இடுகாட்டிலும் சாதியா?

“…நமது அரசியலைப்பு உருவாகி அறுபது வருடங்களாகி விட்டன. தீண்டாமை இன்னும் அழிந்தபாடில்லை…” – நீதிபதி பி.கே.மிஸ்ரா & நீதிபதி ஜெயசந்திரன், உயர்நீதிமன்றம்.

மேற்சொன்ன வார்த்தைகள் சமீபத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகளால் சொல்லபட்டவை. என்ன வழக்கு அது?

திருச்சி அருகே மணப்பாறை தாலுக்காவில் உள்ள சம்பட்டி பஞ்சாய்த்து இடுகாட்டில் தலித் உடலை புதைக்க அனுமதி மறுத்தனர் சாதி இந்துக்கள். இது நடந்தது டிசம்பர் 2008இல். மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் என எல்லா உயர் அதிகாரிகளும் அங்கு வந்து சமரசம் பேசினர். சாதி இந்துக்கள் தலித் உடலை இடுகாட்டில் அனுமதிக்க தயாராக இல்லை. காலம் காலமாக அரசு உயரதிகாரிகள் எடுக்கும் அதே முடிவை தான் இந்த உயரதிகாரிகளும் எடுத்தார்கள். சர்ச்சை உருவானால் சட்டம் ஒழுங்கு கெடும் என்பதால் எதற்கு வம்பு என்று தலித் உடலை வேறு இடத்தில் புதைத்து கொள்ள சொல்லி விட்டார்கள்.

தற்போது இந்த விஷயத்தை பற்றி வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு மீதான விசாரணையில் தான் நீதிபதிகள் மேற்சொன்ன வரிகளை சொன்னார்கள். இத்தனைக்கும் இது அரசால் கட்டபட்ட இடுகாடு. மாவட்ட ஆட்சி தலைவரும், காவல் துறை அதிகாரிகளும் தீண்டாமையை தடுக்க இன்னும் தீவிரம் காட்டியிருக்க வேண்டும் என நீதிபதி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

சாதி பிரச்சனைகள் வரும்போது, முக்கியமாக தலித் மக்கள் தங்களுடைய உரிமைகளை கோரும் போது காலம் காலமாக அரசும் அரசாங்க அதிகாரிகளும் அவர்களுக்கு எதிராக நிற்பதை பல சமயங்களில் காண முடியும். ஒன்று, அதிகாரிகள் பெரும்பாலும் சாதி இந்துகளாய் இருப்பது ஒரு காரணம். மற்றொன்று அதிகாரிகளுக்கு தங்களுடைய கடமைகளை விட, வீண் சிரமம் இல்லாமல் வேலைகளை முடித்து கொள்ள வேண்டும் என்கிற நழுவல் புத்தி. இந்த புத்தியினை பெரும்பாலும் காவல்நிலையங்களில் பார்க்கலாம். அங்கு பொதுவாக யார் புகார் கொடுக்க போனாலும், “இருக்கிற வேலை போதாதா, நீ வேற புகார் கொடுக்க வந்துட்ட,” என்பார்கள்.

அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் ஒரு சிறு விளக்கை இருண்ட வனத்தில் ஏற்றியிருக்கிறார்கள்.

ஓவியம் – deborahmcintosh


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.