Category: மனிதர்கள்

  • தெய்வாணை அந்தப் பெண்ணின் பெயர். பிரசவ வலியோடு மலைக்கிராமத்தில் இருந்து தொட்டில் கட்டி கீழே கொண்டு வரப்பட்டு இரண்டு ஆண்களுக்கு இடையில் பைக்கில் அமர்ந்து பயணித்து மருத்துவமனைக்குச் சென்றடைந்த தெய்வாணையின் கதை கேட்பவர்களைப் பதற வைக்கும்.

    அவருக்கு இருபது வயதிருக்கும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கடம குட்டை என்கிற மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த மலைக் கிராமத்திற்குச் சாலை வசதி கிடையாது. கிட்ட தட்ட ஒன்றரை மணி நேரம் மலை மீது நடந்து தான் அங்குச் சென்றடைய முடியும். மின்சாரமும் கிடையாது. அரசு தண்ணீர் தொட்டி கட்டி தந்தார்கள். என்றாலும் மலைக் கிராமத்து பெண்களின் பகல் நேரத்தின் பெரும்பொழுது தண்ணீரைச் சுமந்து வருவதிலே கழிந்து விடுகிறது. அரிசி எல்லாம் பணக்கார சாப்பாடு அவர்களுக்கு. கூழும் களியும் தான் உணவு.

    கடம குட்டை போல முப்பதிற்கும் மேற்பட்ட கிராமங்கள் இப்படி அல்லல்படுகின்றன. நாகரீக உலகத்தின் சௌகரியங்கள் அனைத்தும் மறுக்கப் பட்டவர்கள் இவர்கள். யாராவது உடல்நிலை சரியில்லாமல் போனால் அவர்களைத் தொட்டிலில் கட்டி மற்றவர்கள் மலையில் இருந்து கீழே கொண்டு போய் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை.… …மேலும் வாசிக்க


  • இந்த ரோடு தானா? இந்தக் குறுக்கு சந்தில் தான் அவளது அலுவலகம் இருக்கிறதா? நான் காரினைத் திருப்பலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருந்த போது, அவள் சாலையில் நடந்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவளைப் பார்த்ததும் உற்சாகமாகி வெளியே எட்டி பார்த்து கையசைத்தேன். அவள் முதலில் கவனிக்கவில்லை. பிறகு தலையை லேசாக ஆட்டி புன்னகைத்தாள். அந்தப் புன்னகை அப்படியே இருக்கிறது. இடையில் பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டதெனினும் அவளை நேற்று தான் பார்த்தது போல் இருக்கிறது.

    மாறாத அதிகாரமிடுக்குடன் அவளது அலுவலக வாயில் வரை நடந்து போய் கார் எங்கே நிறுத்த வேண்டும் என்று சைகை காட்டினாள். நான் காரினை நிறுத்தி விட்டு வெளியே வரும்வரை கண்களால் என்னை எடை போட்டு கொண்டிருந்தாள்.

    “என்ன எப்படி இருக்க?” என்றேன். அந்த ‘என்ன’ வழக்கமாய் ‘டி’யில் முடியும். பத்து வருடங்கள் கழித்து இப்போது அப்படி அழைக்க தயங்கி மென்று முழுங்கினேன்.

    கண்கள் உற்று பார்த்து இருக்க, புன்முறுவலுடன், “வாடா, உள்ள வாடா,” என்று சொல்லி விட்டு அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.… …மேலும் வாசிக்க


  • அவனை எனக்கு முதலில் அடையாளமே தெரியவில்லை. தாடியும் சிவந்த கண்களும் அழுக்கேறிய வெள்ளைச் சட்டையும் அவனை வேறு யார் போலவோ எனக்குக் காட்டியது. அவன் ஜியாவுதீன். அவனிடம் நெருங்கி பழகியதில்லை என்றாலும் முந்தைய மூன்று சந்திப்புகளுமே போதும் அவனை நான் மறக்காமல் இருக்க. அப்படி ஒரு வித்தியாசமான குணாதிசயமுடையவனாக இருந்தான். சில வருடங்களுக்கு முன்பு ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தான் அவனைச் சந்தித்தேன். என் நண்பன் ஒருவன் அவனைப் பற்றி மிக உயர்வாக சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தான்.

    சிவந்த நிறம். போலீஸ் போல கிராப். துறுதுறுவென சுறுசுறுப்பு. சத்தமாய் பேசும் பாங்கு. அவன் அப்போது ஓர் இளம் கம்யூனிஸ்ட். பொதுவான அந்தச் சந்திப்பிற்கு பிறகு சில நாட்களிலே ஒரு புத்தக அறிமுக விழா கூட்டத்தில் மீண்டும் சந்தித்தோம். சில சம்பிரதாய் பேச்சுகளுக்குப் பிறகு அவனுடைய குடும்பம் பற்றி பேச்சு மாறியது.

    “எங்க வீட்ல இப்போ என்னை நாத்திகன்னு திட்டுறாங்க. ஒரு முஸ்லீம் பையன் இப்படிக் கெட்டு போகலாமா அப்படின்னு கவலைப்படறாங்க.”… …மேலும் வாசிக்க


  • ராஜேஷ்வரியம்மாளை யாரோ கொன்றுவிட்டார்கள். இரவு நேரம் ஆளில்லாத சமயம் அவரைக் கழுத்து நெரித்துக் கொன்று, வீட்டிலிருந்து நகைகளையும் பணத்தையும் திருடிச் சென்றிருப்பார்கள் என்று போலீஸ் சந்தேகப்படுகிறது. குடித்தனங்கள் இருக்கிற வீட்டில் புதிதாய் ஓர் ஆள் உள்ளே நுழைந்திருக்க வாய்ப்பில்லை என்றும், இது யாரோ தெரிந்தவர்கள் செய்த வேலை என்கிற ஒரு கோணத்திலும் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது.

    ராஜேஷ்வரியம்மாளுக்கு அறுபத்தி ஐந்து வயதிற்கு மேலிருக்கும். எப்போதும் டல்லான ஒற்றை கலர் பழைய சேலை தான் அணிந்திருப்பார். நெற்றியில் பட்டையாய் விபூதி இருக்கும். கணவர் இறந்ததில் இருந்து குங்குமம் கிடையாது. பல்செட் அணிந்திருப்பதால் வயது பெரிதாய் தெரியாது. தெருவில் அவரை எல்லாரும் முசுடு கிழவி என்று தான் அழைப்பார்கள். ஆனால் அதை அவருக்கு முன்னால் அந்த பேரைச் சொல்ல யாருக்கும் தைரியம் கிடையாது. எல்லாரிடமும் வள் வள் என விழுவது தான் அவரது ஸ்டைல்.

    சென்னையின் ஒரு பிரதான இடத்தில் நெருக்கடியான கட்டிடங்கள் மிகுந்த ஒரு வீதியில் அவருக்கு சொந்தமான ஒரு பெரிய கட்டிடம் இருந்தது.… …மேலும் வாசிக்க


  • எங்கள் தெருவிற்குள் நுழைவதற்கு அந்த மதுக்கடையை தாண்டி தான் வந்தாக வேண்டும். இரவு எட்டு மணிக்கு மேலே மதுக்கடையை சுற்றி கும்பலாய் ஆட்கள் குழுமி இருப்பார்கள். தெரு விளக்கு வேறு பல சமயங்களில் எரியாது. அந்த அக்கா ஜீன்ஸ் பேண்டும் கையில்லாத சட்டையும் போட்டு கொண்டு நாலைந்து தடவை மார்க்கெட்டிற்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருப்பாள். அவள் அந்தக் கடையை தாண்டி தெருவிறகுள் நுழையும் போதும் வெளியேறும் போது சட்டென பேச்சரவம் குறைந்து அனைவரது கண்களும் அவள் மேல் தான் இருக்கும். தெருவிற்குள்ளோ அனைத்து பெண்மணிகளுக்கும் அவள் தான் பேசு பொருள்.

    அவள் பேரு ரேகா. கோபத்தை எப்போதும் முகத்தில் சுமந்து இருக்கவில்லை என்றால் மிக அழகானவளாய் இருந்திருப்பாள். ரொம்ப திமிரானவள் என்று எல்லாரும் அவளை சொல்வார்கள். அதற்காகவே அவள் இன்னும் திமிருடன் திரிய தொடங்கினாள். என்றும் அவள் வெட்கப்பட்டோ பயப்பட்டோ பார்த்ததே இல்லை. பார்வையில் படும் யாரையும் கண்டுகொள்ளவே மாட்டாள். ஆளற்ற சாலையில் செல்பவள் போல பதட்டமில்லாமல் நடந்து போவாள்.… …மேலும் வாசிக்க


  • நகரத்தின் இறுக்கம் சில சமயம் யதேச்சையாக பார்க்க கிடைக்கும் சில காட்சிகளில் வெளிபடுகிறது. ஓர் ஐம்பது வயது முதியவர் டிராபிக் சிக்னலில் தனது ஸ்கூட்டருடன் விழுந்து விட்டார். சமாளித்து எழுந்து அதை உதைத்து ஸ்டார்ட் செய்ய முயல்கிறார். ஸ்கூட்டர் மீண்டும் சரிகிறது. சிக்னலில் பச்சை விளக்கு எரிகிறது. முதல் ஆளாய் நிற்கும் இந்த முதியவரை நோக்கி ஒரே சமயத்தில் ஒலிக்கின்றன பல வகையான ஹாரன் ஒலிகள்.

    தனது பேரனை பள்ளிக்கு கூட்டி செல்லும் மூதாட்டி வழி தெரியாமல் சாலையில் பரிதவித்து நிற்பது போன்ற காட்சிகள் நமது கண்பார்வையின் எல்லையோரம் நடந்து மறைந்து விடுகிறது.

    இது வேறொரு மூதாட்டியின் கதை. ஹெலன் அந்த மூதாட்டியின் பெயர். காலை ஏழுரை மணிக்கு வடபழனி பஸ் நிறுத்தம் பக்கம் கூடும் ஒரு சிறு கூட்டத்தில் அவரைக் காண முடியும். வீடு வீடாக போய் சோப்பு பவுடர் போன்றவற்றை விற்க வேண்டும். இந்த கூட்டத்தில் ஹெலன் தான் மிகவும் வயதான பெண்.… …மேலும் வாசிக்க


  • ‘கதையல்ல நிஜம்’ என்று சில வருடங்களுக்கு முன் பிரபலமாக இருந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. அதில் நான் பணிபுரிந்த போது சந்தித்த மனிதர்களை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இன்னும் அதன் தாக்கத்தில் இருந்து நான் மீளவில்லை.

    அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு பல கடிதங்கள் அந்த நிகழ்ச்சிக்கு வரும். அப்படி வரும் கடிதங்களைத் தொகுத்து கோப்புகளாக பராமரித்து வந்தார்கள். ஒரு நாள் யதேச்சையாக ஒரு பழைய கோப்பினைப் புரட்டி கொண்டிருந்த போது ஒரு கடிதத்தினைப் பார்த்தேன். தெளிவான கையெழுத்தில் முழு நீள வெள்ளைத்தாளில் எட்டு பக்கங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது அந்தக் கடிதம்.

    “என் பெயர் கிருஷ்ணன்,” என தொடங்கியது கடிதம். கடிதத்தின் சுருக்கத்தைக் கீழே தந்து இருக்கிறேன்.

    கிருஷ்ணனுக்கு இப்போது முப்பத்தி இரண்டு வயது. ஏழு வருடங்களுக்கு முன்பு அவர் மும்பையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவருக்குச் சொல்லப்பட்டது கணக்கு வேலை. ஆனால் அவரை வேறு வேலைகள் செய்ய அந்த நிறுவனத்தில் நிர்பந்தம் செய்து வந்தார்கள்.… …மேலும் வாசிக்க


  • அவரது பெயர் அபிநயா. நாற்பது வயதாகிறது. தோற்றத்தில் இன்னும் முதுமை எட்டி பார்க்கவில்லை. கண்களில் மட்டும் எப்போதும் ஒரு லேசான சோர்வு. கணவனுடன் தனி குடித்தனம். இரண்டு குழந்தைகள். ஒரு பையன். ஒரு பெண். மூத்தவனுக்கு பதினைந்து வயதாகிறது.

    சராசரியான மத்தியவர்க்க பெண்மணி போன்ற வாழ்க்கை. கணவர் அரசு உத்தியோகத்தில் இருந்தார். ஸ்கூட்டர் பைக்காக மாறி ஆறு மாதங்களுக்கு முன்பு காராக மாறி இருந்தது. சொந்த வீடு கனவு நனவாகி விட்டது. மிக்ஸி, கிரைண்டர் என சாமான்களும், தங்க நகைகளும் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன்பு பெட் ரூமில் ஏஸி மாட்டினார்கள். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை குடும்பமாய் காரில் வெளியே எங்காவது போய் சுற்றி விட்டு வீடு திரும்புவார்கள். வருடத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு பயணம். வெளிநாட்டு சுற்றுலா செல்ல வேண்டும் என ஓர் எண்ணம் உண்டு. இன்னும் கைக்கூடவில்லை.

    சராசரியான மத்தியவர்க்க பெண்மணி போல தான் வாழ்ந்து வந்தார் அபிநயா.… …மேலும் வாசிக்க


  • செய்யும் காரியத்தில் மோகம். சாப்பிட்டால் சாப்பிட்டு கொண்டே இருத்தல். இல்லாவிட்டால் செய்யும் வேலையில் மோகம். உணவு உறக்கமின்றி வேலையிலே இருத்தல். சினிமாக்கள் பார்க்க தொடங்கி விட்டால் அப்படியே சினிமாக்களிலே லயித்திருத்தல். இப்படியாக ஒரு காரியத்திலே அதீத மோகத்தில் திளைத்திருப்பது பலருக்கு நடப்பது தான். இந்த அதீத மோகம் ஓர் எல்லையை தாண்டினால் மனநோயாகி விடுகிறது என்கிறார்கள். அதில் ஒரு வகை மனவியாதியின் பெயர் Obsessive Compulsive disorder. தமிழில் இதைக் கட்டுப்படுத்தவியலா பிளவுபட்ட மனநோய் என்கிறார்கள்.

    இன்னொரு எளிதான விளக்கம், கைகளைக் கழவினால் கழுவி கொண்டே இருப்பதான ஒரு மன வியாதியைப் பல பேர் கேட்டு இருக்கக்கூடும். பூட்டு போட்ட பிறகு பூட்டு சரியாக போடப்பட்டிருக்கிறதா என சரி பார்த்து கொண்டே இருப்பது. பூட்டிய பிறகு ஒரு முறையோ இரு முறையோ அல்லது மூன்று முறை இழுத்து பார்ப்பது கூட மன பிரச்சனை அல்ல. ஆனால் நடு இரவு தூக்கத்தில் இருந்து எழுந்து இரண்டு கிலோமீட்டர் நடந்து வந்து பூட்டை இழுத்து பார்த்தால் மனப் பிரச்சனை இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம்.… …மேலும் வாசிக்க


  • முதல் சந்திப்பிலே ஆச்சரியப்படுத்தும் மனிதர்கள் உண்டு. சுந்தரமூர்த்தியுடனான முதல் சந்திப்பு அவ்வாறு தான் இருந்தது.

    சுந்தரமூர்த்திக்கு அறுபது வயதிருக்கும். வெள்ளை சட்டை, வேட்டி தான் உடுத்தி இருந்தார். பணக்காரர் என்பதை அவரது வீடும் அவரது வீட்டை அலங்கரித்த பொருட்களுமே சொல்லின. அவருக்கென இருந்த பிரத்யேக அறையில் தான் என்னை சந்தித்தார். அந்த அறை வியாபார நிமித்தமாக வருபவர்களைச் சந்திப்பதற்காக என யூகித்தேன். வியாபாரத்திற்கென தனி அலுவலகம் அவருக்கில்லை என சொன்னார். தேர்ந்த ரசனையுடையவர் என்பதை அவர் அந்த அறையை அலங்கரித்து இருந்த விதமே சொன்னது. மென் நீல சுவர். தூசி படியாத நீல தரைவிரிப்பு. நான்கு சேர்கள். ஒரு நீளமான சோபா. பெரிய மேஜை. ஒரு மர பீரோ. சுவரில் அழகான ஓவியங்கள் இரண்டு. யார் வரைந்தது என தெரியவில்லை. ஆனால் மென்நீல சுவருக்குள் பொருந்துவதற்காகவே வரைந்தாற் போலிருந்தன. அறையின் பிரதானம் அந்த கம்ப்யூட்டர் மானிட்டர் தாம். அந்த அறையின் கர்ப்பகிரக தெய்வம் போல நாயகமாக இருந்தது.… …மேலும் வாசிக்க