Month: June 2010

  • இருளின் ஊடாக குருதி மழையில்
    நனைந்து கிடக்கிறோம்
    நாங்கள் இருவரும்.
    அவள் இதழோரம் கொஞ்சம் மிச்சமிருக்கிறது
    அவளால் கொல்லபட்டவனின் இரத்தம்.
    செந்நீரின் சுவைக்காக ஏங்கி கிடக்கிறேன்
    நான்.

    நிலவை இழந்த வானத்தில்
    அவ்வபோது மின்னி மறைகிறது
    ஒற்றை வெள்ளை கோடு.
    கோட்டானின் கதைத்தலும்
    வௌவால்களின் இறைச்சலும் தூரத்தில்.

    பிணங்களின் கனவுகள்
    மேகங்களாய் மேலெழுந்து
    பாழடைந்த மாளிகையின் சுவர்களில் அப்பி
    சிதைவுகளில் கொஞ்சம் தப்பி போகிறது.

    ஜன்னல், கதவுகளில் மரச்சட்டங்கள்
    சடசடவென உடைகின்றன.
    இறக்கைகளை அடித்தபடி
    யாரோ பறந்து போகிறார்கள்
    கீழ்வானத்தை நோக்கி.

    அவள் கண்களில் காதல் பொங்க
    என்னை பார்க்கிறாள்.

    பின்னிரவு பனியில் உறைய தொடங்குகிறோம்.

    பிறகு
    ஞாயிறு எங்களை மனிதர்களாக மாற்றியது.


  • சருகுகள் கூட இல்லாது போன நிலப்பரப்பில்
    பட்டு போன மரம் போல
    அதன் காய்ந்த பட்டை போல
    அவன் கிடக்கிறான்.

    கேள்விகுறி போல கிடக்கிறது
    அவன் உடல்.
    முதுமையும் காயங்களும் உடலெங்கும்.

    ஆரவாரமான கூட்டம் கடந்து போகும்
    அதே சாலையில் தான்
    அவனும் கிடக்கிறான்.

    கூட்டத்தின் ஒலி
    அவனை தொடும் போதெல்லாம்
    புரண்டு படுக்கிறான்
    தன் கிழிசல்களோடு.

    கறுப்பு வெள்ளை புகைப்படமாய் எடுத்தால்
    மனதை கலைத்து போடும் சித்திரம்.

    அவனை என் கவிதையாய் எழுத
    வார்த்தைகளை தேடி கொண்டிருக்கிறேன்.
    அவனுடைய பார்வை எத்தனை கூர்மையானது என்பதை
    இன்னும் நான் அறியவில்லை.


  • நான்கைந்து நாட்களாக ஒரே உடை.
    கலைந்த தலைமுடி.
    தாடி.
    இமைக்காதது போல அலைபாயும் கண்கள்.
    சிந்தனையைப் போர்த்திக் கொண்ட உடல்.
    குப்பையில் எறிவதற்கு முன்
    கவனமாய் காகிதங்களை
    மடித்து மடித்து வைக்கிறான்
    தினந்தோறும்.

    சாப்பாடு பார்சலாய் வந்த தினசரிகள்,
    பழைய பில்கள்,
    என்றோ உதிர்ந்து போன பத்திரிக்கைத் தாள்கள்,
    மற்றும்
    அவனுடைய கிறுக்கல் பக்கங்கள்.

    காகிதங்களில் இருந்து உதிர்கின்றன
    ஒவ்வொரு எழுத்தாய்.