Month: July 2008

  • மேகங்கள் கர்ஜித்து மழை ஊற்ற தயாரானது போல
    புயல் கிளம்பியது போல
    போலீஸ்காரர்கள் ஓடி வரவும்
    சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள் அவசரமாய் ஓட எத்தனிக்க
    பிளாட்பார்ம் வியாபாரிகள் பையை சுருட்டி தப்பிக்க முயன்றார்கள்.

    போர்களமாய் சாலை பரபரப்பானது.
    ஒற்றை செருப்புகள் நிறைந்திருக்க,
    லத்தி உடலில் விழும் சத்தமும்,
    வலியில் சிலர் கத்துவதும்,
    பீதியுற்ற பார்வைகளும் அங்கு நிறைந்திருக்கின்றன.

    சைக்கிள் ரிக்ஷாவில் இருந்து அவன் எழுந்திருக்க முயலும் போது
    அது கவிழ்ந்தது.
    கால் சுளுக்கி கொண்டது.
    அவன் எழுந்திருக்க முயலும் போதே ஒல்லியாய் இருந்த ஒரு போலீஸ்காரன்
    உயர்த்தபட்ட லத்தியுடன் ஓடி வந்தான்.
    சர்வமும் ஒடுங்கி கைகளை தலைக்கு மேலே வைத்து அவன் சுருண்டான்.

    பணிதலை கண்ட லத்தி சந்தோஷமாய் கீழே இறங்கும் போது
    மிருகத்தனமான அலறலுடன் குறுக்கே வந்தாள் அந்த ரிக்ஷாக்காரனின் மனைவி.

    கலைந்த தலைமுடி,
    விரித்த கைகள்,
    திறந்த மார்புகள்,
    மிருகத்தனமான அலறல்,
    பார்வையில் தாங்க முடியா வீரியம்.

    விழுந்து கிடந்த கணவனுக்கு
    கேடயமாக தன் உடலை பரப்பி
    இனம் புரியா மிருக அலறலுடன் நிற்கும் அந்த மனைவியை கண்டு
    லத்தி திகைத்தது,
    பயந்தது,
    குழம்பியது,
    வெட்கமுற்றது,
    பின்வாங்கியது.


  • ஒரு கனவு மெய்ப்பட்ட சம்பவம் அது; நிலவினில் மனிதன் காலடி வைத்தான். அறிவியல் முன்னேற்றங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல கனவுகளையும் மாற்றி விட்ட தருணமது.அமெரிக்க ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையத்தின் ‘அப்போலோ’ திட்டங்கள் நிலவுக்கு மனிதனை அழைத்துச் செல்லும் குறிக்கோளுடன் தொடங்கப்பட்டவை. ஆறு அப்போலோ பயணங்கள் (அப்போலோக்கள் 11, 12, 14, 15, 16 & 17) இந்தக் குறிக்கோளை அடைந்தன. அப்போலோ 11, 16 ஜூலை 1969 அன்று ஏவப்பட்டது. ஜூலை 20, 1969-இல் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவினில் காலடி வைத்தார்.

    பயணத்தைத் தொடங்கும்பொழுது ‘விண்வெளிக் குழு’ உயிரோடு திரும்பி வருவதற்கு 90 சதவீத வாய்ப்பும், நிலவினில் காலடி வைப்பதற்கு 50 சதவீத வாய்ப்பும் இருந்ததாகவே ஆர்ம்ஸ்ட்ராங் எண்ணிக் கொண்டிருந்தார். அப்போலோ திட்டத்தில் செயலாற்றிய எல்லாருக்கும் இவ் விஷயம் தெளிவாகத் தெரியும். அன்றைய அமெரிக்க அதிபர் நிக்சன், ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்குப் பின் பேச வேண்டிய உரையையும் தயாராக வைத்திருந்தார். நிக்சனுக்கு உரையை எழுதித் தரும் வில்லியம் சபையர், ‘விதி, நிலவினில் அமைதியாக ஆராயப் போனவர்களை அமைதியாக உறங்க வைத்துவிட்டது,’ என்று எழுதியிருந்தார்.

    …மேலும் வாசிக்க

  • என்னுடன் பணி புரிந்த நண்பர் ஒருவரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. உயிருக்குப் போராடி கொண்டிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவரது உடல்நிலை அவரை வீட்டோடு முடக்கியிருந்தது. நண்பரின் தாயோ மனநிலை குன்றியவர். நண்பர் ஒரே மகன். திருமணமும் ஆகவில்லை. அவரது வாழ்க்கையே மற்றவர்கள் பார்த்து பாவப்படும் அளவில் இருந்தது. இதில் திடீரென தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் முற்றிலுமாய் தளர்ந்து விட்டார்.

    அன்று காலை அவரது தந்தை வீட்டு குளியலறையில் மயங்கி விழுந்தவுடன், நண்பர் தன் தந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரபலமான மருத்துவமனைக்கு தந்தையை அழைத்து போயிருக்கிறார். நம் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு உடல்நிலை சரியில்லையென்றால் முதலில் உயிரைக் காப்பாற்றுவோமென தான் நினைப்போம். பணத்தைப் பற்றி கவலைப்பட அப்போது தோன்றாது.

    மருத்துவமனையில் நண்பரின் தந்தை சேர்க்கப்பட்ட இரண்டாவது நாள் தாம் நண்பருக்குத் தனது தவறு புரிந்தது. சூடு வைக்கப்பட்ட ஆட்டோ மீட்டர் போல ஒரு நாளைக்குச் சில ஆயிரங்கள் பில் தொகையாக உயர தொடங்கியது.… …மேலும் வாசிக்க


  • முதலாளி தன் மனைவிக்கு
    வாங்கி கொடுத்த முத்துச்சரத்தில்
    உதிர வாசம்!

    உதிரம் திருடப்பட்டவர்கள்
    மாலை நேரம் வீடு திரும்புகையில்,
    கதவை திறக்கும் போது படியும்
    உடற்களைப்புடனான மன சலிப்பு!

    அஞ்சால் அலுப்பு மருந்தினை
    உட் கொண்டு
    களைப்பையும் சலிப்பையும்
    டாஸ்மாக்கில் ஊற்றி
    வாழ்வின் அபத்தத்தை பாடுவோம், வா!

    நம் மனைவிமார்களின் கண்ணீரை
    அவர்களது கண்ணீராலே குளிப்பாட்டுவோம்.
    அவர்களிடமாவது நாம் முதலாளிகளாய் இருப்போம்!