• துப்பாக்கி தோட்டாக்கள் வெடித்து எங்களிடையே நுழைவது
    மெல்லிய கம்பிகள் ஈட்டிகளாய் எறியபடுவது போல தோற்றம்.
    செவி தன் திறனை இழந்து விட்டது.
    கம்பிகள் கால்களை நோக்கி தான் வருகின்றன.
    ஒளியை கிளப்பி போவதும்
    தரையில் பட்டு சிதறுவதும்
    எல்லாரும் கால்களை தூக்கி தப்பிக்க நினைப்பதும்
    யாருடைய இரத்தமோ யார் யாரோ மீதெல்லாம் பரவி கிடப்பதும்…!
    யார் யார் சாக போகிறார்கள்?
    நானில்லை.
    நானில்லை.
    காற்றடித்து ஒதுங்கும் உதிர்ந்த இலைகள் போல
    நான் சாதுரியமாக ஒதுங்கி கொண்டிருக்கிறேன்.
    கண்கள் இருளும் போது தான்
    ஏன் எனக்கு எப்போதும் இப்படி நடக்கிறது என வருந்துகிறேன்.
    ஆனால் வலியே இல்லை.
    இறந்து விட்டேனா?


  • பாதி சொம்பு அரிசி எடுக்க
    அடுக்கி வைத்த மூட்டைகளில்
    மேல் மூட்டையை பிரிக்கவும்
    கொட்டி விழுந்து தரையில் பரவிய அரிசி போல்
    ஒரு நினைவு கோர்த்து இழுத்து வருகிறது பலவற்றை.


  • மேகங்கள் கர்ஜித்து மழை ஊற்ற தயாரானது போல
    புயல் கிளம்பியது போல
    போலீஸ்காரர்கள் ஓடி வரவும்
    சைக்கிள் ரிக்ஷாக்காரர்கள் அவசரமாய் ஓட எத்தனிக்க
    பிளாட்பார்ம் வியாபாரிகள் பையை சுருட்டி தப்பிக்க முயன்றார்கள்.

    போர்களமாய் சாலை பரபரப்பானது.
    ஒற்றை செருப்புகள் நிறைந்திருக்க,
    லத்தி உடலில் விழும் சத்தமும்,
    வலியில் சிலர் கத்துவதும்,
    பீதியுற்ற பார்வைகளும் அங்கு நிறைந்திருக்கின்றன.

    சைக்கிள் ரிக்ஷாவில் இருந்து அவன் எழுந்திருக்க முயலும் போது
    அது கவிழ்ந்தது.
    கால் சுளுக்கி கொண்டது.
    அவன் எழுந்திருக்க முயலும் போதே ஒல்லியாய் இருந்த ஒரு போலீஸ்காரன்
    உயர்த்தபட்ட லத்தியுடன் ஓடி வந்தான்.
    சர்வமும் ஒடுங்கி கைகளை தலைக்கு மேலே வைத்து அவன் சுருண்டான்.

    பணிதலை கண்ட லத்தி சந்தோஷமாய் கீழே இறங்கும் போது
    மிருகத்தனமான அலறலுடன் குறுக்கே வந்தாள் அந்த ரிக்ஷாக்காரனின் மனைவி.

    கலைந்த தலைமுடி,
    விரித்த கைகள்,
    திறந்த மார்புகள்,
    மிருகத்தனமான அலறல்,
    பார்வையில் தாங்க முடியா வீரியம்.

    விழுந்து கிடந்த கணவனுக்கு
    கேடயமாக தன் உடலை பரப்பி
    இனம் புரியா மிருக அலறலுடன் நிற்கும் அந்த மனைவியை கண்டு
    லத்தி திகைத்தது,
    பயந்தது,
    குழம்பியது,
    வெட்கமுற்றது,
    பின்வாங்கியது.


  • ஒரு கனவு மெய்ப்பட்ட சம்பவம் அது; நிலவினில் மனிதன் காலடி வைத்தான். அறிவியல் முன்னேற்றங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல கனவுகளையும் மாற்றி விட்ட தருணமது.அமெரிக்க ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையத்தின் ‘அப்போலோ’ திட்டங்கள் நிலவுக்கு மனிதனை அழைத்துச் செல்லும் குறிக்கோளுடன் தொடங்கப்பட்டவை. ஆறு அப்போலோ பயணங்கள் (அப்போலோக்கள் 11, 12, 14, 15, 16 & 17) இந்தக் குறிக்கோளை அடைந்தன. அப்போலோ 11, 16 ஜூலை 1969 அன்று ஏவப்பட்டது. ஜூலை 20, 1969-இல் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவினில் காலடி வைத்தார்.

    பயணத்தைத் தொடங்கும்பொழுது ‘விண்வெளிக் குழு’ உயிரோடு திரும்பி வருவதற்கு 90 சதவீத வாய்ப்பும், நிலவினில் காலடி வைப்பதற்கு 50 சதவீத வாய்ப்பும் இருந்ததாகவே ஆர்ம்ஸ்ட்ராங் எண்ணிக் கொண்டிருந்தார். அப்போலோ திட்டத்தில் செயலாற்றிய எல்லாருக்கும் இவ் விஷயம் தெளிவாகத் தெரியும். அன்றைய அமெரிக்க அதிபர் நிக்சன், ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்குப் பின் பேச வேண்டிய உரையையும் தயாராக வைத்திருந்தார். நிக்சனுக்கு உரையை எழுதித் தரும் வில்லியம் சபையர், ‘விதி, நிலவினில் அமைதியாக ஆராயப் போனவர்களை அமைதியாக உறங்க வைத்துவிட்டது,’ என்று எழுதியிருந்தார். நிக்சன் அதனை உபயோகிக்க வேண்டிய அவசியமில்லாமல் அறிவியல் வளர்ச்சி விண்ணை முட்டி நின்றது.

    அப்போலோ 11 விண்வெளி குழு உறுப்பினர்களின் அனுபவங்கள் அவர்கள் எழுதிய புத்தகங்களிலிருந்தும் ஆற்றிய உரைகளிலிருந்தும் பங்கேற்ற பேட்டிகளிலிருந்தும் தொகுக்கப்பட்டு ஒரு சிறு விவரிப்பாக அளிக்கப்பட்டுள்ளது.
    அப்போலோ 11விண்வெளிக்குழு
    நீல். ஏ. ஆர்ம்ஸ்ட்ராங், தலைவர்.
    மைக்கேல் கொல்லின்ஸ், விண்கல விமானி.
    எட்வின் இ. ஆல்டிரின், நிலவு விண்கல விமானி.

    இடம் – கென்னடி விண்வெளி மையத்தின் 39ஏ விண்கலம் ஏவுதளம்.

    நாள் – 16 ஜூலை 1969
    நேரம் – காலை 9:00 மணி

    ஆல்டிரின்
    விண்கலம் ஏவப்பட வேண்டிய நாளன்று, காலை உணவு வேளையின்போது, ‘நாசா’வின் நிர்வாகி முனைவர் தாமஸ் பைன் எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார். எங்களது பாதுகாப்பே மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமானது என அவர் அதில் குறிப்பிட்டார். அப்படி ஏதேனும் அசம்பாவிதம் நிகழக் கூடுமாயின் பயணத்தைப் பாதியில் விட்டுத் திரும்பி வந்து விட வேண்டும். அப்படிப் பாதியில் திரும்பி விட்டால், அப்போலோ 11 விண்வெளிக் குழுவுக்கு அடுத்த நிலவுப் பயணத்தில் கட்டாயம் வாய்ப்பளிக்கப்படும் என்று உறுதி கூறினார். அது எங்களுக்கு ஆச்சரியமாகயிருந்தது. ஏவப்படும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

    ஆர்ம்ஸ்ட்ராங், கொல்லின்ஸ் இருவரும் விண்வெளி உடையை அணிந்து கொண்டிருந்தார்கள். நான் அமைதியாக ஓர் ஓரத்தில் நின்றிருந்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை சாலைகளிலும், கடற்கரையிலும் மக்கள் கூடியிருந்தனர். நான் நின்
    றிருந்த கட்டிடத்திற்கு அருகே ‘சேட்டன் V’ ராக்கெட் பிரம்மாண்டமாய் நின்றிருந்தது. அதன் தலையில் ‘அப்போலோ 11’ அமர்ந்திருந்தது. இந்தக் காத்திருத்தலை, இந்தக் கணங்களை என்றும் மறக்கக்கூடாது என நினைத்துக் கொண்டேன்.

    ஆர்ம்ஸ்ட்ராங்
    வெற்றிகரமாய் எங்கள் பயணம் தொடங்கியது. சேட்டன் எங்களுக்கு ஓர் அருமையான பயணத்தை உருவாக்கியது, நிலவை நெருங்கும் வரை.

    ஆல்டிரின்
    பிளோரிடா கடற்கரையில் நின்றிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு, எங்கள் ராக்கெட் ஏவப்பட்ட கணத்தில் செவி கிழியுமளவுச் சத்தம் உண்டாகியது. ஆனால் எங்களுக்கோ எங்கோ தூரத்தில் அந்தச் சத்தம் கேட்டது. ஒரு நிமிடத்தில் நாங்கள் ஒலியை விட வேகமாய் பயணித்துக் கொண்டிருந்தோம்.

    கொல்லின்ஸ்
    உருள்தல், ஆடுதல், அதிர்தல் எல்லாம் நடந்தன. வலதும் இடதும் விழுந்து எழுந்தோம். எங்கள் கலம் வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது; அதிர்ச்சியில் ஒரு பெண் சிறிய சந்தினுள் பெரிய காரை ஓட்டிச் செல்வது போல் அது சென்று கொண்டிருந்தது.

    ஆல்டிரின்
    பதினோரு நிமிடத்தில் எங்களால் பூமியைப் பார்க்க முடிந்தது. இங்கிருந்து எந்த நாட்டின் எல்லைகளும் எங்களுக்குப் புலப்படவில்லை.

    சேட்டன் கழண்டு கொள்ள அப்போலோ நிலவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. விண்கலம் ஏவப்பட்டு பதினான்கு மணி நேரம் கழித்து, மூன்று விண்வெளி வீரர்களும் தூங்கத் தொடங்கினார்கள். இரண்டாவது மற்றும் மூன்றாம் நாள் கலத்தைத் தயார்ப்படுத்துவதில் கழிந்தது.
    கொல்லின்ஸ்
    நான்காவது நாளன்று, நாங்கள் நிலவைக் கண்டோம். ஒரு நாள் முழுவதும் நாங்கள் நிலவைப் பார்க்காமலிருந்து விட்டு இப்பொழுது பார்க்கிறோம். என் வாழ்வு முழுவதும் நான் அறிந்திருந்த நிலவல்ல அது. எங்கள் ஜன்னல் வழியாக முழு நிலவையும் காண முடியாத அளவு அது பெரியதாகயிருந்தது.

    ஆல்டிரின்
    இப்பொழுது கொல்லின்சை விண்கலத்திலே விட்டு விட்டு, நானும் நீலும் ‘ஈகிள்’ விண்கலத்தில் நிலவுக்குப் போக வேண்டும். எல்லாம் திட்டமிட்டபடியே நடந்து வருகின்றது.

    ஈகிள் விண்கலம் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்கையும் எட்வின் ஆல்டிரினையும் சுமந்தபடி நிலவை நோக்கிப் பயணித்தது. நிலவுக்கு அருகே சென்றபோது, அபாய விளக்கு எரியத் தொடங்கியது. கணனியை அளவுக்கதிகமான வேலைகளில் ஈடுபடுத்தியதால் பணி பாரம் தாங்காமல் அபாய விளக்கு எரியத் தொடங்கிவிட்டது. ஏதேனும் சில பணிகளைக் கைவிட வேண்டிய நிலை. அப்படிச் செய்தால் நிலவை மறந்து, திரும்பவும் வீட்டுக்கு மூட்டை கட்ட வேண்டியதுதான்.
    ஆல்டிரின்
    பூமியிலிருந்து கணனிப் பொறுப்பாளர் ஸ்டீவ் பெல்ஸ் எங்களைத் தொடர்ந்து முன்னேறச் சொன்னார். மேலும் இரண்டு அபாய விளக்குகள் எரியத் தொடங்கின. ஆனால் எதுவும் நிகழவில்லை. பின்னர் எங்கள் மூவருக்கும் அமெரிக்க அதிபர் மெடல்கள் அளித்த போது, ஸ்டீவ் – க்கு மட்டும் நான்காவதாக ஒரு மெடல் கொடுக்கப்பட்டது. அவரில்லையென்றால் இந்தப் பயணம் வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்காது.இன்றைக்கு இருக்கின்ற கணனி முன்னேற்றங்கள் அன்றைக்கு (1969-இல்) இல்லை.விண்கலத்தை நிலவி
    னில் இறக்குவது சுலபமானதாய் இல்லை. சிறிய தவறு கூட மரண வாசலைத் திறந்து விட்டு விடும். ஆனால் நீல் ஆர்ம்ஸ்ட்ராங், விண்கலத்தின் எரிபொருள் மேலும் முப்பது வினாடிகளே தாங்குமென்ற சூழ்நிலையிலும் திறமையாகக் கலத்தை நிலவினில் இறக்கினார். சில மணி நேர ஓய்வுக்குப் பின்னர் விண்வெளி வீரர்கள் இருவரும் கதவைத் திறந்து நிலவினில் கால் பதிக்கக் கிளம்பினார்கள்.

    ஆர்ம்ஸ்ட்ராங்
    பல நிபுணர்கள், ‘நிலவினுள் நுழையும்போது, புதுச் சுற்றுச்சூழல் காரணமாய் மனிதர்களின் அனுபவம் கடினமானதாய் இருக்குமெனக் கணித்திருந்தார்கள். ஆனால் எங்களுக்கு நிலவு நிம்மதியான இடமாகத் தெரிந்தது.

    ஆல்டிரின்
    ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்து நான் ஏணி வழியாகக் கீழே இறங்கினேன். வெளியே எல்லா சுற்றுலாப் பயணிகளையும் போல், நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நான் நிலவில் இறங்கிக் கால் பதிப்பதைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார்.
    சாய்ராம்
    படங்கள் – நாசா 

    ஜூலை 20 – 39 வருடங்களுக்கு முன்பு நிலவில் மனிதன் முதல் காலடி வைத்த நாள் இன்று. எட்டு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஆறாம்திணை இணைய இதழில் இந்த கட்டுரையை நான் எழுதியிருந்தேன். சில நாட்கள் கழித்து இந்த கட்டுரை ஆனந்த விகடனில் மறுபதிப்பு செய்யபட்டது.

  • என்னுடன் பணி புரிந்த நண்பர் ஒருவரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. உயிருக்குப் போராடி கொண்டிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவரது உடல்நிலை அவரை வீட்டோடு முடக்கியிருந்தது. நண்பரின் தாயோ மனநிலை குன்றியவர். நண்பர் ஒரே மகன். திருமணமும் ஆகவில்லை. அவரது வாழ்க்கையே மற்றவர்கள் பார்த்து பாவப்படும் அளவில் இருந்தது. இதில் திடீரென தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றவுடன் முற்றிலுமாய் தளர்ந்து விட்டார்.

    அன்று காலை அவரது தந்தை வீட்டு குளியலறையில் மயங்கி விழுந்தவுடன், நண்பர் தன் தந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் சென்னையில் உள்ள ஒரு பிரபலமான மருத்துவமனைக்கு தந்தையை அழைத்து போயிருக்கிறார். நம் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு உடல்நிலை சரியில்லையென்றால் முதலில் உயிரைக் காப்பாற்றுவோமென தான் நினைப்போம். பணத்தைப் பற்றி கவலைப்பட அப்போது தோன்றாது.

    மருத்துவமனையில் நண்பரின் தந்தை சேர்க்கப்பட்ட இரண்டாவது நாள் தாம் நண்பருக்குத் தனது தவறு புரிந்தது. சூடு வைக்கப்பட்ட ஆட்டோ மீட்டர் போல ஒரு நாளைக்குச் சில ஆயிரங்கள் பில் தொகையாக உயர தொடங்கியது. தினமும் சில ஆயிரங்கள் என்பது விரைவிலே லட்சங்களில் போய் முடியலாம். நண்பரின் கையில் பணம் இல்லை.

    நண்பரின் தந்தை உடல்நிலை மிக மோசமாகி கொண்டிருந்தது. வெண்டிலேட்டரில் தான் அவரது சுவாசம் காப்பாற்றப்பட்டு வந்தது. பில் தொகை அதிகமாகி கொண்டிருந்தாலும், மருத்துவர்களால் நண்பரின் தந்தையைக் காப்பாற்ற முடியுமென உறுதி அளிக்க இயலவில்லை. எப்படியிருந்தாலும் விரைவில் இறக்க போகிறார் என்பது அவர்கள் பேச்சில் புரிந்தது.

    நோய்வாய்பட்டவரை அரசு மருத்துவமனையில் சேர்த்து விடலாம் என நண்பர்கள் எல்லாரும் யோசனை சொன்னோம். கையில் பணமே இல்லாமல் ஒருவர் எப்படி பில் தொகையைச் செட்டில் செய்ய இயலும்?

    அரசு மருத்துவமனையில் குறைவான எண்ணிக்கையிலே வெண்டிலேட்டர் இருந்தன. அதற்கும் ஏகப்பட்ட டிமாண்ட். இரண்டு மூன்று நாட்கள் அரசு மருத்துவமனை டீன் வரை பேசியும் வெண்டிலேட்டர் கிடைக்கும் என உறுதி கிடைக்கவில்லை. எம்.எல்.ஏ சிபாரிசு இருந்தால் கூட வெண்டிலேட்டர் கிடைப்பது உத்தரவாதமல்ல. வெண்டிலேட்டர் இல்லாவிட்டால் நண்பரின் தந்தை உயிர் உடனே பிரிய கூடும் என்கிற ஆபத்து இருந்தது.

    ஒரு வலுவான சிபாரிசை பிடித்து நண்பரின் தந்தையை அந்த தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு மாற்றினோம். அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த அடுத்த கணமே யதார்த்தம் எங்களைச் சுட்டது. சிபாரிசு வேலை செய்யவில்லை. பொது வார்டில் அவரைப் போட்டார்கள். கையால் காற்றினை பம்ப் செய்ய ஒரு கருவி இருந்தது. அதனை ஒருவர் மாற்றி ஒருவர் பம்ப் செய்து கொண்டிருந்தோம். முப்பது படுக்கைகள் கொண்ட வார்டில் ஐம்பது நோயாளிகள் இருந்தார்கள். அட்மிட் செய்யும் போதே, ‘இவர் உயிருக்கு உத்திரவாதம் தர முடியாது,’ என சொல்லி விட்டார்கள்.

    நண்பர் சத்தமாக அழ தொடங்கி விட்டார். எங்கள் எல்லாருக்கும் ஒரு கொலை செய்த குற்ற உணர்வு ஏற்பட்டது. மீண்டும் அங்கே பிடி, இங்கே பிடி என தொங்கி பல மணி நேரங்கள் கழித்து வெண்டிலேட்டர் வசதியைப் பெற்றோம். அதற்கான ஸ்பெஷல் வார்டு அந்த தனியார் மருத்துவமனையை விட பல மடங்கு உயர்வான வசதிகளுடன் இருந்தது. ஆனால் அரியதாய் சிலருக்கு மட்டுமே கிடைக்கும் இலவச வசதி.

    பத்து நாட்கள் கழித்து நண்பரின் தந்தை இறந்து விட்டார். ஒரு வேளை நண்பர் கோடீஸ்வரராக இருந்து அமெரிக்கா வரை செலவழித்து இருந்தால் அவர் தன் தந்தையின் உயிரைக் காப்பாற்றி இருக்க முடியும். அல்லது சில லட்சங்கள் வைத்திருந்தால், தந்தையை அந்தத் தனியார் மருத்துவமனையிலே இறக்கும் வரை வைத்து இருந்திருக்க முடியும்.

    பலமான சிபாரிசுகள் வைத்திருப்பவர்களுக்கே வெண்டிலேட்டர் போன்ற வசதிகள் கிடைக்காது என்கிற நிலை இருந்தால், அரசு மருத்துவமனையில் சேரும் ஏழை ஜனங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டால் மரணம் தான் தீர்வு போலும். இரண்டாவது மாடியில் உயிரை காக்க உபகரணங்கள் இருந்தும், கீழ் தளத்தில் எவ்வளவு ஆயிரம் பேர் இது வரை இறந்து போயிருப்பார்கள் என எண்ணிய போது உடல் நடுங்கியது.

    நன்றி:

    ஓவியம்: Zeng Fanzhi

    மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


  • முதலாளி தன் மனைவிக்கு
    வாங்கி கொடுத்த முத்துச்சரத்தில்
    உதிர வாசம்!

    உதிரம் திருடப்பட்டவர்கள்
    மாலை நேரம் வீடு திரும்புகையில்,
    கதவை திறக்கும் போது படியும்
    உடற்களைப்புடனான மன சலிப்பு!

    அஞ்சால் அலுப்பு மருந்தினை
    உட் கொண்டு
    களைப்பையும் சலிப்பையும்
    டாஸ்மாக்கில் ஊற்றி
    வாழ்வின் அபத்தத்தை பாடுவோம், வா!

    நம் மனைவிமார்களின் கண்ணீரை
    அவர்களது கண்ணீராலே குளிப்பாட்டுவோம்.
    அவர்களிடமாவது நாம் முதலாளிகளாய் இருப்போம்!


  • பைக்கின் உறுமல் ஒலியை காற்றில் மிதக்க விட்டு
    அவன் என்னிடமிருந்து விடை பெற்று சென்று
    சில கணங்கள் தாம் கடந்திருக்கும்.

    கத்தியை கூர் தீட்டுவது போல ஒரு சத்தம்.
    அவன் சென்ற திசையில்
    யாரோ பைக்கிலிருந்து தூக்கியெறியபடுவதை பார்த்தேன்.
    அதற்கு பிறகு நான் திரும்பவே இல்லை.
    எதிர் திசையில் நடந்து கொண்டே இருந்தேன்.

    முதிர் மாலை நேரத்து இருள்.
    யார் என தெளிவில்லை.
    அவனாக இருக்குமோ?

    துப்பட்டாவை இழுத்து போர்த்தி
    வீட்டை நோக்கி நடந்தேன்.
    ஏற்கெனவே தாமதமாகி விட்டது.
    தந்தை திட்டுவார்.

    விபத்தின் தாக்கம் ஓர் அலை போல என்னை கடந்து சென்றது.
    சிலர் அந்த பக்கம் ஓடினார்கள்.
    சிலர் வெறித்தபடி பார்த்து கொண்டிருந்தார்கள்.

    அவனாக இருக்காது.
    வேறு யாரோ.
    யாரோ ஒரு குடிகாரன்.

    அவனாக இருந்தால் அவனுக்கு இப்போது உதவி தேவைபடும் அல்லவா?
    அவனுக்கு விபத்து நேர்ந்ததை நான் பார்த்தேன் என யாருக்குமே தெரியாது.
    அவனுக்கே தெரியாது.

    இயந்திரங்களின் பிடியில் சிக்கிய பிரதான வீதிக்கு வந்த போது
    அந்த விபத்து நடந்ததற்கான அறிகுறியே இல்லை.

    இருள் தெரு விளக்குகளின் வெளிச்சத்திற்கு போர்வையாகி கொண்டிருந்தது.
    தந்தையிடம் என்ன பொய் சொல்வது?
    தோழியின் பெயரை பல முறை சொல்லியாகி விட்டது.

    அம்மா உள்ளே நுழையும் போதே மோப்பம் பிடிப்பாள்.
    இன்று திருட்டுதனமாய் கன்னி கழிந்து வீடு வருகிறேன்.

    அங்கிளிடம் குட்டி பொண்ணு என அப்பா என்னை சொல்லி கொண்டிருந்தது
    நான்கு நாட்களுக்கு முன் இருக்குமா?

    உடலில் இன்னும் அவனது கை விரல் மேய்ந்து கொண்டிருப்பதாய் தவிப்பிருந்தது.
    இன்று அவனது பிடி உறுதியாக இருந்தது.
    கன்னம் என்னையறியாமல் சிவந்திருக்குமென தோன்றியது.

    அவன் இறந்திருப்பானா?
    அவனில்லை. வேறு ஒரு குடிக்காரன்.

    போன் செய்தால் தெரிந்து விடும்.
    இப்போது அதற்கு நேரமில்லை.
    வீட்டிற்கு போனபிறகு போன் செய்தால்
    தந்தை கோபித்து கொள்வார்.
    வீண் சந்தேகம் ஊட்டும்படியாக ஏன் நடந்து கொள்ள வேண்டும்.

    உடையில் எதாவது தடயம் இருக்கிறதா?
    அம்மாவின் கண்கள் ஆபத்தானவை.
    உள்ளே நுழைந்தவுடன் நேராக பாத் ரூமிற்குள் ஓடி விட வேண்டும்.

    குளியலறையில் சுடுதண்ணீரில் குளித்தபடி
    இன்று நடந்ததை அசை போட வேண்டும்.

    ஆனால் அவன் என் காதலன் இல்லை.

    எங்கள் வீதியில் தந்தையின் நிழல் நீண்டு தெரிகிறது.


  • கொலையாளியை கூட்ட நெரிசலில் அவர்கள் அழைத்து போகும் போது
    எங்கள் இருவர் கண்களும் ஒரு கணம் சந்தித்து கொண்டன.
    அவனது கண்களுக்குள் அமைதி மட்டுமே இருந்தது.
    என் கண்களில் படபடப்பை பார்த்திருப்பான்.

    அவனது கண்களில் அமைதியை தவிர
    வேறு என்ன இருந்திருக்க வேண்டும்?
    என்ன எதிர்பார்த்தேன்?

    கூட்டத்தின் வியர்வை வாசத்தில்,
    புரியாத பாஷை கூச்சல்களில்
    யார் செவிக்கும் கேட்காத வசனங்கள்
    காற்றில் மிதந்து செல்வதை பார்த்தேன்.

    “கிராமத்திலே அழகான பெண்
    தினமும் தனியா அந்த பக்கம் போறதை
    கவனிச்சிட்டே இருந்திருக்கிறான்.”

    “கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு.”

    காற்றில் மிதந்து சென்ற வசனங்களை
    நான் முழுமையாய் வாசிக்கும் முன்
    அவை கலைந்து போயின.
    கலைந்த வேகத்தில் புகையாய்
    நேற்று நான் பார்த்த
    வேறொரு யுவதியின் முகத்தை வரைந்து காட்டியது.

    அழகு.
    அதனை கச்சிதமாய் திருத்தமாய் பயன்படுத்தி
    பார்ப்போரை வசியம் செய்யும் தோற்றத்துடன்
    முகத்தில் புன்முறுவல் பூசியிருந்தாள்
    அந்த இளம் பெண்.

    புகை ஓவியத்தை என் பயத்தால் கலைத்தேன்.
    ஆபத்து கட்டாயம் தேடி வரும் என
    உடல் நடுங்கியது.

    கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு கூடியது.
    போலீஸ் வேன்கள் உறுமும் சத்தம்.
    தரையில் வாழைப்பழத்தை மிதித்து பிறகு தள்ளி நின்றேன்.

    அவன் கண்களில் நான் அமைதியை தாண்டி
    வெறுமையை தான் பார்த்தேன்.
    ஆம், அது களைப்பினால் உண்டானதா?
    உடற்களைப்பா? அல்லது?

    என்னை கசக்கியபடி கூட்டம்.
    அந்த கூச்சலில் எழுந்தது ஒரு நினைவு.
    வேறொருவனுடன் ஓடி போன மனைவியை
    வெட்டுவதற்கு வாள் ஏந்தி வந்த அரசன்
    பல காலம் கழித்து அவளை பார்த்த கணத்தில்
    அவளது அழகை கண்டு திகைப்புற்று
    தன்னையறியாமல் மண்டியிட்ட காட்சி.

    யாரோ காலை மிதிக்க முயல்கிறார்கள்.

    அவனது கண்களை நினைவுபடுத்தி கொள்கிறேன்.
    மறக்க கூடாது. மறக்க கூடாது.
    அப்படியே பசுமையாய் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

    போலீஸ்காரன் ஒருவன் லத்தியை உயர்த்தி
    கூட்டத்தை பயமுறுத்த முயல்கிறான்.

    ‘அரசர்களை அரசாண்ட இளவரசியின்
    முகத்தில் கட்டாயம் கர்வத்தின் சுழிப்பு தோன்றியிருக்கும்.’

    எதையும் வெல்லலாம்.
    ஆனால் அழகு ஒரு சாபம் தான்.


  • பல வருடங்கள் கழித்து அன்று கல்லூரி நண்பன் ஒருவனைப் பார்த்தேன். தன் புது ஹோண்டா காரில் வந்திருந்தான். பரஸ்பர நலம் விசாரித்தல், பிறகு நண்பர்களைப் பற்றி புரணி பேசுதல் என உற்சாகமாய் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு நல்ல ஏசி பாருக்கு மது அருந்த அழைத்து சென்றான்.

    தொடர்ந்து இரண்டு மணி நேரம் உரையாடி விட்டு அடுத்து பேச என்ன என தெரியாமல் ஓர் அமைதி நிலவியது. பாரில் ஓர் ஓரத்தில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த டீவியில் ஓடிக் கொண்டிருந்த கிரிக்கெட் மேட்ச்சை இருவரும் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தோம். மது அருந்தும் போது பேச்சு ஒரு கூடுதல் போதையூட்டி. அதனால் நண்பன் மீண்டும் பேச தொடங்கினான்.

    “உனக்கு பாண்டியன் நினைவிருக்கா?” என நண்பன் டீவி திரையில் இருந்து கண்களை அகற்றாமல் கேட்டான். நான் பதில் பேசுவதற்குள் அவனே மீண்டும் பேச தொடங்கினான்.

    “பாண்டியனைக் பட்டிக்காட்டான், பட்டிக்காட்டான்னு நாம எல்லாரும் கிண்டல் பண்ணோம் நினைவிருக்கா.”

    கல்லூரி காலத்தில் எங்களுக்கு ஒரு வருட ஜுனியர் இந்த பாண்டியன். அமைதியானவன். யாரிடமும் அதிகமாய் பேச மாட்டான். எங்கள் கல்லூரி தங்கும் விடுதியில் அவரவர்களுக்குத் தனி தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. பீடி குடித்தபடி அறைக்குள்ளே கிடப்பான். எக்கச்சக்க புத்தகங்கள் குப்பை போல அறையில் குவிந்திருக்கும். அறையே ஒரு பெரிய குப்பை கூடை போல தானிருக்கும். அந்த குப்பை கூடையில் ஒரு குப்பை போல கட்டில் தெரியும். கட்டிலில் ஒரு பழைய அழுக்கு மெத்தையைச் சுருட்டி அதைத் தனக்கான இடமாக மாற்றியிருந்தான். அறையில் அந்த ஒரு பகுதியில் மட்டும் தான் அவன் அமர்வான். அமர்வது என்பது ஏறத்தாழ படுத்து கிடப்பது தான். அந்த போஸில் தான் படிப்பது, தூங்குவது எல்லாம். புகைப்பதற்கு பீடிகள் தீர்ந்து விட்டால் தரையில் இருக்கும் பழைய பீடிகளை தேடி எடுத்து அதன் மிச்சங்களைப் புகைத்து கொண்டிருப்பான்.

    “நான் அப்பவே பாண்டியனை ஓர் அறிவு ஜீவின்னு சொல்லிட்டு இருந்தேன், ஞாபகம் இருக்கா? நான் காலேஜ் முடிச்சிட்டு வேலைக்குச் சேர்ந்த முதல் வருஷம் கோயம்புத்தூருக்கு என்னைப் பாக்கறதுக்காக வந்தான். என் அட்ரஸை எப்படி கண்டுபிடிச்சான்னு தெரியலை. அவன் சொன்ன விஷயத்தை முதல்ல நான் நம்பவே இல்லை. இப்ப சொன்னா கூட நீ நம்பவே மாட்ட,” என்றான் நண்பன். அவன் என்ன சொல்ல போகிறான் என என்னால் ஊகிக்க முடிந்தது. ஆனால் நண்பனின் பேச்சில் நான் குறுக்கிடவில்லை. ஏனென்றால் நண்பன் தன் பேச்சின் சுவாரஸ்யத்தில் பேசி கொண்டே இருக்கிறான். அதை கெடுக்க விரும்பவில்லை. அடுத்து முழுமையாய் என்ன சொல்கிறான் கேட்போம் என்கிற ஆவல்.

    “ஹெலன் உனக்கு நினைவிருக்கா?” எப்படி மறக்க முடியும்? எங்கள் கல்லூரி விடுதி அருகிலே கல்லூரி ஹாஸ்டல் வார்டனின் வீடு இருந்தது. வார்டனின் மகள் தான் ஹெலன். எங்கள் கல்லூரியில் தான் படித்தாள். பேரழகி என்று தான் சொல்ல வேண்டும்.

    “வார்டன் வீட்டுக்கு நேர் வரிசையில தான் பாண்டியன் ரூம் இருந்தது. கவனிச்சிருக்கீயா?” என்று கேட்டான் நண்பன். ஏற்கெனவே பார்த்த திரைப்படத்தை மீண்டும் பார்க்கும் அலுப்புடன் நான் அமர்ந்திருந்தேன்.

    “பாண்டியனும் ஹெலனும் லவ் பண்ணியிருக்காங்க. கோயம்புத்தூருக்கு என்னைப் பாக்க வந்தப்ப தான் இத சொன்னான். குரங்கு மாதிரி இருக்கான். இவனுக்குக் கிளி மாதிரி பொண்ணு மாட்டியிருக்கேன்னு பொறாமைப்பட்டேன். தினமும் இவன் ரூம் ஜன்னல்ல இருந்து அவங்க வீட்டு மாடியில அவ ரூமை பாத்து டார்ச் அடிச்சு ஒருத்தருக்கு ஒருத்தர் சிக்னல் கொடுத்துக்கிறது, இப்படி நாம காலேஜ்ல படிக்கிற காலத்தில் இருந்தே லவ் பண்ணிட்டு தான் இருந்திருக்காங்க.” நண்பன் தன் கிளாஸைக் காலி செய்து சில நொடிகள் அமைதியாகி பிறகு மீண்டும் பேச ஆரம்பித்தான்.

    “கோயம்புத்தூருக்கு பாண்டியன் என்னைத் தேடி வந்து தன்னோட லவ் ஸ்டோரியைச் சொன்னான். இரண்டு நாள் என் ரூம்ல தான் தங்கினான். விஷயம் அந்த பொண்ணோட அப்பா, அதான் நம்ம வார்டனுக்குத் தெரிஞ்சு அவங்க வீட்ல ஒரே சண்டையாம். பொண்ணை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மாட்டேன்கிறாங்களாம். இவனுக்கு அவள பாக்காம பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆயுடுச்சு. அப்புறம் என்கிட்ட ஓர் ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிட்டு திரும்பவும் மெட்ராஸ் போனான்,” என்று நண்பன் பேச்சை முடித்தான். நண்பனின் பேச்சு முடிந்து விட்டதா என அறிவதற்காக சற்று காத்திருந்தேன். ஆமாம் பேச்சை முடித்து விட்டான் என ஊர்ஜிதமானது.

    “மூன்று மாசத்துக்கு முன்னாடி தான் ஹெலனுக்கு கல்யாணமாச்சு,” என்று ஒரு வரியை மட்டும் சொல்லி விட்டு நண்பனின் முகத்தை நோக்கினேன். கிரிக்கெட்டில் ஸ்கோர் கார்டு பார்த்து கொண்டிருந்த நண்பன் அதிர்ச்சியாகி, “என்ன சொன்ன?” என்று கேட்டான். திரும்பவும் சொன்னேன்.

    “மாப்பிள்ளை?”

    “லவ் மேரேஜ் தான். ஸ்டீபன்னு ஒரு நார்த் இண்டியன். அவ கூட வேலை செய்யற பையன் தான்.”

    “பணக்கார பொண்ணுங்க புத்தியே இப்படி தான்.”

    “பாண்டியன் உன்கிட்ட சொன்னது அத்தனையும் பொய். உன்கிட்ட மட்டுமில்ல. நிறைய பேருகிட்ட அப்படி சொல்லியிருக்கான். அது மட்டுமில்ல. அந்த பொய்களை அவனே நம்ப ஆரம்பிச்சிட்டான். ரூம்குள்ள இராத்திரி பூரா அவன் தனியா பேசிட்டு இருக்கிறதை அவன் பேட்ச்மெட்ஸ் கேட்டிருக்காங்க.”

    “அப்படினா அவனைப் பைத்தியம்னு சொல்றீயா?”

    “சந்தேகம் இல்லாம பைத்தியம் தான். உன்கிட்ட பணம் வாங்கின மாதிரி நிறைய பேருகிட்ட இந்தக் காதல் கதைய சொல்லி பணம் வாங்கியிருக்கான். அவன் நார்மலா இருந்தப்பவே பைத்தியக்காரன் தோற்றத்துல தான் இருந்தான். அதுனால மற்றவர்களுக்கு அவன் பைத்தியமான விஷயம் தெரியவில்லை.”

    “அடப்பாவி.”

    “அந்த பொண்ணுக்கு தொடர்ச்சியா போன் பண்ணி கண்டதையும் பேசிட்டு இருந்திருக்கான். அந்த பொண்ணு அவங்க அப்பாகிட்ட சொல்லி, அவரு போலீஸ்கிட்ட சொல்லிட்டாரு. போலீஸ் அவன் திரும்ப போன் பண்ணா எதாவது குறிப்பிட்ட இடத்துக்கு வா, சந்திக்கலாம்னு அந்த பொண்ணுக்கிட்ட பேச சொல்லியிருக்கு. அதே மாதிரி அந்த பொண்ணு அவனை ஒரு பார்க்குக்கு வர சொல்லியிருக்கு. நம்மாளும் போயிருக்கான். போலீஸ் சுத்தி வளைச்சு பிடிச்சுட்டாங்க. இதுல பெரிய கொடுமை என்னன்னு அந்த பொண்ணுக்கு இவன யாருன்னே தெரியல. வார்டன் தான் இவனை அடையாளம் கண்டுபிடிச்சிருக்கார். அப்புறம் அவன் என்ன ஆனான்னு தெரியாது. இந்த விஷயம் காலேஜ் முழுக்க தெரியுமே. உனக்கு எப்படி தெரியாம போச்சுன்னு ஆச்சரியமா இருக்கு.”

    “உண்மையாவா சொல்ற,” என்று நண்பன் கேட்டான். அவனது நாக்கு போதையில் தடுமாறியது. அன்று நான் அவனிடம் இருந்து விடைபெறும் வரை இந்த வசனத்தை தான் திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தான்.

    நன்றி:

    ஓவியம்: ‘Les Trois Sphinx de Bikini‘ by Salvador Dali

    மனிதர்கள் தொடர்: இது உண்மை கதாபாத்திரங்களை புனைவின் நிறத்தில் உருமாற்றி வார்த்தைகளால் வடிவமைக்கும் முயற்சி. மறக்க முடியாத மனிதர்கள் பற்றிய பதிவுகள் அனைத்தையும் வாசியுங்கள்.


  • அரக்கோணம் போகும் வழியில் ரெயில் ஜன்னல் வழியாக நீங்கள் அந்த நகரங்களை பார்ப்பீர்கள். லட்சுமி நகர், பிரதாப் நகர் என ஒவ்வொரு காலனிக்கும் பெயர் பலகைகள் பளிச்சென வைக்கபட்டிருக்கும். அதோடு நகர் அனெக்ஸ் என கூடுதல் காலனிகளுக்கும் பெயர் பலகைகளையும் வாசிக்க முடியும். அதோடு இந்த காலனிகளுக்கு போகும் பாதையில் வழிகாட்டி பலகைகள் வைக்கபட்டிருக்கின்றன.

    ஒரு வித்தியாசமுண்டு. இந்த நகரங்களில் பெயர் பலகைகள் மட்டும் தான் இருக்கும். எல்லாம் காலி நிலங்கள். எல்லை கோடுகளை வலியுறுத்தும் கற்களை தவிர புல் புளைத்த நிலப்பரப்பு. ஏன் காலி நிலங்களில் இவ்வளவு பளிச்சென பெயர் பலகைகள்? காரணமுண்டு. இன்று அதிக அளவில் பணம் புழங்கும் நில வியாபாரத்தினால் உண்டான மனிதர்களற்ற நகரங்கள் இவை.

    “தாம்பரத்துல எங்க அப்பாவுக்கு ஒரு நிலம் இருந்துச்சு. இருபது வருஷத்துக்கு முன்னால அவ்வளவு தொலைவில நிலம் வைச்சு என்ன பண்றதுன்னு சொல்லி அந்த நிலத்தை இருபதாயிரத்துக்கு விற்றோம். இன்னிக்கு அந்த நிலத்தோட மதிப்பு என்னன்னு தெரியுமா? எண்பது லட்சம்.” இப்படி பலர் இன்று அங்கலாய்த்து கொண்டிருக்கிறார்கள்.

    “பக்கத்து ஆத்து அம்புஜத்தோட ஆம்படையாள் திருவள்ளூருல மூன்னு லட்சம் ரூபாய்க்கு நிலம் வாங்கியிருக்கிறாராம். இன்னும் அஞ்சு வருஷத்துல அங்க எல்லாம் நிலமே வாங்க முடியாதாம். அப்படியே த்ரீ ஃபோல்டு, ஃபோர் ஃபோல்டு வேல்யூ இன்கீரிஸ் ஆகுமாம். நீங்களும் இருக்கீங்களே, ஒரு செங்கல்லு கூட வாங்காம. இரண்டு பொண்ணு வேற பெத்து வைச்சிருக்கோம்.” இப்படி பல மனைவிமார்களின் அங்கலாய்ப்பு.

    நகரத்தை சார்ந்த நிலத்தின் மதிப்பு வேறு எந்த பொருளையும் விட இன்று கடும் விலையேற்றத்தில் இருக்கிறது. மத்திய வர்க்கம் நகரத்தில் நிலம் வாங்க முடியாத அளவு விலை பிரம்மாண்டமாக இருக்கிறது. இதனால் நகரத்திற்கு வெளியே நிலம் வாங்கி போடும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. இதற்கான நிலதரகு கம்பெனிகள், நில தரகர்கள் நகரத்தை ஒட்டிய நிலங்களை பெரிய அளவில் வாங்கி குவித்து கொண்டிருக்கிறார்கள். விவசாய நிலங்கள் தான் பெரும்பாலும் காலனியாகின்றன. விதிமுறைக்கு முரணாக எப்படி இதனை சாதித்தார்கள் என தெரியவில்லை. விவசாயத்தால் பெரிய சரிவினை சந்தித்திருக்கும் விவசாயிகள் கியூவில் நின்று தங்கள் நிலங்களை விற்றிருப்பார்கள் என்பது வெளிபடை.

    மத்திய வர்க்கம் தவிர பெரிய பெரிய பணக்காரர்களும் நிறுவனங்களும் கூட நகரங்களுக்கு வெளியே பெரிய அளவில் நிலங்களை வாங்கி குவித்து கொண்டிருக்கிறார்கள். டி.நகரில் உள்ள பெரிய பெரிய நகை கடைகள் செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு சாதாரண கிராமத்தில் நிலத்தை போட்டி போட்டு வாங்கி குவித்து வருகிறார்கள் என கேள்விபட்டேன். இன்னும் ஐம்பது வருடங்களில் இன்றைய டி.நகர் வியாபாரம் செங்கல்பட்டு ஏரியாவிற்கு (அப்போது பரந்த சென்னையின் மையம்) குடி பெயர்ந்து விடும் என எந்த ஜோசியன் சொன்னான் என தெரியவில்லை. அல்லது நகர் திட்டமிடும் அரசு குழுக்களின் அறிக்கை இரகசியமாக ஒரு காப்பி இவர்களுக்கு வந்து விடுகிறதா? எனக்கு தெரியாது.

    சூது நிறைந்த நில தரகர்களும் அவர்களது நிறுவனங்களும் தாம் இன்று பணம் சம்பாதித்து கொழுத்து கொண்டிருக்கிறார்கள்.

    ஏற்கெனவே தண்ணீர்வரத்தினை இந்த நிலமோகத்தினால் இழந்தோம். வெள்ளம் வந்தால் ஆறுகள் பழைய ஞாபகத்தில் தங்கள் வழிதடத்தில் வர, அந்தோ பரிதாபம் அங்கு இப்போது இருப்பதெல்லாம் வீடுகள், வீடுகள் வீடுகள் மட்டுமே. இன்று காசு கொடுத்து தண்ணீர் வாங்கி வாழும் அவலத்தில் இருக்கிறோம். விவசாய நிலங்கள் இந
    ்த வேகத்தில் காலியானால் நாளை உணவு உற்பத்திக்கு பங்கம் வராதா?

    தொழில் தொடங்க பணமில்லாமல், வெளிநாட்டு முதலீடுகளை நம்பி இந்திய பொருளாதாரம் நடை பயிலும் இன்றைய சூழலில் மத்திய வர்க்கம் தனது பணத்தையெல்லாம் தங்கத்திலும் நிலத்திலும் போடுவது எவ்வளவு தூரம் ஆரோக்கியமானது?

    பணத்தை முதலீடு செய்ய பல வழிகள் இருக்கின்றன. ஆனால் இதனை பற்றிய விழிப்புணர்வு மத்திய வர்க்கத்தினரிடையே இல்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தங்கமும் நிலமும் தாம். ஆனால் நிலத்தை பொறுத்த வரை அவை அவசரத்திற்கு உதவாத முதலீடுகள் தாம். No liquidity. ஒரு பெரும் பகுதி பணம் இதில் முடங்கி போய் கிடக்கும். இதனை பணக்காரர்கள் தாங்கி கொள்வார்கள். ஆனால் மாத தவணை லோன் வாங்கி செய்யும் மத்திய வர்க்க குடும்பத்திற்கு ஒரு பெரிய பொருளாதார இழப்பு நேர்ந்தால் அவர்களால் உடனடியாய் சமாளிக்க முடியுமா?

    மத்திய வர்க்கத்தினரின் அபத்தத்திற்கு சாட்சியாய் முளைத்தபடி இருக்கின்றன மனிதர்களற்ற நகரங்கள்.