பெருவெள்ளமாய் மழை பொழுதுகள்
நம்மை ஆட்கொண்டிருக்கும் நாட்கள் இவை.
எனது மூக்கிலிருந்து
மீண்டும் இரத்தம் சொட்ட தொடங்கி விட்டது.
கை நகங்களின் நிறம்
மாறி கொண்டிருப்பதை பார்க்கிறேன்.
பனி போர்த்திய கார் கண்ணாடி போல
எனது பார்வை திறன் மங்கி கொண்டிருக்கிறது.
சிறு செயல்கள் கூட
மிக மெல்ல மிக மெதுவாக நடப்பதாக பிரமை.
பெரும்பாலான சமயம் கண்களை திறந்தபடி
நான் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.
கனவுகளிலும் இப்போது அது வந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு முறையும்
மனம் மீண்டும் யதார்த்திற்கு திரும்பும் போது
அதை பார்த்து கொள்கிறேன்.
கறுப்பு பளபளப்பு மட்டும் தெரிகிறது.
அசைவுகளே இல்லை வழக்கம் போல.
எப்போதும் தீண்டும் என தெரியாது
ஆனால் அவ்வபோது என்னை தீண்டி கொண்டே இருக்கிறது.
மரணத்தை போல அசைவுற்று இருக்கும் அதனை
பார்த்து கொண்டே இருக்கிறேன்.
Leave a Reply to D.R.Ashok Cancel reply