பயம் உருவமாகும் போது

இந்தக் கணம்.
இதை என் கனவுகளில் பார்த்திருக்கிறேன்.

மென்பனியில் வரைகோடாய் நீ தெரிவதை போல
ஆழ்மனதில் இது எங்கோ எனக்கு தெரிந்தபடியே தான் இருந்திருக்கிறது.

என் உதிரச்சுவையை உன் வாள் அறிந்திருப்பது போல
இதன் சுவையை உணர்ந்து தான் இருந்திருக்கிறேன் இத்தனை காலமும்.

உன் கண்களில் மிளிரும் குரோதம் போல
என் பயங்களின் பெருந்தொகுப்பில் இது ஒளிர்ந்து கொண்டே தான் இருந்திருக்கிறது.

உனக்கும் எனக்கும் இடையே
காற்றினில் கனக்கும் பெருந்துயரம் போல
என்னுள்ளே கனத்து தான் இருந்திருக்கிறது இந்த எதிர்பார்ப்பு.

கருத்திருக்கும் பின்புலம் வாய்க்குமென
ஏனோ அப்போதே உண்ர்ந்தேன் நான்.

இன்று நீ எனக்கு செய்வதை
இதற்கு முன்
நான் செய்திருக்கிறேன் பலருக்கு
நூற்றுக்கணக்கான முறை.

எனினும்
இந்த கணத்தினை
நான் என் கனவுகளில் பார்த்திருக்கிறேன்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.