Month: July 2009

  • பெருவெள்ளமாய் மழை பொழுதுகள்
    நம்மை ஆட்கொண்டிருக்கும் நாட்கள் இவை.

    எனது மூக்கிலிருந்து
    மீண்டும் இரத்தம் சொட்ட தொடங்கி விட்டது.
    கை நகங்களின் நிறம்
    மாறி கொண்டிருப்பதை பார்க்கிறேன்.
    பனி போர்த்திய கார் கண்ணாடி போல
    எனது பார்வை திறன் மங்கி கொண்டிருக்கிறது.

    சிறு செயல்கள் கூட
    மிக மெல்ல மிக மெதுவாக நடப்பதாக பிரமை.
    பெரும்பாலான சமயம் கண்களை திறந்தபடி
    நான் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.
    கனவுகளிலும் இப்போது அது வந்து கொண்டிருக்கிறது.
    ஒவ்வொரு முறையும்
    மனம் மீண்டும் யதார்த்திற்கு திரும்பும் போது
    அதை பார்த்து கொள்கிறேன்.
    கறுப்பு பளபளப்பு மட்டும் தெரிகிறது.
    அசைவுகளே இல்லை வழக்கம் போல.

    எப்போதும் தீண்டும் என தெரியாது
    ஆனால் அவ்வபோது என்னை தீண்டி கொண்டே இருக்கிறது.

    மரணத்தை போல அசைவுற்று இருக்கும் அதனை
    பார்த்து கொண்டே இருக்கிறேன்.


  • வறுத்தாலும் சரி,
    கரித்து கொட்டினாலும் சரி,
    நக கண்களை பிடுங்கினாலும் சரி,
    உண்மை கசப்பானது தான்.

    நாம் வேறு மாதிரி தான் நினைத்து இருந்தோம்.
    நம்முடைய கடைசி ஆசை அதுவாக தான் இருந்தது.
    நம்முடைய துன்பங்களை சுமக்கும் போதெல்லாம்
    அது தான் நம்முடைய உந்து சக்தியாக இருந்தது.

    ஆனால் உண்மை அதுவல்ல.
    யதாரத்தம் வேறு மாதிரியாக தான் இருக்கிறது.
    அவர்களுக்கு நம்மை பற்றி உண்மையிலே எந்த அக்கறையும் கிடையாது.

    நம்முடைய துன்பங்கள் ஹீரோக்களின் அவஸ்தை அல்ல.
    நம்முடைய அலறல் வீரத்தின் வெளிபாடும் அல்ல.
    நாம் கடைசியாய் வீழும் போது நமக்கான அழக்குரல் உண்மையில் நமது கற்பனை தான்.
    உன்னிப்பாய் கவனித்தால்
    அது சர்க்கஸ் முடியும் போது தோன்றும் கரகோஷம் என புரிந்து கொள்ளலாம்.

    அடித்தாலும் சரி
    நடித்தாலும் சரி
    உண்மை கசப்பானது தான்.
    மரணம் இனிப்பானது என எவன் சொன்னான்.
    இறப்பிற்கு பிறகு நம்மை கொண்டாடுவார்கள் என எவன் சொன்னான்.

    அவர்களுக்கு நம்மை பற்றி உண்மையிலே எந்த அக்கறையும் கிடையாது.