Author: elamathi

  • எங்கள் அறையில் எங்கெங்கும்

    குவிந்தும்

                 சிதறியும் கிடக்கின்றன

    அவனது வார்த்தைகள்.

    தனக்குள்ளே பேசியும்,

                                        சி

                                       ரி

                                        த்

                                        து

                                          ம்,

                                                 கதைசொல்லியும்

    கழிகின்றன அவனுடைய நாட்கள்.

     

    களவாடி பகிர்ந்துண்ட நினைவுகள்

    கல்மழை நெஞ்சில் விழ பயந்து ஓடிய கணங்கள்

    மழை நீரோடிய மெல்லிய மணலை சுவைத்த பாதங்கள்

    களிமண்ணில் பானைகள் வடித்தும், வயலில் நாற்று நட்டும்,

    துண்டுகளில் சடை வளர்த்தும் திரிவதாக கனவுகள்

    கைகோர்த்து பூப்பறிக்கச் சொல்லும் சடங்குகள்

    ‘கத்திரிக்கா தோட்டத்தில களை பறிக்க வாரியாளா’

    எனக் கூவும் பாடல்கள்

    எதிர்நீச்சல் போடசொல்லும் கால்வாய்கள்

    இசைவோடு நீந்தச்சொல்லும் குளங்கள்

    பள்ளத்தை கண்டு மிரளாத கிணற்று குளியல்கள்

    நண்பர்களுடன் கோபித்து

    பின் வெட்கப்புன்னகையுடன் சமாதானமாகும் பொழுதுகள்

    சண்டைகள்; சச்சரவுகள்

    இன்றும் எனது துயரங்களுக்கு மருந்து

    பால்யகால நினைவுகளே!

    அவற்றை நெஞ்சில் சுமந்து திரிந்து

    வீடு திரும்புகையில்

    தொலைந்த எதையோ

                                       அட்டைப்பெட்டிகளில்

                 துழாவிக்

                            தேடிக் கொண்டிருக்கிறான்

                                                       என் மகன்.

    – இளமதி.