வோட்டு போடுவது மட்டும் தான் ஜனநாயக கடமையா?

ஜனநாயகம் என்பது என்ன?

இன்று நடைமுறையில் இருப்பது உண்மையான ஜனநாயகம் தானா? ஜனநாயகம் என்பது மக்களே தங்களை தாங்களே ஆண்டு கொள்ளும் முறை என்று சொல்லபடுகிறது. அதில் கண்ணுக்கு தெரியாத சின்ன திருத்தம் ஒன்று இருக்கிறது. மக்கள் தங்களுக்கான பிரதிநிதியை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக தங்களை ஆண்டு கொள்ளும் முறை என வரையறுக்கபடுகிறது. பிரதிநிதிகள் ஒழங்கானவர்கள் தானா என எப்படி அறிவது? அதற்கு தானே ஐந்து ஆண்டு காலக்கெடு, அவர்கள் ஒழங்காய் இல்லை எனில் அவர்களை தூக்கி எறிந்து விட்டு வேறு யாரையாவது தேர்ந்தெடுத்து கொள்ளலாமே என சொல்வார்கள்.

வெகு சிலரிடம் மட்டும் அதிகாரம் இருப்பதால் என்ன பயன்?

இன்றைய யதார்த்ததை மேற்சொன்னவற்றோடு ஒப்பிட்டு பாருங்கள். அரசியல் கட்சிகள் பெரும்பாலும் யாராவது ஒருவர் கட்டுபாட்டில் இயங்கும் சூழ்நிலைக்கு வந்து விட்டன. உட்கட்சி ஜனநாயகம் என்பது எல்லாம் கேலி கூத்தாகி விட்டன. அரசியலில் ஆர்வமுள்ள தகுதியான ஓர் இளைஞர் பணம் செல்வாக்கு எதுவுமின்றி இன்றைய பெருங்கட்சி எதிலாவது வேட்பாளராக தேர்ந்தெடுக்கபடுவது கிட்டதட்ட முடியாத காரியம். அப்படியானால் மக்கள் தங்களுக்கான பிரதிநிதியை தேர்வு செய்கிறார்களா? அல்லது வெகு சில அரசியல் சக்திகள் சுட்டி காட்டும் நபர்களில் ஒருவருக்கு வோட்டு போடுகிறார்களா? அப்படியானால் இதில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது மக்களா அல்லது அந்த அரசியல் சக்திகளா? வெறும் பத்து இருபது பேர் மட்டும் தான் இந்த ஜனநாயகத்தை ஆள்கிறார்கள் எனில் அப்புறம் எதற்கு இதற்கு ஜனநாயகம் என்று பேர்.

எழுத்தறிவில்லா சமூகத்திற்கு இதை பற்றி விழிப்புணர்வு இல்லை

பெருங்கட்சிகளை பிடிக்கவில்லை எனில் மக்கள் சிறுகட்சிகளுக்கோ அல்லது சுயேட்சைகளுக்கோ வோட்டு போட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தகுதியான நபரை பார்த்து வோட்டு போட வேண்டும் என்கிற விழிப்புணர்வு எவ்வளவு பேருக்கு இருக்கிறது? பெரும்பாலும் எழுத்தறிவில்லாத நமது மக்களிடையே குறிப்பிட்ட கட்சிக்கு வோட்டு போடுமளவு தூண்டுவதற்கு அந்தந்த வார்டுகளில் ஒரு பெருந்தலை இருக்கிறது. அந்த பெருந்தலையை அந்த குறிப்பிட்ட கட்சி தான் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் எதாவது டெண்டர் கொடுத்தோ அல்லது வேறு வகையிலோ கவனித்து கொள்கிறது. ஆனால் வோட்டு போட்ட மக்களின் கதி என்ன?

இதற்கு என்ன தீர்வு?

சரி இது தான் தேர்தலின் நிலை. தேர்தலில் வோட்டு போடுவதை தவிர ஒரு சாதாரண குடிமகனுக்கு வேறு ஜனநாயக கடமைகளே கிடையாதா? ஜந்து வருடங்களில் அந்த ஒரு நாள் மட்டும் தான் அவனுக்கு அதிகாரமா?

சென்னையில் காந்தீய காங்கிரஸ் மற்றும் சாத்வீக சமூக சேவகர் சங்கம் ஆகிவற்றின் அமைப்பாளர் வ.சொக்கலிங்கம் என்பவர் ஒரு கூட்டத்தில் நிகழ்த்திய உரையின் சாரம்சத்தை ஓட்டி என் கருத்தினை அதோடு கலந்து கீழே தருகிறேன்.

எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் நடந்தது ஒரு சம்பவம். சாலை சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் டெண்டர் எடுத்தவர் எதோ பேருக்கு சாலை போடுவது போல அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் என போட்டு விட்டு காணாமல் போய் விட்டார். நான் சொந்த காசு கொடுத்து நேரிடையாக வேலை வாங்கி இருந்தால் இப்படி என்னை ஏமாற்றி விட்டு போக முடியுமா? சம்பந்தபட்ட அதிகாரிகள் இதை எல்லாம் கண்காணிக்கிறார்களா அல்லது லஞ்ச பணத்தை கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்களா? இதை தட்டி கேட்க எங்கு மனு கொடுத்தாலும் ஒன்றும் நடப்பதில்லை. (மனு கொடுத்தவருக்கு அடிஉதை கிடைக்காமல் இருந்தாலே ஆச்சரியம்.) அப்படியானால் சாதாரண குடிமகனாகிய எனக்கு எந்த அதிகாரமும் கிடையாதா?

உண்மையான ஜனநாயகம் என்பது என்ன?

நமது ஜனநாயகம் நிறுவபட்ட போது உள்ளாட்சிகளை விரைவில் ஓர் அதிகார பீடமாக கொண்டு வருவதாக சொல்லபட்டது. அரசமைப்பு சட்ட உறுப்பு 40-ன் மூலம் அரசு கொள்கையினை நெறிபடுத்தும் கோட்பாடு (Directive principles of state policy) என்ன சொல்கிறது? அனைத்து மாநில அரசும் கிராம பஞ்சாய்த்துக்களை உருவாக்கவும், அவை தன்னாட்சி அமைப்புகளாக செயல்படுவதற்கு தேவையான அதிகாரங்களையும், அதிகாரம் செலுத்தும் உரிமையினையும் வழங்கவும் வேண்டும் என இந்த நெறிமுறை கோட்பாடு சொல்கிறது. ஆனால் யதார்த்தத்தில் இந்த கட்டளை இன்னும் நிறைவேற்றபடவில்லை.

அடிதட்டு மக்கள் வரை அனைவரது கைக்கும் அதிகாரம் சென்றடைய வேண்டி இந்த நெறிமுனை கோட்பாடுகள் உருவாக்கபட்டன. ஆனால் இவை ஆளும் அதிகாரத்தால் உதாசீனபடுத்தபட்டு விட்டன.

உள்ளாட்சிகளுக்கு போதிய அதிகாரங்கள் இன்னும் கொடுக்கபடவில்லை. இன்று நம்மிடையே அதிகாரத்தில் இருப்பது ஒன்று மத்திய அரசாங்கம், இன்னொன்று மாநில அரசாங்கம். இதில் மூன்றாவதாக அதிகாரத்திற்கு வர வேண்டியது உள்ளாட்சிகள். இதன் மூலம் அந்தந்த பகுதி மக்கள் தங்களை தாங்களே ஆண்டு கொள்ளும் முறை அமுலுக்கு வரும். அதிகாரம் ஒரு சிலரது கையில் மட்டும் இல்லாது பரவலாக்கப்படும்.

அமெரிக்காவில் பிரிட்டிஷ்காரர்கள் வந்து குடியேறினார்கள். பிறகு அவர்கள் பிரிட்டிஷ் மகாராணியை ஏற்று கொள்ள மாட்டோம் என போரிட்டு வென்று தங்களுக்கு ஜனநாயக நாட்டை நிறுவி கொண்டார்கள். இந்த சிவில் யுத்தம் நடைபெற தொடங்கிய சமயம் ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் கூடி தாங்கள் எந்த பக்கம் சேர போகிறோம் என்பதை விவாதித்து முடிவு எடுத்தார்கள். அந்த விவாதத்தில் ஒவ்வொரு குடிமகனும் தனது கருத்தை பதிவு செய்ய அனுமதிக்கபட்டான். நான் சொல்வது சிவில் யுத்தம் பற்றி அல்ல. அந்தந்த கிராமங்களில் இருந்த ஜனநாயகத்தை பற்றி. சாலை போடுவதற்கான டெண்டர் எடுத்தவன் ஏமாற்றினால் கூட அதனை எடுத்து சொல்ல எனக்கு ஒரு சபை தேவை. அது குறைந்தபட்சம் எனது தெருமக்களுக்கானதாக இருக்கலாம். இதில் எனக்கு பிரதிநிதிகளே தேவை இல்லை. நானே பேசுவேன். எனது வரிப்பணத்தை சம்பளமாக பெறும் அதிகாரிகள் எனது குரலை மதிக்க வேண்டுமெனில் எனது உரிமை நிலைநாட்டபட வேண்டும். எனக்கு அதிகாரம் கொடுக்கபட வேண்டும்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம்

அதிகார பரவலாக்கம் நடந்தால், பிறகு எனது பகுதியில் சாலை போடுபவர் ஏமாற்றினால் நான் அவரது டெண்டரை கேன்சல் செய்ய ஆவண செய்ய முடியும். எனது குரலுக்கு ஒரு மதிப்பு இருக்கும். லஞ்சம் வாங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஏனெனில் அப்போது நானும் ஆளும் வர்க்கம் தாம். ஜனநாயகத்தில் எல்லாருமே ஆளும் வர்க்கம் தான். மாறாக இன்று நடைமுறையில் இருப்பது ஆள்பவர்கள் ஆளபடுபவர்கள் என்கிற இரு பிரிவு தாம்.

அடுத்த முறை தேர்தலில் ஓட்டு போடுவது உங்களது ஜனநாயக கடமை என யாராவது பிரச்சாரம் செய்தால், வோட்டு மட்டுமே ஜனநாயக கடமையல்ல, இன்னும் நிறைய கடமைகளும் அதோடு பல உரிமைகளும் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கின்றன என நினைவுபடுத்துங்கள்.

நன்றி:

வ.சொக்கலிங்கம், அமைப்பாளர், காந்தீய காங்கிரஸ் மற்றும் சாத்வீக சமூக சேவகர் சங்கம்.

ஓவியங்கள் – Allan Lissner


Comments
2 responses to “வோட்டு போடுவது மட்டும் தான் ஜனநாயக கடமையா?”
  1. jeyaprakash Avatar
    jeyaprakash

    i can’t read fully sai

  2. வருகைக்கு நன்றி ஜெயபிரகாஷ். பழைய பிளாக்ஸ்பாட் வலைப்பதிவிலிருந்து இப்போது புது வலைப்பதிவிற்கு போஸ்ட்களை எல்லாம் மாற்றும் போது நிறைய குளறுபடிகள் நிகழ்ந்து விட்டன. முக்கால்வாசி கமெண்ட்கள் காணாமல் போயிருந்தன. அதில் ஏறத்தாழ அனைத்தையும் மீட்டு விட்டேன். உங்கள் கமெண்ட்டை படித்த பிறகு தான் போஸ்ட்கள் பலவற்றில் படங்களும் பாதி போஸ்ட்களும் காணாமல் போனதை கண்டுபிடித்தேன்.

    இப்போது இந்த போஸ்ட் பழைய நிலைக்கு வந்து விட்டது. குளறுபடிகள் அனைத்தும் விரைவில் சரி செய்து விடுவேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.