Month: February 2008

  • வெறுமையின் சூடு பரவி கொண்டிருக்கிறது.

    கண்களுக்கு எட்டிய தூரம் பாலைவனம்.

    தூசு காற்று அலை அலையாய் படையெடுக்கிறது.

    சூரியன் கூட வெப்பம் தாங்காமல் மஞ்சளாக மாறி விட்டான்.

    மணல்வெளி மணலாலே முழுங்கபடலாம்.

    மனம் முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறது தாகம்.

    நைந்து போன உடைகள் இன்னும் கிழிந்து தொங்குகின்றன.

    எலும்புகள் கெஞ்சுகின்றன.

    திருவல்லிகேணி சாந்தாராம் மேன்சன்.

    ரூம் எண் 18யை யாரோ தட்டுகிறார்கள்.

    ஒரு கணம் பாலை எண்ணங்களிலிருந்து விடுதலை.


  • மிகவும் சாதாரண உரையாடல் தாம்.

    பரஸ்பர நலம் விசாரிப்பு.

    பார்க்கலாமென சம்பிரதாய விடை பெறுதல்.

    பல மணி நேரம் கழித்து

    திருமண மண்டபத்தை காலி செய்து

    நாற்காலிகளை அடுக்கி கொண்டிருக்கிறார்கள்.

    மண்டபமெங்கும் நிறைந்திருக்கின்றன

    அவள் கண்களால் உரையாடியவற்றின்

    விளக்கவுரைகள்.


  • மண்ணை கூட உலர்த்தி விடும் எங்களூர் வெயிலில்

    நூறாண்டுகளுக்கு மேலாக எங்கள் வீட்டுக்கு எதிரில்

    கோயில் தூணில் வாளை சுமந்தபடி நிற்கிறது ஒரு வீரனின் சிற்பம்.

    முப்பாட்டனுக்கு அது தெய்வம்.

    பாட்டனுக்கு அது துரதிர்ஷடம்.

    அப்பாவுக்கு அது கல்.

    எனக்கு காதல் சின்னம்.

    ஒவ்வொருவரும் தங்களுக்கான பிரதியை எடுத்து கொள்ள

    சிற்பியின் பிரதி அவனோடே மாண்டு போனதோ?


  • வானத்தில் வெளிச்சத்தை ஊற்றியது மின்னல்.

    உனது ஜன்னல் கண்ணாடியில் மின்னி மறைந்தது உன் நிழல் உருவம்.

    எனக்கு மேலிருந்த தடுப்பு, பெருமழைக்கு இனியும் தாங்காது.

    உடலெங்கும் ஈரம்.

    அடுத்த மின்னலுக்கு காத்திருக்கிறேன்.

    நம் இருவருக்குமிடையே

    மழை கட்டி கொண்டிருக்கிறது சுவரை.