Month: December 2008

  • நமக்கு தெரிந்த தகவல் தான். ஆனால் ஆராய்ச்சி முடிவாய் வெளிவரும் போது அதிர்ச்சியாக தானே இருக்கிறது. அதிகாரம் படைத்தவர் முதலாளியோ, கம்பெனி எம்.டியோ, சிறுவர்களாய் இருந்தால் தந்தையோ, அதிகாரமிக்கவர் யாரேனும் ஆணையிட்டால் அதனை ஏற்று பெரும்பாலனோர் கொல்லவும் துணிவார்கள் அல்லது குறைந்தபட்சம் மற்றவர்களை சித்ரவதை செய்யவும் துணிவார்கள். இது சாந்தா கிளாரா பல்கலைகழகத்தில் உள்ள முனைவர் ஜெர்ரி பர்கர் என்பவர் வெளியிட்டுள்ள ஆய்வின் முடிவு. இதற்கு முன்பு இதே போன்ற ஆய்வு முடிவினை 1963-ம் ஆண்டே யேல் பல்கலைகழகத்தை சேர்ந்த ஸ்டான்லி மில்கிராம் என்பவர் வெளியிட்டார். சர்ச்சைக்கு ஆளான இந்த ஆய்வு முடிவு இப்போது மீண்டும் செய்திகளில் அடிபட தொடங்கியிருக்கிறது. மிக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் கூட கலவரங்கள் நடக்கும் போது சட்டென எதிர் இனத்தவரை கொல்லும் கும்பலில் சேர்ந்து மிக கொடூரமான குற்றங்கள் புரிவது பற்றி இந்த ஆய்வு முடிவு விளக்க முயல்கிறது.

    அதிகாரம் என்பது ஒரு கதாபாத்திரம் அல்ல

    அதிகாரம் என்பது ஒரு நாட்டின் ராணுவ அதிகாரியையோ அல்லது ஒரு குழுவின் தலைவனை மட்டும் குறிப்பதல்ல.… …மேலும் வாசிக்க


  • மண் புழுதி தெருவில் பறக்க
    அந்த அக்காவை
    அவர்கள் இழுத்து சென்ற காட்சியை
    அவள் கண்டது ஐந்து வயது சிறுமியாக.

    முப்பது நாற்பது வருடங்கள் உருண்டோடினாலும்
    அந்த மண் புழுதி
    இன்னும் மறையவே இல்லை.
    அதோடு, “இனி நம்ம சாதி பொம்பளைங்க
    சாதி மாறி ஆசை வைக்க கூடாது,” என
    அந்த பெண்ணின் மாமன்
    சாராய வாடையோடு கர்ஜித்ததும்;
    பெருங்குரலெடுத்து அந்த பெண்ணின் தாயார்
    மண்டியிட்டு அழுததும்;
    அடுத்த நாள் சுண்ணாம்பு குழியில்
    கண்டெடுக்கபட்ட
    கருகி போன அந்த அக்காவின் உடலும்
    அவளை துரத்துகின்றன
    ஒவ்வொரு முறையும்
    அவள் காதலர்களை கடக்கும் போதெல்லாம்.


  • இன்று காலை நான் தூங்கி விழித்த போது என் படுக்கைக்கு நேர் எதிரில் இருந்த தொலைக்காட்சி பெட்டியில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஈராக்கிய பத்திரிக்கையாளர் ஒருவர் தனது ஷுவை எறிந்த காட்சி ஒளிபரப்பாவதை பார்த்தேன். இப்படியாக இந்த காட்சியை பார்த்து என்னுடைய நாள் தொடங்கியது குறித்து ஏனோ எனக்குள் ஒரு மகிழ்ச்சி. எதற்காக இந்த மகிழ்ச்சி?

    இன்று முழுவதும் நான் சந்தித்த மனிதர்கள் பல பேர் இந்த காட்சியினை கண்டு சந்தோஷபட்டதை பார்த்தேன். யாரும் தீவிர அமெரிக்க எதிர்ப்பாளர்கள் கிடையாது. உலகிலே மிகுந்த அதிகாரமுள்ள ஒருவர் மீது ஷு எறியும் துணிவுள்ளவரை பற்றிய வியப்பும் அல்ல இது. பலருடைய மனதில் இருக்கும் பெருங்கதையாடல் குறித்த கோபம் தான் இப்படி வெளிபடுவதாய் நினைக்கிறேன். அல்லது அதிகாரத்தின் மீதான சராசரி மனிதனுக்கு இருக்கும் கோபத்தின் வெளிபாடு தான் இந்த காட்சி குறித்தான மகிழ்ச்சி என்று நினைக்கிறேன்.

    முன்டேசர் அல் சய்தி! ஈராக்கில் உள்ள அல் பாக்தாத்தியா என்கிற தொலைக்காட்சி நிறுவனத்தில் பத்திரிக்கையாளராக வேலை பார்த்து வருபவர்.… …மேலும் வாசிக்க


  • 1. பிரச்சாரத்தின் பிம்பம்
    புகைப்படக்காரர் – கிரிஸ்டோபர் மோரிஸ்

    அமெரிக்காவில் இந்த ஆண்டு நடந்த அதிபர் பதவிக்கான தேர்தல் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கான பிரச்சாரம் வரலாறு காணாத வகையில் பிரம்மாண்டமாக நடந்தது. அதிபர் பதவிக்கு போட்டியிட்ட மெக் கைன் தான் நிகழ்த்த இருக்கும் உரைக்கு தன்னை தயார் செய்து கொண்டிருந்த போது அவரது மனைவி சிண்டி, ஓட்டல் அறையில் வெள்ளை வைனை அருந்தியவாறு கணவருக்காக காத்திருந்தார்.

    பெல்ப்ஸ் சாதனை
    புகைப்படக்காரர் – ஹன்ஸ் லுடைமியர்

    இந்த ஆண்டு சீனாவில் நடத்தப்பட்ட ஓலிம்பிக் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் போட்டி வீரர் மைக்கெல் பெல்ப்ஸ் உலக சாதனையாக அதிகளவு தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். அவரது ஏழாவது தங்கப்பதக்கம் நூறு மீட்டர் பட்டர்ஃபளை நீச்சலில் கிடைத்தது. இதில் அவருக்கு அடுத்ததாக வந்த செர்பிய நாட்டு நீச்சல் வீரர் மிலோரட் கேவிக்கிற்கும் அவருக்கும் இருந்த வித்தியாசம் வெறும் .01 விநாடிகள் தாம்.… …மேலும் வாசிக்க


  • பனை மரங்கள் ஆடி ஓய்ந்த
    சூறாவளி நாளுக்கு அடுத்த தினம்.

    இப்போது தான் எல்லையருகே வந்து இருக்கிறேன்.
    சூறாவளியை போர்வையாய் போர்த்தி
    எல்லை தாண்டலாம் என்கிற கனவு
    இனி பலிக்காது.

    துப்பாக்கி ஏந்தி ஒரு காக்கி கூட்டம்
    எறும்பு வரிசையாய் தூரத்தில் தெரிகிறது.

    ஆத்மாக்களை பிழிந்து உருவாக்கிய
    முறுக்கு கம்பிகள்
    இரத்த வாடையுடன் நீளமான கோடு கிழித்து
    காத்து இருக்கின்றன.
    வேலியினூடாக
    மின்சார தெரிப்பு மின்னலாய் நெருப்பினை
    துப்பி துப்பி தயாராகி விட்டன.

    நான் ஓட வேண்டும்.
    அவகாசமில்லை.

    மழை தெளித்த வீட்டின் முகப்பில்
    தவளைகளின் பெருங்குரல்களுக்கு பின்னே
    தன் அழுகையை ஓளித்து வைத்து
    காத்து இருப்பாள் என் மனைவி
    இறந்து போன மகளின் படத்தோடு.