Month: April 2008

  • ஒவ்வொரு வினாடிக்கு அடுத்தும்

    கோடிக்கணக்கான சாத்தியக்கூறுகள்.

    அத்தனையும் அழிந்து போகும்.

    ஏதேனும் ஒன்றை தவிர.


    கால இயந்திரத்தில் நம்பிக்கை இல்லை.

    எனினும் ஒரு நொடியை மீட்டு கொடுத்தால்

    இழந்த வாழ்வை மீட்டெடுத்திடுவேன்.

     

    கடந்த காலத்தில் இருக்கிறது

    உயிர்த்திருத்தலின் இரகசியம்.

    வருங்காலத்தில் அல்ல.


  • இணையத்தின் பாய்ச்சல் அசுரத்தனமாக இருந்தாலும் அதன் கிளை அம்சங்கள் மிக விரைவிலே அழிந்து விடுகின்றன என்பதை பற்றி ஏற்கெனவே இங்கே நாம் பேசியிருக்கிறோம். இதன் பின்னணியில் நமது வாழ்க்கை இன்று அதன் முந்தைய வெர்ஷன் 1.0லிருந்து புது வெர்ஷனான 2.0க்கு மாறி விட்டது என்றே தோன்றுகிறது. இதன் மூலம் வாழ்வின் பல அம்சங்கள் தனக்கான கால சக்கரத்தை இணையம் போலவே மாற்றி அமைத்து கொண்டுவிட்டன.


    கால சக்கரம் முன்பை விட வேகமாக இயங்குவதற்கு நவீன தொழில்நுட்பங்களின் வருகையும், தொலை தொடர்பு சாதனங்களின் புரட்சியும், உலகமெங்கும் இருக்கும் ஆயிரக்கணக்கான கலாச்சாரங்கள் ஒன்றாக சந்திப்பதுமே காரணம்.


    கண் மூடி திறப்பதற்குள் பழைய சமூகங்கள் குப்பையில் எறியப்பட்டு, outdated என அதன் மேல் லேபிள் குத்தபடுகின்றன. பூனையாக இருந்தாலும் இன்று கோடுகள் போட்டு கொண்டால் தான் life 2.0க்கு compatibleயாக இருப்போம்.…மேலும் வாசிக்க


  • இறுக்கியும் பிழிந்தும் தளர்ந்தும்

    பல நட்புகள் பல காலங்களில்

    தோன்றி மறைந்த வனவெளி

    கானல் நீராய் உறவுகளை

    பகடை காய்களாய் கொண்டு விளையாடிய தருணங்கள்

    காற்றோடு மறைந்து போகும் பொழுதில்

    இடுகாட்டு சாம்பல்

    அழிந்து போன விளையாட்டின்

    சுவாரஸ்யங்களை சொல்லி மகிழும்.


  • உன் பார்வை என் முதுகெலும்பில் இருக்கிறது.
    புன்னகை கால்களை கட்டியிருக்கிறது.
    வாசம் புலன்களை வலுவிழக்க வைத்துவிட்டது.

    என்னை பற்றியே பேசி கொண்டிருக்கிறாய்
    என்பதாய் என் எண்ணம்.
    யாருமற்ற வீதிகளில் கூட உன் நிழல்
    என்னை பின்தொடர்வதாய் உணர்கிறேன்.

    தரையோடு நான் அழுந்தி போவதற்கு முன்
    என் சோகத்தையாவது ஏற்று கொள்.


  • ஒவ்வொருவரும் தமக்கான மனநிலை ஒன்றை அறிந்தோ அறியாமலோ உருவாக்கி கொண்டு அதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


    எனக்கு ஒரு நண்பன் இருந்தான். சந்திப்பவர்களை எல்லாம் கேலி செய்து கொண்டிருப்பான். ஜோக்குகளை உதிர்த்தபடி இருப்பான். மாதக்கணக்கில் அவனோடு நட்பு பாராட்டிய பிறகு எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. அவனிடம் இருக்கும் ஜோக்குகளின் எண்ணிக்கை கட்டாயம் 50யை தாண்டாது. இந்த 50 ஜோக்குகளை தான் அவன் சந்திக்கும் நபர்களை பொறுத்தும் சூழுல் பொறுத்தும் மாற்றி மாற்றி சொல்லி கொண்டிருக்கிறான். இந்த 50 ஜோக்குகளை அவனிடமிருந்து பிடுங்கி விட்டால் அவனால் வாழவே முடியாதோ என்கிற அச்சம் எனக்கு தோன்றியது உண்மை. இதே போல இன்னொரு நண்பர். அந்த வாரத்து ஆனந்த விகடன் மற்றும் குமுதம் படித்து விட்டீர்களானால் அவர் பேசுவது முழுவதும் உங்களுக்கு ஏற்கெனவே கேள்விபட்ட விஷயங்களாகி விடும்.


    கவிஞனின் மனநிலையில் வாழ்வதென்பது நீங்கள் உங்கள் கற்பனை சக்தியை உயிர்ப்புடன் வைத்திருப்பது என நினைக்கிறேன்.…மேலும் வாசிக்க


  • இறந்த போன மனிதர்கள்
    உயிருடன் இருப்பதாய்
    பாவ்லா செய்கிறார்கள்.

    தெருவெங்கும் இவர்களது கூட்டம்
    தங்களை தாங்களே ஏமாற்றி கொண்டு.


  • நாய் முகம் போன்று அந்த வீட்டு முகப்பு.

    சரிந்தே விடுவேன் என பயமுறுத்தும் நான்கு அடுக்கு.

    படிக்கட்டுகளுக்கு கீழும் ஓர் அறை.

    பக்கத்து வீட்டுக்காரர்களின் இரண்டு மூன்று அடியையும்

    இணைத்து கொண்டு மூச்சு விட முடியாமல்

    பம்மி பெருத்திருக்கிறது கட்டிடம்.

    இல்லாத காருக்கு கட்டிய இடத்தில்

    ஒரு கிழவி வைத்திருக்கிறாள்

    300 ரூபாய் வாடகைக்கு ஒரு கடை.


    எல்லாம் ஆழ்ந்திருக்கிறது கும்பகர்ண தூக்கத்தில்.

    கிழவியருகே மட்டும்

    மிஞ்சியிருக்கிறது கொஞ்சம் உயிர்ப்பு.