Month: August 2012

  • நான் மத அடிப்படைவாதி அல்ல. காருண்யத்தைப் போதிப்பவனும் இல்லை. இந்தியா ஜனநாயக பாதையில் மேலும் மேம்பட வேண்டும் என நினைப்பவன். எதிரிகளை அடித்து கொல்வதும், குற்றவாளிகளின் முதுகை உரிப்பதும், கழு ஏற்றுவதுமாய் இருந்த சமூகம் இன்று நீதிமன்றம், அரசமைப்பு சட்டம் என மாறி வந்து இருக்கிறது. அடுத்து நாம் பயணிக்க வேண்டிய திசை எது? மக்களின் நல்லாட்சி என்பது சிவில் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், மனித உரிமைகளை முன்னிறுத்துகிற ஆட்சியாகவும் இருக்க வேண்டும். உலகமெங்கும் பெரும்பாலான மனித உரிமை ஆர்வலர்கள் மரண தண்டனை ஒழிக்கபட வேண்டுமென குரல் எழுப்புபவர்களாகவே இருக்கிறார்கள்.

    அஜ்மல் கசாப் கொடூரமான கொலைகளைச் செய்த தீவிரவாதி. ஒரு நாட்டின் மீது பயங்கரவாதத்தையும் அதன் விளைவாய் மக்களிடையே பெரும் பீதியையும் உருவாக்கிய அணியில் முக்கிய நபர். ஒன்பது பயங்கரவாதிகளுடன் சேர்ந்து மும்பையில் 166 பேரை கொன்ற சம்பவத்திற்குக் காரணமான நபர். கசாப் செய்த குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்திலே இப்போது தண்டனை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.… …மேலும் வாசிக்க


  • மலை உச்சியில் பெருங்கூட்டம்.
    எல்லாரும் முண்டியடிக்கிறார்கள்
    பள்ளத்தாக்கில்
    அனல்கங்குகளைச் சுமந்து ஓடும்
    ஆற்றினைக் காண.

    பெருத்த முலைகளையும்
    முட்டும் தொப்பைகளையும்
    தள்ளியபடி
    முரட்டு யானைகள் போன்ற பெண்கள் கூட்டமொன்றில்
    அரைபட்டு முன்னேறி கொண்டு இருக்கிறேன் நான்.

    கூட்ட நெரிசல்,
    வியர்வை வாசம்,
    காலை யார் யாரோ மிதிக்கிறார்கள்.
    இரை விழுங்கிய பாம்பினைப் போல
    பிதுங்கி நெளிந்து
    கூட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

    யாரோ ஒருவர் மலை மேலிருந்து
    ஆற்றில் விழுகிறார்.
    பிறகு மற்றொருவர்.
    அடுத்தடுத்து யாராவது விழுந்து கொண்டே இருக்கிறார்கள்.

    யாரேனும் விழும் போதெல்லாம்
    சாட்டையை விசிறினாற் போல சத்தம்.
    தொப் என அது முடிவடைவதற்குள்
    அலை அலையாய் மக்களிடையே பரவுகிறது
    ஆரவாரமும் கேலி பெரும் சிரிப்பும்.

    கூட்டத்தில் எனக்கு முன்னால்
    ஒரு குண்டான பெண்
    மற்றவர்களால்
    உயர்த்தப்பட்டு
    தலைகளுக்கு மேலாக உருட்டி செல்லப்பட்டாள்.
    மீண்டும் எழுந்தது பெரும் ஆரவாரம்.

    என் முலையில்
    ஓர் அன்னியனின் கையினை உணர்ந்தேன்.
    தொடர்ந்து முளைத்தன
    பல கைகள்.…மேலும் வாசிக்க


  • தடதடவென ரயில் அதிர்ந்து ஓட
    பாலத்தின் கீழே சாலையில்
    வாகனங்கள்
    அதிர்வலையில் மிதந்து செல்லும்.

    ரயிலோ இல்லையோ
    பாலத்தின் எதோ ஓரிடத்தில் இருந்து
    ரத்தத் துளிகள் விழுந்தபடியே இருந்தன
    சாலையில்
    வருவோர் போவோர் வெகு சிலர் மீது.

    அதை உணராமலோ
    மழைதுளியென எண்ணியோ
    போய் விடுவார்கள் பலர்.

    ரத்தத்தைக் கண்டு திகைத்தவர்கள்
    வேறு பாதைக்கு
    மாறி விட்டார்கள்.

    எங்கிருந்து ரத்தம் சொட்டுகிறது என
    அறிய முற்பட்டவர்கள்
    பலியானார்கள்
    ரயிலின்
    தடதடக்கும் சக்கரங்களுக்கு.


  • நேற்று பதிக்கப்பட்ட இந்த பதிவு ஓர் எதிர்பாரா தொழில்நுட்ப சிக்கலினால் அழிந்து போயிற்று. ஆகவே இதை மீண்டும் பதித்து இருக்கிறேன். RSS (ஓடை சந்தா) மற்றும் மின்னஞ்சல் மூலம் இப்பதிவினைப் படிப்பவர்களுக்கு இது இரண்டாம் முறையாக வந்து சேரும். பொருட்படுத்த வேண்டாமென கேட்டு கொள்கிறேன்.

    குடியரசு தலைவர் தேர்தலும் இப்ப நம்ம ஊரு இடை தேர்தல் மாதிரி ஆகிடுச்சு. பொது தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்துல எந்த அரசியல் கட்சி வோட்டு பலத்தோட இருக்குன்னு காட்டுகிற சடங்கா இடை தேர்தலும் அது மாதிரியே குடியரசு தலைவர் தேர்தலும் மாறிடுச்சு. இந்த அபத்தம் இன்னிக்கு இருக்கிற பல பெரிய அபத்தங்களோட ஒரு வெளிப்பாடு.

    குடியரசு தலைவர் அப்படிங்கிறதே ஒரு அலங்கார பதவி தான். ஆனா எழுத்தளவுல இந்தப் பதவிக்குக் கொடுக்கப்படற முக்கியத்துவம் கண்ணைக் கட்டும். ஜனநாயகத்தின் மூன்று தூண்களாக சொல்லப்படுகிற மக்கள் பிரதிநிதிகள் மன்றம், செயலாக்கம், நீதி பரிபாலனம் ஆகிய மூன்றிற்கும் ஜனாதிபதி தான் தலைவர்.… …மேலும் வாசிக்க


  • வலியே
    வலியை மறக்க வைக்குமளவு
    அடிபட்டு
    உள்ளெல்லாம் சிதைந்து
    நாளெல்லாம்
    மரணத்தை வேண்டி நிற்கும்
    சமயத்தில் கூட
    நம்பிக்கை
    எங்கோ
    சிறு துகளாக
    இருந்தபடியே தான் இருக்கிறது.