Year: 2009

  • வெற்றியின் களிப்பு ஒரு போதை. தன்னை தானே மறக்க வைத்து, அதிகமான தேனை அருந்திய வண்டாக, மயக்கமாய் சுற்றி வர செய்கிற விஷயம்.

    1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் நாள். அமெரிக்க அதிபர் ட்ரூமென், ஜப்பான் தோல்வியை ஏற்று சரணடைந்ததை அடுத்து அன்று காலை ஏழு மணிக்கு அதிகாரப்பூர்வமாக இரண்டாம் உலக போர் முடிவிற்கு வந்ததை அறிவித்தார். போர் வெற்றி அமெரிக்கா நாடெங்கும் கொண்டாடபட்டது. நாடு ஜெயித்து விட்டதே என்கிற எண்ணம் ஒரு புறம். இனி இந்த போர் முடிவிற்கே வராதா என்று கடந்த ஏழு வருடங்களாய் உலகை உலுக்கி கொண்டிருந்த அசுர நிகழ்வு முடிந்து விட்ட மகிழ்ச்சி. படைவீரர்கள், அவர்களது குடும்பத்தினர் என எல்லாரும் அளவுகடந்த சந்தோஷத்தில் இருந்தனர்.

    அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூ யார்க் நகரத்திலும் வெற்றி எல்லா இடங்களிலும் கொண்டாடபட்டு கொண்டிருந்தது. இராணுவ வீரர்கள் அளவிற்கு அதிகமாக மதுவை குடித்து விட்டு நகரமெங்கும் சுற்றி கொண்டிருந்தார்கள். ஆல்பிரட் எய்ஸ்டென்ட் என்கிற புகைப்படக்காரர் வீதிகளில் மிதக்கும் புகழ் போதையையும் அதன் விளைவாய் மக்கள் என்றுமில்லாமல் வித்தியாசமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருப்பதையும் புகைப்படமாக எடுத்தபடி இருந்தார்.… …மேலும் வாசிக்க


  • இன்று கம்யூனிஸ்ட் தலைவர் [சிபிஎம்] பிருந்தா காரத் உத்தபுரம் கிராமத்திற்கு சென்றார். அதற்கு முன்பு காலையில் காவல்துறையினர் அவரையும் அவருடன் இருந்த காம்ரேடுகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து இருக்கிறார்கள்.

    உத்தபுரம் கிராமத்தில் நிலவும் பிரச்சனை பற்றி அறியாதவர்கள் இங்கே படிக்கவும்.

    சமீப காலமாக காம்ரேடுகள் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க தலித் பிரச்சனைகளில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். முக்கியமாக சிபிஎம் கட்சியினர். உத்தபுரம் கிராமம் விஷயத்தில் கூட பிரகாஷ் கரத் தொடங்கி பலர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது கட்டாயம் பாராட்டபட வேண்டிய விஷயம். என்றாலும்…

    கம்யூனிச கட்சிகளில் சாதி பாகுபாடு பல ஆண்டுகளாக இருக்கிறது என பல சமயங்களில் பல தலித் நல ஆர்வலர்கள் சுட்டி காட்டி இருக்கிறார்கள். காலம் காலமாக உயர்சாதியினர் மட்டுமே கட்சியின் உயர் பொறுப்புகளை பிடித்து இருந்தார்கள் என சொல்லபடும் குற்றசாட்டை அவ்வளவு எளிதில் புறந்தள்ளி விட முடியாது. அப்படி இருக்க இன்று கட்சி நலிவுறும் சமயத்தில் தனது பிடியை இறுக்கி கொள்ள இந்த வகை நடவடிக்கைகளில் காம்ரேடுகள் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார்களா என்கிற கேள்வி எழுப்புவதில் தவறு ஒன்றும் இல்லை.… …மேலும் வாசிக்க


  • கோலி குண்டுகளாய் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள்
    உருண்டோடும் பரந்த நகரத்து சாலை.
    எப்போதும் போல  இப்போதும் டிராபிக் ஜாம்.

    இந்த முறை காரணம் ஒரு கிழவி.
    பொறுமையில்லாமல் ஹாரண் ஓலி அலறுகிறது.
    சாலையை கடக்க வந்த கிழவி சாலையிலே அமர்ந்து விட்டாள்.
    பல பேர் கத்தி கொண்டிருக்கிறார்கள்.

    பைத்தியமா அவள்?

    சாலையில் என்னவோ செய்து கொண்டிருக்கிறாள்.
    அவளருகே அறுந்து போன மஞ்சள் பை.
    சாலையில் பையிலிருந்து கொட்டிய அரிசி.
    வசையொலி கூடியபடி இருக்கிறது.
    அரிசியை அள்ளி மீண்டும் பையினுள் திணித்து விடும்
    முனைப்பில் இருக்கிறாள் கிழவி.


  • ப.சிதம்பரம் ஏற்கெனவே கோட்டிட்டு காட்டினார். இப்போது இங்கிலாந்து தொடங்கி மற்ற உலக நாடுகளும் தங்களுடைய எண்ணத்தை வெளிபடுத்த தொடங்கி விட்டனர்.

    நடராஜா. விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர். இங்கிலாந்தில் வசித்து வரும் இவரை அந்நாட்டு அரசாங்கம் பலவந்தமாக இலங்கைக்கு அனுப்ப முயற்சித்தது. இலங்கை மண்ணில் கால் வைத்தால் தனது உயிருக்கு எந்தவித பாதுகாப்புமில்லை என இவர் மன்றாடியும் பயனில்லை. இறுதி முயற்சியாக இவர் அங்கு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் காரணமாக இவரை இலங்கைக்கு அனுப்பும் முயற்சிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டு இருக்கிறது.

    தனக்கு நேர்ந்தது போல பல தமிழர்களுக்கு இந்த பலவந்தமான வழியனுப்பு விழா நடந்திருக்கிறது என நடராஜா குற்றம் சாட்டுகிறார். இந்த வருடம் ஜூலை மாதம் மட்டும் பனிரெண்டு தமிழர்கள் இப்படி நாடு கடத்தபட்டதாக மேற்கு லண்டனில் உள்ள தமிழ் அமைப்பை சார்ந்த நகுலேந்திரன் என்பவர் பிபிசியில் குற்றச்சாட்டு எழுப்பி இருக்கிறார்.

    இலங்கையில் நடைபெறும் அரசு பயங்கரவாதத்தை கண்டிக்கும் நாடுகளில் ஒன்றான இங்கிலாந்திலே இப்படியான ரகசிய வேலைகள் இலங்கை அரசின் பழி வாங்குதலுக்கு சாதகமாக நடக்கிறது என்றால் இலங்கையின்  நேச நாடுகளில் நிலைமை எப்படி இருக்கும் என சொல்லவே வேண்டியதில்லை.… …மேலும் வாசிக்க


  • மழை தூறல் என்னை பதைபதைப்பிற்கு உள்ளாக்குகிறது.
    சட்டை பையில் இருக்கும் காகித தாளினை
    கைகளால் காப்பாற்றுவதற்கு யத்தனிக்கிறேன்.

    என்னை பயமுறுத்துவதற்காகவே
    மழை சடசடவென பெய்வதும் பிறகு நிதானிப்பதுமாய்
    விகாரமாய் சிரிக்கிறது.

    தைல மரக்காட்டில் தன்னந்தனியாய்
    பயத்தோடு நடக்கும் போது
    பின்னால் யாரோ தொடர்வது போல
    ஒரு நிழல் என் மனக்கண்ணில் என்னை தொடர்கிறது.

    இருட்டுவதற்கு முன் இந்த காகித தாள்
    அந்த நகரத்தில் கை மாற வேண்டும்.
    இல்லையெனில் – அதை நினைத்தே பார்க்க முடியாது.
    அந்த எண்ணமே என் உடலை நடுநடுங்க வைக்கிறது.

    திசையினை அனுமானித்து
    நகரத்தின் பக்கமாய்
    எனது நடையினை வேகபடுத்துகிறேன்.
    கைகள் அன்னிச்சையாக சட்டைபையினை தடவுகின்றன.

    மழைநீர் அந்த காகிதத்தில்
    மையினை கரைத்து
    எழுத்துகளை அழித்து இருக்குமோ?

    அந்த எண்ணம் மனதில் கலக்கத்தை உண்டாக்கும்
    அதே நேரம்
    அருகாமையில் தாங்கவியலா துர்வாசனை.
    புதர்களுக்கு பக்கத்தில் ஒரு நாய் செத்து கிடக்கிறது.
    ஒரு மணி நேரத்திற்கு முன் நான் பார்த்த அதே காட்சி.…மேலும் வாசிக்க


  • பெருவெள்ளமாய் மழை பொழுதுகள்
    நம்மை ஆட்கொண்டிருக்கும் நாட்கள் இவை.

    எனது மூக்கிலிருந்து
    மீண்டும் இரத்தம் சொட்ட தொடங்கி விட்டது.
    கை நகங்களின் நிறம்
    மாறி கொண்டிருப்பதை பார்க்கிறேன்.
    பனி போர்த்திய கார் கண்ணாடி போல
    எனது பார்வை திறன் மங்கி கொண்டிருக்கிறது.

    சிறு செயல்கள் கூட
    மிக மெல்ல மிக மெதுவாக நடப்பதாக பிரமை.
    பெரும்பாலான சமயம் கண்களை திறந்தபடி
    நான் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.
    கனவுகளிலும் இப்போது அது வந்து கொண்டிருக்கிறது.
    ஒவ்வொரு முறையும்
    மனம் மீண்டும் யதார்த்திற்கு திரும்பும் போது
    அதை பார்த்து கொள்கிறேன்.
    கறுப்பு பளபளப்பு மட்டும் தெரிகிறது.
    அசைவுகளே இல்லை வழக்கம் போல.

    எப்போதும் தீண்டும் என தெரியாது
    ஆனால் அவ்வபோது என்னை தீண்டி கொண்டே இருக்கிறது.

    மரணத்தை போல அசைவுற்று இருக்கும் அதனை
    பார்த்து கொண்டே இருக்கிறேன்.


  • வறுத்தாலும் சரி,
    கரித்து கொட்டினாலும் சரி,
    நக கண்களை பிடுங்கினாலும் சரி,
    உண்மை கசப்பானது தான்.

    நாம் வேறு மாதிரி தான் நினைத்து இருந்தோம்.
    நம்முடைய கடைசி ஆசை அதுவாக தான் இருந்தது.
    நம்முடைய துன்பங்களை சுமக்கும் போதெல்லாம்
    அது தான் நம்முடைய உந்து சக்தியாக இருந்தது.

    ஆனால் உண்மை அதுவல்ல.
    யதாரத்தம் வேறு மாதிரியாக தான் இருக்கிறது.
    அவர்களுக்கு நம்மை பற்றி உண்மையிலே எந்த அக்கறையும் கிடையாது.

    நம்முடைய துன்பங்கள் ஹீரோக்களின் அவஸ்தை அல்ல.
    நம்முடைய அலறல் வீரத்தின் வெளிபாடும் அல்ல.
    நாம் கடைசியாய் வீழும் போது நமக்கான அழக்குரல் உண்மையில் நமது கற்பனை தான்.
    உன்னிப்பாய் கவனித்தால்
    அது சர்க்கஸ் முடியும் போது தோன்றும் கரகோஷம் என புரிந்து கொள்ளலாம்.

    அடித்தாலும் சரி
    நடித்தாலும் சரி
    உண்மை கசப்பானது தான்.
    மரணம் இனிப்பானது என எவன் சொன்னான்.
    இறப்பிற்கு பிறகு நம்மை கொண்டாடுவார்கள் என எவன் சொன்னான்.

    அவர்களுக்கு நம்மை பற்றி உண்மையிலே எந்த அக்கறையும் கிடையாது.


  • கிழவனது கண்ணிமை முடிகளை எறும்புகள் பாதி மென்று
    ஒன்று போல தைத்து விட்டாற் போல வலி.
    அந்த வலியோடு தான்
    தினமும் அந்த கிழவனின் தூக்கம் கலையும்.

    எப்போதும் போல விழிப்பு வானத்தை பார்த்தபடி தான்.
    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முகம் காட்டும் வானம்.
    ஆனால் பெரும்பாலும் ஒரே மாதிரியான தின வாழ்க்கை தான் கிழவனுடையது.

    முதல் காரியமாய் தொலைந்து போன அவனது நாணயத்தை தேட தொடங்குவான்.
    ‘நடைபாதை, புல்வெளி, புதர்
    இவற்றை தாண்டி அந்த நாணயம் வேறு எங்கும் போய் இருக்காது.’
    அங்குலம் அங்குலமாய் அந்த பகுதிகளை அலசி கொண்டிருப்பான்.
    கற்களை மெல்ல புரட்டி பார்ப்பான், குழந்தையை தொடுவது போல.
    தேடல் தீவிரமாய் நடந்து கொண்டிருக்கும் போதே வானம் இருட்ட தொடங்கி விடும்.
    நிலா ஒளியும், தெரு விளக்குகளும், இருட்டும் கிழவனை குளிப்பாட்டும்.
    ஆனாலும் தேடல் நடந்து கொண்டே இருக்கும்.

    முப்பது வருடங்களுக்கு மேலாகி விட்டது எனினும்
    கிழவன் எப்போதும் நாணயத்தை தேடி கொண்டே இருக்கிறான்
    ஒருவித லயிப்போடு.


  • நகரத்தின் இறுக்கம் சில சமயம் யதேச்சையாக பார்க்க கிடைக்கும் சில காட்சிகளில் வெளிபடுகிறது. ஓர் ஐம்பது வயது முதியவர் டிராபிக் சிக்னலில் தனது ஸ்கூட்டருடன் விழுந்து விட்டார். சமாளித்து எழுந்து அதை உதைத்து ஸ்டார்ட் செய்ய முயல்கிறார். ஸ்கூட்டர் மீண்டும் சரிகிறது. சிக்னலில் பச்சை விளக்கு எரிகிறது. முதல் ஆளாய் நிற்கும் இந்த முதியவரை நோக்கி ஒரே சமயத்தில் ஒலிக்கின்றன பல வகையான ஹாரன் ஒலிகள்.

    தனது பேரனை பள்ளிக்கு கூட்டி செல்லும் மூதாட்டி வழி தெரியாமல் சாலையில் பரிதவித்து நிற்பது போன்ற காட்சிகள் நமது கண்பார்வையின் எல்லையோரம் நடந்து மறைந்து விடுகிறது.

    இது வேறொரு மூதாட்டியின் கதை. ஹெலன் அந்த மூதாட்டியின் பெயர். காலை ஏழுரை மணிக்கு வடபழனி பஸ் நிறுத்தம் பக்கம் கூடும் ஒரு சிறு கூட்டத்தில் அவரைக் காண முடியும். வீடு வீடாக போய் சோப்பு பவுடர் போன்றவற்றை விற்க வேண்டும். இந்த கூட்டத்தில் ஹெலன் தான் மிகவும் வயதான பெண்.… …மேலும் வாசிக்க


  • மேகங்கள் திடீரென ஒரு நாள்
    வேகமாய் நகர தொடங்கி இருப்பதை கவனித்தேன்.

    ஆற்றுத்தண்ணீர் போல
    அந்த தண்ணீரில் கொப்பளிக்கும் நுரைகள் போல
    போர் விமானங்கள் போல
    சோகங்கள் போல
    ஓவியத்தின் மீது ஊற்றபட்ட தண்ணீர் போல
    மேகங்களின் அபரித வேகத்தை கண்டு
    எனக்கு பயமாக இருந்தது.

    தினமும் காலையில் கண் விழித்தவுடன்
    இன்றாவது மேகங்களின் போராட்டம்
    முடிவிற்கு வந்து விட்டதா என்கிற
    ஆர்வத்துடன் வீட்டிற்கு வெளியே வந்து
    பார்க்க தொடங்கினேன்.

    ஆனால்
    முடிவே இல்லாத நீண்ட கனவாக
    அது மாறி கொண்டிருந்தது.

    அப்போது தான் அது நடந்தது…