Category: கவிதைகள்

  • மழை தூறல் என்னை பதைபதைப்பிற்கு உள்ளாக்குகிறது.
    சட்டை பையில் இருக்கும் காகித தாளினை
    கைகளால் காப்பாற்றுவதற்கு யத்தனிக்கிறேன்.

    என்னை பயமுறுத்துவதற்காகவே
    மழை சடசடவென பெய்வதும் பிறகு நிதானிப்பதுமாய்
    விகாரமாய் சிரிக்கிறது.

    தைல மரக்காட்டில் தன்னந்தனியாய்
    பயத்தோடு நடக்கும் போது
    பின்னால் யாரோ தொடர்வது போல
    ஒரு நிழல் என் மனக்கண்ணில் என்னை தொடர்கிறது.

    இருட்டுவதற்கு முன் இந்த காகித தாள்
    அந்த நகரத்தில் கை மாற வேண்டும்.
    இல்லையெனில் – அதை நினைத்தே பார்க்க முடியாது.
    அந்த எண்ணமே என் உடலை நடுநடுங்க வைக்கிறது.

    திசையினை அனுமானித்து
    நகரத்தின் பக்கமாய்
    எனது நடையினை வேகபடுத்துகிறேன்.
    கைகள் அன்னிச்சையாக சட்டைபையினை தடவுகின்றன.

    மழைநீர் அந்த காகிதத்தில்
    மையினை கரைத்து
    எழுத்துகளை அழித்து இருக்குமோ?

    அந்த எண்ணம் மனதில் கலக்கத்தை உண்டாக்கும்
    அதே நேரம்
    அருகாமையில் தாங்கவியலா துர்வாசனை.
    புதர்களுக்கு பக்கத்தில் ஒரு நாய் செத்து கிடக்கிறது.
    ஒரு மணி நேரத்திற்கு முன் நான் பார்த்த அதே காட்சி.…மேலும் வாசிக்க


  • பெருவெள்ளமாய் மழை பொழுதுகள்
    நம்மை ஆட்கொண்டிருக்கும் நாட்கள் இவை.

    எனது மூக்கிலிருந்து
    மீண்டும் இரத்தம் சொட்ட தொடங்கி விட்டது.
    கை நகங்களின் நிறம்
    மாறி கொண்டிருப்பதை பார்க்கிறேன்.
    பனி போர்த்திய கார் கண்ணாடி போல
    எனது பார்வை திறன் மங்கி கொண்டிருக்கிறது.

    சிறு செயல்கள் கூட
    மிக மெல்ல மிக மெதுவாக நடப்பதாக பிரமை.
    பெரும்பாலான சமயம் கண்களை திறந்தபடி
    நான் கனவு கண்டு கொண்டிருக்கிறேன்.
    கனவுகளிலும் இப்போது அது வந்து கொண்டிருக்கிறது.
    ஒவ்வொரு முறையும்
    மனம் மீண்டும் யதார்த்திற்கு திரும்பும் போது
    அதை பார்த்து கொள்கிறேன்.
    கறுப்பு பளபளப்பு மட்டும் தெரிகிறது.
    அசைவுகளே இல்லை வழக்கம் போல.

    எப்போதும் தீண்டும் என தெரியாது
    ஆனால் அவ்வபோது என்னை தீண்டி கொண்டே இருக்கிறது.

    மரணத்தை போல அசைவுற்று இருக்கும் அதனை
    பார்த்து கொண்டே இருக்கிறேன்.


  • வறுத்தாலும் சரி,
    கரித்து கொட்டினாலும் சரி,
    நக கண்களை பிடுங்கினாலும் சரி,
    உண்மை கசப்பானது தான்.

    நாம் வேறு மாதிரி தான் நினைத்து இருந்தோம்.
    நம்முடைய கடைசி ஆசை அதுவாக தான் இருந்தது.
    நம்முடைய துன்பங்களை சுமக்கும் போதெல்லாம்
    அது தான் நம்முடைய உந்து சக்தியாக இருந்தது.

    ஆனால் உண்மை அதுவல்ல.
    யதாரத்தம் வேறு மாதிரியாக தான் இருக்கிறது.
    அவர்களுக்கு நம்மை பற்றி உண்மையிலே எந்த அக்கறையும் கிடையாது.

    நம்முடைய துன்பங்கள் ஹீரோக்களின் அவஸ்தை அல்ல.
    நம்முடைய அலறல் வீரத்தின் வெளிபாடும் அல்ல.
    நாம் கடைசியாய் வீழும் போது நமக்கான அழக்குரல் உண்மையில் நமது கற்பனை தான்.
    உன்னிப்பாய் கவனித்தால்
    அது சர்க்கஸ் முடியும் போது தோன்றும் கரகோஷம் என புரிந்து கொள்ளலாம்.

    அடித்தாலும் சரி
    நடித்தாலும் சரி
    உண்மை கசப்பானது தான்.
    மரணம் இனிப்பானது என எவன் சொன்னான்.
    இறப்பிற்கு பிறகு நம்மை கொண்டாடுவார்கள் என எவன் சொன்னான்.

    அவர்களுக்கு நம்மை பற்றி உண்மையிலே எந்த அக்கறையும் கிடையாது.


  • கிழவனது கண்ணிமை முடிகளை எறும்புகள் பாதி மென்று
    ஒன்று போல தைத்து விட்டாற் போல வலி.
    அந்த வலியோடு தான்
    தினமும் அந்த கிழவனின் தூக்கம் கலையும்.

    எப்போதும் போல விழிப்பு வானத்தை பார்த்தபடி தான்.
    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முகம் காட்டும் வானம்.
    ஆனால் பெரும்பாலும் ஒரே மாதிரியான தின வாழ்க்கை தான் கிழவனுடையது.

    முதல் காரியமாய் தொலைந்து போன அவனது நாணயத்தை தேட தொடங்குவான்.
    ‘நடைபாதை, புல்வெளி, புதர்
    இவற்றை தாண்டி அந்த நாணயம் வேறு எங்கும் போய் இருக்காது.’
    அங்குலம் அங்குலமாய் அந்த பகுதிகளை அலசி கொண்டிருப்பான்.
    கற்களை மெல்ல புரட்டி பார்ப்பான், குழந்தையை தொடுவது போல.
    தேடல் தீவிரமாய் நடந்து கொண்டிருக்கும் போதே வானம் இருட்ட தொடங்கி விடும்.
    நிலா ஒளியும், தெரு விளக்குகளும், இருட்டும் கிழவனை குளிப்பாட்டும்.
    ஆனாலும் தேடல் நடந்து கொண்டே இருக்கும்.

    முப்பது வருடங்களுக்கு மேலாகி விட்டது எனினும்
    கிழவன் எப்போதும் நாணயத்தை தேடி கொண்டே இருக்கிறான்
    ஒருவித லயிப்போடு.


  • மேகங்கள் திடீரென ஒரு நாள்
    வேகமாய் நகர தொடங்கி இருப்பதை கவனித்தேன்.

    ஆற்றுத்தண்ணீர் போல
    அந்த தண்ணீரில் கொப்பளிக்கும் நுரைகள் போல
    போர் விமானங்கள் போல
    சோகங்கள் போல
    ஓவியத்தின் மீது ஊற்றபட்ட தண்ணீர் போல
    மேகங்களின் அபரித வேகத்தை கண்டு
    எனக்கு பயமாக இருந்தது.

    தினமும் காலையில் கண் விழித்தவுடன்
    இன்றாவது மேகங்களின் போராட்டம்
    முடிவிற்கு வந்து விட்டதா என்கிற
    ஆர்வத்துடன் வீட்டிற்கு வெளியே வந்து
    பார்க்க தொடங்கினேன்.

    ஆனால்
    முடிவே இல்லாத நீண்ட கனவாக
    அது மாறி கொண்டிருந்தது.

    அப்போது தான் அது நடந்தது…


  • 100 கிலோமீட்டர் வேகத்தில் மரணம்.
    கீழிருந்து உயர்ந்து செல்லும் மேம்பாலம் உச்சியில் முடிவடைய
    அதற்கு கீழே தனது அகலமான சேலையை விரித்து
    காத்திருக்கிறது கடல்.

    இது தற்கொலை மேம்பாலம்.
    யார் வேண்டுமானாலும் பைக்கை ஓட்டியபடி சென்று
    தற்கொலை செய்து கொள்ளலாம்.

    இந்த ஊருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர்
    காண விரும்பும் இடம் இது தான்.
    சுற்றுலா பயணிகளுக்காகவே மேம்பாலத்தின் வடக்கே
    ஒரு திறந்த மண்டபம் அமைந்திருக்கிறது.

    அந்த மண்டபத்தினுள் இருந்து பார்த்தால்
    மேம்பாலத்தில் எப்போதுமே
    ஒன்றிரண்டு பைக்குகள் ஏறி கொண்டிருப்பதையும்
    அவர்களை விழுங்க அலைகளை கரகோஷமிட்டபடி
    கடல் துள்ளுவதையும் காணலாம்.

    கோடைக்காலம் இங்கு உகந்த காலம்.
    அச்சமயம் பத்து பனிரெண்டு பைக்குகள் கூட
    ஒரே சமயத்தில் மேம்பாலத்தில் ஏறி கொண்டிருக்கும்.
    சமயங்களில் டிராபிக் ஜாம் ஆவதும் உண்டு.

    மேம்பாலத்தின் கீழே நின்றிருக்கும்
    காவலாளியை கண்டு கொள்ளாதீர்கள்.
    அவனது வேலை வேடிக்கை பார்ப்பது மட்டுமே.
    அதுவும் அவன் கடலுக்கு எதிர் திசையில் தான்
    எப்போதும் பார்த்தபடி இருப்பான்.


  • இரட்டை பிறவி என எவரும் உங்களிருவரையும் நினைத்திட முடியும்.
    ஆனால் நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் முதன்முறையாக சந்தித்தே
    ஐந்து நிமிடங்கள் தாம் கடந்திருக்கும் என எவரும் யூகித்துவிட முடியாது.

    அங்கங்களையும் ஒற்றுமைகளையும் அலசும் உங்கள் கண்களில்
    ஆச்சரிய ரேகைகள் வற்றியவுடன்
    எழுவது கோபமும் எரிச்சலுமாக இருக்கிறது.

    அமைதியை தவிர வேறு வார்த்தைகளில்லை உங்கள் இருவருக்கும் மத்தியில்.

    இவ்வளவு காலம் இது கனவு அல்லவா?
    பலிக்க கூடாதென ஒவ்வொரு காலையிலும் நினைத்த கனவல்லவா பலித்து விட்டது.

    இப்போது இருவரில் யார் பலியாக போகிறீர்கள்?
    கனவா? கனவு கண்டவனா?


  • மனிதர்களும்,
    மிருங்களும்,
    பறவைகளும்,
    மனித தலையும் விலங்குகளின் உடலை கொண்டவர்களும்,
    பறவைகளின் இறக்கை கொண்டு பறக்கும் கொடிய மிருகங்களும்,
    மாயஜால மந்திரவாதிகளும்,
    சூன்யக்காரிகளும்,
    வீரத்திற்கு புகழ் பெற்ற தளபதிகளும்,
    தந்திரத்திற்கு பேர் வாங்கிய தலைவர்களும்
    போரிடுவதற்காக கூடும் இந்த போர்க்களம்
    இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இரத்த கறையோடு விளங்க போகிறது.
    நீயும் நானும் பிறப்பதற்கான முதல் வித்து
    தோன்ற போவதும் இங்கு தான்.
    நம் இனத்தின் கடைசி சாபம் உருவாகும் இடமும் இது தான்.


  • மண் புழுதி தழுவியிருக்கும் தார்சாலையின் ஓரம்
    ஒரு கடை முன்னால் தொங்குகிறது அந்த போஸ்டர்.
    போஸ்டரில் நெகிழ்ந்த ஆடையில் தாராளமாய் தன்னை காட்டும் நடிகை.
    காகிதம் தான்.
    விரிகின்றன என் கண்கள்.
    ஆனால் முதுகை சுடுகின்றன ஆயிரம் பார்வைகள்.

    நிஜத்தில் அல்லாத இந்த ஆயிரம் பார்வைகளையும்
    யாருமற்ற பாலைவனத்திலும்
    எனது முதுகில் உணர்ந்து திரியும் நான்.


  • தெருவெங்கும் முகமூடி அணிந்த மனிதர்கள்!
    ஒவ்வொரு வீட்டிற்கு வெளியேயும் தொங்குகின்றன தொய்ந்து நைந்து போன முகமூடி!
    வீட்டிற்குள் வந்ததும்
    அவரவர் கண்ணாடியில் பார்த்து கொள்கிறார்கள்
    முகமூடி கழற்றபட்ட தங்கள் முகங்களை.

    முகமூடியை கழற்றியும்
    முகத்தில் தெரியவில்லை முகம்.

    சிலர் மட்டும் கழுவி கொண்டே இருக்கிறார்கள் முகத்தை!