்கு கேட்கிறது.
    எனது ஜன்னலில் இருந்து தெருவில் கடந்து போகும்
    ஒவ்வொரு சிறுவனின் முகத்தையும்
    உற்று நோக்கியபடி கழிகின்றன எனது பகற்பொழுதுகள்.
    அந்த பேய் நிற பழுப்பு யூனிபார்மினை கழற்றி எறிந்தபிறகு
    அவர்களது வலிமையான தோள்களில் சாய்ந்து கொள்ள துடிக்கும்
    எனது மனம்.

    நாய் குட்டியை வருடுவது போல
    அந்த துப்பாக்கி எமனை வருடியபடி இருப்பார்கள்.
    மீசையை முறுக்குவது போல
    அவ்வபோது அதை தோளில் சுமப்பதும்
    பிறகு கழட்டுவதுமாக இருப்பார்கள்.
    அந்த பூட்ஸ் காலில் ஒட்டியிருக்கும் மணல்
    எங்கிருந்தெல்லாம் வந்திருக்கும் என யோசித்திருப்பேன்.
    …மேலும் வாசிக்க


  • மென்மஞ்சள் வெயிலில் உன் நினைவுகளை
    வண்ணம் தீட்டும் மேகங்களிடம் பதுக்கி வைத்தாலும்
    கோபத்தை அந்நியன் யாராவது ஓருவனிடம் கொடுத்தும்
    வாங்கியும்
    படுக்கையில் அதை அழுத்தி தூங்க பழகி இருக்கிறேன்.

    வேண்டாம்.

    காதலின் துயரம்
    என் வாழ்வை போர்த்தி இருக்கிறது.
    அது என் வாழ்க்கை.
    அது இல்லாமல் என் வாழ்வில்லை.

    காதலின் துயரம் கோபம்.
    ஒவ்வொர் இரவும்
    கோபம் மட்டுமே.


  • சாலையை கடந்து வீட்டிற்குள் நுழைந்து
    கதவை அடைத்து உள்ளறைக்குள் ஜன்னலை சாத்தி
    கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்ளும் என்னை
    பல கண்களாய்
    அவன் கவனித்தபடி இருக்கிறான்.

    கண்களை மூடி
    கற்பனையில்
    வீட்டிற்கு வெளியில் ஓடி
    அந்த இரகசிய செய்தியை அறிவிக்கிறேன் நான்.

    தூரத்தில் ஆரவாரம் கேட்டது.


  • இருளின் ஊடாக குருதி மழையில்
    நனைந்து கிடக்கிறோம்
    நாங்கள் இருவரும்.
    அவள் இதழோரம் கொஞ்சம் மிச்சமிருக்கிறது
    அவளால் கொல்லபட்டவனின் இரத்தம்.
    செந்நீரின் சுவைக்காக ஏங்கி கிடக்கிறேன்
    நான்.

    நிலவை இழந்த வானத்தில்
    அவ்வபோது மின்னி மறைகிறது
    ஒற்றை வெள்ளை கோடு.
    கோட்டானின் கதைத்தலும்
    வௌவால்களின் இறைச்சலும் தூரத்தில்.

    பிணங்களின் கனவுகள்
    மேகங்களாய் மேலெழுந்து
    பாழடைந்த மாளிகையின் சுவர்களில் அப்பி
    சிதைவுகளில் கொஞ்சம் தப்பி போகிறது.

    ஜன்னல், கதவுகளில் மரச்சட்டங்கள்
    சடசடவென உடைகின்றன.
    இறக்கைகளை அடித்தபடி
    யாரோ பறந்து போகிறார்கள்
    கீழ்வானத்தை நோக்கி.

    அவள் கண்களில் காதல் பொங்க
    என்னை பார்க்கிறாள்.

    பின்னிரவு பனியில் உறைய தொடங்குகிறோம்.

    பிறகு
    ஞாயிறு எங்களை மனிதர்களாக மாற்றியது.