Month: July 2011

  • இருளிலே இருளோடு இருளாய் இருந்தான்.
    அவனது கர்ஜனை ஓயும் வரை நாங்கள் மதிலோடு ஒண்டியிருந்தோம்.

    அவள் எங்களை கடந்தாள்.
    வெள்ளை.
    பிரகாசம்.
    வெளிச்சம்.
    இளமையின் உயிர்ப்பு.

    அவளது முகத்தை சோகமே திரையிட்டிருந்ததை பார்த்தோம்.
    எங்கள் இரைஞ்சும் கண்களை உணர்வின்றி பார்த்து விட்டு
    அவள் அவனை நோக்கி நடந்தாள்.

    அவன் பார்ப்பதும்
    திணறுவதும்
    கூத்தாடுவதும்
    இறுதியாய் மண்டியிடுவதையும்
    எங்களால் உணர முடிந்தது.

    எங்கள் அம்புகளை தயாராக்கினோம்.


  • எங்கள் அறையில் எங்கெங்கும்

    குவிந்தும்

                 சிதறியும் கிடக்கின்றன

    அவனது வார்த்தைகள்.

    தனக்குள்ளே பேசியும்,

                                        சி

                                       ரி

                                        த்

                                        து

                                          ம்,

                                                 கதைசொல்லியும்

    கழிகின்றன அவனுடைய நாட்கள்.

     

    களவாடி பகிர்ந்துண்ட நினைவுகள்

    கல்மழை நெஞ்சில் விழ பயந்து ஓடிய கணங்கள்

    மழை நீரோடிய மெல்லிய மணலை சுவைத்த பாதங்கள்

    களிமண்ணில் பானைகள் வடித்தும், வயலில் நாற்று நட்டும்,

    துண்டுகளில் சடை வளர்த்தும் திரிவதாக கனவுகள்

    கைகோர்த்து பூப்பறிக்கச் சொல்லும் சடங்குகள்

    ‘கத்திரிக்கா தோட்டத்தில களை பறிக்க வாரியாளா’

    எனக் கூவும் பாடல்கள்

    எதிர்நீச்சல் போடசொல்லும் கால்வாய்கள்

    இசைவோடு நீந்தச்சொல்லும் குளங்கள்

    பள்ளத்தை கண்டு மிரளாத கிணற்று குளியல்கள்

    நண்பர்களுடன் கோபித்து

    பின் வெட்கப்புன்னகையுடன் சமாதானமாகும் பொழுதுகள்

    சண்டைகள்; சச்சரவுகள்

    இன்றும் எனது துயரங்களுக்கு மருந்து

    பால்யகால நினைவுகளே!

    அவற்றை நெஞ்சில் சுமந்து திரிந்து

    வீடு திரும்புகையில்

    தொலைந்த எதையோ

                                       அட்டைப்பெட்டிகளில்

                 துழாவிக்

                            தேடிக் கொண்டிருக்கிறான்

                                                       என் மகன்.

    – இளமதி.


  • chennai traffic

    எங்களூர் நெடுஞ்சாலையில் எப்போதும் வாகனங்கள் நிறைந்திருக்கும். என்னுடைய சிறு வயதில் அந்த சாலையை கடப்பதை ஒரு கலையாக பாவித்து கற்று கொண்டேன். லாரிகளும் பஸ்களும் ஸ்கூட்டர்களும் ஓடி கொண்டிருக்கும் சாலையினை கடக்க ஒரு கணம் நிதானித்து, பிறகு சரியான சந்தர்ப்பத்தில் ஓட்டமும் நடையுமாக கைகளை முன்னால் நீட்டியபடி கடந்து விடுவேன். சாலையை கடக்க முடியாமல் நிற்கும் பெரிசுகளை பார்க்கும் போது சிரிப்பாக இருக்கும். பள்ளிகாலம் முடிந்து கல்லூரியில் சேர்வதற்காக சென்னைக்கு வந்த போது இந்த கலை கைகொடுக்கவில்லை.

    சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஒரு சிக்னலில், பச்சை விளக்கு எரியும் போதே சாலையை கடக்க முனைந்தேன். அர்ஜுனனின் அம்புகள் போல காவேரி பெருவெள்ளம் போல வாகனங்கள் என்னை அரவணைத்தபடி போனது. சுழலில் மூழ்கி விடுவோம்; இதோ விபத்திற்குள்ளாகி இறந்து விடுவோம் என தோன்றியது. முன்னாலும் போக முடியாமல் பின்னாலும் போக முடியாமல் நான் தவிப்பதை அங்கிருந்த டிராபிக் போலீஸ்காரர் முறைத்தபடி இருந்தார். ஒருவழியாய் தடுமாறி வந்த இடத்திற்கே திரும்பி போது சென்னை என்பது வேறு நிலப்பரப்பு என உறைத்தது.… …மேலும் வாசிக்க


  • நான், மனைவி மற்றும் எங்கள் ஐந்து வயது மகன் மூவரும் மருத்துவமனைக்கு போய் விட்டு திரும்பும் போது வழியிலே ஒரு பொம்மை கடைக்கும் போனோம். பொட்டு முதல் பீரோ வரை அனைத்தையும் விற்கும் பெரிய கடை அது. அதில் ஒரு தளத்தில் குழந்தைகளுக்கான பொருட்கள் இருந்தன.

    கண்ணாடி பெட்டிகளில் கையளவு கார்கள் நூற்றுக்கணக்கில் பார்க் செய்யபட்டிருந்தன. விதவிதமான கார்களை பார்க்கும் போது அவை அனைத்தும் வெளிநாட்டு படங்களில் வரும் நவீன கார்களை போல் இருந்ததேயன்றி எதுவும் நம்மூர் ரோட்டில் ஓடும் கார்களை போலவே இல்லை. சிறிது நேரம் வேடிக்கை பார்த்தபடி இருந்த போது எனக்கே அந்த கார்களை வாங்கும் ஆசை அதிகரித்து விட்டது. எனது பையனோ தேர்ந்த மெக்கானிக் போல கார்களை ஒவ்வொன்றாய் அலசி கொண்டிருந்தான். வீட்டில் ஏற்கெனவே இது போல முப்பது நாற்பது கார்கள் இருக்கின்றன. அதனால் அவன் தான் அதில் நிபுணர்.

    கார்ஸ் என்கிற திரைப்படத்தின் இரண்டாவது பார்ட் சமீபத்தில் ரீலிசானது.… …மேலும் வாசிக்க