வருகிற நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் ஈழப்பிரச்சனை தாக்கம் ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனால் பிரதான தாக்கம் ஏற்படுத்துமா என்பது தான் கேள்வி.
இந்திரா காந்தி இறந்த போது எழுந்த அனுதாப அலை, ஒரு சமயம் ஜெயலலிதா அரசின் மீதான அதிருப்தியால் அவரது கட்சியை படுதோல்வியை சந்திக்க வைத்த பொது அதிருப்தி இது போன்று ஈழப்பிரச்சனையும் வருகிற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
தமிழக மக்கள் ஈழப்பிரச்சனை பற்றிய உணர்வுடன் இருந்தாலும், இந்த பிரச்சனையில் அதிமுக, திமுக ஏன் தேமுதிக கூட ஒரே விதமான நிலைபாடுடன் தான் இயங்குகின்றன. அதாவது சந்தர்ப்பவாதம். அப்படியானால் மக்கள் வருகிற தேர்தலில் தங்கள் உணர்வுகளை எப்படி பதிவு செய்வார்கள்.
என்னை பொறுத்த வரை ஈழப்பிரச்சனை எந்தளவு தாக்கத்தை தமிழக தேர்தலில் ஏற்படுத்தும் என்பதை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடையும் வெற்றி/தோல்வி/படுதோல்வி இவற்றை கொண்டே அளவிட முடியும்.
ஈழப்பிரச்சனையில் தங்கள் நிலைபாடு இந்த தேர்தலில் தங்களுக்கு பலவீனமாக மாறும் என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்து இருக்கிறது. அதனாலே ப.சிதம்பரம் ஈழப்பிரச்சனைக்கு தாங்கள் தலையிட்டு மனித உரிமை மீறலை தடுத்தது போல தற்போது பேச தொடங்கி இருக்கிறார்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பல காட்சிகள் மாறி இருக்கின்றன. அரசியல் தலைமையகங்கள் சற்று நடுக்கத்துடன் தான் இருக்கின்றன. வேட்பாளர்கள் அறிவிக்கபட்டு பிறகு மாற்றபடுவது இந்த நடுக்கத்தினை தான் வெளிபடுத்துகிறது. காய் நகர்த்தலின் ஒரு கட்டத்தில் கூட தவறு இழைக்கபட கூடாது என எல்லாரும் நினைக்கிறார்கள். இதனாலே எல்லாருமே தாங்கள் ஈழப்பிரச்சனையில் தீர்வு காண விரும்புகிறோம் என்கிற தோற்றத்தை வெளிபடுத்தி கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதாவே ஈழப்பிரச்சனைக்காக உண்ணாவிரதம் இருக்குமளவு தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கி வந்து இருக்கிறார் என்றால் ஈழப்பிரச்சனையின் தாக்கம் வருகிற தேர்தலில் கடுமையாக இருக்கும் என்பதினால் தானே.
தேர்தல் தேதி நெருங்க நெருங்க ஈழத்தில் இருந்து வரும் செய்திகளை பொறுத்து இந்த தாக்கத்தின் வீரியம் அதிகரிக்க கூடும்.
தேர்தலில் ஈழப்பிரச்சனை தாக்கமேற்படுத்தும் என்றாலும் தேர்தலுக்கு முன்னாலும் பின்னாலும் தமிழக அரசியல் தலைமையகங்கள் ஈழப்பிரச்சனையில் அதே சந்தர்ப்ப வாதத்துடன் தான் இயங்கும் என்பது குரூரமான யதார்த்தம்.
Leave a Reply to ரவிசங்கர் Cancel reply