• யாருமற்ற வனாந்தரத்தில்
    மனிதர்கள் புழங்கும் தெருக்களில்
    அந்தரங்கத்தில்
    பொதுவில்
    எங்கும்
    எப்போதும்
    சன்னமாய் 
    ஒலித்து கொண்டே இருக்கின்றன
    காலத்தின் இரைச்சல்.

  • உங்களுடைய மென்மையான உணர்வுளை நசுக்கும் போது
    தானாய் ஒப்பு கொள்ள வேண்டும்
    தானாய் தலை வணங்க வேண்டும்
    தானாய் அழ வேண்டும்
    இதை நான் எதிர்பார்த்தேன் என
    பொய்யாய் சொல்ல வேண்டும்
    இறுதியில்
    அதை அலட்சியமாய்
    எடுத்தறிவது போல்
    நடித்து
    ஆத்மாவில்
    ஒரு பங்கினை காவு கொடுக்க வேண்டும்!
    இது தான் அந்த அவமானத்தின் விலை!!!


  • சூரியன்
    நமக்கு ஒளி தருகிறது
    என்கிறோம்.
    அது
    நம்மைக் குருடாக்கிறது.
    பிற நட்சத்திரங்களைப் பார்க்க விடாமல்
    குருடாக்கிறது.

    நீ
    உன் அன்பு பெருவெள்ளத்தால்
    என்னை அரவணைக்க விரும்புகிறாய்.
    அது என்னைக் குருடாக்கிறது.


  • வெளுத்த இரவு.
    நான் பதுங்கியிருக்கவில்லை;
    ஒளிந்திருக்கவில்லை;
    நின்று கொண்டிருக்கிறேன்.

    இரண்டடி முன் நகர்ந்தால்
    வெட்ட வெளி வரும்.
    ஆனால் நிழலிலே ஒதுங்கியிருக்கிறேன்
    பயத்தோடு.

    அந்தப் பயம் தேவையற்றது.
    எனினும்
    சருமத்தில் அலை அலையாய் அச்சவுணர்வு
    படிந்து தான் இருக்கிறது.

    அங்கே
    யாரும் இருக்க போவதில்லை என்றாலும்
    யாரோ காத்திருப்பது போல பிரமை.

    வெட்டவெளிக்கு நான் வந்தால்
    அது குற்றமாகாது.
    யாரும் அதற்காக என்னைத் தண்டித்து விட முடியாது.
    எனினும்
    இந்தக் கணம்
    சிறு பிழையும் வேண்டாம்
    இப்படியே போகட்டும் என
    இதயம் தடதடக்கிறது.

    கறுப்பு வெள்ளையென
    இரு புறமும் பேசும் மனம்
    கூனிக் குறுகுகிறது
    இந்தப் பயத்தை நினைத்து நினைத்து.

    நன்றி

    புகைப்படம்: Liu Bolin


  • மின்சாரம் இல்லை
    வழக்கம் போல.

    காற்றே இல்லாதது போலிருக்கிறது
    இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்குள்.

    ஆங்காங்கே பேட்டரி விளக்குகள்
    மங்கலாய் எரிந்தபடி.

    நிழல்கள் நீண்டு
    இருளைத் தொட்டு
    படர்ந்திருக்கின்றன.

    வேர்வையில் முழுக்க நனைந்து
    நடந்து கொண்டிருக்கிறேன்.
    இரு புறமும் கதவுகள் தோன்றி தோன்றி மறைகின்றன.

    சிவந்த கதவுகள்
    பேட்டரி விளக்கு வெளிச்சத்தைச்
    சிகப்பாக்குகின்றன.

    அச்செந்நிற ஒளி
    இருளில் கலக்கும் சமயம்
    உதிரமாய் வண்ணம் கொள்கிறது.

    மாடிப் படிகளில் ஏறி ஒவ்வொரு தளமாய் செல்கிறேன்.
    பெரும்பாலும் ஓசைகளே இல்லை.

    நான் பார்த்து இதுவரை
    ஒரு கதவு கூட திறந்திருந்ததில்லை.

    சில கதவுகளுக்குப் பின்னால்
    யாரோ விசும்பும் சத்தம் கேட்கும்.
    அல்லது அது பூனையின் ஒலியா?

    ஒரு கதவிற்குப் பின்னால்
    காதலர்களின் சண்டை சத்தம்.

    பிறகு நானே ஒவ்வொரு கதவிற்கும்
    ஒரு சத்தமிருப்பதாய் கற்பனைச் செய்து கொண்டேன்.

    விருப்பம் போல ஒவ்வொரு கதவின் பின்னாலும்
    ஒவ்வொரு சத்தத்தினைக் கேட்க தொடங்கினேன்.

    மற்றப்படி
    பெரும்பாலும் ஓசைகளே இல்லை.

    ஓர் இளம் யுவதி தற்கொலைச் செய்து கொள்வதற்கு முன்
    தனிமையில்
    விசும்புகிற ஒலியினைக் கேட்டேன்
    ஒரு கதவிற்கு அருகே.

    மெள்ள தட்டினேன்.
    மின்சாரம் இல்லாமல் செத்து கிடந்த
    அழைப்பு மணி பொத்தானை அழுத்தினேன்
    சலிப்புடனே.

    தட்டல் சத்தம் மாடியெங்கும் இருளினைக் கிழித்தபடி இருந்தது.
    ஆனால் வெளிச்சம் தோன்றவே இல்லை.

    எதோ எதோ சொல்லி அழைத்தேன்.
    காலால் உதைத்தேன்.
    பிறகு வெறுப்புற்று அங்கிருந்து நகர்ந்து
    நாலடி நடந்து
    பிறகு மீண்டும் ஆக்ரோஷம் பொங்க
    திரும்பி வந்து
    மேலும் வலிமையுடன் தட்டினேன்.

    நான் எழுப்பும் ஒவ்வொரு சத்தத்திற்கு இடையிலும்
    வலிமையுடன் உறுமியது
    மௌனம்.


  • பெரிய தூங்குமூஞ்சி மரம்.
    கவனித்து பார்த்தால் தான் தெரியும்
    மரத்தில் திருடன் ஒருவன்
    கட்டப்பட்டு இருப்பது.

    மரத்தின் நிறமாய்
    மாறி விட்டன
    கயிறும்
    திருடனும்.

    பெருத்த மிருகம்
    தின்று
    சோர்ந்து
    தூங்குவது போல்
    உறங்குகிறது
    மரம்.

    கண்கள் மூடியிருக்கிறான்
    திருடன்.

    வலியில்லை,
    உணர்வில்லை,
    உணர்ச்சியுமில்லை,
    மரத்தோடு மரமாய்.

    தரையில் இருந்து
    மரத்திற்குச் செல்லும்
    எறும்புகள்
    அவன் மேல்
    ஊர்ந்து கடக்கின்றன.

    மேகங்கள் வேகமாய் நகர்கின்றன.
    சூரியனின் கண்கள்
    அவனை உற்று பார்த்தபடி.

    அணில் ஒன்று
    அவன் கால் மேல் ஏறி
    கற்களைத் தாவி
    எங்கோ ஓடிற்று.

    பரிதாபத்தோடு
    ஒரு வயதான மூதாட்டி
    அவன் மேல் ஊற்றிய நீர்
    மரத்தினை உலுக்கிற்று.

    மரம் விழித்தது.
    கிளைகள் விம்மி சரிந்தன.
    பறவைகள்
    பயந்து
    மரத்திலிருந்து
    இறக்கைகள் படபடக்க
    காற்றில் குதித்தன.
    பதற்றத்தோடு
    நெஞ்சு பிசையும் பயத்தோடு
    மரம்
    ஊளையிட்டது
    அமைதியாக.


  • பாதி ஐயம்.
    பாதி பரிதவிப்பு.
    அவனைக் கடைசியில்
    ஒரு ரயில் நிலையத்தில் சந்தித்தேன்.

    வெள்ளைச் சட்டையில்
    மெல்லிய சிகப்பு கோடுகள்.
    கறுப்பு என்று சொல்லி விடலாம்
    அவன் அணிந்திருந்த கருநீல பேண்ட்டை.

    கொஞ்சமும் கசங்காத உடை.
    சிதறாத முடி.
    பளிச்சென்ற முகம்.
    எதோ உயர் அதிகாரி தோற்றம்.

    வேறொரு நாளாக இருந்தால்
    கிண்டலும் எரிச்சலும்
    இருந்திருக்க கூடும்.
    இன்று
    பதற்றம் மட்டுமே.

    எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல்
    செயற்கையாக புன்னகைத்து
    தேவையில்லாமல்
    செல்போனைத் துளாவி கொண்டிருக்கிறேன்.

    என்றும் போல
    இன்றும் கூட்டமாய் இருக்கிறது
    ரயில் நிலையம்.

    நகரத்திற்குள்ளாக
    இரண்டடுக்கு மாடி உயர
    பாலத்தில்
    சுற்றி சுற்றி வரும்
    ரயில்கள்.

    எத்தனையோ முகங்கள்.
    எத்தனையோ உணர்ச்சிகள்.
    அத்தனையும் வாரி போட்டு கொண்டிருக்கிறது
    ரயில்.

    “வா பயணித்தபடி பேசுவோம்.”

    அவன் ஏறிய பின்னர்
    தயங்கி தயங்கி
    இறுதியில்
    ரயில் பெட்டியின் கதவு மூடப்படும் முன்பு
    குதித்து ஏறினேன்.

    நகரம் கூட அழகாய் இருந்தது
    ஜன்னல்களில்.
    மக்கள் ஒரே விதமான நாற்றத்துடன்
    ஜன்னலில் இருந்து குதித்து
    தற்கொலைச் செய்து கொள்ள போகிறவர்கள் போன்ற
    முகத்துடன் காத்திருந்தார்கள்
    அவரவர் இறங்க வேண்டிய நிலையத்திற்காக.

    அவன் எவ்வித உணர்ச்சியும் அற்றவனாய் இருந்தான்.
    அவன் கண்கள் எல்லாரையும் போல்
    ஜன்னலிலே இருந்தன.

    “என்ன வேண்டும் உனக்கு?”

    உனக்கு தெரியாதா என்று நினைத்தேன்.
    அது கூட கண்டுப்பிடிக்க முடியாதவன்
    எப்படி மகத்துவ சக்தியுடையவனாய் இருப்பான்.

    “பயமற்ற வாழ்க்கை ஒன்று வேண்டும்”

    பல முறைச் சொல்லி பார்த்து
    சரியாக அதே தொனியில்
    அவனிடம் சொன்னேன்.

    அவனிடம் எந்தவித உணர்வு மாற்றமும் இல்லை.

    “பயமில்லாமல் வாழ முடியாது.”

    “பயத்தோடு வாழ்ந்து வாழ்ந்து
    கொடூரமான வலியில் இருக்கிறேன்.”

    “பயமில்லாமல் வாழ்பவன்
    ஒரு மணி நேரம் கூட தாக்குப் பிடிக்க முடியாது.”

    அவன் பேசி கொண்டிருக்கும் போதே
    ஒரு பெண் பயணி
    கதவினை வலுக்கட்டாயமாக திறந்து
    வெளியே குதித்தாள்.
    நகரம் எதைப் பற்றியும்
    கவலைப்படாமல்
    அவளை விழங்கி கொண்டது.

    “நீங்கள்
    பயமற்ற வாழ்க்கையினை அருள்பவர் என்று
    சொன்னார்கள்.”

    “தவறு.
    நான் மரணத்தை மட்டுமே அருள்பவன்.
    எனெனில்
    பயமற்ற வாழ்க்கை
    மரணத்திற்குத் தான்
    வழி வகுக்கும்.”

    எதோ ஒரு ரயில் நிலையம்.
    அவன் கூட்டத்தோடு கூட்டமாய்
    இறங்கி சென்று விட்டான்.


  • பாரம் தரும் வலி.
    கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு தரும் சோகம்.
    பல நூறு பார்வைகள் தாக்குவதால் வரும் தடுமாற்றம்.
    இது என்னுடைய சிலுவையல்ல என்று சொல்லியபடி
    சுமக்கிறேன்
    என்னுடைய சிலுவையை.

    நன்றி

    ஓவியம்: Ilya Ovcharenko

     


  • இலைகளின் சலசலப்பு போல
    சில பேச்சரவம்.
    மற்றப்படி
    நிரம்பி நின்றிருக்கும் நீர்நிலைப் போல
    பேரமைதி.

    எங்கோ உருப்பெற்று வழிந்தோடி
    கரைந்து போகிறது
    எதோவொரு வாகனத்தின் ஒலி.

    ஜன்னலுக்கு வெளியே
    நிரம்பி கொண்டிருக்கிறது
    மஞ்சள் வெயில்.

    விட்டெறிந்த கல்லாய்
    எல்லாவற்றையும் கலைத்து அழுகிறது
    பள்ளிக்கூட மணி.

    காலடிச்சப்தங்களுக்காக
    துழாவுகிறது
    செவிப் புலன்.

    உருக தொடங்கி
    வளைகிறது பெஞ்ச்.

    நன்றி
    ஓவியம்: பில்லி அலெக்சாண்டர்


  •     – 01 –

    பெல்ட் உயரும் போது
    அது
    நரியின் வால்.
    தயாராகும் போது
    அது
    பயந்து உறைந்து
    அடுத்த நகர்தலில் தீண்டுவதற்குத் தயாராகும்
    பாம்பு.

    காற்றிலே ஓர் இசை.
    என்னை தொடும் போது
    அது ஓர் ஒலி.
    பிறகு நரம்புகள் விழித்தெழும் வலி.
    உடலெங்கும் கதவுகள் திறக்கும்.
    ஒரு கணம்
    கண்கள் இருண்டு
    பிறகு விழிக்கும் போது
    நெருப்பு ஜுவாலை ஒன்று
    உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
    பரவி சென்றிருக்கும்.
    சிந்தனைகள் இல்லாது
    உடலும் மனமும்
    ஒருங்கே
    வலியில் திளைக்கும்.

        – 02 –

    ஒரே ஓர் பெல்ட் அடி
    என்னை
    அடி பணிய வைத்து விடும்.
    ஆனாலும்
    எனக்கு
    நான்கைந்து கொடுத்தால் ஒழிய
    உன்னால் நிறுத்த முடியாது.

    இங்கே
    அடி வாங்கும் நான் முக்கியமல்ல
    உனக்கு.
    உன் செய்கையே முக்கியம்.

    சுருண்டுப் பிறகு அதிவேகமாய் அது
    காற்றைக் கிழித்து கொண்டு
    விஸ்வரூபம் எடுக்கும் சமயம்
    உன் முகத்தில்
    ஒரு பைக்கை ஓட்டும் திருப்தி.
    பேச்சில் வென்ற கர்வம்.
    புது செல்போனை முழுமையாய் புரிந்து கொண்ட சிரிப்பு.

    அதனாலே
    பிறகுத்
    துணி அணிவதற்குக்
    கையை உயர்த்தும் போது கூட
    அதே அதிகார பாசாங்கு.

        – 03 –

    ஒவ்வொரு முறை பெல்ட்
    என்னை அடித்து விட்டு போகும் போதும்
    தரையோடு தரையாய் பரவி
    அது முடியும் வரை
    என்னை மறந்து
    வலியில் மூழ்கி கிடப்பேன்.

    நீ நகர்ந்த பின்னே
    என்னைப் பார்த்து பரிதாபப்படுவாயென
    அசட்டு காத்திருப்பு வேறு
    அந்தச் சில நொடிகளில்.

        – 04 –

    அது ஒரு கறுப்பு பெல்ட்.
    பளபளவென இருக்கும்.
    சிறு வயதில் தோட்டத்தில் கண்ட
    கருநாகத்தை நினைவுப்படுத்தும்.
    ஒரு தேளின் கொடுக்கினைப் போல
    திமிரானது.

    இந்த லெதரை
    எந்த மாட்டிலிருந்து உருவாக்கியிருப்பார்கள்?
    பசுக்களைத் துரத்தும் காளை?
    நடக்கும் தடமெல்லாம்
    விந்து சொட்டு சொட்டாய் சிந்தியபடி
    செல்லும் காளை?

    பெல்ட் பக்கிள் வெண்மையாய் சிரிக்கிறது.
    என் முகத்தைப் பிரதிபலிக்கிறது.

        – 05 –

    உன்னை நான் ஏன் அடிக்க வேண்டும்?
    இல்லையெனில்
    உன் முட்டாள்தனம்
    இந்தத் தருணத்தை
    தரையில் ஊற்றிய நீராக்கி விடும்.

    ஓட தெரியாத குதிரையினை
    பழக்கி பழக்கி
    நாட்களை நகர்த்தி கொண்டு இருக்கிறேன் நான்.

    வலி என்பது
    நீ
    இந்தப் பாடத்திற்காக செலுத்தும் கட்டணம்.
    உன் வலி
    எனக்கு அதிகார போதை.
    அது எனக்கு நீ தரும் குரு தட்சணை.

    நன்றி: படங்கள் www.freeimages.com -இல் Victor Maasilamani-யால் பதிக்கப்பட்ட படம்.