
எங்களூர் நெடுஞ்சாலையில் எப்போதும் வாகனங்கள் நிறைந்திருக்கும். என்னுடைய சிறு வயதில் அந்த சாலையை கடப்பதை ஒரு கலையாக பாவித்து கற்று கொண்டேன். லாரிகளும் பஸ்களும் ஸ்கூட்டர்களும் ஓடி கொண்டிருக்கும் சாலையினை கடக்க ஒரு கணம் நிதானித்து, பிறகு சரியான சந்தர்ப்பத்தில் ஓட்டமும் நடையுமாக கைகளை முன்னால் நீட்டியபடி கடந்து விடுவேன். சாலையை கடக்க முடியாமல் நிற்கும் பெரிசுகளை பார்க்கும் போது சிரிப்பாக இருக்கும். பள்ளிகாலம் முடிந்து கல்லூரியில் சேர்வதற்காக சென்னைக்கு வந்த போது இந்த கலை கைகொடுக்கவில்லை.
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஒரு சிக்னலில், பச்சை விளக்கு எரியும் போதே சாலையை கடக்க முனைந்தேன். அர்ஜுனனின் அம்புகள் போல காவேரி பெருவெள்ளம் போல வாகனங்கள் என்னை அரவணைத்தபடி போனது. சுழலில் மூழ்கி விடுவோம்; இதோ விபத்திற்குள்ளாகி இறந்து விடுவோம் என தோன்றியது. முன்னாலும் போக முடியாமல் பின்னாலும் போக முடியாமல் நான் தவிப்பதை அங்கிருந்த டிராபிக் போலீஸ்காரர் முறைத்தபடி இருந்தார். ஒருவழியாய் தடுமாறி வந்த இடத்திற்கே திரும்பி போது சென்னை என்பது வேறு நிலப்பரப்பு என உறைத்தது.… …மேலும் வாசிக்க


