Category: கவிதைகள்

  • மேகங்கள் கர்ஜித்து மழை ஊற்ற தயாரானது போல
    புயல் கிளம்பியது போல
    போலீஸ்காரர்கள் ஓடி வரவும்
    சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள் அவசரமாய் ஓட எத்தனிக்க
    பிளாட்பார்ம் வியாபாரிகள் பையை சுருட்டி தப்பிக்க முயன்றார்கள்.

    போர்களமாய் சாலை பரபரப்பானது.
    ஒற்றை செருப்புகள் நிறைந்திருக்க,
    லத்தி உடலில் விழும் சத்தமும்,
    வலியில் சிலர் கத்துவதும்,
    பீதியுற்ற பார்வைகளும் அங்கு நிறைந்திருக்கின்றன.

    சைக்கிள் ரிக்ஷாவில் இருந்து அவன் எழுந்திருக்க முயலும் போது
    அது கவிழ்ந்தது.
    கால் சுளுக்கி கொண்டது.
    அவன் எழுந்திருக்க முயலும் போதே ஒல்லியாய் இருந்த ஒரு போலீஸ்காரன்
    உயர்த்தபட்ட லத்தியுடன் ஓடி வந்தான்.
    சர்வமும் ஒடுங்கி கைகளை தலைக்கு மேலே வைத்து அவன் சுருண்டான்.

    பணிதலை கண்ட லத்தி சந்தோஷமாய் கீழே இறங்கும் போது
    மிருகத்தனமான அலறலுடன் குறுக்கே வந்தாள் அந்த ரிக்ஷாக்காரனின் மனைவி.

    கலைந்த தலைமுடி,
    விரித்த கைகள்,
    திறந்த மார்புகள்,
    மிருகத்தனமான அலறல்,
    பார்வையில் தாங்க முடியா வீரியம்.

    விழுந்து கிடந்த கணவனுக்கு
    கேடயமாக தன் உடலை பரப்பி
    இனம் புரியா மிருக அலறலுடன் நிற்கும் அந்த மனைவியை கண்டு
    லத்தி திகைத்தது,
    பயந்தது,
    குழம்பியது,
    வெட்கமுற்றது,
    பின்வாங்கியது.


  • முதலாளி தன் மனைவிக்கு
    வாங்கி கொடுத்த முத்துச்சரத்தில்
    உதிர வாசம்!

    உதிரம் திருடப்பட்டவர்கள்
    மாலை நேரம் வீடு திரும்புகையில்,
    கதவை திறக்கும் போது படியும்
    உடற்களைப்புடனான மன சலிப்பு!

    அஞ்சால் அலுப்பு மருந்தினை
    உட் கொண்டு
    களைப்பையும் சலிப்பையும்
    டாஸ்மாக்கில் ஊற்றி
    வாழ்வின் அபத்தத்தை பாடுவோம், வா!

    நம் மனைவிமார்களின் கண்ணீரை
    அவர்களது கண்ணீராலே குளிப்பாட்டுவோம்.
    அவர்களிடமாவது நாம் முதலாளிகளாய் இருப்போம்!


  • பைக்கின் உறுமல் ஒலியை காற்றில் மிதக்க விட்டு
    அவன் என்னிடமிருந்து விடை பெற்று சென்று
    சில கணங்கள் தாம் கடந்திருக்கும்.

    கத்தியை கூர் தீட்டுவது போல ஒரு சத்தம்.
    அவன் சென்ற திசையில்
    யாரோ பைக்கிலிருந்து தூக்கியெறியபடுவதை பார்த்தேன்.
    அதற்கு பிறகு நான் திரும்பவே இல்லை.
    எதிர் திசையில் நடந்து கொண்டே இருந்தேன்.

    முதிர் மாலை நேரத்து இருள்.
    யார் என தெளிவில்லை.
    அவனாக இருக்குமோ?

    துப்பட்டாவை இழுத்து போர்த்தி
    வீட்டை நோக்கி நடந்தேன்.
    ஏற்கெனவே தாமதமாகி விட்டது.
    தந்தை திட்டுவார்.

    விபத்தின் தாக்கம் ஓர் அலை போல என்னை கடந்து சென்றது.
    சிலர் அந்த பக்கம் ஓடினார்கள்.
    சிலர் வெறித்தபடி பார்த்து கொண்டிருந்தார்கள்.

    அவனாக இருக்காது.
    வேறு யாரோ.
    யாரோ ஒரு குடிகாரன்.

    அவனாக இருந்தால் அவனுக்கு இப்போது உதவி தேவைபடும் அல்லவா?
    அவனுக்கு விபத்து நேர்ந்ததை நான் பார்த்தேன் என யாருக்குமே தெரியாது.
    அவனுக்கே தெரியாது.

    இயந்திரங்களின் பிடியில் சிக்கிய பிரதான வீதிக்கு வந்த போது
    அந்த விபத்து நடந்ததற்கான அறிகுறியே இல்லை.…மேலும் வாசிக்க


  • கொலையாளியை கூட்ட நெரிசலில் அவர்கள் அழைத்து போகும் போது
    எங்கள் இருவர் கண்களும் ஒரு கணம் சந்தித்து கொண்டன.
    அவனது கண்களுக்குள் அமைதி மட்டுமே இருந்தது.
    என் கண்களில் படபடப்பை பார்த்திருப்பான்.

    அவனது கண்களில் அமைதியை தவிர
    வேறு என்ன இருந்திருக்க வேண்டும்?
    என்ன எதிர்பார்த்தேன்?

    கூட்டத்தின் வியர்வை வாசத்தில்,
    புரியாத பாஷை கூச்சல்களில்
    யார் செவிக்கும் கேட்காத வசனங்கள்
    காற்றில் மிதந்து செல்வதை பார்த்தேன்.

    “கிராமத்திலே அழகான பெண்
    தினமும் தனியா அந்த பக்கம் போறதை
    கவனிச்சிட்டே இருந்திருக்கிறான்.”

    “கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு.”

    காற்றில் மிதந்து சென்ற வசனங்களை
    நான் முழுமையாய் வாசிக்கும் முன்
    அவை கலைந்து போயின.
    கலைந்த வேகத்தில் புகையாய்
    நேற்று நான் பார்த்த
    வேறொரு யுவதியின் முகத்தை வரைந்து காட்டியது.

    அழகு.
    அதனை கச்சிதமாய் திருத்தமாய் பயன்படுத்தி
    பார்ப்போரை வசியம் செய்யும் தோற்றத்துடன்
    முகத்தில் புன்முறுவல் பூசியிருந்தாள்
    அந்த இளம் பெண்.

    புகை ஓவியத்தை என் பயத்தால் கலைத்தேன்.…மேலும் வாசிக்க


  • மது வாடையடிக்கும் மாலை பொழுதில்
    வானத்தில் பூசப்பட்ட வண்ணங்களை கொண்டு
    கற்பனை செய்கிறேன்
    பல ஓவியங்களை.

    போலீஸ்காரர்களின் பூட்ஸ் ஓலிகள்
    ஓவியத்தை கலைத்து செல்கின்றன.

    எங்கிருந்தோ இருள் உதிப்பதற்குள்
    கலைக்கபட்ட ஓவியங்களை
    நான் சீராக்கி
    வார்த்தைகளுக்குள் சேமிக்க வேண்டும்.

    என் மொழியில் சேமித்தவற்றை
    அவரவர் மொழியில் உண்ணும் போது
    இன்னும் பூக்கலாம்
    உன்னத தருணங்கள்.


  • தூரத்தில் காதலியின் உருவம் தோன்றும் போது
    காத்திருத்தலின் சுவை குன்றி,
    கண்களின் தேடுதல் மங்கி
    இரு கால்களிடையே தலையை கொடுத்து
    அழுது கொண்டிருந்தேன் நான்.

    ஆறுதல் வார்த்தைகளோ
    அன்பு அரவணைப்போ எதிர்பார்க்கவில்லை.
    போய் விடு.

    எனக்கான துக்கத்தை
    நான் தான் உண்ண வேண்டும்.


  • கரிய வெயிலாய் இருட்டு
    துளிதுளியாய் வியர்வையை உறிஞ்ச,
    குரல் நூறு குரலாய் எதிரொலிக்கும்
    முடிவில்லா குகையினுள் தனியே நின்று கொண்டிருப்பது
    பயமாக இருக்கிறது.

    கால்கள் சோம்பினாலும்
    பயம் முன்னால் இழுத்து செல்கிறது.
    இங்கு வெறுமையை தவிர வேறு எதுவும் இல்லையா?

    மனம் தன் அனல்வெறுமையில்
    ஆயிரம் ஆவிகள் என்னை சூழ்ந்து நிற்பதை பார்க்கிறது.
    பிரகாசிக்கும் வெண் பற்கள்.
    அதன் மேலே இரத்த கறை.
    இரத்த கறையினுள் பூத்திருக்கிருக்கின்றன புழுக்கள்.

    ஆயிரம் ஆவிகளும் முறைத்திருக்க,
    அந்த முறைப்பு முதுகெலும்பில் சில்லிட்டு இருக்க,
    செயலிழந்த கால்களை இழுத்தபடி
    தாகத்தில் நாவறண்டு ஓடுகிறேன்
    முடிவில்லா குகையினுள்.

    இரத்த கறையில் கரைந்து போன முன்னோர்களுக்கு தெரியாது
    குகைக்கு வெளியே உதிர பசியோடு காத்திருக்கிறது
    வெள்ளை இருட்டாய் வெளிச்சம்.


  • மொட்டை மாடியில் தொடர்ந்து உலாவுபவர்களை
    சாதாரணமாய் வெளியிடங்களில் இனம் காண முடியாது.
    நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களும்
    இருபது வயதிற்கு உட்பட்டவர்களுமே அதிகம்.

    கிராமத்தில் தனது வீடு மட்டுமே காங்கிரீட் வீடு என்கிற
    அகங்காரத்தின் காரணத்தினால்
    தன் மொட்டை மாடியில் உலா வந்த சிறுவன் பாண்டி.
    இளைஞன் ஆன பின் கல்லூரி ஹாஸ்டலிலே
    மொட்டை மாடியில் தான் அரட்டை கச்சேரி
    விடிய விடிய அரங்கேறும்.
    திருமணத்திற்கு பிறகு
    அறியா நகரத்தின் பற்கள் கொடுத்த காயத்தை போக்க
    மனதை லேசாக்க மொட்டை மாடியில் அமர்ந்து
    கண்ணுக்கெட்டிய தூரம் மனிதர்களும் கட்டிடங்களுமாய் தெரியும்
    நகரத்தை பார்வையால் வெறித்திருப்பான்.

    மனைவியின் மரணத்திற்கு பின்பு
    மகனுக்கும் மருமகளுக்கும் கூடுதல் சுமையாய்
    தன்னை கருதி வாழும் பாண்டிக்கு
    இருப்பதெல்லாம் ஒரு பிரச்சனை.
    அவர்கள் அபார்ட்மெண்ட் கட்டிடத்தின் மொட்டை மாடியில் யாருக்கும் அனுமதியில்லை.
    இறந்து போனான் விரைவில்.

    சொர்ணம்மாளுக்கு மொட்டை மாடியில் தான்
    தன் முதிய வயது ஒத்த தோழிகள் உண்டு.
    மருமகளை பற்றி பேச பேச குறையாமல் இருக்கும் புகார்கள்.…மேலும் வாசிக்க


  • இருளை தவிர வேறு பொருளில்லை.
    என் குரலை தவிர வேறு ஓலியில்லை.

    தோல் எல்லாம் சொரசொரப்பாய் உதிர்கிறது.
    தரையெங்கும் என் தலைமுடிகள் பரவி கிடக்கின்றன
    .
    காலும் கையும் ஒரே பணியை தான் செய்கின்றன
    .
    இந்த நான்கு சுவர்களை தாண்டி உலகம் அழிந்து போயிருக்கக்கூடும்
    .

    பஞ்சு மேகங்களாய் கடந்த கால நினைவுகள்
    தெளிவில்லாமல் அவ்வபோது கனவில் தோன்றும்
    .
    என் பழைய மொழியில் உறுமல் மட்டுமே நினைவில் இருக்கிறது.

    சமீபத்தில் தான் கற்று கொண்டேன்,
    இந்த அறையில் என்னோடு வசிக்கும்
    சிறுசிறு உயிரினங்களின் மொழியை
    .

    சிந்திக்க மறந்தேன்.
    அதனால் வாழ்கிறேன்
    .


  • ஒவ்வொரு வினாடிக்கு அடுத்தும்

    கோடிக்கணக்கான சாத்தியக்கூறுகள்.

    அத்தனையும் அழிந்து போகும்.

    ஏதேனும் ஒன்றை தவிர.


    கால இயந்திரத்தில் நம்பிக்கை இல்லை.

    எனினும் ஒரு நொடியை மீட்டு கொடுத்தால்

    இழந்த வாழ்வை மீட்டெடுத்திடுவேன்.

     

    கடந்த காலத்தில் இருக்கிறது

    உயிர்த்திருத்தலின் இரகசியம்.

    வருங்காலத்தில் அல்ல.